"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


மிகவும் அதிகமாக காலாவதியாகி போன விஷயம் குடும்பம். அது அதன் வேலையை செய்துவிட்டது, அது இனிமேல் தேவையில்லை. உண்மையில் அது இப்போது மனித வளர்ச்சிக்கு மிகவும் தடையாக உள்ள விஷயமாக உள்ளது. குடும்பம் தேசங்கள், மாநிலங்கள், கிறிஸ்துவ மடாலயங்கள், ஆகியவற்றின், அசிங்கமான எல்லாவற்றின் ஒரு பகுதி.

ஒரு விதத்தில் போப் குடும்பம் மறைந்துவிட்டால் கிறிஸ்துவ மடாலயதிற்கு எதிர்காலம் இல்லை என்று கூறுவது சரிதான் - ஏனெனில் குடும்பமும் அதன் ஆழ்மன கட்டுபாடுகளும் இன்றி நீங்கள் எங்கிருந்து கிறிஸ்துவர்களையும், இந்துகளையும், முகமதியர்களையும் உருவாக்குவீர்கள்?

அதனால்தான் குடும்பம் மறைந்தாக வேண்டும் என நான் கூறுகிறேன். குடும்பம் மறையாமல் இருந்தால் இந்த அசிங்கமான எல்லா பூதங்களும் தொடர்ந்து கொண்டிருக்கும். குடும்பமே நமது எல்லா மனநோய்களுக்கும் மூலகாரணம். நாம் குடும்பத்தின் மனோரீதியான கட்டமைப்பை, அது மனித விழிப்புணர்வை என்ன செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

முதல் விஷயம்: குழந்தையை குடும்பம் ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கைகளுக்குள், அரசியல் கருத்துக்குள், ஏதோ ஒரு தத்துவத்திற்குள் பொருத்துகிறது. குழந்தை மிகவும் வெகுளியாகவும், மிகவும் ஏற்றுகொள்ள கூடியதாகவும், மிகவும் திறந்த தன்மையுடனும் உள்ளது, அதன்மேல் அதிகாரம் செலுத்தபடமுடியும். அவன் இன்னமும் முடியாது என கூறமுடியாது, முடியாது என்று சொல்வதைப் பற்றிய யோசனைகூட அவனுக்கு இன்னும் வரவில்லை, மேலும் அவன் முடியாது என்று சொல்லமுடியும் என்றாலும் கூட அவன் அதனைச் சொல்லமாட்டான் ஏனெனில் அவன் முழுமையாக, முழுவதுமாக குடும்பத்தைச் சார்ந்துள்ளான். அவன் மிகவும் உதவியற்றவனாக உள்ளதால் குடும்பம் எந்த முட்டாள்தனத்திற்கு அவன் ஒத்துபோக வேண்டும் என நினைக்கிறதோ அதற்கு அவன் குடும்பத்துடன் ஒத்துபோயாக வேண்டும்.

குடும்பம் குழந்தை விசாரிக்க உதவுவதில்லை, அது நம்பிக்கைகளை தருகிறது, நம்பிக்கைகள் விஷம். ஒருமுறை குழந்தை நம்பிக்கைகளால் சுமையேற்றப் பட்டுவிட்டால் அவனுடைய விசாரிப்பு ஊனமுற்றதாகிவிடும், இயங்காது. அவனுடைய இறக்கைகள் வெட்டபட்டுவிட்டன. அவன் தானாகவே விசாரித்தறியும் நேரம் வரும்பொழுது அவன் ஏற்கனவே சமூக கட்டுதிட்டங்களை பெற்றிருப்பான். அவன் எல்லா விசாரிப்பையும் ஒரு குறிப்பிட்ட கருத்துடனே செய்வான்- ஒரு கருத்தோடு செய்யும்பொழுது உனது விசாரிப்பு உண்மையானதல்ல. நீ ஏற்கனவே செய்யபட்ட ஒரு முடிவை சுமந்துகொண்டுள்ளாய். நீ வெறுமனே உனது உணர்வற்ற முடிவுக்கு துணை செய்யும் சாட்சிகளை தேடுகிறாய். நீ உண்மையை கண்டறிய முடியாதவனாகிவிட்டாய்.

அதனால்தான் உலகில் ஒரு சில ஞானிகளே உள்ளனர். அடிப்படை காரணம் குடும்பம். இல்லாவிடில் ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும்போதே ஞானிதான், உச்ச உணர்வு நிலையை அடையும் சக்தியோடு, உண்மையை கண்டறியவும், பரவச வாழ்க்கையை வாழவுமே வருகிறது. ஆனால் குடும்பம் இந்த பரிமாணங்களை எல்லாம் அழித்துவிடுகிறது. அது அவனை சமதரையாக ஆக்கிவிடுகிறது.

ஒவ்வொரு குழந்தையும் மிகவும் புத்திகூர்மையோடு வருகிறது ஆனால் குடும்பம் அவனை மந்த புத்தியுள்ளவனாக்கிவிடுகிறது. ஏனெனில் ஒரு புத்திகூர்மையுள்ள குழந்தையோடு வாழ்வது பிரச்சனைக்குரியது. அவன் சந்தேகப்படுவான், அவன் கேள்வி கேட்பான், அவன் விசாரிப்பான், அவன் சொல்வதை கேட்கமாட்டான், அவன் ஒரு புரட்சியாளன் – குடும்பத்திற்கு சொல்வதை கேட்கும், பின்தொடர தயாராக இருக்கும், காப்பியடிக்கும் ஒருவன் தேவை. எனவே மிகவும் ஆரம்பத்திலேயே புத்திகூர்மையின் விதை அழிக்கபட வேண்டும். கிட்டதட்ட முழுவதும் எரிக்கபட வேண்டும், எனவே அதிலிருந்து எந்த முளைவிடுதலுக்கும் வாய்ப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.

ஜரதுஷ்ட்ரா, ஜீசஸ், லாவோட்சு, புத்தர் போன்ற ஒரு சில மக்கள் சமுதாய கட்டுமானத்திலிருந்து, குடும்ப கட்டுபாட்டிலிருந்து தப்பியது ஒரு அதிசயமே. அவர்கள் உணர்வுநிலையின் உயர்ந்த சிகரங்களாக தெரிகிறார்கள், ஆனால் உண்மையில் எல்லா குழந்தைகளும் இதே குணத்துடனேயே அதே சக்தியுடனேயே பிறக்கின்றனர்.

தொண்ணூற்று ஒன்பது புள்ளி ஒன்பது சதவீத மக்கள் புத்தர்களாக முடியும். வெறுமனே குடும்பம் மறைய வேண்டும். இல்லாவிடில் கிறிஸ்துவர்கள் மற்றும் முகமதியர்கள் மற்றும் இந்துகள் மற்றும் ஜைனர்கள் மற்றும் புத்தமதத்தை சார்ந்தவர்கள் இருப்பார்கள். ஆனால் புத்தர்கள் அல்ல, மகாவீரர்கள் அல்ல, முகமதுகள் அல்ல, அதற்கு சாத்தியமில்லாமல் போய்விடும். முகமது அவரது பின்புலத்தை எதிர்த்து எழுச்சி கொண்டார், புத்தர் அவரது பின்புலத்தை எதிர்த்து எழுச்சி கொண்டார், ஏசு அவரது பின்புலத்தை எதிர்த்து எழுச்சி கொண்டார். இவர்கள் அனைவரும் எழுச்சியாளர்கள் – குடும்பம் எழுச்சிகரமான ஆத்மாவிற்கு முற்றிலும் எதிரானது.

நான் கம்யூனை கற்பிக்கிறேன். குடும்பத்தை அல்ல. கம்யூன் குடும்பத்திற்கு மாற்று. குடும்பம் குழந்தையை முதலில் கட்டமைக்கிறது. அதுவே எல்லாவிதமான பைத்தியகாரதனங்களுக்கும் காரணம்.

ஒரு குழந்தை ஒரே ஒரு பெண்ணினால், தாயால், ஒரே ஆணால், தந்தையால், வளர்க்கபடுகிறது. குழந்தை ஒரு பையனாக இருந்தால் தாயின்மீது பிணைப்பு கொள்கிறான், குழந்தை ஒரு பெண்ணாக இருந்தால் தந்தையின் மீது பிணைப்பு கொள்கிறாள். இப்போது இவை மனோரீதியாக நிருபிக்கபட்ட உண்மைகள். பையனின் மனதில் தாயின் உருவம், குணம்.... பதிந்துவிடுகிறது.... இப்போது அவன் தன்னுடைய வாழ்க்கை முழுவதிலும் அப்படியே அவனுடைய தாயை போலவே உள்ள பெண்ணை தேடிகொண்டிருப்பான். இதே விஷயம் பெண்ணை பொறுத்தவரையிலும் உண்மையே, அவள் அப்படியே தன்னுடைய தந்தையை போலவே உள்ள காதலனை கண்டுபிடிக்க முயல்வாள். இப்போது இது சாத்தியமற்றது – அவர்கள் ஒருபோதும் வெற்றியடையப் போவதில்லை.

அதனால்தான் எல்லா காதல்களும் தோல்வியடைகின்றன. அவைகள் தோல்வியடைந்தே ஆகவேண்டும். மிகவும் தொடக்கத்திலிருந்தே காதல் வெற்றியடைய முடியாத வண்ணம் எல்லாவற்றையும் நாம் சமாளித்துள்ளோம். நீ எங்கு உன்னுடைய தாயையோ, அல்லது தந்தையையோ, கண்டுபிடிக்கமுடியும்? அது முடியாத காரியம். ஏனெனில் யார் இருவரும் ஒருவரை போலவே ஒருவர் இருப்பதில்லை. ஆனால் இதுவே உணர்வற்ற நிலையின் தேடலாக இருக்கிறது. ஒவ்வொரு முறை நீ ஒரு ஆணுடனோ அல்லது ஒரு பெண்ணுடனோ காதல் வயப்படும்பொழுது நீ திரும்பவும் இந்த பெண் உனது தாயாக இருப்பாள் என நம்புகிறாய். இது சுயஉணர்வு நிலையில் அல்ல, இது ஒரு ஆழமான உணர்வற்ற நிலையின் பதிவு. ஆனால் விரைவில் நீ உன்னுடைய உணர்வற்ற நிலையின் பதிவுடன் அவள் பொருந்துவதில்லை என கண்டறிவாய் – போராட்டம் துவங்குகிறது நீ உடைய தொடங்குகிறாய். எந்த ஆணும் உனது தந்தையாக முடியாது, எந்த பெண்ணும் உனது தாயாக முடியாது. இப்போது இந்த குடும்பம் என அழைக்கப்படுவது தொடர்ந்தால், பிறகு காதல் உலகில் வெற்றிபெறமுடியாது. அன்பு இல்லாமல், அங்கு பரவசம் இருக்கமுடியாது, அன்பு இல்லையெனில் துன்பம்தான் நமது விதி. நாம் குடும்பத்தை தேர்ந்தெடுத்தால் நாம் துன்பத்தை தேர்ந்தெடுத்துவிட்டோம்.

ஒரு கம்யூன் முற்றிலும் மாறுபட்ட ஒரு விஷயம். ஒரு கம்யூனில் குறிப்பிட்ட மனிதர்களோடு பிணைப்பு இருக்காது. இங்கே குறைந்தபட்சம் முன்னூறு சிறு சந்நியாசிகள் ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் உள்ளனர் பல சிறு பையன்களும் பெண் குழந்தைகளும் தந்தை, தாயுடன் தங்குவதற்கு இரவில் வருவதில்லை – அவர்களுக்கு பல அங்கிள்களும், ஆன்ட்டிகளும் உள்ளனர். முழு கம்யூனும் அவர்களுடையது! இந்த கம்யூனில் சிறு குழந்தைகள் அவர்களுக்கென தனித்தன்மை கொண்டுள்ளனர், அவர்கள் தனியாக செல்ல தொடங்குகின்றனர். அவர்கள் தாயுடன், தந்தையுடன், குடும்பத்துடன் பிணைப்பு கொள்வதில்லை, அவர்கள் வேறுபட்ட மக்களுடன் பழகுகின்றனர். அவர்களுடைய தந்தையும், தாயும் கூட ஒருவர் மீது ஒருவர் பிணைப்பு கொண்டவர்கள் அல்ல.

திருமணம் இறந்துவிட்டது. அது ஒரு மாறாத விஷயம். அது வாங்கபடுவது, அது ஒரு பொருளை போன்றது... அது சாமானை போன்றது. அது ரோஜா இதழ் வளர்வதைப் போன்றதல்ல, இன்று செடி முழுவதும் மலர்களால் நிறைந்துள்ளது. நாளை எல்லா மலர்களும் போய்விடும், இன்று அது மிகவும் பசுமையாக உள்ளது, நாளை இலைகள் மஞ்சளாக தொடங்குகின்றன, அவை விழ தொடங்குகின்றன. இங்குள்ள ஒருவன் எல்லா பருவங்களையும் காண்பான், எல்லா உணர்வுகளையும் காண்பான், எல்லா சண்டைகளையும், எல்லா துன்பங்களையும், எல்லா இன்பங்களையும் காண்பான். அவன் மிகவும் மையம் கொண்டவனாகவும், நிலை கொண்டவனாகவும் இருப்பான், வாழ்வு மாறாத தன்மை கொண்ட விஷயமல்ல என்பதை அவன் அறிவான். அவன் எதையும் எதிர்பார்க்கமாட்டான், ஏனெனில் வாழ்வு பொருத்தபட்டதல்ல. எல்லாவிதமான மாறுதல்களுக்கும் அவன் தயாராக இருப்பான். வாழ்வோடு சேர்ந்து அவனால் மாறமுடியும். அவன் ஒருபோதும் அடி தவறமாட்டான். அவன் எப்போதும் வாழ்வின் இலயத்தோடு இணைந்திருப்பான்.

மனித இனத்தை மேலும் முழுமையானதாக்க, மேலும் ஆரோக்கியமானதாக்க, மேலும் அன்புடையதாக்க, மேலும் பரவசமுடையதாக்க, அதுதான் தேவை. தேவாலயம் மறைந்துவிடும், தேசங்கள் மறைந்துவிடும், இனங்கள் மறைந்துவிடும், மேலும் அவை மறைய வேண்டியவை – அவை ஏற்கனவே மிக அதிக காலம் வாழ்ந்துவிட்டன. அவை இறப்பிற்கு பின் வாழ்வதைப் போன்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுள்ளன.

அவை எரிக்கப்பட வேண்டும். புதைக்கப்பட வேண்டும். நாம் பிணங்களை சுமந்து கொண்டிருக்கிறோம், அந்த பிணங்கள் நாற்றமடிக்கின்றன. நீ அவைமீது வாசனை திரவியத்தை அடித்துகொண்டே, வீட்டில் பிணங்களோடு வாழ்வதை சமாளித்துக்கொண்டே இருக்கலாம். அவை கடந்தகாலத்தில் ஏதோ ஒரு அர்த்ததோடுதான் இருந்தன என்பதை நான் அறிவேன். உன்னுடைய தந்தை உயிரோடு இருந்தபொழுது அது ஒரு விஷயம். ஆனால் இப்போது உனது தந்தை இறந்துவிட்டார். எனவே சிறிது அழுது புலம்பு. ஆனால் சுமையை எறிந்துவிடு, ஆனால் பிணத்தை உனது வாழ்நாள் முழுவதும் உனது தோள்களில் சுமக்க வேண்டிய தேவை இல்லை. ஒரே ஒரு பிணம் மட்டும் இல்லை, பல பிணங்கள் உள்ளன, உனது வீட்டில் இறந்துபோன மக்கள் பலர் உள்ளனர். அதனால் உயிரோடு இருப்பவர்கள் வாழ இடம் இல்லை. உயிரோடு இருப்பவர்கள் வீட்டிற்கு வெளியே வாழ்கிறார்கள். இறந்து போனவர்கள் முழு இடத்தையும் பிடித்து கொண்டிருக்கிறார்கள். நமக்கு இடம் தேவை.

குடும்பம் இறந்துபோன ஒரு விஷயம், ஆனால் நாம் எப்படியோ அதற்கு ஒட்டு போட்டு கொள்கிறோம். விவாகரத்து என்றால் என்ன? அது ஒரு ஒட்டு போடுதல்.

நான் மக்கள் அடையமுடியாத இலட்சியங்களில் ஆர்வம் கொள்வதை விரும்பவில்லை. நான் இலட்சியவாதியே அல்ல. நான் பூமியில் இருப்பவன். நடைமுறையாளன், ஒரு உண்மையாளன்.

மக்கள் ஆழ்ந்த நெருக்கத்தில் ஒருங்கிணைந்து வாழ விரும்பினால் அவர்கள் பிடித்து வைத்து கொள்பவர்களாக இருக்ககூடாது. அவர்கள் சுதந்திரத்தை அனுமதிக்க வேண்டும். அதுதான் திருமணம் அற்ற உறவு என்பது – சுதந்திரம். ஆனால் மக்கள் மிகவும் மாறுபட்டவர்கள்.

யாரும் யாருக்கும் சுதந்திரம் தர தயாராக இல்லை. மக்கள் அழகான வார்த்தைகளை கூறுகிறார்கள், இனிப்பானவை, அர்த்தமற்றவை. அவை மிகவும் நல்லதாக காட்சியளிக்கின்றன, முழு சுதந்திரம், நிபந்தனையற்ற அன்பு, பிடித்துவைத்துகொள்ளும் தன்மையற்ற நெருக்கம். என்று சத்தம் நன்றாக உள்ளது, ஓம்... என்பதைப் போல அது நல்ல சத்தமாக உள்ளது, ஆனால் நீ அதை வைத்துகொண்டு வேறு என்ன செய்யமுடியும் ?

திருமணம் – தாண்டிய உறவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, மன வளர்ச்சிக்கும், முதிர்ச்சிக்கும் மிகவும் உதவிகரமானவை, ஏனெனில் நீ வேறொரு ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ ஒருநாள், அல்லது இரண்டு நாள், அல்லது சில நாட்கள் பழக தொடங்கும் பொழுது உனக்கும் உனது பழைய காதலனுக்கும் ஒரு தொலைவு உண்டாகிறது. அந்த தொலைவு மிகவும் உதவிகரமானது. நீ ஒருவருக்கொருவர் காதல் வயப்படுவதற்கு முன் இருந்த அதே தொலைவு வந்தால், மீண்டும் ஒரு தேனிலவு சாத்தியம். அந்த தொலைவு புதிய தேனிலவை அனுமதிக்கும், நீ மீண்டும் ஆர்வம் கொள்வாய், நீ திரும்பவும் வாய்ப்பளிக்க தொடங்குவாய். முழு விஷயத்தையும் திரும்பவும் யோசிப்பாய்.

புதிய ஆணுடன் புதிய பெண்ணுடன் இருக்கும் பொழுது அவர்கள் அவ்வளவோன்றும் வித்தியாசமாக இல்லை என்பதை நீ காண்பாய். எனவே ஏற்கனவே உருவான ஒரு குறிப்பிட்ட நெருக்கத்தை அழிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? எந்த காம உறவை விடவும் நெருக்கம் மிகவும் அதிக நிறைவளிக்ககூடியது.

உண்மையிலேயே இருவர் நெருக்கமாக இருந்தால் அவர்கள் பரிபூரண சுதந்திரத்தை அனுமதிப்பர், ஏனெனில் நெருக்கம் அதிகமான அழகுடையது, அதிக முக்கியத்துவமானது – என்பதை அவர்கள் அறிவர். அவர்கள் அதனை அனுபவித்துள்ளனர். எனவே எந்த காம உறவாக இருந்தாலும் அது வெறும் திருப்பம் மட்டுமே அதனால் மட்டுமே எதுவும் தவறாக போய்விடமுடியாது.

