"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619



முதல் சதுரம்

நம்மை நமக்குக் காட்ட உதவும் உன்னதம்

நமக்கு என்னென்னவோ தெரியும். பொது அறிவிலிருந்து, புது அறிவு வரை எல்லாம் தெரிகிறது. எத்தனையோ இயல்கள் எத்தனையோ இசங்கள் எத்தனையோ புத்திகள் எத்தனையோ தத்துவங்கள் எத்தனையோ மொழிகள் – எல்லாம் அத்துப்படி.

ஆனால் நமக்கு ஒன்று மட்டும் – உறுதியாகப் பிடிபடுவதில்லை. அதென்ன கடவுளா? – இல்லை. நம்மைத் தெரிவதில்லை நமக்கு. நமக்கே நம்மைத் தெரியாத நிலைதான் மிகவும் பரிதாபத்திற்குரியது. நமக்கு உலகத் தலைவர்களைத் தெரியும், உலக விஞ்ஞானிகளைத் தெரியும், உலகக் கலைஞர்களைத் தெரியும், உலக ஞானிகளைத் தெரியும். ஆனால் நம்மிடமே இருக்கும் நம்மை மட்டும் தெரியாது. நமக்கு நம்மைக் காட்டும் கண்ணாடியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை.

நம்மை எப்படி நமக்குத் தெரியாமல் போனது? “எனக்கு நன்றாகத் தெரியும்” – என விவாதிக்க நம்மில் பலர் காத்துக் கொண்டிருக்கலாம். முதலில் அவர்களின் துணிவுக்கும், நம்பிக்கைக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். “என்னை எனக்குத் தெரியும்” – என்று சொல்லத் தேவையான துணிவை விட பன்மடங்கு துணிவு என்னை எனக்குத் தெரியவில்லை – என்று ஒத்துக்கொள்ளத் தேவைப்படுகிறது என்பதுதான் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அதிசயமாகும்.

நண்பர்களே... நம்மை நாமே அறிய உதவும் ஒரு சதுரத்தை – முதல் சதுரமாய் இப்போது காண்போம். வெறும் சதுரத்தையா காணப்போகிறோம். நம்மையே நாம் காணப்போகிறோம். உங்களுக்குள் உற்சாகம் ஊற்றெடுக்கிறதா இல்லையா? உற்சாகமும், ஊக்கமும் பிறக்க வேண்டும். ஏனெனில் நம்மில் பலருக்கும் நம்மைக் கண்டுகளிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

வாருங்கள்… அந்தச் சதுரத்தைக் காண்போம். இது நான்கு சதுரங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய சதுரம். இது ஒரு ஜன்னல் மாதிரி. நான்கு கதவுகள் இதற்கு உண்டு. இந்த ஜன்னல் வழியாக நாம் புறத்தைக் காணப் போவதில்லை. நம் அகத்தைக் காணப் போகிறோம். ஆமாம். நம் மனதைக் காணப் போகிறோம்.

மனமென்பது உருவமோ அல்லது வடிவமோ இல்லாதது. அதை எப்படி ஒரு ஜன்னலின் வழியாகக் காண்பது என்னும் வியப்பு – ஒரு பெரும் வினாக்குறியாக நம் மனதில் விழக்கூடும்.

சற்றே கீழ்காணும் சதுரத்தை உற்று நோக்குங்களேன்.

மனம்

ஒன்றாம் சதுரம் நம் மனதின் – திறந்த பகுதியை அடையாளங்காட்டுவது.

இரண்டாம் சதுரம் நம் மனதின் – மறைந்த பகுதியை அடையாளங்காட்டுவது.

மூன்றாம் சதுரம் நம் மனதின் – குருட்டுப் பகுதியை அடையாளங்காட்டுவது.

நான்காம் சதுரம் நம் மனதின் – இருண்ட பகுதியை அடையாளங்காட்டுவது.

அதென்ன திறந்த பகுதி, மறைந்த பகுதி, குருட்டுப் பகுதி – என்கிறீர்களா? நல்ல கேள்வி. இவை நான்கும் – நம்மை நமக்குக் காட்டப்போகும் கதவுகளாகும்.

திறந்த பகுதி என்பது – திறந்து கிடக்கும் வீடு மாதிரி, உள்ளிருப்பவை வெளியில் தெரியும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத நிலையிலிருக்கும் ஒரு பகுதி. தன்னைப்பற்றித் தனக்கும் தெரிந்திருக்கும் – தன்னோடு பழகும் பிறருக்கும் தெரியும்.