ஆனால் திருமணத்தை பற்றிய பழையகருத்து பிடித்து வைத்துகொள்ளும்தன்மை உடையது. தங்களுடைய எண்ணிக்கை குறைந்துவிடும் என்ற எளிமையான காரணத்திற்காக எல்லா மதங்களும் கருத்தடை முறைகளுக்கு எதிராக உள்ளன. இது ஒரு அரசியல் விளையாட்டு. யாரிடம் அதிக எண்ணிக்கை உள்ளது ? கத்தோலிக்கர்களிடமா அல்லது ப்ரோடஸ்டண்ட்களிடமா, இந்துகளிடமா அல்லது ஜைனர்களிடமா அல்லது முகமதியர்களிடமா? இந்துகள் முகமதியர்கள் அதிகரித்துகொண்டேயிருந்தால், விரைவிலோ அல்லது அப்பறமாகவோ இந்தியா இரண்டு பகுதிகளாக மறுபடியும் பிரிக்கபடவேண்டும் என்ற காரணத்தால் கருத்தடை முறைகளுக்கு எதிராக உள்ளனர். முகமதியர்கள் எண்ணிக்கையில் அதிகமானால் அவர்கள் இது வேண்டும், அது வேண்டும் என கேட்க தொடங்குவர். அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக வளரமுடியும் ஏனெனில் முகமதியர்கள் அவர்களுடைய மதத்தால் நான்கு பெண்கள் வரை மணந்துகொள்ள அனுமதிக்கபட்டுள்ளனர்.

இது இப்படியே போனால், இயற்கையாகவே, அவர்கள் எண்ணிக்கையில் அதிகரித்துவிடுவர் என இந்துகள் பயப்படுகின்றனர். இந்துகள் கருத்தடை முறைகளை பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்தபட்டால் அவர்கள் எண்ணிக்கையில் குறைந்துவிடுவர். முக்கியமாக ஐனநாயகத்தின் காரணமாக முழு அரசியலும் எண்ணிக்கையினாலானது. ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு ஓட்டு கொண்டுவருகிறான். நீ எவ்வளவு குழந்தைகளை பெற்றிருக்கிறாயோ அவ்வளவு ஓட்டுகளை நீ வைத்திருக்கிறாய். யாரிடம் அதிக ஓட்டுகள் உள்ளனவோ, அவர் தேசத்தை ஆள்வார், உலகத்தை ஆள்வார். எனவே எல்லா மத தலைவர்களும், எல்லா மத அமைப்புகளும், எல்லா மதவாதிகளும் கருத்தடைக்கு எதிராக உள்ளனர்.

ஆனால், உண்மையில், கருத்தடை என்பது முழு மனித வரலாற்றிலேயே மனித இனத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்று. அது மிகப்பெரிய புரட்சி. கருத்தடை சாதனங்களை கண்டுபிடித்ததை ஒப்பிடும்பொழுது அதைவிட சிறந்த புரட்சி ஏதுமில்லை. ஏனெனில் கருத்தடை சாதனங்களின் வாயிலாக பெண் ஆணுக்கு இணையாக முடியும். கருத்தடை சாதனங்களின் வாயிலாக மட்டுமே ஆண் எப்போதும் தனக்குரியது என கூறிவந்த உரிமைகளை எல்லாம் பெண் பெறமுடியும். இல்லாவிடில் அவள் கிட்டதட்ட எப்போதும் கர்ப்பமாகவே இருந்தாள்.

அவள் தொழிற்சாலையில் வேலை செய்யமுடியாது. அவள் அலுவலகத்தில் வேலை செய்யமுடியாது. அவள் ஒரு மருத்துவராக முடியாது. அவள் ஒரு பேராசிரியராக இருக்கமுடியாது. அதிகபட்சமாக அவள் ஒரு வீட்டிலிருக்கும் மனைவியாக முடியும், அப்படி என்றால் அது வீட்டு–வேலைக்காரி என்று பொருள். அவளுடைய முழு வாழ்க்கையும் குழந்தைகளை பெற்றெடுப்பதற்கே வீணாக போகிறது. அவள் வேறு எதுவும் செய்ய முடியாது – அவள் வரையமுடியாது, அவள் கவிதை எழுத முடியாது, அவள் வாத்தியம் வாசிக்க இயலாது, அவள் நடனமாடமுடியாது. நீ தொடர்ந்து கர்ப்பமாகவே இருந்தால் நீ எவ்வாறு நடனமாடமுடியும்? அது மிகவும் அருவருக்கதக்கது, மிகவும் வயிற்றை குமட்டக்கூடியது.

ஆனால் கடந்த காலத்தில் அவளுடைய முழு வேலையும் ஒரு தொழிற்சாலையைப் போலவே இருந்தது – குழந்தைகளை பெற்றெடுத்துகொண்டே இருக்கவேண்டியது. அது பதினான்கு வயதிற்கு அருகில் தொடங்கி ஆணிற்கு குழந்தை பெற தகுதி உள்ளவரை தொடர்ந்தது. இருபத்து நான்கு குழந்தைகள் என்பது விதிவிலக்கல்ல, பணிரெண்டு குழந்தைகள் என்பது மிகவும் சாதாரணம். ஒரு டஜன் குழந்தைகளையோ அல்லது இரண்டு டஜன் குழந்தைகளையோ பெற்று உலகிற்கு தரும் ஒரு பெண்ணிற்கு வேறு எதற்கும் நேரம் இருக்காது.

அதுதான் பெண்ணின் அடிமைத்தனத்திற்கு மூல காரணம்.அவள் தொடர்ந்து கர்ப்பமாகவும், கர்ப்பத்தினால் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்பொழுதும், அவள் ஆணை சார்ந்தே இருந்தாகவேண்டும் – பொருளாதார ரீதியாக ஆணை சார்ந்திருக்கவேண்டும். நீ பொருளாதார ரீதியாக ஒரு ஆணை சார்ந்திருந்தால் நீ சுதந்திரமாக இருக்கமுடியாது. பொருளாதாரம் மிகவும் அடிப்படையான விஷயங்களில் ஒன்று. பணம் ஆணிடமிருந்து வந்தால், பிறகு பணம் நிபந்தனைகளுடனேயே வருகிறது.

ஆணும் பெண்ணும் சமமாக இருக்கும் ஒரு சமுதாயம் நமக்கு தேவை என்றால், பிறகு கருத்தடை சாதனங்கள் எவ்வளவு பரவலாக முடியுமோ அவ்வளவு பரவலாக பயன்படுத்தபட வேண்டும். அவை சாதாரணமாக வேண்டும். பிறகு மட்டுமே திருமணத்திற்கு பிறகு வரும் தொடர்புகள் மிகவும் எளிமையான விஷயமாகும். நீ திருமணத்திற்கு முன்பு உறவு கொண்டு பெண் கர்ப்பமுற்றால், அது பெரிய பிரச்சனை என்பதே முழு பிரச்சனையாக இருந்தது. கருத்தடை சாதனங்கள் அந்த பிரச்சனையை முழுவதும் போக்கிவிட்டன. கருத்தடை சாதனங்கள் உபயோகபடுத்தபட்டால் திருமணத்திற்கு முந்தைய உறவுகளை தடுக்கமுடியாது. அவற்றை தடுப்பது சோகமயமானது, ஒரு பெண் கர்ப்பமானால் எல்லா கெளரவத்தையும், மரியாதையையும் இழந்துவிடுவோம் என மிகவும் பயப்பட்டாள். பெண் ஒரு ஆணால் கர்ப்பமானால் அந்த ஆண் அவளை மணந்துகொண்டேயாக வேண்டும் என ஆண் மிகவும் பயப்பட்டான். ஒருவேளை அவன் அதற்கு தயாராகாமல் இருக்கலாம். அது வெறும் நொடி நேர விஷயமாக இருக்கலாம். அது வெறும் ஒரு விளையாட்டாக இருக்கலாம், ஆனால் இப்போது அது ஒரு மிகப்பெரிய பொறுப்பாகிவிடும், முழு வாழ்க்கையின் பொறுப்பாகிவிடும்.

கருத்தடை சாதனங்கள் காமத்தின் தன்மையையே மாற்றிவிட்டன, காமம் விளையாட்டாகிவிட்டது. காமம் முன்னால் இருந்ததை போல ஒரு மிக இறுக்கமான விஷயமல்ல. அது வெறும் ஒரு விளையாட்டுதன்மை நிறைந்ததாகிவிட்டது – இரு உடல்கள் ஒருவருக்கொருவர் விளையாடுவது, அவ்வளவுதான். அதில் தவறு ஏதுமில்லை. நீ கால்பந்து விளையாடுகிறாய் – அதில் என்ன தவறு இருக்கிறது?

இரு உடலின் சக்திகள் பங்கேற்கின்றன.

காமமும் கூட ஒரு விளையாட்டுதான், ஆனால் முன்பு அது ஒரு விளையாட்டல்ல. கருத்தடை சாதனங்களுக்கு முன்பு அது ஒரு இறுக்கமான விஷயம். கருத்தடை சாதனங்கள் காமத்தை பற்றிய முழு இறுக்கதன்மையையும் போக்கிவிட்டன. இப்போது மதங்கள் பயப்பட்டாக வேண்டும், ஏனெனில் அவர்களுடைய கட்டமைப்பு கருத்தடை சாதனங்களினால் குலைந்துவிடக்கூடும். நாத்திகர்கள் நூற்றாண்டுகளாக செய்யமுடியாததை, கருத்தடை சாதனங்கள் பத்தாண்டுகளுக்குள் செய்துவிடும். அவை ஏற்கனவே செய்துவிட்டன. கருத்தடை சாதனங்கள் மனிதனை பூசாரிகளிடமிருந்து விடுவித்துவிட்டன.

கருத்தடை சாதனங்கள் ஒரு ஆசீர்வாதம், ஆனால் போப் அதனை ஆதரிக்க இயலாது ஏனெனில் போப்புடையது மட்டுமின்றி மற்ற எல்லா மத தலைவர்களின், சங்கராசாரியார் மற்றும் அயதுல்லா, மற்றும் இமாம் எல்லாருடைய முழு அதிகாரமும் ஆபத்தில் உள்ளது. அவர்கள் அனைவரும் கருத்தடை சாதனங்களுக்கு எதிராகத்தான் இருப்பார்கள், அவர்களுடைய முழு வியாபாரமும் ஆபத்தில் உள்ளது.


நான் கருத்தடை சாதனங்களை முழுமையாக ஆதரிக்கிறேன், அவை பரவலாக உபயோகபடுத்தபடவேண்டும். குழந்தைகள் பெற்றோர்களாலும், பள்ளிகளாலும், கருத்தடை சாதனங்களை எப்படி உபயோகபடுத்துவதென சொல்லிகொடுக்கபட வேண்டும், அப்போது காமம் வெறும் விளையாட்டாகிவிடும். அதன் இறுக்கம் அனைத்தையும் அது இழந்துவிடும். பிறகு மட்டுமே பெண் விடுதலையடைய முடியும். கருத்தடை சாதனங்கள் இன்றி பெண் அடிமையாகத் தான் இருந்தாக வேண்டும், பாதி மனித இனம், அடிமைத்தனத்தில் வாழ்வது பார்ப்பதற்கு நல்ல காட்சி அல்ல. மதங்கள் கரு கலைப்புக்கு எதிராக உள்ளன. ஏன் இந்த மக்கள் கரு கலைப்புக்கு எதிராக உள்ளனர் ? ஒரு பக்கம் அவர்கள் ஆத்மாவின் அழிவற்ற தன்மை குறித்து பேசிக்கொண்டே இருக்கின்றனர். பிறகு ஏன் கருக்கலைப்பை கண்டு பயப்படவேண்டும்?– ஆத்மா அழிவற்றது எனவே அதில் எந்த பாவமும் இல்லை. கருக்கலைப்பு மூலம் நீ செய்ததெல்லாம் ஆத்மா இந்த உடலுக்குள் நுழைவதை தடுத்தது மட்டுமே. ஆத்மா மற்றொரு உடலை கண்டுபிடித்துகொள்ளும், இந்த பூமியில் இல்லாவிட்டால், பிறகு வேறு ஏதாவது பூமியில், ஏனெனில் குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் கிரகங்கள் இருப்பதாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள் -- குறைந்தபட்சம். வாழ்க்கை உள்ள கிரகங்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை இது. ஒருவேளை அதிகமாக இருக்கலாம், ஆனால் ஐம்பதாயிரம் என்பது கிட்டதட்ட உறுதியான ஒன்று. எனவே இந்த கிரகத்தில் இல்லாவிட்டால் பிறகு வேறு ஏதாவது கிரகத்தில்....மக்களை மாற்றுவது நல்லது....அதில் தவறு என்ன இருக்கிறது ? இந்த கிரகத்தில் கூட்டம் அதிகமானால், ஒரு சில மக்களை மற்ற கிரகங்களுக்கு மாற்றுவது......அதுதான் கருக்கலைப்பு. ஆத்மா நான் உள்ளே வரலாமா மேடம் என கேட்கிறது நீ இல்லை இங்கே அதிக கூட்டமாக உள்ளது. வேறு ஏதாவது கதவை தட்டு என கூறுகிறாய்.

இந்துகள் இப்போது கிருஷ்ணரையும் அவருடைய ஸ்ரீமத் பகவத் கீதையையும் வழிபடுகின்றனர். அவர் ஸ்ரீமத் பகவத் கீதையில் நீ உடலை வெட்டினால் கூட ஆத்மா வெட்டபடுவதில்லை எனவும், நீ உடலை எரித்தால் கூட ஆத்மா எரிவதில்லை எனவும் கூறுகிறார்.....உடலை அழித்தால் கூட எதுவும் அழிவதில்லை— நீ அதனை வாளால் வெட்டமுடியாது......நீ அதனை தீயால் எரிக்கவும் முடியாது. இந்துகள் கருக்கலைப்புக்கு எதிராக உள்ளனர்- ஏன்?-- ஏனெனில் நீ ஒரு உயிரைக் கொல்கிறாய். எதுவும் கொல்லப் படவில்லை. எதுவும் கொல்லப்படமுடியாது. அங்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன, ஒன்று ஆத்மா அழிவற்றது, பிறகு எதுவும் கொல்லப்படவில்லை. அல்லது ஆத்மா அழிவுறகூடியது, பிறகும் எதுவும் கொல்லபடவில்லை. இவை இரண்டு மட்டுமே வாய்ப்புகள். நீ ஆத்மா அழிவற்றது என்பதை நம்பினால், பிறகு எதுவும் கொல்லப்படவில்லை, ஏனெனில் எதுவும் கொல்லப்படமுடியாது – அல்லது நீ ஆத்மா இல்லை என நம்பினால், பிறகு கொல்வதற்கு எதுவும் இல்லை. உண்மையில் அங்கு எந்த ஆத்மாவும் இல்லை, உடல் மட்டுமே உள்ளது.

இந்த கிரகத்தில் எத்தனை மக்கள் ஆனந்தமாக வாழமுடியும் என நாம் முடிவெடுத்தாகவேண்டும். ஆனால் அதன் பின்னால் ஒரு மறைக்கபட்ட திட்டமும் உள்ளது. மத பூசாரிகள், போப் மற்றும் மற்றவர்கள், மக்கள் ஆனந்தமாக, மகிழ்ச்சியோடு, பரவசமாக வாழ தொடங்கினால் அவர்களுடைய சொர்க்கலோகத்தை பற்றி யார் அக்கறைபடுவார்கள் என்ற எளிமையான காரணத்தால் மனிதன் ஆனந்தமாக வாழ்வதை விரும்பமாட்டார்கள். மக்கள் மிகவும் துன்பகரமான நிலையில் வாழவேண்டும், பிறகு மட்டுமே அவர்கள் பார் இந்த வாழ்க்கை துன்பமயமானது. அடுத்த வாழ்வை தேடு. கடந்த வாழ்வை தேடு. இந்த வாழ்க்கை நரகம், எனவே இந்த வாழ்க்கையை வாழ்வதில் உனது நேரத்தை வீணடிக்காதே. மற்றொரு வாழ்வை, தெய்வீக வாழ்வை கண்டறிய உனது நேரத்தை பயன்படுத்து என அவர்கள் கற்று தர இயலும்.

உலகம் துன்பத்தில் இருந்தால் அது அவர்களுக்கு வசதியாக இருக்கும். மனோரீதியாக உன்னை துன்பத்தில் வைத்திருப்பதை அவர்கள் சமாளித்துவிட்டனர். உலகரீதியாக உன்னை துன்பத்திலேயே வைக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். உடல்ரீதியாகவும்...... சாத்தியமாகும் அனைத்து வழிகளிலும் நீ மிகவும் துன்பத்தில் இருக்கும்படி செய்யும்போது அவர்களிடம் அறிவுரை கேட்க நீ சென்றாக வேண்டும். நீ அவர்களை நிமிர்ந்து பார்க்கும்போது அவர்கள் உன்னை காப்பாற்றுபவர்களாக உனக்கு தெரிய வேண்டும்.

என்னுடைய முழு பார்வையும் மாறுபட்டது.

இப்போது இங்கே வாழ்வதன் மூலம், இந்த கிரகத்தில் எந்த துன்பமும் இல்லை, அன்பு பொங்கி வழிகிறது, மக்கள் மலர்ந்து கொண்டிருக்கிறார்கள், மக்கள் தாமரைகளாக இருக்கின்றனர், என்னும் நிலையைக் கொண்டு வாருங்கள்.

- OSHO (Philosophia Ultima Ch.#3)


ரு ஞாயிற்றுக்கிழமை ஏழை விவசாயி ஒருவன் வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது அவனது பால்ய நண்பன் அவனை காண வந்தான்.

விவசாயி “வா!வா! இத்தனை வருடங்களாக எங்கே போயிருந்தாய்? உள்ளே வா, நான் சிலரை சந்திக்க போய்க்கொண்டிருக்கிறேன். இப்போது விட்டுவிட்டால் அவர்களை திரும்ப பிடிப்பது கஷ்டம். அதனால் நீ வீட்டில் சிறிதுநேரம் ஓய்வெடுத்து கொண்டிரு. ஒரு மணிநேரத்தில் நான் திரும்பி வந்து விடுவேன் வந்தபின் நாம் பேசலாம் ” என்றான்.

அந்த நண்பன் “இல்லையில்லை, நானும் உன்னுடன் வருகிறேன். ஆனால் என்னுடைய உடை மிகவும் அழுக்காக இருக்கிறது. நீ எனக்கு வேறு மாற்றுடை கொடு. நான் மாற்றிக் கொண்டு உன்னுடன் வருகிறேன்,’’ என்றான்.

பல நாட்களுக்கு முன் அரசர் சில விலை மதிப்பான ஆடைகளை விவசாயிக்கு பரிசாக கொடுத்திருந்தார். அவன் அதை விசேஷ காலங்களில் அணிய என்று பாதுகாப்பாக வைத்திருந்தான். அதை எடுத்து சந்தோஷமாக நண்பனிடம் கொடுத்தான்.

நண்பன் மேல்அங்கி, தலைப்பாகை, வேட்டி, அழகான ஆடம்பரமான செருப்பு என எல்லாவற்றையும் போட்டுக் கொண்டான். அவன் இப்போது அரசனைப் போல காட்சியளித்தான். தன்னுடைய நண்பனை பார்த்த விவசாயிக்கு சிறிது பொறாமை ஏற்பட்டது. ஒப்பிடும்போது இவன் ஒரு வேலைக்காரன் போல தோன்றினான். தன்னுடைய அழகிய ஆடைகளை கொடுத்து, தான் தவறு செய்துவிட்டோமோ என்று வருத்தப்பட்டான். தன்னை தாழ்வாக உணர்ந்தான். இப்போது எல்லோரும் தன் நண்பனையே பார்ப்பார்கள், தான் ஒரு வேலைக்காரன் போல தோன்றுவோம் என நினைத்தான்.

அவன் தன்னை நல்ல நண்பன் என்றும் தெய்வம் போன்றவன் என்றும் தன் மனதை தேற்றிக் கொள்ள முயற்சித்தான். தெய்வத்தைப் பற்றியும் நல்ல விஷயங்களை பற்றியும் மட்டுமே நினைப்பதாக முடிவு செய்தான். `நல்ல அங்கி, விலையுயர்ந்த தலைப்பாகையில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது? இதனாலென்ன?’ என நினைத்தான். ஆனால் அவன் என்ன முயற்சி செய்தாலும் திரும்ப திரும்ப அங்கியும் தலைப்பாகையும் தான் அவன் மனதில் அலை மோதின.

அவர்கள் நடந்து செல்லும்போது வழியில் கடந்து செல்வோர் அனைவரும் நண்பனையே கவனித்தனர். யாரும் விவசாயியை கவனிக்க வில்லை. அதனால் அவன் வருத்தமடைந்தான். தன் நண்பனுடன் பேசிக் கொண்டே இருந்தாலும் அவனுள்ளே அங்கியும் தலைபாகையுமே ஓடிக்கொண்டிருந்தன.

போகவேண்டிய வீட்டிற்கு போய் சேர்ந்தவுடன் அவன் தன் நண்பனை அறிமுகம் செய்தான். “இவன் என் நண்பன், சிறுவயதுமுதல் நண்பன், மிகவும் அன்பானவன்.’’ என்றவன் திடீரென,``ஆனால் இந்த துணிமணிகள் என்னுடையவை’’ என்றான்.

நண்பன் திகைத்து நின்றான். வீட்டிலுள்ளவர்கள் ஆச்சரியப் பட்டனர். இதை சொல்லியிருக்கக் கூடாது என உணர்ந்தான். ஆனால் காலம் கடந்து விட்டது. அவன் தனது தவறுக்காக வருத்தப்பட்டான், உள்ளுக்குள்ளே தன்னை கடிந்து கொண்டான்.

அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தபின், தன் நண்பனிடம் அவன் மன்னிப்பு கேட்டுக் கொண்டான். நண்பன், “நான் திகைத்துவிட்டேன். அந்தமாதிரி ஏன் சொன்னாய்’’ எனக் கேட்டான்.

விவசாயி,“மன்னித்துவிடு, வாய் தவறி விட்டது. நான் தப்பு செய்து விட்டேன்.’’ என்றான்.

ஆனால் நாக்கு பொய் சொல்லாது. மனதில் இருப்பது மட்டுமே வாயிலிருந்து குதித்து வெளி வரும். நாக்கு ஒருபோதும் தவறு செய்யாது. விவசாயி, “என்னை மன்னித்து விடு. நான் எப்படி அந்தமாதிரி சொன்னேன் என எனக்கு தெரியவில்லை’’ என்றான். ஆனால் அந்த எண்ணம் தனது மனதிலிருந்து தான் வெளி வந்தது என்பது மிக நன்றாக அவனுக்குத் தெரியும்.

மற்றோர் நண்பனின் வீட்டிற்கு போனார்கள். இப்போது விவசாயி இந்த துணிமணிகள் தன்னுடையது என சொல்லக்கூடாது என்று உறுதியான தீர்மானம் செய்துகொண்டான். தனது மனதை நிலைப் படுத்திக் கொண்டான். அந்த நண்பனின் வீட்டு கேட்டை அடையும் போது அந்த துணிமணிகள் பற்றி எதுவும் பேசக் கூடாது என மாற்றமுடியாத தீர்மானம் செய்துகொண்டான்.

அந்த அப்பாவி மனிதனுக்கு, எதுவும் சொல்லக் கூடாது என தீர்மானம் செய்ய செய்ய, அந்த உறுதியான தீர்மானமே இந்த துணிமணிகள் என்னுடையவை என்பதை உள் மனதில் ஆழமாக கொண்டு செல்லும் என்பது தெரியாது. மேலும் இந்த உறுதியான தீர்மானம் எங்கு செய்யப் படுகிறது.

ஒருவன் பிரம்மச்சரிய விரதம் பூணும்போது அவன் தன்னுடைய காம உணர்ச்சியை வலுக்கட்டாயமாக உள்நோக்கி தள்ளுவது போல, உணவு கட்டுப்பாட்டில் இருப்பதாகவோ, பட்டினி கிடப்பதாகவோ முடிவு செய்தால் அவன் அதிகமாக சாப்பிடும் ஆசையை அடக்கி வைப்பது போல, இது போன்ற முயற்சிகள் உள்ளே தவிர்க்கமுடியாத பின்விளைவுகளை ஏற்படுத்தும். எதிர்விளைவை ஏற்படுத்தும். நமது பலவீனம் எதுவோ அதுவே நாம். ஆனால் நாம் அதை அடக்கி ஆள முடிவு செய்கிறோம். அதை எதிர்த்து போராட தீர்மானிக்கிறோம். – இது தானாகவே ஆழ்மனதில் தகராறு உருவாக ஒரு அடிப்படையாக அமைகிறது.

ஆகவே உள்ளே இந்த சச்சரவுடன், நமது விவசாயி அந்த வீட்டிற்க்குள் சென்றான். அவன் மிகவும் ஜாக்கிரதையாக, ‘இவன் எனது நண்பன்.’ என்றான். யாரும் அவன் சொல்வதை கவனிக்கவில்லை. எல்லோரும் நண்பனையும் அவன் துணிமணியையுமே ஆச்சரியத்தோடு கவனித்தனர். இது என்னுடைய அங்கி இது என்னுடைய தலைப்பாகை என அவனுக்கு தோன்றியது. ஆனால் உடையை பற்றி பேசுவதில்லை என்ற தீர்மானத்தை நினைவு படுத்திக் கொண்டான். அவன் உறுதி எடுத்திருந்தான்.

எல்லோரிடமும் எளிமையானதோ அழகானதோ உடைகள் உண்டு. இது ஒரு விஷயமே அல்ல என தனக்குதானே விளக்கம் கூறிக் கொண்டான். ஆனால் அந்த உடைகள் அவனது கண்களுக்கு முன் பெண்டுலம் போல ஆடிக் கொண்டிருந்தது.

அவன் மறுபடியும் அறிமுகம் செய்தான். “இவன் எனது நண்பன். சிறுவயது முதலே நண்பன். நாணயமானவன். ஆனால் இந்த உடைகள் அவனுடையவைதான், என்னுடையவை அல்ல”

எல்லோரும் ஆச்சரியமடைந்தனர். யாரும் இப்படி ஒரு அறிமுகத்தை கேட்டதேயில்லை. “உடைகள் அவனுடையவைதான், என்னுடையவை அல்ல.”

அங்கிருந்து வந்தபின் திரும்பவும் மனபூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டான். ‘மிகப் பெரிய தப்பு!’ என்று அவன் ஒத்துக்கொண்டான். இப்போது அவன் என்ன செய்யக்கூடாது, என்ன செய்ய வேண்டும் என்பதில் குழப்பமடைந்தான். ‘உடைகள் இதற்கு முன் இதுபோல நினைவில் இருந்ததேயில்லை. கடவுளே எனக்கு என்ன நடந்தது.?’

அவனுக்கு என்ன நடந்தது ? அவன் தன்னைக் கட்டுப் படுத்திக்கொண்ட முறையை கடவுளே முயற்சி செய்தால் கூட அந்த உடைகளை பற்றிய நினைப்பு கடவுளையும் பற்றிக்கொண்டு விடும். அந்த செயல்முறை அப்படிப் பட்டது என்பது அந்த அப்பாவி விவசாயிக்குத் தெரியாது.

நண்பன் மிகுந்த மன வருத்தத்துடன்,“இனி நான் உன்னுடன் வரவில்லை” என்றான். விவசாயி அவன் தோளைப் பற்றி, “அப்படிச் செய்யாதே! என் வாழ்நாள் முழுவதும் ஒரு நண்பனிடம் இப்படி நடந்து கொண்டேனே என சங்கடத்துடனேயே நான் இருக்க நேரிடும். நான் சத்தியமாக திரும்பவும் இந்த உடைகளை பற்றி குறிப்பிட மாட்டேன். இதயபூர்வமாக, கடவுள் சத்தியமாக நான் உடைகளை பற்றி எதுவும் கூறவே மாட்டேன்.” என்றான்.

ஆனால் ஒருவர் சத்தியம் செய்யும்போது அதைப் பற்றி அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு உறுதியான முடிவு எடுக்கும்போது அடி ஆழத்தில் வேறு ஏதோ அதனுடன் இணைந்துள்ளது. உறுதியான முடிவு மேல் மட்ட மனதில் எடுக்கப் படுகிறது, அதற்கு எதிரானது உள் மனதில் எங்கோ செருகப் படுகிறது. மனம் பத்து பிரிவுகளாக இருந்தால், மேற் பகுதியில் உள்ள ஒரு பிரிவு மட்டுமே முடிவு செய்கிறது. ஆனால் மீதி உள்ள ஒன்பது பிரிவுகளும் அந்த முடிவுக்கு எதிராக உள்ளன. பிரம்மச்சரியம் ஒரு பிரிவால் எடுக்கப் படும் முடிவு எனில் மீதி உள்ள மனம் அனைத்தும் உடலுறவுக்கு அலைகின்றன. இறைவனால் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட ஈடு செய்யமுடியாத அந்த முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்துக்காக ஏங்குகின்றன.

அவர்கள் மூன்றாவது நண்பனின் வீட்டிற்கு சென்றனர். விவசாயி தன்னை மிகவும் கட்டுப் படுத்திக் கொண்டான். இறுக்கமானவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். ஏனெனில் ஒரு எரிமலையே அவர்களுக்குள் குமுறிக் கொண்டிருக்கிறது. வெளிப்பார்வையில் அவர்கள் கண்டிப்பானவர்களாக, கட்டுபாடானவர்களாக, இருப்பார்கள். ஏனெனில் அவர்களது இயல்பான போக்கை தன்னிச்சையாக விடாமல் உள்ளே பிடித்துவைத்து சிரமப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நினைவில் கொள், கட்டாயமாக திணிக்கப்படும் எதுவும் தொடரவும் முடியாது, நிறைவு பெறவும் முடியாது. ஏனெனில் அதில் அளவற்ற சிரமம் ஏற்படுகிறது. நீ சில சமயங்களில் ஓய்வாக இருக்கவேண்டும். சில சமயங்களில் தளர்வு கொள்ள வேண்டும். உன்னுடைய முஷ்டியை நீ எத்தனை நேரம் இறுக்க மூடி வைத்திருக்க முடியும் 24 மணி நேரமுமா? நீ இறுக்க இறுக்க அது சோர்வடைந்து விடும். அதனால் அந்த அளவு வேகமாக அது திறந்து விடும். கடின வேலை செய்தால் அதிக சக்தி செலவாகி சீக்கிரத்தில் சோர்வாகி விடுவாய். எப்போதும் ஒரு செயலுக்கு ஒரு எதிர்செயல் இருக்கும், அந்த எதிர்செயல் எப்போதும் உடனடியாக நிகழும். உனது கைகள் எல்லா நேரமும் திறந்தே இருக்கலாம், ஆனால் முஷ்டியை இறுக்கமாக எல்லா நேரமும் வைத்திருக்க முடியாது. அது உன்னை சோர்வடைய செய்யும் அதன்பின் எந்த விஷயமும் வாழக்கையின் இயற்கையான பாகமாக இருக்க முடியாது. எப்போதெல்லாம் நீ கட்டாயப்படுத்துகிறாயோ, அப்போதெல்லாம் ஓய்வு நேரம் தொடர்ந்து வந்தே தீரும். அதனால் ஒரு துறவி எந்த அளவு கட்டுப்பாடானவனோ, அந்த அளவு அவன் ஆபத்தானவன். இருபத்தி மூன்று மணி நேரம் இறுக்கமாக சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் பின்பற்றிய பின், குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் தன்னை தளர்த்திக் கொள்ள வேண்டும். அந்த ஒரு மணி நேரத்திற்க்குள் அவன் தன்னுள் அடக்கிவைத்த அத்தனை தேவையற்றவைகளையும் வெளியேற்றியாக வேண்டிய அவசரம் ஏற்படுகிறது.

இந்த விவசாயி உடைகளை பற்றி பேசக் கூடாது என்ற கட்டுப்பாட்டை இறுக்கமாக வைத்துக் கொண்டான். அவனது நிலையை கற்பனை செய்து பார். உனக்கு ஒரு சிறிதளவு மத அனுபவம் இருந்தால் போதும், அவனது மனநிலையை உன்னால் கற்பனை செய்து பார்க்க முடியும். சத்தியம் செய்திருந்தாலோ அல்லது சபதம் எடுத்திருந்தாலோ அல்லது விரதம் என்பதற்க்காக உன்னை கட்டுப் படுத்தி வைத்திருந்தாலோ உனக்கு அனுபவம் இருக்கும். இப்போது அந்த விவசாயியின் பரிதாபத்துக்குரிய மனம் என்ன பாடுபடும் என்பதை உன்னால் நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

அவர்கள் மற்றொரு வீட்டிற்க்கு சென்றனர். அந்த விவசாயி களைத்துபோய்விட்டான், வியர்த்துக் கொட்டியது அவனுக்கு. அந்த நண்பன் கவலைப் பட்டான். விவசாயி வேதனையால் உறைந்து போய்விட்டான். மெதுவாகவும் ஒவ்வொரு வார்த்தையையும் ஜாக்கிரதையாகவும் பேசியவாறே அவன் அறிமுகம் செய்தான். ‘இவன் எனது நண்பன், சிறு வயது நண்பன், மிகவும் நல்லவன்.’

ஒரு வினாடி அவன் தடுமாறினான். அவன் உள்ளிருந்து ஒரு உந்துதல் வந்தது. தான் மதியிழப்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. அவன் சத்தமாக,“இந்த உடைகள் என்னை மன்னித்து விடுங்கள். நான் அதைப் பற்றி எதுவும் சொல்லமாட்டேன். ஏனெனில் நான் அதைப் பற்றி எதுவும் சொல்லமாட்டேன் என சத்தியம் செய்திருக்கிறேன்.!”

இந்த மனிதனுக்கு என்ன நிகழ்ந்ததோ, அதுவேதான் மனிதஇனம் முழுமைக்கும் நிகழ்கிறது. ஏனெனில் கட்டுப்படுத்தப்படுவதால், காமம் என்பது ஒரு வெறியாக, ஒரு நோயாக, நெறி தவறிய ஒன்றாக மாறிவிட்டது. அது விஷமாகி விட்டது.

- OSHO (Sex to Superconscious)


முதுமை என்பது ஒரு நபரின் பிறப்பிலிருந்து தொடங்குகின்றது. ஒரு குழந்தையானது வளர்ந்து பெரிதாகும் ஒவ்வொரு காலகட்டத்திலும் முதுமை நிகழ்வு ஏற்படுகிறது. பொதுவாக உடல் இயக்கங்களின் ஒத்துழையாமையில் தொடங்கி மரணம் நிகழக் காரணமாவது முதுமை என்றழைக்கப்படுகிறது.

முதுமையின் போது ஏற்படும் நிகழ்வுகளாவன
மூளை மற்றும் நரம்புமண்டல அமைப்பு

முதுமையடையும் போது, மூளையின் நரம்புமண்டல அணுக்களின் எண்ணிக்கையானது குறையத் தொடங்குகின்றது. வயதானவர்களின் நடவடிக்கைகளில் வேகம் குறைந்து காணப்படுகின்றது. ஞாபகசக்தி குறைவு, புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதிலும் குறைவான வேகத்துடனேயே காணப்படுவர்.

60 வயதிற்கு மேல் முதுகு தண்டில் உள்ள அணுக்கள் குறைய ஆரம்பிப்பதால் அவர்களின் உணர்வு சக்தி குறையத் தொடங்குகின்றது.

நோய்எதிர்ப்பு சக்தி

முதுமையடையும் பொழுது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது மெதுவாக குறைய ஆரம்பிக்கின்றது, இது பல நோய்த்தொற்றுகளுக்கு, குறிப்பாக புற்றுநோய், நிமோனியா மற்றும் இன்புளுயன்ஸா போன்றவைகளுக்கு காரணமாகின்றது.

http://www.indg.in

முதுமையின் சவால்கள்

முதுமையில் பார்த்தல், கேட்டல், சுவைத்தல் போன்ற புலன் சார் தொழிற்பாடுகளில் குறை ஏற்படலாம். இதனால் புலன்கள் சிறப்பாகத் தொழிற்படுகிறவர்களுடனான தொடர்பாடல் திறன் குறையலாம். இது அவர்களின் சுய கணிப்பை பாதிப்பதால் மற்றவர்களிடமிருந்து ஒதுங்க முயற்சி செய்யலாம்.

ஆயினும் பல முதியவர்கள் ஒரு புலன் உணர்வில் குறை ஏற்படுகிறபோது ஏனைய புலன்களில் அதிகம் தங்கி இருந்து அந்தக் குறையை நிவர்த்தி செய்யக் கற்றுக்கொள்கிறார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடல் இயக்கம் தொடர்பான வேகம் முதுமையில் குறையத்தான் செய்யும். அதே நேரம் புலன் இயக்கக் குறைபாடுகளும் தசை இயக்க வேகத்தைக் குறைக்கலாம். உதாரணமாக கண்பார்வை குறையும் போது நடக்கும் வேகம் குறைவது தவிர்க்க முடியாததாகும். ஆயினும் பல முதியவர்கள் பொருத்தமான உடற் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உடல் இயக்கம் சார் குறைபாடுகளைப் பெருமளவு குறைத்துக்கொள்கின்றனர்.

முதியவர்களில் பெரும்பான்மையினருடைய நுண்மதி ஈவு குறையாதிருப்பது ஒரு வரப்பிரசாதம் என்றே கொள்ளலாம். சிலரிடத்தில் இது தொடர்ந்து அதிகரித்து வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. முதுமையில் நுண்மதி ஈவு குறைந்து வருமாயின் அது உடல் நலக் குறைவு, இயங்காதிருத்தல் ஆகியவற்றோடு சம்பந்தப்பட்டதாகவே அமையும் சிறந்த கல்வி அறிவைப் பெற்ற ஒருவர் தொடர்ந்து வருவாய் ஈட்டக்கூடியவராயும் இருக்கும் பல சந்தர்ப்பங்களில் அவரது நுண்மதி குறையும் வாய்ப்பு மிக அரிது.

இத்தகைய முதியவர்கள் தமது மனதுக்கான பயிற்சியைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். தனது மூளையை ஒருவர் தொடர்ந்து பாவித்து வருகின்றபோது அவரது அறிவாற்றல் செயற்பாடுகள் குறைந்துபோவது அபூர்வம். இதற்கு மறுதலையாக முதியவர் ஒருவரின் அறிக்கைசார் தொழிற்பாடுகளில் திடீர் வீழ்ச்சி அவதானிக்கப்படுமாயின் அவர் ஒரு பெரிய நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதன் விளைவு அது என்றே கொள்ளலாம்.

ஆயினும் அறிக்கைத் தொழிற்பாடு சம்பந்தப்பட்ட விடயங்களில் வேகம் குறையும் தன்மை முதுமையில் மிகச் சாதாரணமாக அவதானிக்கப்படலாம். இது நரம்புத் தொகுதியில் ஏற்படுகின்ற சில மாற்றங்களோடு சம்பந்தப்பட்டது. பல இயக்கங்களின் இணைவும் இசைவாக்கமும் தேவைப்படுகின்ற தொழிற்பாடுகளில் வினைத்திறன் குறைவு எதிர்பார்க்கப்படலாம். உதாரணமாக ஒரு சிக்கலான புதிரை விடுவிப்பது கடினமாகலாம். அதே போல ஏறத்தாழ ஒரே நேரத்தில் பல விடயங்களைக் கையாளுவதிலும் கஷ்டங்கள் இருக்கலாம்.