மறைத்த பகுதி என்பது – தன்னைப் பற்றித் தனக்குத் தெரிந்த சில விஷயங்கள் பிறருக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கும் பகுதி. விரும்பியோ அல்லது விரும்பாமலோ வெளிப்படுத்தப்படாமல் இருக்கும் பகுதி.

குருட்டுப் பகுதி என்பது – தன்னைப்பற்றி பிறருக்கெல்லாம் தெரிந்தாலும் தனக்கு மட்டும் தெரியாதிருக்கும் – பகுதியைக் குறிக்கிறது. (நம் செயல்பாடுகள் பிறருக்குத் தெரியும் ஆனால் நாம் அதனை உணராதவர்களாகவே வாழ்ந்து கொண்டிருப்போம்).

இருண்ட பகுதி என்பது – தன்னைப்பற்றி தனக்கும் தெரியாமல், பிறருக்கும் தெரியாமல் மர்மமாய் இருக்கும் மனப்பகுதி. இங்குதான் வாழ்வின் எதிர்காலம் புதைந்து கிடக்கின்றது. தோண்டித் துருவி எடுத்து மேம்படுத்தப்பட வேண்டிய கற்பக விருட்சமோ, அட்சய பாத்திரமோ இதனுள்தான் இருக்கிறது.

மேற்கண்ட 4 பகுதிகளில் எந்தப் பகுதி சிறந்த பகுதி? எந்தப் பகுதி அதிகமாக இருந்தால் வாழ்க்கை சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் அமையும்? மனதின் திறந்த பகுதி அதிகமாக இருந்தால் மகிழ்ச்சி தானே வரும். மறைந்தும் குருடாகியும் இருண்டும் கிடக்கும் மனதால் எவ்விதப் பயனுமில்லை. எனவே நான்காய் பிரிந்து கிடக்கும் மனதை திறந்து கொண்டு ஒரு பெரிய மனதாய் மாற்றியமைக்க வேண்டும். அதற்கு மற்ற மூன்று பகுதிகளையும் சிறிது சிறிதாய் குறைக்க வேண்டும்.

சரி… அதை எப்படிச் செய்வது எனக் காண்போம். முதலில் மறைத்த பகுதியைக் குறைக்க பிறரோடு நமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்க வேண்டும். மிகவும் நெருங்கியவர்களிடமாவது நமது மனதைத் திறந்து “பேச” முற்படவேண்டும். உண்மை பேச வேண்டும். பேசப்பேசத் தான் மறைத்த மனது குறையத் தொடங்கும். மனதின் பாரம் குறைந்து விடும். மனம் லேசாகும்.

அடுத்த பகுதியாகிய குருட்டுப் பகுதியைக் குறைக்க வேண்டுமெனில் நம்மிடம் அக்கறை கொண்ட பிறரைப் பேச அனுமதிக்க வேண்டும். அதுமட்டுமல்ல அவற்றைக் காது கொடுத்தும் கேட்கவும் வேண்டும். பிறர் சொல்லை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் கேட்டுக் கொள்ளவும், கவனிக்கவும் தயக்கம் காட்டக்கூடாது. அப்போதுதான் நம்முடைய குறைபாடுகள் நமக்குத் தெரியவரும். நமது குறைபாடு நமக்குத் தெரிந்து விட்டால் – அவற்றை மாற்றிக்கொள்ள நாம் முயற்சி மேற்கொள்ளலாம். அப்போது நம் வாழ்வில் மேம்பாடு நிகழும்.

அடுத்ததாக இருண்ட பகுதியைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டுவதெல்லாம் “தேடல்” தான். நம்மிடமுள்ள திறமைகள் என்ன? நமது ஆர்வம் அல்லது விருப்பமென்ன? நமது இலக்கு என்ன? நமக்கான வாய்ப்புகள் என்னென்ன? நமக்கான தடைகளை எப்படித் தகர்த்து முன்னேறுவது – எனத் தொடரும் “தேடல்” மூலம் இந்த இருண்ட பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் கொணர முடியும்.

மேற்கண்ட முயற்சிகளால் – நம் மனதை நன்றாகத் திறந்துகொள்ள முடியும். மனம் திறந்து கொண்டால் மற்றவர்கள் நம்மை புரிந்து ஏற்றுக் கொள்வார்கள், நம்மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும். அதனால் நமது தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். மனம் திறக்க திறக்க நமது வெற்றிக்கான மார்க்கமெல்லாம் புலப்படத் தொடங்கும்.