முதுமை வரும்போது நீண்டகால ஞாபகத்தில் பாதிப்பு ஏற்படத்தான் செய்கிறது. இந்தப் பாதிப்பிற்கும் கல்வித் தகைமைக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. புதிய விடயங்களைக் கற்று ஞாபகம் வைத்துக்கொள்வதிலும் ஒப்பீட்டளவில் குறை காணப்படவே செய்யும். முன்பு தெரிந்து வைத்திருந்த விடயங்களை மூளையில் இருந்து மீட்டெடுப்பதும் பல சமயங்களில் கடினமாக இருக்கலாம். சில விடயங்கள் முற்றாகவே மறக்கப்பட்டுப் போகலாம். ஒரு காலத்தில் நன்றாகத் தெரிந்த பெயர்களும் முகங்களும் கூட எழுபது வயதில் மறக்கப்பட்டுப் போவதை மிகச் சாதாரணமாக அவதானிக்க முடியும்.

குறுங்கால ஞாபகத்திலும் பாதிப்புகள் இருக்கும். ஒரு சினிமாப் படத்தில் இறுதிக் காட்சியில் கதாநாயகி அணிந்திருந்த உடையின் நிறம் என்னவென்பது பெரும்பாலும் படம் முடிந்த கையோடு இவர்களுக்கு மறந்து போய்விடும்.

முதுமையின் வரப்பிரசாதங்கள்

ஒருவர் பெற்றிருந்த மொழி அறிவும், கணித அறிவும் முதுமையிலும் குறைந்து போவதில்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனாலேயே முதியவர்கள் பலர் எழுதும் நூல்கள் மிகச் சிறப்பாகவே அமைவதைப் பார்க்கலாம்.

அதேபோல ஒருவரின் வாழ்நாளில் இயல்பாகப் பெற்றுக்கொள்ளும் திறன்கள் முதுமையில் குறைந்து போவதில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. நன்றாகச் சமையல் செய்யக்கூடிய அம்மா, முதுமையிலும் ருசியாகச் சமைப்பார். அழகாக ஓவியம் செய்யக்கூடியவரின் திறன் முதுமையில் சரிந்து போவதில்லை.

புதிய விடயங்களைக் கற்றுக்கொள்வது முதுமையிலும் சாத்தியமானதாகவே இருக்கிறது. எண்பது வயதிலும் புதிய பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெறுவோரை இன்று முன்னரை விட அதிகமாகவே காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, அவர்களுக்கு மிக ஆர்வமான ஒரு துறையில் கற்கிறபோது கற்றலில் அவர்கள் சங்கடப்படுவதில்லை.

ஆக்கத்திறனுடன் பிரச்சினைகளைத் தீர்க்கும் தன்மை முதுமை காரணமாக எவ்வகையிலும் பாதிக்கப்படுவதில்லை. இதனால், குடும்பப் பிரச்சினைகள், நிறுவனப் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றைத் தீர்ப்பதில் முதியவர்கள் மிகக் கணிசமான பங்களிப்பை நல்கக்கூடியவர்கள். ஆலோசனை வழங்கும் தொழில்களில் அவர்கள் உன்னதம் பெறுவதற்கு இந்த விளக்கம் போதுமானது.

ஒருவருடைய கற்பனைத் திறனும், கலையாக்கத் திறனும் முதுமையில் குறைவதில்லை. அதனால் தான் கலைஞர்கள் முதுமையிலும் போற்றப்படத்தக்கவர்களாகவே இருக்கிறார்கள்.

செய்யத்தக்கவை எவை?

முதியவர்கள் ஒரு சமூகத்தின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள். பழுத்த அனுபவங்களைக் கொண்டவர்கள். அவர்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது ஒரு சமூகத்தின் கட்டாய தேவை.

முதியவர்கள் தமது பிள்ளைகளோடு கூட்டுக் குடும்பமாக வாழும் சமூக அமைப்பு நிலைநிறுத்தப்பட வேண்டும். அவர்களைத் தனித்து வாழ அனுமதிப்பது நல்லதில்லை.

முதியவர்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட வாழ்வு முறைச் சட்டத்திற்குள் தம்மை அடைத்துக் கொள்வதால் அவர்களுக்கு எல்லா நாளும் ஒரேநாள் போலத் தோன்றலாம். வெளியே நின்று பார்ப்பவர்களுக்கும் அங்கே வளர்ச்சி எதுவும் நடைபெறாத ஒரு தோற்றமே தெரியும். ஆனால், உணர்வு ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் வளரத்தக்க ஒரு இடத்தில் தான் அவர்கள் நின்று கொண்டிருக்கின்றார்கள் என்ற விழிப்புணர்வு அவர்களுக்குத் தரப்பட வேண்டும்.

வளர்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மனச்சோர்வு ஏற்படுவதில்லை.

தங்களுடைய நீண்டகால அனுபவத்தின் ஊடாக ஒரு முதிர்ச்சியும் நிறைவும் கொண்ட ஆளுமையை அவர்கள் பெற்றிருப்பர். இந்த ஆளுமையோடும் அவர்களிடமுள்ள ஆற்றல்களோடும் அவர்கள் தொடர்ந்து பயனுள்ள பணிகளைச் செய்து கொண்டிருப்பதைச் சமூகம் உறுதி செய்ய வேண்டும். மற்றவர்களுக்குப் பாரமாக இருக்கிறோம் என்ற எண்ணத்தோடு சும்மா இருப்பதற்கு அவர்கள் விடப்படக்கூடாது. பேரப்பிள்ளைகளுக்குக் கதை சொல்வது கூட ஒரு பயனுள்ள, மிகப் பயனுள்ள பணி என்பதை நாம் மறந்துவிடலாகாது.

நியண்டத்தால் மனிதன் காலத்தில் மனிதனது சராசரி வாழ்வுக் காலம் 33 வருடங்களாக இருந்தது. விஞ்ஞான, கல்வி, மருத்துவ வளர்ச்சியுடன் இன்று சராசரியாக 75 வருடங்களுக்கு மனிதன் வாழ்கிறான்.

சில சமூகங்களில் குறிப்பாக இந்த வாழ்வுக் காலம் அதிகமாக இருக்கிறது. அங்கு செய்யப்பட்ட ஆய்வுகள் மன நெருக்கீடுகள் குறைவான கிராமிய வாழ்வு முறையும். மொத்தக் கலோரி அளவும் விலங்குக் கொழுப்பும் குறைந்த உணவுப்பழக்கமும், மாசடையாத சூழலும், வயது முதிர்ந்தோருக்கு மரியாதை கொடுக்கும் கலாசாரம் அங்கு இருப்பதை வரையறை செய்துள்ளன. ஆகவே, எமது நாட்டிலும் அத்தகைய ஒரு சூழலில் முதியோரை வாழச் செய்தல் நன்று.

மறுதலையாக, புகைத்தல், மது பாவனைப் பழக்கம், போதைப் பொருள் பாவனைப் பழக்கம், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளல், அளவுக்கு அதிகமான மருந்துகளை உட்கொள்ளல் அல்லது மருத்துவரின் அறிவுறுத்தல் இன்றித் தாமாக மருந்துகளைப் பெற்றுக் குடித்தல், பதற்றம் நிறைந்த சூழலில் வாழ்தல் போன்றன முதியோருக்குக் கேடு விளைவிக்கும். அவர்களின் வாழ்வுக் காலத்தைக் குறைக்கும் என்ற விழிப்புணர்வு சமூகத்திற்கு வழங்கப்பட வேண்டும்.

முதுமையின் பெரிய வளமாக இருக்கக் கூடியது நல்ல மனித உறவுகளைச் சேர்த்துக்கொள்வதாகும். குடும்பத்திலும் சரி, நண்பர்கள் உறவினர்கள் மத்தியிலும் சரி நிறைந்த அன்பைக் கொடுத்து நல்ல உறவுகளைக் கட்டி வளர்த்துக் கொள்வது முதுமையின் சலிப்பைப் போக்க உதவும் சிறந்த மருந்தாகும். அதனால், ஏற்படும் பயன்களும் எண்ணற்கரியவை.

எதிர்காலத்தில் மனிதனின் சராசரி வாழ்வுக் காலம் இன்னும் அதிகரிக்கும் சாத்தியமே அதிகம் உள்ளது. உடலின் ஒவ்வொரு கலத்தையும் நல்ல நிலையில் வைத்திருந்து அதனைச் சிறப்புற செயற்பட வைக்கும் வளர்ச்சி ஓமோனை வயது முதிர்ந்தவர்களுக்கு வழங்கும் போது அவர்கள் இளமையூட்டப்படுகிறார்கள் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

இப்போதே அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த ஓமோன் வியாபார ஸ்தலங்களில் விற்பனைக்கு உள்ளது. ரெக்சாஸ் நகரில் உள்ள நல மையத்தின் பேராசிரியர் ஜான் விக் (Jan Vig) என்பவர் முதுமையைத் தடுப்பது என்பது வெறும் கற்பனை நிலையில் இருந்து இப்போது யதார்த்த நிலைக்கு வந்துவிட்டது என்று கூறுகிறார். ஆகவே, எதிர்காலத்தில் ஒரு நாட்டின் மொத்தச் சனத்தொகையில் முதியவர்கள் கணிசமான நூற்று வீதத்தைப் பிடிக்கப் போகிறார்கள். அவர்களின் நலன் பற்றி அக்கறை கொள்வது நாட்டின் மொத்த நலனுக்கு மிக அவசியம் என்ற நிலை வந்து கொண்டிருக்கிறது.

- கோகிலா மகேந்திரன் (தினக்குரல்)

மிழ் மொழியில் "கலாச்சாரம்" (Culture) என்ற வார்த்தை இருக்கிறதே அது "கலை" "ஆச்சாரம்" என்ற இரண்டு சொற்கள் இணைந்து உருவான கூட்டுச்சொல் (Compound-word). இதில் "கலை" என்ற வார்த்தை எப்படி வந்தது என்றால் இயற்கை வளத்தை வாழ்வின்வளமாக அறிவின் நுட்பத்தினாலே, கைத்தினாலேயே உருமாற்றி, அழகுபடுத்தி நாம் துய்க்கிறோம் பாருங்கள், அதுதான் கலை.

ஆக மனிதன் வாழ்வே கலைதான். அப்படி இந்தக் கலையின் காரணமாக விளைவு தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவுக்கோ, உடல் உணர்ச்சிகளுக்கோ துன்பம் எழாது விழிப்போடு இருந்து கொண்டு, அளவோடு, முறையோடு கலையை நாம் பழகி வந்தோமானால், அந்த நெறியின் பெயரே "ஆச்சாரம்" துன்பம் எழாமல் காக்கக் கூடிய ஒரு நெறி, ஒரு முறை, ஒரு அளவு, இது எல்லாம் பார்த்தோமானால், அதன் பெயர் ஆச்சாரம் என்று சொல்லுவார்கள். அதனால் கலை + ஆச்சாரம் = கலாச்சாரம் என்றானது.

ஆங்கிலேயர்கள் நமது நாட்டுக்கு வந்த போது பார்த்தார்கள்; நல்ல அழகான சொல்லாக இருக்கிறது, நாமும் உச்சரிக்கலாம் என்று எடுத்தவர்கள், இடையிலேயுள்ள நெடிலை விட்டுவிட்டு "Culture" என்று தங்கள் அகராதிக்கு எடுத்துச் சென்றார்கள். "கலாச்சாரம்" என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு பார்த்தோமானால் எப்பொழுதுமே இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக மாற்றி, அறிவினாலோ, கைத்திறனாலோ, உருமாற்றி அழகுபடுத்தியே துய்த்து வாழக் கூடியவர்களாகவே நாம் இருக்கிறோம்.

- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி


ச்சரியத்தை அறிந்துகொள்வதற்கு.
குழந்தைக்குத் தாய் முத்தம் தருவது,
நம் உடல் உஷ்ணம் 98 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அருகில் இருப்பது,
ஊசிக்காதில் நூலைச் செருகுவது,
கம்பிமேல் நம்மில் சிலர் நடப்பது,
உப்பு - புளிப்பு - தித்திப்பு எல்லாம் உணர்வது,

"தலைவர் அவர்களே! தாய்மார்களே!" என்று அரை மணி சொற்பொழிவது, நல்லது - கெட்டது - குற்றம் - பாவம் என்பதையெல்லாம் தீர்மானிப்பது,

"பத்துப் பேர் ஒரு வேலையை எட்டு நாட்களில் செய்தால் எட்டுப் பேர் இரண்டு வேலையைச் செய்ய எத்தனை நாள்?" போன்ற கணக்குகள் போடுவது, செக்ஸ் உணர்ச்சி - தியானம் இவை அனைத்துக்கும் காரணம் ஒரு இரண்டு எழுத்துச் சமாசாரம் - மூளை!

ஏன், இந்த பாராவை எழுதியதும் மூளைதான். அர்த்தம் பண்ணிக்கொண்டதும் மூளைதான்.

40,000 வருஷங்களாக நமக்கு இதே சைஸ் மூளை இருந்து வந்திருக்கிறது. இதைக் கொண்டுதான் விவசாயம் கண்டுபிடித்தோம். முதல் சக்கரங்கள் செய்தோம். மாட்டைப் பழக்கினோம். காட்டை வெட்டினோம். வியாதிகளை வென்றோம். சந்திரனுக்குச் சென்றோம்.

உடைத்துப் பார்த்தால் ஒரு ஓவர்சைஸ் அக்ரூட் போலிருக்கும் இந்த ஈர, அழுக்கு கலர் கொசகொசப்புக்கு உள்ளேயா இத்தனை சாகஸம்?

ஆரம்பத்தில் மனிதன் நம்பவில்லை. அரிஸ்டாட்டில் "இதயத்தில்தான் இருக்கிறது சூட்சுமம்" என்றார். "மூளை - சும்மா ரத்தத்தைக் குளிர வைக்க மாடிமேல் ஏ.ஸி." என்றார்.

இன்னும் மூளையைப் பற்றிய முழு ஞானமும் நமக்கில்லை. ஆனால், நவீன மருத்துவம், கம்ப்யூட்டர் கருவிகள் உதவியுடன் நிறையவே தெரிந்து கொண்டுவிட்டோம்.

அண்மையில் PET என்னும் பாஸிட்ரான் எமிஷன் டோமா கிராஃபி என்கிற கருவியைப் பயன்படுத்தி, நாம் பேசும்போது - பார்க்கும்போது - படிக்கும்போது -நினைக்கும்போது... மூளையில் எந்த எந்த இடங்களில் நடவடிக்கை ஜாஸ்தியாகிறது என்று கலர் கலராகக் காட்டியிருக்கிறார்கள்!

உலகிலேயே மிக மிக ஆச்சரியம் - மனித மூளை. அதனுள் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும் ஒரு மண்துகள் அளவுக்குப் பெரிசு பண்ணினால் ஒரு லாரி நிரம்பும்! இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை! மனிதன் உயிர் வாழும்வரை இந்தச் செல்களிடையே மின் துடிப்புகள் திரிகின்றன.

இன்றைய கணிப்பொறிகளோடு ஒப்பிட்டால் மூளை ரொம்ப ரொம்ப நிதானம். ஆனால், கணிப்பொறியால் நீச்சல் அடிக்க முடியாது. டை கட்ட முடியாது. ஓரமாக பேப்பரைக் கிழித்துச் சுருட்டிக் காதை கிளீன் பண்ணிக்கொண்டு பொண்டாட்டியோடு வாக்குவாதம் பண்ண முடியாது.

இந்த மூளை என்னும் ஆச்சரியத்தை அறிந்துகொள்வதற்கு முன் மூளையின் மேலமைப்பு, சைஸ் இவற்றைத் தெரிந்துகொள்வோம்.

சராசரி மூளை சுமார் ஒண்ணரை கிலோ கனம் இருக்கிறது (பிறந்த முழு குழந்தையின் பாதி கனம்) அளவு? அதுவும் சுமார் ஒண்ணரை லிட்டர் (1,400 மி.லி).

ஆனால், மூளை அளவு குழுவுக்குக் குழு வேறுபடுகிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபடுகிறது. பெண்களுக்கு மூளை கொஞ்சம் குறைவு (அளவில்தான். காரணம், பெண்களே கொஞ்சம் சைஸ் குறைவானவர்கள் - ஆண்களோடு ஒப்பிடும்போது).

ஆனால், சைசுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகச் சொல்ல முடியவில்லை. அப்படிப் பார்த்தால் எஸ்கிமோக்கள்தான் அதிபுத்திசாலிகளாக இருக்கவேண்டும். அவர்களுக்கு மூளை ரொம்பப் பெரிசு. அனடோல் ஃப்ரான்ஸ் என்னும் மிக புத்திசாலி எழுத்தாளருக்குச் சின்னதாக இருந்தது மூளை (ஒரு கிலோதான்!). இன்னொரு பக்கம் திரும்பினால்... உலகிலேயே மிகப் பெரிய மூளை அளவு - ஒரு முட்டாளுக்கு இருந்திருக்கிறது!

தனிப்பட்ட மூளை கனத்துக்கும், புத்திசாலித்தனத்துக்கும் உறவில்லை. ஆனால், மூளை சைசுக்கும் பாடி சைசுக்கும் உள்ள உறவு முக்கியம். உயரமான ஆசாமிகள் மூளை கனமாக இருக்கலாம். ஆனால், குள்ளமானவர்களின் மூளை எடை குறைவாக இருந்தாலும், உடல் எடையோடு ஒப்பிடும்போது அதே விகிதம் அல்லது அதிக விகிதம் இருப்பதால் குள்ளமானவர்கள் புத்திசாலிகளாகவும் இருக்கலாம்.

ஒரு கொரில்லாவைக் காட்டிலும் மனித மூளை மூன்று மடங்கு கனம். உடல் கனத்தில் அது நம்மைவிட மூன்று மடங்கு. குதிரை நம்மைவிடப் பத்து மடங்கு கனம். ஆனால், அதன் மூளை கனம் நம்மில் பாதி. யானையின் மூளை நிச்சயமாக நம் மூளையைவிட மூன்றரை மடங்கு அதிக கனம்தான். ஆனால், அதன் உடல் கனத்தோடு ஒப்பிட்டால் விகிதாச்சாரத்தில் நாம்தான் அதிகம் (மனிதன் 2.5 சதவிகிதம், யானை 0.2 சதவிகிதம்). அதனால்தான் நம்மைப் போன்ற அற்பர்கள் பேச்சைக் கேட்டு சர்க்கஸில் பயந்துகொண்டே ஃபுட்பால் ஆடுகிறது யானை.

மூளை / உடல் கன விகிதத்துடனும் தீர்மானமாகப் புத்திசாலித்தனத்தை இணைக்க முடியவில்லை. அப்படிப் பார்த்தால் வீட்டுச் சுண்டெலியும் முள்ளம்பன்றியும் ரொம்ப புத்திசாலிகளாக இருக்கவேண்டும். எலிப்பொறிக்குள் வடையைத் தின்றுவிட்டு 'ஸாரி' என்று சுண்டெலி லெட்டர் எழுதி வைக்கவேண்டும்! அதுபோல் முள்ளம் பன்றி 'நான் பன்றியும் அல்ல... என் முதுகில் இருப்பது முள்ளும் அல்ல!' என்று புதுக்கவிதை (ஒவ்வொரு வரியையும் இரண்டுமுறை) படிக்கவேண்டும்! ஏனெனில், இவை இரண்டும் மனிதனைவிட மூளை / உடல் கன விகிதாச்சாரத்தில் அதிகம்.

எனவே எடை, சைஸ், விகிதாச்சாரம் இவற்றைவிட உள்ளே, சமாசாரத்தில் எத்தனை அடர்த்தி, எத்தனை மடிப்பு என்று கவனித்தால் மனிதன்தான் முதல்! நம் மூளைக்கு உள்ளே இருக்கும் சிக்கலில்தான் இருக்கிறது சூட்சுமம்!

நம் மூளை கனம் எப்போதும் ஒரே எடை இருப்பதுமில்லை. பிறந்ததில் ஆரம்பித்து மூன்று மடங்கு அதிகமாகிறது இளமையில். அதன் பிறகு வருஷத்துக்கு ஒரு கிராம் தலை கனம் குறைகிறது!

கொஞ்சம் சுவாரஸ்யமான புள்ளி விவரங்களைப் பார்க்கலாம்...

மிக அதிக எடையுள்ள மனித மூளை & 2049 கிராம்.

ஜோனாதன் ஸ்விஃப்ட் (கலிவர்ஸ் யாத்திரை எழுதிய எழுத்தாளர்) 2000 கிராம்.

சராசரி மனிதன் 1349 கிராம்.

அனடோல் ஃப்ரான்ஸ் (பிரெஞ்சு எழுத்தாளர்)  1017 கிராம்.

மைக்ரோ ஸெஃபாலிக்ஸ் எல்லாம் பிறவியில் மாங்காய்த் தலையர்கள் 300 கிராம்.

பாணலி கட் மாதிரி சுற்றி நம் மண்டையோட்டை வெட்டி 'டாப்' பைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் மூளை இப்படித்தான் இருக்கும் மடிப்பு மடிப்பாக, பாளம் பாளமாக, கசங்கி!

மூளை, ஸ்பைனல் கார்டு என்னும் முதுகுத்தண்டிலிருந்து முளைக்கிறது. ஒருவாறு முட்டைக்கோஸ் தண்டிலிருந்து மடிப்பு மடிப்பாக இலைகள் வளர்வதுபோல அல்லது வெங்காயம் போல... இதை மூன்று பாகங்களாக மேம்போக்காகப் பிரிக்கிறார்கள். முன் மூளை, நடுமூளை, பின் மூளை. முன் மூளை என்பது ஸெரிப்ரல் ஹெமிஸ்ஃபியர் என்று இரண்டு பாதிகளாக இருக்கிறது. நடு மூளை என்பது கீழே இருந்துவரும் தண்டின் மேல்பகுதி. பின் மூளை என்பது நடுமூளையின் கீழ் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் மிச்ச சொச்ச சமாசாரங்கள்.

முன்மூளையில் இரட்டை இரட்டையாக தலாமஸ், ஹைப்போதலாமஸ், பேஸல் காங்லியா, மூக்கு - கண் இவற்றின் முடிவுகள் போன்றவை உள்ளன.

பின் மூளையில் ஸெரிபெல்லம், மெடுலா, ஒப்ளாங்கட்டா... அட, உட்காருங்க சார்... இந்தப் பெயர்களைப் பார்த்துப் பயப்படாதீர்கள். ஒவ்வொன்றையும் தனிப்பட்டு விளக்கத்தான் போகிறோம்.

முதலில் ஸெரிப்ரம் என்பதை மட்டும் மேலாகச் சுரண்டிப் பார்க்கலாம். முன் மூளையில் மடிப்பு மடிப்பாக மூளையின் நரம்பு அமைப்பில் முக்கால் பாகம் ஆக்கிரமிக்கும் இந்தப் பகுதிதான் நம் புத்திசாலித்தனத்துக்கு எல்லாம் காரணம். இந்த மடிப்புகளில் ஏதாவது அர்த்தம், காரணம் அல்லது ஒழுங்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இந்த மடிப்புகளால் உள்ளே அடைத்து வைக்கக்கூடிய பகுதியின் பரப்பு அதிகமாகிறது என்னவோ உண்மை.

இந்த மடிப்புகளில் சில, நம் எல்லோருக்கும் இருக்கிறது. மூளை - ஆதி நாட்களிலிருந்து வளர்ந்த விதத்துக்குத் தகுந்தபடி இந்த மடிப்புகளின் வடிவம் இருக்கிறது. இந்த மடிப்புகளினால் இந்தப் பகுதியை இரண்டு பாதியாகவும், அவ்விரண்டு பாதிகளை நான்கு சுளைகளாகவும் பிரிக்க முடிகிறது. இந்த முயற்சியெல்லாம் நம் வசதிக்காக, மூளையின் எல்லா இடங்களுக்கும் பேர் கொடுத்து அவற்றை அடையாளம் கண்டுகொள்ளத்தான். ஆனால், இன்ன இடத்தில் இன்னது நடக்கிறது என்று திட்டவட்டமாக இன்னும் சொல்ல முடியவில்லை.

இந்த இரட்டைப் பகுதியைக் குறுக்கே வெட்டினால் ஒரு ஆச்சரியம் தெரிகிறது. மேலாக கார்ட்டெக்ஸ் என்று ஒரு சுமார் நாலரை மில்லி மீட்டர் போர்வை அல்லது மரத்துக்கு மேல்பட்டை போலிருக்கும் பகுதியில் கசகசவென்று எண்ணூறு கோடி நரம்புச் செல்கள் உள்ளன. அவற்றுக்கு இடையே உள்ள இணைப்பைப் பார்த்தால் பிரமிப்பு! ஒரு கன இன்ச்சுக்குள் சுமார் 16,000 கிலோ மீட்டர் நுட்பச் சரடுகள்!

சிந்தனை சம்பந்தப்பட்ட அத்தனை காரியங்களும் கார்ட்டெக்ஸ் பகுதியில் நிகழ்வதால் இத்தனை அடர்த்தி..!

முன் வரிகளில் நம் மண்டைக்குள் என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தபோது கார்ட்டெக்ஸ் என்னும் மேல்பட்டையிலேயே கால் இன்ச்சுக்கும் குறைவான ஆழத்தில் 800 கோடி நரம்புச் செல்களும், 16,000 கிலோ மீட்டர் நரம்பு நூல்களும் இருப்பதை உணர்ந்து போட்டது போட்டபடி விலகிவிட்டோம்.

இன்னும் கொஞ்சம் வெட்டிப் பார்ப்போம். இத்தனை சிக்கல் இந்த மேற்பரப்பில் எதற்காக எனில், இங்கேதான் தலைமைச் செயலகம் இயங்குகிறது. இங்கேதான், கடைசி அலசல் மூலம் பார்க்கிறோம்... கேட்கிறோம்... சிந்திக்கிறோம்... சித்திரம் வரைகிறோம்... எழுதுகிறோம்... கவிதை பண்ணுகிறோம்... பாடுகிறோம்!

இந்த மெல்லிய மேல்பட்டையைக் குறுக்கே வெட்டினால் ஆறு வரிசை தெரிகிறது. இந்த கார்ட்டெக்ஸ் பகுதியைத்தான் பழுப்பு சமாசாரம் என்று சொல்கிறார்கள். இதற்குக் கீழே போனால் நிறைய வெள்ளைப் பகுதி தெரிகிறது. இங்கே கோடிக்கணக்கான நரம்பு நூல்கள் அதி சிக்கலாகத் தென்படுகின்றன. இதிலே மூன்று வகை கனெக்ஷன் சொல்ல முடிகிறது. கொஞ்சங் கொஞ்சம் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் போல லோக்கல் இணைப்பு. நடு மையத் தண்டுக்கு இணைப்பு, மூளையின் இடது, வலது பாதியை இணைக்கும் கார்ப்பஸ் கலாஸ்ஸம் என்னும் நரம்புக் கயிறு. நாலு இன்ச் நீளமிருக்கும் இந்தப் பாலம் விசித்திரமானது.

தாமஸ் ஆல்வா எடிஸன், ''உங்கள் உடலின் முக்கியப் பணி உங்கள் மூளையைத் தாங்கிச் செல்வது'' என்றார்.

எடிஸன் அவ்வாறு சொல்லக்கூடியவர்... மூளையை நன்றாக உபயோகித்தவர்.

நியோ கார்ட்டெக்ஸ் என்னும் இந்த மேல்பகுதியின் சுருக்கம் ஒருவேளை எடிஸனுக்கு அதிகம் இருந்திருக்கலாம். ஆறு வயசுக்குள் நம் மூளை முழு சைஸில் 90 சதவிகிதம் வளர்ந்துவிடுகிறது... அதற்குப் பின் வளர்ச்சி என்பதெல்லாம் நாம் மேற்சொன்ன நியூரான்களுக்கு இடையேயான இணைப்புக்களின் விருத்திதான். இடம் குறைச்சல். எனவே, உள்ளுக்குள்ளே மடிப்புக்கள் அதிகரிக்கின்றன.

குழந்தை பிறந்தவுடன் அதன் மூளையின் மொழி சம்பந்தப்பட்ட பகுதிகளின் நியூரான் இணைப்பு அதிகமாக அடர்த்தியில்லாமல் இருக்க... ஆறு வயசுக்குள் அடர்த்தி அதிகரித்துவிடுவதைப் படத்தில் பார்க்கலாம்.

புத்திசாலித்தனம், அறிவு என்பதெல்லாம் இந்த நியூரான் இணைப்புகளின் சிக்கலில் இருக்கலாமோ என்று கருதுகிறார்கள்.

வலது இடது பாதி மூளைகளுக்கு இடையேயுள்ள கார்ப்பஸ் கலாஸ்ஸம் இணைப்பை வெட்டிப் பார்த்தார்கள். ஒரு ஆசாமிக்கு கால் கை வலிப்பு அதிகமாகி, கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் போக, ஒரு கடைசி முயற்சியாக இதை வெட்டிவிட்டார்கள். அவனுக்குக் குணமாகியது. ஆனால், சுபாவத்தில் விநோதமான மாறுதல்கள் ஏற்பட்டன.

ரோஜர் ஸ்பெர்ரி, மைக்கல் கஸானிகா என்று இரண்டு ஆராய்ச்சியாளர்கள் 1967-ல் செய்த பரிசோதனைகள், நம் மூளையின் வலது பகுதியும் இடது பகுதியும் தனித்தனியான முறைகளில் வளர்கின்றன. இந்த 'கார்ப்பஸ் கலாஸ்ஸிம்' இல்லையேல், ஒரு பக்கத்துக்கு, மற்ற பக்கத்தின் அறிவு விருத்தியைப் பற்றித் தெரியவே தெரியாது' என்று நிரூபித்தன.

-சுஜாதா  


ற்போது இந்த பூவுலகில் மனிதர்கள் எண்ணற்ற அதிசயங்களையும், வெற்றிகளையும் கண்டு வருகின்றனர். முன்பிருந்த காலத்தோடு ஒப்பிடுகையில் தற்போது மனிதர்கள் பல் விதமான முன்னேற்றங்களைக் கண்டு விட்டனர், கண்டும் கொண்டிருக்கின்றனர். இந்த மனிதன் எங்கிருந்து தோன்றினான்? இந்த பூமி எப்போது தோன்றியது? எங்கிருந்து மனிதனுக்கு இவ்வளவு ஆற்றல் கிடைத்தது என்பது இன்றும், இவையெல்லாம் நம் சிந்தனைக்கு எட்டாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. இதற்கான தேடல்களும், ஆராய்ச்சிகளும் பல மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இவை எப்போது தோன்றின என்பதற்கான விடைகள் இன்னும் சரியாக கணக்கிடப்படவில்லை. இருப்பினும் அறிவியல் ஆய்வாளர்கள் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டிருந்த பல ஆய்வுகளின் முடிவின்படி இந்தப் பூவுலகம் எப்போது தோன்றியது என்பது ஓரளவு கணிக்கப்பட்டிருக்கிறது. பூமியில் மனிதனின் தோற்றம், அவன் மொழியைக் கற்றுக்கொண்ட விதம் பற்றிய தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கின்றனர்.

வற்றாத நீரும், வளமான நிலமும், வாயு மண்டலமும் சூழ்ந்த உயிரினமும், பயிரினமும் கொண்ட அண்டகோளமானது நாம் வசிக்கும் இந்த பூகோளம். இந்த கோளம் சுற்றிவரும் சூரியன் ஒரு சுய ஒளி விண்மீன். அவ்வாறாக கோடான கோடி விண்மீன்களைக் கொண்டது ஒளிமய மந்தை எனப்படும் "கேலக்ஸி" (Galaxy). இந்த "கேலக்ஸியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் கிரகமானது நம் பூமி. அறிவியலாளர்கள் பல மூலங்களைப் பயன்படுத்தி பூமி தோன்றிய காலத்தை பல வகையாக கணித்திருக்கின்றனர். பெரிய பாறைகள், பூமியில் விழுந்த விண்கற்கள் ஆகியவற்றைக் கொண்டு பல ஆய்வுகளை நடத்தி, பூமி இப்பொழுதுதான் தோன்றிய காலத்தை பற்றிய சில முடிவுகளை நமக்குக் கொடுத்திருக்கின்றனர்.

பூமி சுமார் 4.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது என்பது விஞ்ஞானிகளின் ஒருமித்த கருத்து. பூமி தோன்றிய நாள் முதலாக, பூமியின் தளவடிவம் தொடர்ந்து மாறுபட்டு வந்திருக்கிறது என்று வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் பூமியிலிருக்கும் மிக்க முதுமையான பாறையைக் கொண்டு அறிவியலாளர்கள் ஓர் ஆய்வினை மேற்கொண்டிருந்தனர். அந்த ஆய்வின்போது அப்பாறையின் மூலத்தின் கதிரியக்கத் தேய்வை (Radioactive Decay of Elemets) ஆராய்ந்து, பூமியின் வயது 3.8 மில்லியன் என்று கணிக்கிட்டிருக்கிறார்கள். ஆனால், பூமியில் விழுந்த மிகப் புராதன விண்கற்களின் (Meteorites) மூலக் கதிரியக்கத் தேய்வை ஆராய்ந்த போது, மீண்டும் சூரியக் குடும்பத்தில் பூமியின் வயது 4.6 மில்லியன் என்று கணித்திருக்கின்றனர். விண்வெளி விஞ்ஞானம் பேரளவில் விருத்தி அடைந்து கொண்டிருக்கும் இந்த மகத்தான யுகத்திலே, வானியல் நிபுணர்கள் பிரபஞ்சத்தின் வயதைக்கூட கணக்கிட பல்வேறு முறைகளையும் ஆய்வுகளையும் கடைப்பிடித்து வந்துள்ளார்கள். இருப்பினும் பிரபஞ்சத்தின் உண்மையான வயதை தெரிந்து கொள்ள இன்றும் முடியவில்லை. பூமிக்கடியில் புதைந்திருக்கும் புராதனப் பாறைகளில் உள்ள மூலங்களின் கதிரியக்கத் தேய்வை கணக்கிட்டு பூமியின் வயது 4.6 பில்லியன் ஆண்டுகள் இருக்கலாம் என்று அறியப்பட்டது.

வான்மண்டலத்தில் ஒளிமிக்க விண்மீன்களின் ஒளித்திரட்சியையும் அதன் உஷ்ணத்தையும் பல மாதங்களுக்குப் பதிவு செய்து விண்மீனின் தூரத்தோடு ஒப்பிட்டு பிரபஞ்சத்தின் வயதை 12 பில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டது. இதைத் தவிர, சூரியன் தோற்றுவித்த காலத்தையும் சில ஆய்வுகளின் மூலம் தெளிவு செய்துள்ளனர். சூரிய பரிதியின் பிளாஸ்மா (Plasma) எனப்படும் ஒளிப்பிழம்பின் வெப்பத்தையும், அதன் வாயுக்களையும் கொண்டு செய்த ஓர் ஆய்வில் சூரியன் 10 பில்லியன் வயது கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது.

பூமி தோன்றிய காலத்தைப் பற்றிய ஆய்வுகளின் முடிவுகள், குத்துமதிப்பாக பூமி மேற்குறிப்பிட்ட காலத்தில் தோன்றியிருக்கும் என்றுதான் கூறுகின்றன. ஆனால் மனிதன் எப்போது தோன்றினான், அவனின் மொழி எப்படி தோன்றியது என்பதனைப் பற்றிய ஆய்வுகளையும் அவர்கள் மேற்கொள்வதை விடவில்லை. இதற்கும் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு இறுதியில் இதற்கான பதிலையும் அறிவியலாளர்கள் கணித்தனர். மனிதன் தோன்றிய காலத்தில் அவன் தனது இனத்தோடு தொடர்பு கொள்ள தற்போது இருக்கும் தமிழ், மலாய், ஆங்கிலம், சீனம், கிரேக்கம், அரபு மொழிகள் அல்லது இதர மொழிகளைப் பயன்படுத்தவில்லை. இவைகளெல்லாம் மனிதன் தோற்றுவித்து பல நூற்றுக்கணக்கான வருடங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டவை என்று அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி மனிதர்கள், விலங்கினக் கூட்டத்தில் சேர்ந்த ஒரு இனமே. ஆறாவது அறிவு எனக்கூறப்படும் பகுத்தறிவு கொண்டவன் என்பதே அவனை மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபட்டு காட்டுகிறது. விலங்குகள் மனிதர்களோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டவை.
ஏறக்குறைய மனிதனை ஒட்டிய குணாம்சங்கள் அவைகளுக்கு உண்டு. பரிணாம வளர்ச்சியின் போக்கில் குரங்கினத்திற்கு அடுத்ததாக மனிதன் என்று சொல்கிறது அறிவியல். மனிதர்களின் ஒத்த குணாம்சங்களைக் கொண்ட இந்த குரங்குகளைக் கொண்டு நடத்திய ஒரு ஆய்வின் மூலம் மனிதர்களின் மொழி எப்படி தோன்றியிருக்கும் என்பது பற்றிய சில தெளிவுகளை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

வாய் வழி ஒலி எழுப்பி மற்றவர்களோடு தொடர்பு கொண்ட மனிதன், காலப்போக்கில் பேச்சை, பேச்சு மொழியை உருவாக்கியிருக்கலாம் என்பது தெளிவு. ஆனால் மனிதன் முதலில் சைகைகளையும், உடல் அசைவுகளையும் மூலமாகக் கொண்டு செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டிருப்பார்கள் என்பதனை ஆதாரப்பூர்வமாகக் கூறுகின்றனர் நம் அறிவியலாளர்கள்.

மனிதர்கள் இயல்பாகவே அதிகமாக அங்க அசைவுகள் சைகைகள் மூலம் தொடர்பு கொள்ளக் கூடியவர்கள். மனித மொழி இத்தகைய அங்க அசைவுகளை முக்கியமாகக் கொண்ட சைகை மொழியாகவே முதலில் தோன்றியது. பிறகு பரிணாம வளர்ச்சிக்கிணங்க மனித மூளையின் மொழியைச் சார்ந்த பகுதிகள் நன்றாக வளர்ச்சியடைந்த பின், பேச்சு மொழியானது உருவாகியிருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

மேலும் மனிதன் சைகைகளுக்கு வலது கைகளையே அதிகம் பயன்படுத்துகிறான். வலது கையைக் கட்டுப்படுத்துவது இடது பக்க மூளையாகும். மனித மொழிக் கட்டுப்பாட்டு மையம் அமைந்திருப்பதும் இடது பக்க மூளையில்தான் என்பதன் மூலம் மனித இனத்தின் மொழி சைகைகளில் உருவாகியது என்பதில் சந்தேகமில்லை.

www.mykathiravan.com

னிதர்களாகிய நமக்குத்தான் எத்தனை விதமான பழக்கங்கள். காலையில் அது இல்லாமல் எந்த வேலையும் ஓடாது என்று சிலர் கூறும் காபி அல்லது தேநீர் தொடங்கி, அதை எடுக்காமலிருந்தால் கை கால்கள் நடுங்கி வேதனையுறும் நிலைக்கு தள்ளும் போதை மருந்துகள் வரை, பல்வேறு பொருட்களுக்கு மக்கள் பழகியிருக்கிறார்கள். மணிக்கொரு முறை புகைபிடிப்பது, பொடி போடுவது என புகையிலையோடு தொடர்புடைய சர்தா பாக்கு, பீடா, கைனி போன்ற நச்சுப்பொருட்கள் இவையும் குறிப்பிடத்தக்கவை. இது மட்டுமா, அரசாங்கம் போட்ட சாலையின் நீள அகலத்தை சரி பார்க்கும் பொறுப்பான குடிமக்களின் வெறுப்பான மதுப்பழக்கம். இந்த பழக்கங்களில் பெரும்பாலனவை உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்பதை மருத்துவ உலகம் அறிவியல் ரீதியாகவே அவ்வப்போது உணர்த்திக் கொண்டுதான் இருக்கிறது. இந்த பழக்கங்களை மாற்றச் சொன்னால் பலரால் முடியாத நிலையைக்கூட நாம் காணலாம். காரணம் இவர்கள் இந்த பழக்கங்களுக்கு, அடிமைகளாகியுள்ளனர். ஏங்க தேநீர் குடிப்பதைக்கூடவா போதை மருந்தோடு ஒப்பிட்டு அடிமைத்தனம் என்று சொல்வது? சிலருக்கு இப்படியானகேள்விகள் எழக்கூடும். காபி தேநீரை விடுங்கள், நோய் குணமாக உட்கொள்ளும் மாத்திரைகளுக்கு அடிமையானவர்களை பற்றி கேட்டதுண்டா நீங்கள். மருந்து மாத்திரைகளுக்கு அடிமையாகியுள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை அறிய முடியாத நிலையை நொந்து அங்கலாய்க்கும் மருத்துவ வல்லுனர்களைக் கேட்டால் தெரியும், இந்த பிரச்சனை எவ்வளவு தீவிரமானது என்று.