அதனால் மனதில் நிம்மதியும் ஆனந்தமும் நிரந்தரமாய் தங்கிவிடும்.

விளைவு: நம் சிந்தனையும், முடிவுகளும், செயல்பாடுகளும் சிறப்பாய் அமையும்.

காலத்தின் அருமையை உணர்ததும் உன்னதம்

மூன்றாவது சதுரம் மிகவும் முக்கியமான காலத்தை உணர்த்துவது. காலம் மிகவும் அற்புதமானது. காலம் என்பது கடந்துவிட்டால் மீண்டும் கிடைக்காதது. காலம் என்பது அனைவருக்கும் பொதுவானது. காலம் என்பது ஒவ்வொருவர் கையிலும் கிட்டியிருக்கும் பொக்கிஷமாகும். மனிதவளம் என்பது – இந்தப் பிரபஞ்சத்தின் மூலதனம் என்றால் காலமானது – இந்த மனிதவளத்தின் மூலதனம் என்பது மறுக்க முடியாததாகும். இந்த மூலதனத்தை முறையாகப் பயன்படுத்தும் மார்க்கம் தெரியாததால் நம்மில் பலரும்

வாழ்வின் மிக முக்கியமான அம்சங்களை இழந்து நிற்கிறோம். பலவற்றை இழந்த பிறகே – பலருக்கும் இந்தக் காலத்தின் அற்புதம் புரிய வருகிறது. இந்நிலை ஏற்படாமல் தடுத்து இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் பொருட்டு நாம் இந்த சதுரத்தைப் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டியிருக்கிறது.

உற்று நோக்கினால் மேற்கண்ட நான்கு சதுரங்களில் காலம் சதுரங்கம் ஆடுவதைக் காணலாம். மேற்கண்ட பெரிய சதுரத்தின் மீது கவனத்தைக் குவியுங்கள்.

சதுரம் – 4 ல் குறிப்பிட்டுள்ள காரியங்கள் யாவும் எந்தவித அவசரமோ, அவசியமோ அற்றவையாகும். இவை குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவையே இல்லை. ஆனால் நமது அன்றாடச் செயல்பாடுகளில் பலவும் இத்தகைய வகையைச் சேர்ந்ததே ஆகும். எடுத்துக்காட்டாக கூறவேண்டுமெனில் எந்தவித தேவையுமற்ற தொலைபேசி உரையாடல்கள், வெற்று அரட்டைகள், வெறும் கேளிக்கைகள், எந்த நோக்கமுமற்ற பொழுதுபோக்குகள் இவையாவும் – அவசரமோ, அவசியமோ அற்ற செயல்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும், இவற்றை நாம் அடையாளம் காண வேண்டும். அடையாளம் கண்டு அவற்றைத் தவிர்க்க முயற்சிகள் எடுக்க வேண்டும். முனைப்புடன் செயல்பட வேண்டும்.

சதுரம் – 3 : இதில் அவசியமற்ற ஆனால் அவசரமான செயல்களை உள்ளடக்கிய சதுரமாக இது விளங்குகிறது. நம்மைத் தொந்தரவு செய்யும் வேண்டாத சில தொலைபேசி அழைப்புகள், எதிர்பாராத சில விருந்தாளிகளின் வருகை, சில கூட்டங்கள், சில மனுக்கள் தயாரித்தல், சில கடிதங்கள் எழுதுதல் போன்றவை அவசியமாய் இருக்க மாட்டா. ஆனால் அவசரமாய் செய்தாக வேண்டியவையாய் இருக்கும். இவை பெரும்பாலும், பிறருக்காகச் செய்யப்படும் செயல்களாக இருக்குமே அன்றி, நமது குறிக்கோளை அடைவதற்கான காரியங்களாக இருக்கமாட்டா என்பதை உணர்தல் அவசியமாகும்.

மேற்கண்ட சதுரம் – 4 மற்றும் சதுரம் – 3 – இவை இரண்டையும் ஊன்றி நோக்கினால் ஒன்றை உணரலாம். இவை இரண்டிலும் அதிக நேரத்தைச் செலவிடுபவர்கள் எதற்கும் அதிகமாக அலட்டிக் கொள்ளாதவர்களாகவும், பெரும் பொறுப்பு எதையும் ஏற்றுச் செய்யாதவர்களாகவும் இருப்பார்கள். பொழுதுபோக்கும் முகமாக – பிறரின் காரியங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்பவர்களாகவும் காணப்படுவார்கள். இவர்கள்.