உண்மையில் மக்கள் தங்களது உடலில் ஏற்படும் சில சிக்கல்களுக்காக மருத்துவரை பார்க்க செல்கிறார்கள். மருத்துவரும் அவர்களை பரிசோதித்து பார்த்தபின் சில மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுக்கிறார். அவர்களும் அதை வாங்கி உட்கொண்டு, சிக்கல் தீர்ந்ததும் மகிழ்ச்சியடைகின்றனர். அதில் சிக்கல் இல்லை. ஆனால் பல வேளைகளில், நோயின் அறிகுறிகளையே நாம் பெரிதென எண்ணி, அவற்றை தணிவு படுத்தும் மருந்துகளை மருத்துவர் எழுதிக்கொடுக்க, அதை உட்கொண்டு, அறிகுறிகள் நீங்க, பின் மறுபடி வந்தால், மீண்டும் அந்த மாத்திரையை வாங்கி உட்கொண்டு, இப்படி ஒரு குறிப்பிட்ட மருந்துக்கு நாம் நம்மையே அறியாமல் பழகிக்கொள்கிறோம். இதைச் சொல்பவர்கள் மருத்துவ வல்லுனர்கள். ஜெர்மனியில் 14 முதல் 19 லட்சம் பேர் இப்படியாக மருந்து மாத்திரைகளுக்கு அடிமையானவர்களாக உள்ளனர் என்று ஜெர்மன் போதைபழக்க அடிமைத்தன மையம் கூறியுள்ளது. அந்நாட்டில் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையோடு இந்த எண்ணிக்கை சமநிலை வகிக்கிறது.


42 வயது கிறிஸ்டா என்ற பெண்மணி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட ஒரு நபர். செவிலியராக பணிபுரியும் இவர், தனது வாழ்வில் நிகழ்ந்த அந்த கொடுமையான சம்பவத்தின் நினைவுகள் வாட்டியெடுக்க, மிகவும் வேதனையுற்றார். மருத்துவரை நாடியபோது, அவரது பதட்ட உணர்வை, மன அழுத்ததை லேசாக்கும் முகமாக மருத்துவர் சில ஆசுவாசப்படுத்தும், நிதானப்படுத்தும் மாத்திரைகளை பரிந்துரைத்தார். வேலியம் எனப்படும் இந்த மாத்திரை தூக்க மருந்து போன்றது. இந்த மருந்தை உட்கொண்டு கொஞ்சம் நிம்மதியடைந்த இந்த பெண்மணி, நாளடைவில் கொடுமையான நினைவுகள் வாட்டும்போதெல்லாம் மாத்திரையை பயன்படுத்தத் துவங்கினார். நாளடைவில் எண்ணிக்கை அதிகரிக்க, 4 ஆண்டுகள் கழித்து ஒரு நாள்சுய நினைவிழந்து, மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்காகத் தரப்பட்ட மருந்துக்கு அந்த பெண்மணி அடிமையானதால் ஏற்பட்டதே இந்த நிலை. இன்று அவர் அந்த மருந்துகளை எடுப்பதை நிறுத்தி, அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டவராக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார் என்பது ஆறுதலான செய்தி.

இவரை போல நம்மில் பலர் நிச்சயம் இருக்கக்கூடும். தலைவலியா ஆஸ்பிரின், காய்ச்சலா பாரசிட்டமால், உடல்வலியா ப்ரூஃபென் என்று நாமே நமக்கு மருத்துவராகி மருந்துகளை வாங்கி உட்கொள்வதும் உண்டு. மருத்துவர் ஒருமுறை எழுதிகொடுத்த மாத்திரையை மறுபடி மறுபடி பயன்படுத்துவதும் உண்டு. ஆனால் இதை நாம் யாரும் பெரிதுபடுத்துவதில்லை.

பொதுவாக நாம் நோயின் மூல காரணத்தை அறியாமல் மேலோட்டமான அதன் அறிகுறிகளையே பெரிதாக கருதுவதால் வரும் குழப்பமே இந்த அடிமைத்தனத்துக்கான அடிப்படையாகும்.

இதில் நாம் கவனிக்கவேண்டிய ஒரு அம்சம், இப்படி மருந்து மாத்திரைக்கு அடிமையானவர்களில் மூன்றில் இரண்டு பேர் பெண்கள் என்பதே. வீடு, குடும்பம், அலுவலகம், பணிச்சுமை என்று பல்வேறு நிர்பந்தங்களுக்கு முகம் கொடுக்கும் பெண்களுக்கு மருந்து மாத்திரைகள் பற்றி பல்வேறு நிலைப்பாடுகளும் எண்ணங்களும் உண்டு. பெரும்பாலும் அவர்கள் தங்கள் சுமைகளை நினைத்து கலங்கும்போது, அயற்ச்சியடையும்போது தீர்வாக நாடுவது மருந்து மாத்திரைகளையே என்கிறர, டார்ட்மண்ட் பல்கலைக்கழக்த்தின் உளவியலாளர் காரின் மான். உளவியல் ரீதியான அடிப்படையைக் கொண்ட சிக்கல்கள்களின் மேலோட்டமான அறிகுறிகளாக அமையும் , தூக்கமின்மை, தலைவலி, பதட்ட உணர்வு போன்றவற்றிற்கு மருத்துவரை நாடிச் செல்லும்போது, மருந்து மாத்திரை எழுதிக் கொடுத்தால் அதையே சிகிச்சையாக பெரும்பாலானோர் கருதுகின்றனர். வேறு சிலர் இதர ஆற்றுப்படுத்தல், பழக்க வழக்கங்களிலான மாற்றம் முதலிட சிகிச்சை வழிமுறைகள் பற்றி அறிந்தாலும். ஒரு மாத்திரை சாப்பிட்டா போச்சு, மருத்துவர் சொல்வதையெல்லாம் கேட்க பொறுமை நமக்கேது என்று ஒதுங்கிவிடுகின்றனர்.

எனவே மருந்துகளை உட்கொள்ளும்போது கவனம் தேவை. நோயின் மூல காரணத்தை அணுகி அதற்கான சிகிச்சை எடுப்பதே எப்போதும் முழுமையான குணமடைதலுக்கு உதவும். மாத்திரையை விழுங்கினால் நோயின் அறிகுறிகளை தற்காலிகமாக குணப்படுத்தலாம், ஆனால் அது நாளடைவில் அந்த மாத்திரைக்கு நம்மை அடிமையாக்கும் நிலைக்கு தள்ளும் அபாயம் உள்ளது. இதை நாம் மறக்கவேண்டாம். இந்த தகவல்களை எல்லாம் கேட்டு தலை வலிக்கிறது ஒரு ஆஸ்பிரின் போட்டால்தான் சரிப்படும் என்று யாரும் புறப்படவேண்டாம்.

http://tamil.cri.cn/1/2007/06/04/62@54711.htm


வாய்க்கொழுப்பு என்றால் பச்சையாகச் சொன்னது போலிருக்கும். மாறாக நாவடக்கம் வேண்டும் என்று சொன்னால் அது மிகவும் நாகரிகமான சொல்லாகக் கருதப்படும் நாவடக்கமாகப் பேசுவது மிகச் சிறந்த நாகரிகமாகும்.

நாவடக்கம்

நாவடக்கம் என்பதிலே மேம்போக்காகக் கருதினால் இரண்டு பொருள்கள் தொனிக்கும் ஒன்று நாவை அடக்கிப் பேசவேண்டும் என்பது மற்றொன்று நாச்சுவைக்கு அடிமையாகாமல் அடக்கி ஆளவேண்டும் என்பது. அதாவது அளவாகச் சாப்பிட்டு உடம்பைப் பெருக்க வைத்துக்கொள்ள கூடாது என்பது. இந்தக் குழப்பத்திற்கு ஆளாகாமல் இருக்கவே வாய்க்கொழுப்பு என்று வெளிப்படையாகச் சொல்வது.

வாய்க்கொழுப்பு

வாய்க்கொழுப்பு என்றால் என்ன? திமிராகப் பேசுவது. யாரையும் எடுத்தெறிந்து பேசுவது செல்வமும் செல்வாக்கும் இருக்கிறது என்பதால் பொய்யைக்கூட உண்மை என்று அடித்துப் பேசுவது. யாரும் எதுவும் நம்மைச் செய்து விட முடியாது என்று ஆணவமாக, செருக்காகப் பேசுவது அப்படிப் பேசிப்பேசியே உண்மையை எழுந்திருக்கவிடாமல் செய்துவிடுவது. தனக்குக் கீழே உள்ளவர்களை உண்மையைப் பேச முடியாமல் அடக்கிவிடுவது. இன்னும் இன்னும் பேசினால் ஒரு இடத்தில் இல்லாவிட்டாலும் மற்றொரு இடத்தில் அடிவாங்கிக் கொண்டே தீருவான். அவன் வாய்க்கொழுப்பு நீண்டநாள் நீடிக்காது. ஆனால் வசதி உள்ளவன் வாய்க்கொழுப்பாகப் பேசினால் அவனை உடனடியாக ஒன்றும் செய்துவிட முடியாது. அவனுடைய செல்வாக்கும் செல்வமும் குறைந்த பிறகே அவனுடைய வாய்க்கொழுப்பு அடங்கும். நா அடக்கம் பெறும். அதனால் அத்தகையவர்களிடத்தில் அவசரப்பட்டுப் பயனில்லை. ஆனால், அத்தகையவர்கள் தங்கள் வாய்க்கொழுப்பினாலே அழிவது என்பது உறுதி.

வாய்க்கொழுப்புக்காரர்களுக்கு

இத்தகைய வாய்க்கொழுப்புக்காரர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துக் கொள்கிறோம். ஒருவரை நாம் திமிராகப் பேசித் திட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் மனம் பெரிதும் புண்படும். அந்த மன எரிச்சல் எத்தகைய மனிதனையும் எரித்துவிடும். இது பாவ புண்ணிய மில்லை. மாயமந்திரம் இல்லை. கடவுள் கவனித்துக் கொள்வார் என்பதும் இல்லை. சமுதாயத்தின் எண்ணமோ மாறுகிறது. அதனால் அத்தகைவர்கள் பாதிக்கப்படுகிறார்கள், அழிந்து போகிறார்கள். இது ஒரு நடைமுறை உண்மை.

எப்படி நிகழ்கிறது?

வாய்க்கொழுப்பாக பேசுகின்றனர். அவர் இவர் என்று பார்க்காமல், தன்னிடம் வருவோரிடம் எல்லாம் அப்படித்தான் நடந்துகொள்வார். அது ஒரு பழக்கம்தானே! நாளடைவில் அப்படிப் பேசினால்தான் தனக்குப் பயந்து நடப்பார்கள் என்று பேசுவார். அதுவும் நான்கு பேர் இருக்கும்போது இந்த நோய் உச்சநிலைக்குப் போய்விடும் எல்லோரையும் தான்தான் உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்ள வாய்த்துடுக்காகப் பேசவேண்டிவரும். இப்படி அவர் சிந்திக்கின்ற, அல்லது அவரைச் சந்திக்க வருகின்ற எல்லோரிடமும் இப்படியே நடந்து கொள்வதால், அந்த அனைவருக்கும், இந்த ஆள் வாய்க்கொழுப்பானவன் என்ற பொதுவான ஓர் எண்ணம் உருவாகும். அத்தனை பேரும் அந்த மனிதரைப் பற்றி மற்றவர்களிடம் பேசவேண்டி நேரும்போதெல்லாம, ‘அந்த ஆளுக்கு இருந்தாலும் இவ்வளவு வாய்க் கொழுப்பு ஆகாது’ என்று தங்கள் கருத்தைத் தங்களையும் அறியாமல் சொல்லியே தீருவார்கள்.

வழி அடைத்துப் போய்விடுகிறது

இப்படிப் பலருடைய எண்ணமும் சேர்ந்து உருவாகும்போது, அந்த மனிதரைப்பற்றி நல்ல எண்ணம் கொண்டுள்ளவர்கூட தங்கள் எண்ணத்தை மறுபரிசீலனைக்குக் கொண்டு வருகிறார்கள். எப்படி இருந்தாலும் உண்மை ஒரு நாளைக்கு வெளியாகித்தானே தீரப் போகிறது? அதனால் அவருக்குச் செல்வாக்கு வரும் இடமும், செல்வம் வரும் இடமும் நாளடைவில் அடைபட்டுப் போகிறது. அவர்கள் தங்கள் மனத்தை மாற்றிக் கொள்கிறார்கள். இது கண்ணுக்குத் தெரியாமல், ஒவ்வொருவரைப் பற்றியும் சமுதாயம் செய்கின்ற இயல்பான மாற்றமாகும். இதை அறியாதவர்கள், ‘நம்முடைய நேரம் சரியில்லை, கிரகம் கெட்டு இருக்கிறது. இன்று விழித்த முகம் சரியில்லை’ என்று போல, வாய்க்கொழுப்புக்காரர்களுக்கு எல்லாம் இந்நிகழ்ச்சி ஒரு பாடமாகிவிட்டது.

பொதுமக்களின் பொறுப்பு

இத்தகைய வாய்க்கொழுப்புக்காரர்களை அடக்கப் பொதுமக்கள் போராட்டம் நடத்த வேண்டியது இல்லை. பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொண்டால் போதும். இத்தகைய மனிதர்களைப் பற்றிக் கருத்துக் கூறும் வாய்ப்பு நேரும்போதெல்லாம் அவரைப்பற்றிய சரியான நியாயமான கருத்தை எடுத்துக்கூறத் தயங்கக்கூடாது. நியாயமான கருத்தை எடுத்துச் சொல்லாமலிருப்பதும் குற்றந்தான். அத்தகைய குற்றத்தைச் செய்யாமல் இருப்பதே பெரிய தொண்டாகும்.

உயர்ந்த நாகரீகம்

உலகிலேயே உயர்ந்த நாகரீகம் பிறர் மனம் நோகும்படி, பேசாது இருப்பதுதான். வாய்க் கொழுப்பாகப் பேசுகின்றவர்கள் - வலிமையுள்ளவர்களாக இருந்தால், "உங்களின் அடக்கமில்லாத பேச்சு உங்களை அழித்துவிடும் என்று எச்சரிக்கை செய்யவேண்டும். வலியில்லாதவர்களாக இருப்பின், என்ன செய்வது? நீங்கள் இப்படிப் பேசுவதையும் கேட்கவேண்டிய சூழ்நிலை உள்ளது” என்ற தங்கள் மன வேதனையை வெளிப்படுத்தி வரவேண்டும். எளியவர்களாக இருந்தால், "என்ன இருந்தாலும் இப்படிப் பேசுவது நியாயமில்லை" என்று பணிவோடு தெரிவித்துவிடுவது, இது போதும், அவர்கள் வாய்க்கொழுப்பை அடக்க.

- டாக்டர். இல.செ. கந்தசாமி
“Thannambikkai” a monthly magazine (Feb 2008)

http://www.thannambikkai.net/2008/02/01/274/

ஆணென்றும் பெண்ணென்றும் இல்லாதெம்மை தடுத்தாய்
இருதலைக் கொள்ளியென ஏனெமெக்கு உருக்கொடுத்தாய்.


திருநங்கை (Transwoman) எனப்படுவோர் பிறப்பால் ஆண்களாக அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ முற்படுவோர்களைக் குறிக்கும். அதாவது "பிறப்பால் ஒரு பாலினத்தை சார்ந்தவர்கள், சில உயிரியல்(Biological) மாறுபாட்டினால் எதிர்பாலினமாக அகவுணர்ந்து, பல உளவியல் சிக்கல்களைக் கடந்து, தொடர்ந்து தங்கள் வாழ்க்கை முறையையும் அவ்வாறே நடத்துபர்கள்" திருநங்கைகள் என்று குறிக்கப்படுகின்றார்கள்.

பல காலமாக அலி, பேடி, அரவாணி போன்ற சொற்களே வழக்கத்தில் இருந்தன. அச்சொற்கள் திருநங்கைகளை கேலிபடுத்தும் படியாக அல்லது அந்த பொருளில் பயன்படுத்தப்படுவதால், திருநங்கை என்ற சொல் திருநங்கைகளால் பரிந்துரைக்கப்படுகின்றது.

ஒடுக்கலுக்குள்ளாகி விளிம்புநிலைக்குத் தள்ளப்படும் அரவாணிகள், பொதுவாகத் தமது குடும்பச்சூழலை விட்டு விலகி, அரவாணிகள் எனும் குழுமத்தில் கலந்துவிடுகிறார்கள். பெண்மை எனும் பாலின அடையாளத்தை பெறுவது அவர்களுக்கு விடுதலையளிப்பதாக அமைகிறது என்ற கருத்து நிலவுகிறது.

திருநங்கைகளின் தனித்த பண்பாட்டியற் கூறுகள்

மரபு ரீதியான இனப் பெருக்கத்தின் அடிப்படையிலான தொடர்ச்சி எதுவும் இல்லாமலேயே அரவாணிகள் சமூகம், தமது பாரம்பரியத்தை வரலாற்றோடு இனம் கொண்டு ஒரு சமூகத்தையும், தனித்துவமான குடும்ப அமைப்புகளையும், தனித்துவமான சடங்குகளையும், வாய்மொழி மரபுகளையும் பேணி வருகிறது. பல்வேறு தனித்துவம் கொண்ட வேறுபட்ட கூறுகளையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கொண்ட தேசமாய் விளங்கும் இந்தியா முழுக்க அரவாணிகள் சமூகம் தனக்கென ஒரு பொதுப் பண்பாட்டையும், பொது கலாச்சார சடங்குகளையும், பொது வழக்காற்றையும் கொண்டுள்ளது. பொதுவான நாட்டார் வழக்காற்றிலிருந்து அரவாணிகள் வழக்காறு முற்றிலும் வேறுபட்டது.

கூத்தாண்டவர் திருவிழா

ஒரு அரவாணியின் வாழ்வில் மிக முக்கியமான தருணம் அல்லது நிகழ்வு கூத்தாண்டவர் திருவிழா. அந்த அளவிற்கு அரவாணிகளின் உணர்வோடு பின்னிப் பினைந்த ஒரு சமுதாயச் சடங்குஅது. அரவாணிகள் சமூகத்திற்கென்றே தனித்துவ அடையாளமாக விளங்கும் இந்த திருவிழா ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி நாளன்று கொண்டாடப்படுகிறது.

இந்திய அரவாணிகள் வரலாற்றில் அழியாப் புகழ் பெற்ற புண்ணியத்தலம் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் மடப்புரம் சந்திப்பிலிருந்து 30.கி.மீ தூரத்தில் உள்ளது கூவாகம் கிராமம். இங்குள்ள அரவாணிகளின் தெய்வமாகிய கூத்தாண்டவர் ஆலயத்தில் ஒவ்வோர் சித்திரா பௌர்ணமியன்றும் பல்லாயிரக் கணக்கான அரவாணிகள் கூடுவர்.

பாண்டிச்சேரியிலுள்ள பிள்ளையார் குப்பம், மடுகரை சிதம்பரம் அருகில் கொத்தடை, தேவனாம்பட்டினம் பகுதிகளிலும் கூத்தாண்டவர் ஆலயம் அமைந்திருந்தாலும், விழுப்புரம் கூவாகம் ஆலயத்திற்கு மட்டுமே அரவாணிகள் அதிகம் வருகின்றனர். மகாபாரதப் பெருங்காதையில் அர்ஜானனால் கவரப்பட்டு கர்ப்பமாக்கப்பட்ட வேடுவப் பெண்ணான நாகக்கன்னியின் மகன் அரவான்.

குருஷேத்திர யுத்தத்தில் பாண்டவர் பக்கம் வெற்றி கிடைக்க ‘எந்த குற்றமும் இல்லாத சகல லட்சணமும் பொருந்திய ஒரு மனிதப்பலி தங்கள் தரப்பில் முதல் பலியாக வேண்டும்’ என ஆருடம் கூறுகிறது. பாண்டவர் தரப்பில் இவ்வாறு சாமுத்திரிகா லட்சணம் பொருந்தியவர்களாகக் காட்டப்படுபவர்கள் மூவர். அர்ஜுனன், அவன் மகன் அரவான், ஸ்ரீகிருஷ்ணர்.

அர்ஜானனும், கிருஷ்ணரும் தான் இந்த போருக்கான முகாந்திரம் உடையவர்கள் என்பதால் அரவானைப் பலியாக்க முடிவு செய்து அவனை அணுகுகின்றனர். அரவானும் பலிக்கு சம்மதித்தாலும், தனக்கான இறுதி ஆசையாக ஒரு பெண்ணுடன் ஒரு நாள் இல்லற வாழ்வை துய்த்த பின்பே தான் பலிக்களம் புகுவேன் என உரைக்கிறான். வேந்தர் குலம் முதல் வேடுவர் குலம் வரை எந்தப் பெண்ணும் அதனை ஏற்கவில்லை. இறுதியாக ஸ்ரீகிருஷ்ணரே மோகினி அவதாரமெடுத்து அரவானை மணக்கிறார். ஒரு நாள் இல்லற வாழ்விற்குப்பின் பலிக்களம் புகுகிறான் அரவான். விதவைக் கோலம் பூணுகிறாள் மோகினி. இந்த சாராம்சத்தின் அடிப்படையில் மோகினியாய் தம்மை உணரும் அரவாணிகள் கூடி வரும் இடமே கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா.

சித்திரா பௌர்ணமிக்கு மூன்று நாட்களுக்கு முன்பே அரவாணிகள் விழுப்புரத்திற்கு வந்துவிடுகின்றனர். அனைத்து விடுதிகளும் அரவாணிகளால் நிரம்பிவிடுகின்றன. எங்கு நோக்கிலும் அரவாணிகள். இந்த நிகழ்வு ஓர் சமயம் சார்ந்த நிகழ்வாக இருப்பினும் இந்தியாவின் பல பாகங்களில் இருந்துவரும் அரவாணிகளை ஒன்றினைக்கும் விழாவாகவே அமைகிறது. அரவாணிகள் தங்கள் தோழிகளை சந்திக்கவும், உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும், நலம் விசாரிக்கவும், தங்கள் கலைகளை வெளிப்படுத்தும் இடமாகவும் இது அமைவதால், சமுதாயத்தின் கேலிப் பார்வைகள், ஒதுக்குதல் கூவாகத்தில் இல்லை.

சித்திரா பௌர்ணமியன்று கூத்தாண்டவராகிய அரவானைக் கணவனாக தம்முள் வரித்துக் கொண்டு கோயில் அர்ச்சகர் கையால் தாலி கட்டிக் கொள்கின்றனர் அரவாணிகள். விடியவிடியத் தங்களது கணவனான அரவானை வாழ்த்தி பொங்கல் வைத்து கும்மியடிச்சிட பாட்டமும், ஆட்டமுமாக இரவு கழிகிறது. பொழுது மெல்ல புலரத் துவங்க,அதுவரை ஆனந்தமாய் இருந்த அரவாணிகள் முகத்தில் மெல்ல சோக ரேகைகள் படரத் துவங்குகின்றன.

அரவானின் இரவு களியாட்டம் முற்றுப் பெற்று களப்பலிக்குப் புறப்படுகிறான். நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் மரத்தால் ஆன அரவான் சிற்பம் வைக்கப்பட்டு, கூத்தாண்டவர் கோயிலிலிருந்து நான்கு கி.மீ தூரத்தில் உள்ள கொலைக் களமான அமுதகளம் கொண்டு செல்லப்படுகிறான்.வழியெங்கும், சோகத்துடனும், அழுத கண்ணீருடனும் அரவாணிகள்.

வடக்கே உயிர் விடப்போகும் அரவானைப் பார்த்து ஒப்பாரி வைக்கின்றனர். அமுதகளத்தில் அரவான் தலை இறக்கப் படுகின்றது. தன் தாலி அறுத்து, பூ எடுத்து, வளையல் உடைத்து பின் வெள்ளைப் புடவை உடுத்தி விதவை கோலம் பூணுகின்றனர்.

http://ta.wikipedia.org/wiki/திருநங்கை

Tamil transgender people in Singapore (Part 1 of 3)



Tamil transgender people in Singapore (Part 2 of 3)



Tamil transgender people in Singapore (Part 3 of 3)

இன்று தான் நம் வாழ்க்கையின் கடைசி நாள் என்பதைப் போல ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டு பிழைத்தவர், விபத்தில் சிக்கிப் பிழைத்தவர், நெருங்கிய ஒருவரை இழந்தவர்... இவர்களைப் பாருங்கள்! வாழ்க்கையை அவர்கள் பார்க்கும் விதமே, "பாசிடிவாக" இருக்கும். "அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்!" என்று எதையும் தள்ளிப் போட மாட்டர். எங்கேயாவது போக வேண்டுமா? ஒரு நண்பரை பார்க்க வேண்டுமா? உடனே செய்து விடுவர். "பிறகு" என்ற வார்த்தையே அவர்களிடம் கிடையாது.

நமக்கு நடக்கும் நல்ல விஷயங்களை ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதுங்கள். பேச ஆரம்பிக்கும் போது, உங்கள் அருமை குழந்தை என்ன, என்ன வார்த்தைகள் பேசினாள் என்பதையும் எழுதி வையுங்கள். அவற்றையெல்லாம் எழுதி வைக்காவிட்டால், பிறகு ஞாபகம் இருக்காது. பிரச்னைகளை கூட எழுத ஆரம்பியுங்கள்; தீர்வு கிடைக்கும்.

உங்கள் வாழ்க்கையை பற்றி உங்கள் பேரக் குழந்தைகளிடம் என்ன நினைவு கூற விரும்புகிறீர்கள்? எப்படி உங்களை மற்றவர்கள் நினைவு கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் குழந்தையின் ஸ்கூல் டே விழாவை தவிர்த்து, ஆபீஸ் மீட்டிங் தான் முக்கியம் என்று சென்றீர்களே. இப்போது அது முக்கியமா? பெட்ஷிட் வாரா வாரம் மாற்றப்பட வேண்டும், தரை சுத்தமாக இருக்க வேண்டும் என்பதுதான் மற்றவற்றை விட முக்கியமா?

சின்ன, சின்ன தவறுகளை பெரிது பண்ணாதீர்கள்! ஓவர் டேக் பண்ண, உங்களை அனுமதிக்காத டிரைவரின் மீது ஏன் கோபம்! புன் சிரிப்பு செய்யுங்கள்; உங்கள் மீது அவருக்கு கோபமாக இருந்தால் அது அவர் பிரச்னை. ட்ரெயினை தவற விட்டு விட்டீர்களா? போகட்டுமே, அதற்கு ஏன் டென்ஷன், ஸ்டேஷனில் ஒரு காபி குடித்து அடுத்த ட்ரெயினில் போகலாமே!

பிடிக்காத வேலை, கஷ்டமான வேலை என்றால், ஏன் தள்ளிப் போடுகிறீர்கள்? தள்ளி போடுவது, நமது சக்தியைத்தான் விழுங்குகிறது; வீணாக்குகிறது. கூடவே, "இந்த வேலையை இன்னும் பண்ணவில்லையே என்ற கவலை வேறு; அந்த வேலையை உடனே செய்து முடிப்பதே நல்லது.

புது விஷயங்களில் ஆர்வம் எடுத்துக் கொள்ளுங்கள். ஞாயிற்றுக்கிழமை என்றால் நிறைய தூங்கி லேட்டாக எழுந்து கொள்ளத்தான் வேண்டுமா? சீக்கிரம் எழுந்து அருகே உள்ள பூங்காவில் காலை ப்ரேக் பாஸ்ட்டை ஏன் சாப்பிட கூடாது? மற்றவர்கள் வருவதற்கு முன் திரும்பி விடலாம். அன்றைய நாள் நீண்டதாக இருக்கும். மத்தியானம் எப்போதும் தூங்காதவரா? ஒரு, "ஞாயிறு" நன்றாக தூங்குங்கள்.

அடுத்த வீட்டுக்காரர் புது கார், புது ஸ்டீரியோ ஸிஸ்டம் வாங்கினால் என்ன? நன்றாக கவனித்து பாருங்கள். அவர் சனி, ஞாயிறு கிழமையிலும் ஆபீசுக்கு போக வேண்டியிருக்கும். உங்களை மாதிரி குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக அவர் இருக்கிறாரா? உங்கள் மாதிரி, நண்பர்களை அவர் சந்திக்கிறாரா? இருக்காது.

அணியாத டிரஸ், வெளியே எடுக்காத கிச்சன் பாத்திரங்கள், யூஸ் பண்ணாத படுக்கை, இதே போல பொம்மைகள், புத்தகங்கள், மர சாமான்கள் இவற்றை தர்ம ஸ்தாபனத்திற்கோ, ஏழை எளியவருக்கோ தானமாக கொடுத்து விடுங்கள்! நிறைய மகிழ்ச்சி கிடைக்கும்; வீட்டிலும் நிறைய இடம் மிஞ்சும்.

"நோ" சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள். ஏற்கனவே மிகவும், பிஸியாக இருக்கிறீர்கள் என்றால், இன்னும் அதிக வேலை என்றால், "நோ" சொல்லுங்கள். உங்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.

சில ஆண்டுகள் தொடர்ந்து ஓடினால் மெஷினுக்கும் ரிப்பேர் பார்க்க வேண்டும்; அதே போலத் தான் மனித உறவுகளும். காதலித்தவரை திருமணம் செய்து கொள்கிறீர்கள், முன் மாதிரி இன்னும் காதலிக்கிறீர்களா? கணவர், மனைவி, பார்ட்னர் எல்லா உறவுக்கும் ரிப்பேர் தேவை; நேரம் ஒதுக்குங்கள்.

நண்பர்களுக்கு கொடுக்கும் நேரத்தை, கொஞ்சம் உங்கள் குடும்பத்தினருக்கும் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு உங்கள் நேரம் கண்டிப்பாக தேவை.

உங்கள் குடும்பத்தினர், பார்ட்னர், நண்பர்கள் இவர்களிடம் நீங்கள் விரும்பும், பாராட்டும் நல்ல குணங்களை பற்றி ஸ்பெஷலாக சொல்லுங்கள். நன்றாக ஒரு விஷயத்தை செய்தால், அவர்களை வாய்விட்டு பாராட்டுங்கள்; நல்ல டானிக் போன்று அது உதவும். நீங்கள் செய்யும் பல காரியங்களையும் அவர்களும் பாராட்டக் கூடும்.

எல்லா பிரச்னைகளையும் உங்கள் மீது போட்டு விடுகின்றனரா உங்கள் நண்பர்கள்? அது தவறு. அதற்கு, இனி மேலும் இடம் கொடுக்காதீர்கள். அவர்கள் பிரச்னைகள் உங்களையும் பாதிக்க ஆரம்பித்தால், கொஞ்சம் ஒதுங்குங்கள். தங்கள் பிரச்னையை சந்திக்க, தீர்த்துக் கொள்ள அவர்கள் ஆரம்பித்துக் கொள்ளட்டும்.

நண்பர்கள், தூரத்து உறவினர்கள் இவர்கள் பலருடன், "டச்" விட்டு போய் விட்டதா? பரவாயில்லை, இன்று துவங்குங்கள்... போனில் பேசலாம், ஈமெயில் அனுப்பலாம், லெட்டர் எழுதலாம். அவர்கள் நிச்சயம் சந்தோஷப்படுவர்.

உங்கள் மனதுக்கு பசுமை நல்லது. தோட்டத்திலிருந்து புது பூக்களை பறித்து வையுங்கள். விடியற்காலை எழுந்து மார்கெட்டிற்கு சென்று குறைந்த விலையில் காய், கறி பழங்களை வாங்கி வாருங்கள். தொட்டிகளில் செடி வளர்ப்பது கூட வீட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

நிறைய அலைகள், கடல் மணல், வெறும் கால்கள் இவை எல்லாம் உடலுக்கும், உள்ளத்திற்கும், மகிழ்ச்சி அளிப்பவை. கடற்கரைக்குச் செல்லுங்கள்; முடியாதவர்கள், நதிக்கரை செல்லுங்கள். இயற்கை மிகவும் சிறப்பானது.

ஏதாவது புதியதாக உருவாக்குங்களேன்... சித்திரம் வரைவது, சிற்பம், தைப்பது, கேக் செய்வது, தோட்டத்தில் புது செடி வளர்ப்பது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.

வீட்டுக்கு வெளியே சென்று நிறைய சுத்தமான காற்றை சுவாசியுங்கள். நுரையீரலின் அடித்தளத்திலிருந்து நிறைய காற்றை உட்கொள்ளுங்கள். பழைய காற்றெல்லாம் போவதை சுகமாக உணர்வீர்கள்.

வாக்கிங் செல்லுங்கள் மெதுவான, ஆனால் நிச்சயம் பயனுள்ள எக்ஸர்ஸைஸ். உடலுக்கும், உள்ளத்திற்கும் நல்லது. ரெகுலராக வாக்கிங் செல்வதால் தினமும் நன்றாக இருப்பதை உணர்வீர்கள்.

நல்ல, பழைய நகைச்சுவை வீடியோக்கள், திரைப்படங்களை வீட்டில் போட்டு பார்த்து, குடும்பம் முழுவதும் நிறைய சிரித்து மகிழுங்கள்.

வீட்டில் பர்னிச்சர், பொருட்களை இடம் மாற்றி வையுங்கள்; அந்த மாதிரி வீட்டை மாற்றி அமைப்பதே ஒரு நல்ல ஹாலிடே தான்!

நல்ல, மகிழ்ச்சியான விஷயத்தை விரும்பி, காத்திருந்து அனுபவியுங்கள். விடுமுறையில் ஒரு சுற்றுலாப் பயணம்; வெளியே சென்று சாப்பிடுவது போல!

உங்கள் வீட்டுக்கு, டின்னருக்கு நண்பர்களை கூப்பிடுங்கள். சாப்பிடும் அறையை சுத்தம் செய்து அலங்காரம் செய்யுங்கள். விசேஷ மெனு தயாரித்து, அதற்காக பொருட்கள் வாங்குவதும், டின்னரை தயாரிப்பதுமே மகிழ்ச்சியான, "சுமை". வருபவர்களும் மகிழ்ந்து பாராட்டுவர். அன்று இரவு எல்லாருக்கும் மகிழ்ச்சி கண்டிப்பாக இருக்கும்.

சிரியுங்கள்; சிரிப்பு ஒரு தொற்று வியாதி! அனைவருக்கும் பிடிக்கும்.

யாராவது ஒருவருடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஆக்குங்கள். சமயம் கிடைக்கும் போது ஏதாவது நல்ல தர்ம காரியத்திற்கு உங்கள் நேரத்தை செலவழியுங்கள். குழாயில் தண்ணீர் வரவில்லை, குழந்தையை ஸ்கூலுக்கு அழைத்துப் போக ஆட்டோக்காரன் வரவில்லை, பணிப்பெண், உதவியாளர் வரவில்லை, பஸ் கிடைக்கவில்லை என்று வாழ்க்கையில் பல கஷ்டங்கள். இவற்றையெல்லாம் மீறி மகிழ்ச்சியாக இருப்போம்!

- தினமலர்

சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்
புயல் மையம்கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ.....
சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்
புயல் மையம்கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ.....

வெற்றியைப்போலவே ஒரு தோல்வியும் நல்லதடி
வேப்பம்பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி
குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி
இழையும் புண்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி
தவறுகள் பண்ணிப் பண்ணி திருந்திய பிறகுதான் நாகரீகம் பிறந்ததடி
தவறுகள் குற்றமல்ல சரிவுகள் வீழ்ச்சியல்ல பாடம் படி பவளக்கொடி
உள்ளம் என்பது கவலைகள் நிறப்பும் குப்பைத்தொட்டியில்லை
உள்ளம் என்பது பூந்தோட்டியானால் நாளை துன்பமில்லை
புயல் மையம்கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ.....

ஆதியில் ஆண்டவன் இந்த பூமியைப்படைத்தானே
அவன் ஆசையைப்போலவே இந்த பூமி அமையலையே
ஆண்டவன் ஆசையே இங்கே பொய்யாய் போய்விடில்
மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா
நன்மையென்றும் தீமையென்றும் நான்குபோர்கள் சொல்லுவது நம்முடைய பிழையில்லையே
துன்ப என்ற சிற்பிக்குள்தான் இன்ப என்ற முத்து வரும் துணிந்தபின் பயமில்லையே
கண்ணீர்துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டுகொள்
காலுக்கு செருப்பு எப்படிவந்தது முள்ளுக்கு நன்றிசொல்
புயல் மையம்கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ......

சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்.

- வைரமுத்து


















































Don't Worry, Be Happy





லகம் முழுக்க உள்ள பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் இன்று அதிக பட்ச பயத்துடன் உச்சரிக்கப்படும் வார்த்தைகள் இவைதான். 'தீவிரவாதம்' 'வன்முறை' என்று தான் நான் கேள்விபட்டிருக்கிறேன். 'இஸ்லாமிய தீவிரவாதம்' என்று சொல்லுகிறார்களே அது என்ன?

இஸ்லாமியர் செய்கிற தீவிரவாதம் என்று பொருள் சொல்லலாமா? பழிக்குப்பழி; ரத்தத்துக்கு ரத்தம்' என்று எந்த மதமும் வன்முறையை போதிப்பது இல்லை என்னும் போது, தீவிரவாதத்திற்கு முன்னால் 'இஸ்லாமிய' என்கிற அடைமொழி ஒட்டிக்கொள்வதன் பின்னணி என்ன?

ஒரு இந்துவோ, கிறிஸ்தவரோ தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டால் அவரை 'இந்து தீவிரவாதி' என்றோ, 'கிறிஸ்தவ தீவிரவாதி' என்றோ ஏன் அழைப்பதில்லை? தீவிரவாதம் என்ற விஷயம் நாடு, இனம், மதம், மொழி என எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது' என மனித உரிமை ஆர்வலர்கள் பலமுறை சொன்னாலும் அது ஏன் பெரும்பாலானவர்கள் காதுகளில் விழுவதில்லை? இப்போது உலகம் முழுக்க திரும்ப திரும்பக் கட்டவிழ்க்கப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான பொய்களுக்கு என்ன காரணம்?

சுமார் அறுநூறு வருடங்களுக்கு முன்பு இந்தியா முழுவதையும் முகலாயர்கள் ஆண்டதாக வரலாறு இருக்கிறது. அதிகாரமும் ஆட்சியும் இருந்தபோதே அவர்கள் நினைத்திருந்தால் மக்களை மிரட்டிப் பணிய வைத்து, இஸ்லாமிய மதத்தைப் பரப்பியிருக்கலாம். ஆனால் இன்றைய நடைமுறை உண்மை, முஸ்லிம்கள் இந்தியநாட்டில் வாழும் சிறுபான்மை மதத்தினர் என்பதுதான்! அதேபோல் ஸ்பெயினிலும் சில நூறு வருடங்களுக்கு முன்பு ஆண்டிருக்கிறார்கள். இன்று ஸ்பெயினில் வாழக்கூடிய முஸ்லிம்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.

எந்த முகலாய மன்னரும் இஸ்லாமியர்களின் புனிதக் கடமைகளில் ஒன்றாகச் சொல்லப்படும் ஹஜ்ஜுக்கு புனிதப் பயணம் போனதாக ஒரு சிறிய தகவல் குறிப்பு கூட கிடையாது. வெள்ளையர்கள் போல நாடு பிடிக்க வந்தவர்கள்தான் முகலாயர்கள். தாஜ்மஹாலையும் கோட்டைகளையும் கட்டினார்களே தவிர, இஸ்லாமிய மதத்தைப் பரப்ப வந்தவர்கள் என்பதில் வரலாற்று ரீதியான சான்றுகள் எதுவும் இல்லை. அந்த வரலாற்றிலும் கூட, அவுரங்கசீப் ஒரு மோசமான முகலாய மன்னன்.

அவன் இந்துக்களை ஒடுக்கினான்' என்பது போன்ற முகலாய மன்னர்களுக்கு எதிர்மறையான சாயத்தை பூசும் வரலாற்றுத் உண்மையில் அவுரங்கசீப்பீன் அரசவையில் பல முக்கியமான பதவிகளை இந்துக்கள் வகுத்திருக்கிறார்கள்.

எத்தனையோ இந்துக் கோயில்களுக்கு அவர் நன்கொடை கொடுத்திருக்கிறார். இதை வின்சென்ட் ஸ்மித் என்பவர், 'இந்தியன் ஹிஸ்டரி' என்கிற புத்தகத்தில் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். மாமன்னர் அசோகரின் ஆட்சிக்கு பிறகு இந்தியா முழுவதையும் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தவர்கள் முகலாய மன்னர்கள்தான். 'ஒருங்கிணைந்த இந்தியா' என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்தியவர்களும் முகலாயர்கள்தான்!

'ஆரியர்கள் வருகை' என்று பாடப்புத்தகங்களில் சொல்லப்படும் வரலாற்றில் தான் 'முகலாயர்களின் படையெடுப்பு' என்று சொல்லிக் கொடுத்து பள்ளிப் பருவத்திலேயே மதத் துவேஷத்தைத் தூவி வளர்க்கிறார்கள். இவர்கள் குறிப்பிடும் பெருமைக்குரிய ஆரியர்கள் வருகைதான், இங்கிருந்த பூர்வகுடிகளை சாதி ரீதியாக பிரித்து,அந்த பிரிவினையில் தன்னை கொழுத்து வளர்த்துக் கொண்டு நிற்கிறது.

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தைப் பற்றியும் பேசவேண்டிய கட்டாயம் இருக்கிறது. முஸ்லிம்களுக்கு தேசப்பற்று இல்லை என்கிற விஷமமும் இங்கே திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. இந்தியாவின் சுதந்திரத்திற்காக எத்தனை தூரம் மற்றவர்கள் பாடுபட்டிருக்கிறார்களோ, அதற்குக் கொஞ்சமும் குறையாமல் முஸ்லிம்களும் பாடுபட்டிருக்கிறார்கள். 'முஸ்லிம்கள் மதவெறி பிடித்தவர்கள், மதத்திற்காக எதையும் செய்வார்கள்' என்று சொல்லுபவர்கள், உண்மையான வரலாற்றை தயவு செய்து படித்து விட்டு பேச வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

'இஸ்லாம்' என்ற சொல்லின் அர்த்தமே, ஆண்டவனுக்கு அர்ப்பணித்துக் கொண்டு அமைதியை நிலை நாட்டுவது' என்பதுதான். 'ஜிகாத்' என்று குறிப்பிடுவது நல்லதுக்கும் கெட்டதுக்குமான மனப்போராட்டத்தை. அமைப்பு ரீதியிலான வன்முறையை இஸ்லாம் ஒரு போதும் ஆதரிக்கவிலை. ஆனாலும் வரலாற்று நெடுகிலும் முஸ்லிம்களை வன்முறையாளர்களாக்க் காட்டுவதன் அரசியல் என்ன?

இந்தியாவில் தலித்துகளை விட மோசமான நிலைமையில் முஸ்லிம்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது "சச்சார் கமிட்டி" அறிக்கை. அதிக அளவில் வசிக்கிறார்கள் என்று சொல்லப்படும் பீகார், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் சோற்றுக்கே வழியில்லாத பரம ஏழைகளாகவே முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள், ஆம்பூர் பகுதியில் வாழும் முஸ்லிம்கள் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில், காலை ஆறு மணியிலிருந்து இரவு ஏழு, எட்டு மணிவரை உழைத்தாலும் அவர்களுடைய ஒருநாள் கூலி பதினைந்து ரூபாய்க்கு மேல் இன்னமும் உயர்ந்து விடவில்லை. எவ்வளவு கடுமையான உடல் உழைப்புக்கும் இங்கே கிடைக்கக்கூடிய கூலி எந்த வகையிலும் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிவிடப் போவதில்லை என்பதை அறிந்துதான், இதே உடல் உழைப்பை வெளிநாடுகளில் கொட்டினால் நிறைய சம்பாதிக்கலாமே என்று வெளிநாடுகளுக்கு போவதை பலர் விரும்புகிறார்கள்.

காலம்காலமாகப் பதவிகளில் இருந்து சுகம் கண்டவர்கள்தான் அந்தப் பதவியை தக்க வைத்துக் கொள்ள படாதபாடு படுகிறார்கள். ஐஐடி ஒதுக்கீடு விஷயத்தில் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் ஷூ பாலீஷ் போட்டு போராட்டம் நடத்தியதை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. 'அவனவன் அவனவன் வேலை செய்தால் போதும்; பட்டத்தையும் பதவியையும் நாங்கள் மட்டுமே அனுபவிப்போம்' என்பதே அந்தப் போராட்டத்தின் நோக்கம். எங்கே இவர்களும் மேலே வந்து விட்டால் நம் நிலைமை என்னவாகுமோ என்ற பயம் பீடிக்கத் தொடங்கியதன் விளைவே இந்த போராட்டங்கள் அனைத்தும்! ஒடுக்கப்பட்ட தலித்துகளும் சிறுபான்மையினரும் நிர்வாகத்துக்கு வந்தால்தான், அவர்கள் சார்ந்த சமுதாயத்துக்கு விடிவுகாலம் பிறக்கும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் ஒரு தலித்தோ, முஸ்லிமோ பிரதமராக முடியுமா? எந்த காலத்திலும் முடியாது என்பது தான் உண்மை. இப்படியொரு காலகட்டத்தில் தமிழக முதல்வர் கொண்டு வந்திருக்கும் 3.5 சத இடஒதுக்கீடு முக்கியமான முன்முயற்சியாக இருக்கிறது. அவசரச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட இந்த ஒதுக்கீட்டையும் கிடைக்காமல் செய்ய சில சக்திகள் முனைப்பாக இருக்கின்றன.

ஒதுக்கீடுகள் கிடைத்தாலும் அதை பயன்படுத்தும் மனநிலையை முஸ்லிம்கள் வளர்த்துக் கொள்வதும் இங்கே செய்யவேண்டிய ஒன்று, நன்றாகப் படித்தால் இங்கேயே நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கலாம் என்ற எண்ணம் முதலில் அவர்களுக்கு வர வேண்டும். ஒரு குடும்பத்தில் நாலு பேர் இருந்தால், அதில் ஒருவன் உழைத்தால் போதும்... மற்றவர்கள் அவனுடைய உழைப்பில் வாழலாம் என்கிற மனப்போக்கு இருக்கிறது. மற்ற சமூகங்களில் உள்ளவர்களைப் போல நாமும் படிக்க வேண்டும், நிர்வாகத் துறைகளுக்கு வரவேண்டும் என்ற விருப்பமே பலருக்கு வரவில்லை.

தங்களுக்கு அடிப்படையான தகுதிகளை வளர்த்துக் கொண்ட பிறகு கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பற்றிப் பேசுவது தானே சரியாக இருக்கும்? எதற்காகப் போராடுகிறோம் என்று தெரியாமல் போராடுவதில் என்ன நடந்துவிடப்போகிறது? குர்ஆனில் வாசகம் ஒன்று உண்டு.

'உங்கள் மனதில் மாற்றத்தை கொண்டுவராத வரையில் நாங்கள் கொடுக்கின்ற அருட்கொடைகளை மாற்றித்தரப் போவதில்லை'

இப்போதைய சூழ்நிலைக்கு மிகவும் பொருந்தக்கூடிய வாசகம்!

-நாகூர் ரூமி
(குங்குமம் 04-10-2007)



மதமறுத்த, மதம் பிடித்தத் தீவிரவாதிகள்!

ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்னர் புதிதாக வார்க்கப் பட்டு, ஊடக அகராதிகளில் புகுத்தப் பட்டதும் இன்றைய காலகட்டத்தில் பரவலாகப் பேசப்பட்டு, வலிந்துத் திணிக்கப்பட்ட சொல்லாடல், "இஸ்லாமியத் தீவிரவாதம்" என்பதாகும்.

கடந்த செப்டம்பர் 11இல் அமெரிக்காவின் வாஷிங்டனின் பெண்டகன் மற்றும் நியூயார்க்கின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு இது, முதன்மைத் தலைப்பு வகிக்கும் சர்வதேச அளவிலான விவாதப் பொருளாகவே மாறிவிட்டது.

இந்தியாவின் அரசியலை உலகம் மறுவாசிப்புச் செய்யத் தொடங்கக் காரணமாய் அமைந்த அண்மைத் தலைப்புச் செய்தியான "ஹிந்துத்துவத் தீவிரவாதம்" என்ற விஷயம் பற்றியெரியத் துவங்கிய வேளையில் ஒரே இரவில் மும்பை பயங்கரவாத்தினால் இந்தியாவில் ஹிந்துத்துத் தீவிரவாதம் மறக்கடிக்கப்பட்டு மீண்டும் இஸ்லாமியத் தீவிரவாதம் புதிப்பிக்கப் பட்டது.

இஸ்லாத்தினை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தீவிரவாதத்தைக் கடுமையாக எதிர்க்கின்றனர். மும்பையில் சமீபத்தில் நடந்த மிருக வெறியாட்டத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, வருத்தத்தையும் பகிர்ந்து கொள்கின்றனர். இதில் இறந்துபோனவர்களில் ஒரு பெரும் பங்கினர் முஸ்லிம்கள் என்கிறது புள்ளிவிபரம் ஒன்று.

வன்முறை, பயங்கரவாதம் என்பதற்கு இஸ்லாத்தில் துளியும் இடமில்லை என்பதையும் வன்முறைக்கு வித்திடும் காரணிகள் எள்ளளவும் இஸ்லாத்தில் இல்லை என்பதையும் இந்த ஆக்கத்தில் பார்ப்போம்.

அமெரிக்காவின் 9/11 உட்பட ஆங்காங்கே பொதுமக்களைக் குறிவைத்து நடக்கும் இத்தகைய பயங்கரவாதத்தினை மேற்கொள்ளும் குற்றவாளிகளின் பின்னணியோ, அவர்கள் செய்த பாதகச் செயலுக்கான ஆதாரங்களோ முழுமையாக நிறுவப்படவில்லை என்ற வருத்தத்திற்குரிய யதார்த்தத்தை முதலிலேயே சொல்லியாக வேண்டும். குற்றமிழைத்ததாக ஐயுறப் படுவோர் (Prime suspect) மீது குற்றம் நிரூபணமாவதற்கு முன்னரே அரசும் ஊடகங்களும் கைகோர்க்கும் கோயபல்ஸ் தனத்தினால் குற்றவாளிகளாக்கப்படும் கொடுமையும் நமக்குப் பழகிவிட்ட ஒன்றாகும்.

இத்தகைய பயங்கரவாதிகளுக்குப் பல அமைப்புகளுடனான தொடர்பு இருப்பதாகச் சொல்லப் படுகிறது. முதலாளித்துவத்தை எதிர்க்கும் கம்யூனிஸவாதிகளோ, குடியரசின் மீது கோபமுள்ள சர்வாதிகாரக் கூட்டமோ அரசியல் இலாபங்களுக்காக உள்நாட்டுக் கலவரத்தைத் தூண்டும் மட்ட ரக அரசியல்வாதிகளோகூட தீவிரவாதிகளின் நிழல் முதலாளிகளாக இருக்கலாம்.

ஆனால் துரதிருஷ்டவசமாக, தீவிரவாதச் செயல்களைச் செய்பவர்கள் முஸ்லிம் பெயரில் உலாவருகின்றனர். இதில் மும்பைத் தீவிரவாதச் செயல்களைச் செய்தவர்கள் யார் என்பதோ ஏவி விட்டவர்களின் பின்னணி என்ன என்பதோ, இக்கொடிய செயல்களைச் செய்ய நேர்ந்த கட்டாயம் என்ன என்பதோ இன்னும் புரியாத புதிராகத்தான் உள்ளது.

எது எப்படி என்றாலும், இதுபோன்ற கொடிய காரியத்தைச் செய்பவர்கள் முஸ்லிம்கள் சூடிக் கொள்ளும் பெயரில் இருந்தாலும், இவர்கள் செய்த இப்பயங்கரவாதத்திற்கு "இஸ்லாமியத் தீவிரவாதம்" என்று பெயர் சூட்ட இயலாது. தர்க்க ரீதியில் இதை அணுகலாம்.

ஒரு யூதன் எப்படி இத்தகைய பயங்கரவாதச் செயலைச் செய்யும்போது, "யூதப் பயங்கரவாதம்" என்று அழைக்க இயலாதோ, கிறித்துவன் செய்கையில் "கிறித்துவப் பயங்கரவாதம்" என்று அழைக்க இயலாதோ அவ்வாறே முஸ்லிம் பெயரில் உள்ள ஒருவன் செய்யும் பயங்கரவாதத்தை "இஸ்லாமிய பயங்கரவாதம்" என அழைக்க இயலாது. இது அனைவரும் ஒருமனதாக ஒப்புக் கொள்ளும் கூற்றே!

காரணம், மதத்தின் பெயரால் அப்பாவி மக்கள் கொல்லப் படுவதை எந்த மதமும் அனுமதிப்பதில்லை. கொல்லப்படுவது முஸ்லிம்களோ, கிறித்துவர்களோ, இந்துக்களோ - மண்ணில் விழும் இரத்தம் ஒரே நிறம்தான்; பறிபோகும் உயிர் எவருடையதாக இருப்பினும் விலை மதிப்பற்றதுதான்.

"தனி மனிதன் ஒருவனைக் கொலை செய்வது நரக நெருப்பிற்கு இட்டுச் செல்லும் பெரும் பாவங்களில் ஒன்றாகும்!" என்பது இஸ்லாத்தின் அடிப்படையாகும். இந்த ஒரு கூற்றிலேயே அநியாயக் கொலையை இஸ்லாம் வன்மையாக எதிர்ப்பதை எவரும் உணர இயலும். தமது மதத்தின் மீது பற்றுள்ள எவனும் இத்தகைய மாபாதக செயலைச் செய்யத் துணிய மாட்டான்.

இதை இன்னொரு விதத்தில் சொல்ல வேண்டுமெனில், அமைதியைப் போதிக்கும் ஒரு சமயத்தைப் பற்றி நேர்மாறான அல்லது தவறான எண்ணத்தினைத் தோற்றுவிக்க வேண்டும் என்று எண்ணுபவர்களே தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதோடு அவர்கள் தாங்கி இருக்கும் பெயர்களால் இஸ்லாத்துக்குத் தீராக் களங்கத்தை ஏற்படுத்துகின்றனர்.

இறைவன் உண்டு என்ற ஆத்திக நம்பிக்கையினைப் பின்பற்றும் அத்தனை மதங்களும் மனித குலத்தைத் தழைக்கச் செய்யும் அன்பு, கருணை மற்றும் அமைதியைப் போதிக்கின்றன. ஆனால் பயங்கரவாதிகளோ இதற்கு நேர்மாறாக வன்முறை, கொடூரம், மூர்க்கம் ஆகிய மனித குலம் வெறுத்து ஒதுக்கத் தக்க செயல்களை மதத்தின் பெயரால் செய்யும்போது இவையிரண்டும் எப்படி ஒட்டும்?

ஆக, இத்தகைய வன்முறையில் ஈடுபவர்களுக்கு மதங்களின் மீது முறையான நம்பிக்கை இல்லை, அல்லது ஏற்றுக்கொண்ட மதத்தின் கொள்கைகளை மிகச் சரியாக விளங்கிக்கொள்ளாமல் தாம் செய்யும் பயங்கரவாததிற்கு மதத்தின் பெயரைப் பயன் படுத்திக் கொள்கின்றனர் என்பதும் புலனாகிறது.

தீவிரவாதச் செயல்களைச் செய்பவர்களின் பின்னணியில் யார்? என்பது முக்கியமான கேள்வியாகும்.

மேற்காணும் கேள்விக்கு, ஃபாஸிஸக் கொள்கையை உடையோர், இன வேறுபாடுகளைத் தூண்டுபவர்கள், அரசியல் ஆதாயம் பெறுவோர் யாவர்? தீவிரவாதச் செயல்களால் மதரீதியான குழப்பங்கள் உருவானால் அதிலிருந்து பயனடைந்து கொள்பவர்கள் யாவர்? என்று சிந்தித்துப் பார்த்தால் எளிதாக விடை கிடைக்கும்.

இங்கே பயங்கரவாதத்தினைச் செய்பவர்களின் பெயர்களோ மத அடையாளங்களோ முக்கியமில்லை என்பதை நாம் உணர வேண்டும். தனது கண்ணுக்கு முன் நிற்கும் அப்பாவிகளைக் கண்மூடித்தனமாகச் சுட்டுத் தள்ளுபவன், வெடிகுண்டுகளை வைப்பவன், மனித வெடிகுண்டாக இருப்பவன், மனிதத்தன்மையற்ற ஒரு வெறி பிடித்த மிருகம் என்பதை மட்டும் நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.

இஸ்லாமியத் தீவிரவாதம், ஹிந்துத் தீவிரவாதம் போன்ற பதங்களெல்லாம் பிழையானவை என்பது ஓரளவிற்குப் பிடிபடும் இவ்வேளையில்,

பயங்கரவாதச் செயல்களைத் தடுத்து நிறுத்தி, இஸ்லாம் போதிக்கும் அமைதியையும் நீதியையும் இவ்வுலகிற்கு புத்துணர்ச்சியுடன் மீண்டும் தழைக்கச் செய்யும் பாரிய பொறுப்பு உலக முஸ்லிம்களின் எதிரில் இப்போது உள்ளது.

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1133&Itemid=53