செயல்திறனும், செய்நேர்த்தியும் மிக்கவர்கள் இந்த இரண்டு சதுரங்களுக்குள் சிக்கிக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில், அவசரமாய் இருந்தாலும் அவசியமில்லை என்பதால் அவசியமற்றதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார்கள். எனவே நாமும் செய்நேர்த்தி மிக்கவர்களாக வாழ வேண்டுமெனில் அவசியமற்றவற்றை ஒதுக்கிவிட்டு நேரத்தை முறையாகப் பயன்படுத்தப் பழக வேண்டும்.

இப்போது, முதல் சதுரத்தைப் பாருங்கள். அங்கே குவிந்து கிடக்கும் காரியங்கள் யாவும் அவசரமாகச் செய்து முடிக்கப்பட வேண்டிய நிலையிலும், அவசியம் செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்திலும் இருப்பதை நம்மால் உணர முடியும். பெரும்பாலான சமயங்களில் நமது செயல்பாடுகள் இப்படித்தான் உள்ளன.

எல்லாச் செயல்பாடுகளையுமே, இப்படி ஒரு நெருக்கடி காலச் செயல்களாக மாற்றிக்கொண்டு அவதிப்படுகிறோம். அவற்றை எப்போது செய்து முடித்திருக்க வேண்டுமோ அப்போது அவற்றைச் செய்து முடிக்க முனைவதில்லை. ஒத்திப் போடுதல் என்னும் மனோபாவம் நம்மை உதறிப் போட்டு விடுகிறது.

“வேலை இல்லை வேலை இல்லை” – என அங்கலாய்க்கும் இளவட்டங்கள் கூட தங்கள் வேலைக்கான மனுவை உரிய நேரத்தில் அஞ்சலில் சேர்க்காமல், இறுதி நாளில் அதை எடுத்துக்கொண்டு, அடுத்த நாளே சேர வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டுமெனப் பலரிடமும் கேட்டுத் திரிவதைக் காண முடியும். “ஏன்? இத்தனை நாளாய் என்ன செய்தாய் என்று கேட்டுப் பார்த்தால்; இன்னும் நாள் இருக்கிறதே என்று தள்ளிப் போட்டேன். கடைசியாய் பார்த்தால், தாசில்தார் ஊரில் இல்லாமல் போய், சாதிச்சான்றிதழுக்காக ஒரு வாரம் காத்திருக்க வேண்டியதாயிற்று” – என்பார் அந்த இளைஞர்.

ஏன் இந்த நிலைமை? காலத்தின் அருமையை உணராமைதான் காரணம். சோம்பலும், எது முக்கியம் அல்லது எது அவசரம் எனப் புரியாமையுமே – இதற்குக் காரணம். ஒரு நொடி தாமதிப்பதால் ஏற்படும் இழப்பை – முதலாவதாய் வந்து தன் முத்திரையைப் பதிக்க முடியாமற்போகும் ஒரு விளையாட்டு வீரன் உணர்வான்! இழந்தபின் அழுது என்ன பயன்? ஆகவே காலத்தின் அருமையை அறிந்து உணர்தல் அவசியம். நேரத்தின் அவசியத்தை உணர வேண்டுமெனில் நமது அன்றாடப் பணிகளைப் பட்டியலிட வேண்டும். பிறகு அவசியமானவற்றையும் அவசரமானவற்றையும் அடையாளம் காண வேண்டும்.

மாறாக சதுரம் – 2 ஐக் கவனியுங்கள். அங்கே “அவசரமற்ற ஆனால் அவசியமான” – காரியங்கள் மட்டுமே மிஞ்சும். இந்தச் செயல்களை உடனடியாக முடிக்க வேண்டிய அவசரமில்லை. ஆனால் அவசியம் முடித்தாக வேண்டும் என்பவை இவை. இவற்றில்தான் நாம் நமது முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தினால் நமக்கும் அவசரமோ, ஆத்திரமோ இல்லாமல் நிதானமாகத் திட்டமிட்டு தீர்க்கமாக வெற்றிகரமாக நமது காரியங்களைச் செய்து முடிக்க முடியும். அத்தகைய காரியங்களே நம்மை செய்நேர்த்தி மிக்கவர்களாக உலகுக்கு அடையாளம் காட்டும்.

வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தால் அவர்களெல்லாம் சதுரம் – 4 மற்றும் சதுரம் 3 இரண்டையும் புறக்கணித்து விட்டவர்களாகவும், சதுரம் – 1ஐ ஏறிட்டும் பார்க்க வேண்டிய அவசியமில்லாத வர்களாகவும் திகழ்வார்கள்.

காரணம் என்னவெனில் அவர்களின் கவனமும் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் சதுரம் -2 லேயே குவிந்திருக்கும்.

அவர்களுக்கு “எது அவசியம்” – என்பது புரிந்திருக்கும். அதுமட்டுமல்ல அவசரமானாலும் கூட அவசியமற்றதென்றால் அவர்கள் அதனைப் புறக்கணித்துவிடத் தயங்காத உறுதியான உள்ளம் படைத்தவர்களாகவும் திகழ்வார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்கள் எல்லாம் தங்களுக்கென சில இலக்குகளை முன்வைத்து இயங்கிக் கொண்டிருப்பதால் அவசியமில்லாமல் பிறரின் செயல்பாடுகளில் மூக்கை நுழைத்து தமது காலத்தை வீணடிக்கும் தவறான காரியத்தைச் செய்யமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

என்ன? – இனி நாமும் நமது அன்றாடச் செயல்களை மேற்கண்ட நான்கு சதுரங்களாக வரையறுத்து – இரண்டாம் சதுரத்தில் நமது மனதை ஒருமுகப்படுத்தி வெற்றி காண்போமா?

அணியணியாய் இணைய உதவும் அழகிய சதுரங்கம்

நான்காவது சதுரம் நம்மைப் பிணைக்கும் சதுரம். நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுதலின் அவசியத்தை நமக்கு உணர்த்தும் ஒற்றுமைச் சதுரம்.

கீழ்காணும் சதுரத்தை உற்று நோக்கிடுங்கள். அது என்ன சொல்கிறது என்பது நமக்குப் பிடிபடும். அந்தச் சதுரத்தின் கிடைக்கோடு நமது தைரியத்தைக் குறிப்பதாகக் கொள்வோம். செங்குத்துக் கோடு நமது கருணையைக் குறிப்பதாக கொள்வோம். இந்த இரண்டு கோடுகளை அடிப்படையாகக் கொண்டுஅமையும் நான்கு சதுரங்களை நன்கு கவனிப்போம்.

முதலில் “வெல்ல …. தோற்க….” – என்னும் முதலாம் சதுரத்தை எடுத்துக்கொள்வோம். இதன் பொருள் என்னவெனில் “நான் வெல்வேன்…. நீ தோற்பாய்” -என்கிற அடிப்படையில் தொடங்கப்படும் முயற்சியை அல்லது நடவடிக்கையைக் குறிக்கும். இத்தகைய மனோபாவம் – விளையாட்டின் போதும், போரின் போதும் காணப்படக் கூடியதாகும். வாழ்க்கைக்கோ, வர்த்தகத்துக்கோ, உறவுமுறைக்கோ ஒத்துவராததாகும். “நான் வெல்ல வேண்டும் நீ தோற்க வேண்டும்” – என்று முனைகிறபோது, அவரிடம் தைரியம் அதிகமாகவும் கருணை மிகவும் குறைவாகவும் உள்ளதென்று பொருள். அதாவது முரட்டுத் தனம் மிகுந்து காணப்படும். வேகம் இருக்கும். ஆனால் விவேகம் இருக்காது. – இத்தகைய நிலை வாழ்க்கையை வசப்படுத்தவும் தலைமை தாங்கவும் உதவாது. “வெட்டு ஒன்று துண்டு ரெண்டு” என நடந்து கொள்ளும் இவர்களைப் பெரும்பாலானோர்க்குப் பிடிக்காமற்போகும். அவரது பேச்சில் பக்குவம் இருக்காது. இவர்களது செயலில் நிதானம் இருக்காது.. இதனால் உறவுகள் இனிமையாய் இருக்காது. இது அதிகாரம் தொனிக்கும் நிலைமையைக் குறிக்கும். “தானே முக்கியமானவன்” – என்னும் தன்மை தொனிக்கும்.

இரண்டாம் சதுரம்: “நான் தோற்கிறேன் நீ வெல்ல” என்பதாகும். அதாவது, “நான் விட்டுக் கொடுக்கிறேன் நீ வெல்ல” – என்னும் மனோபாவத்தைக் குறிக்கும் சதுரமாகும். இப்படிப்பட்ட மனோபாவம் யாருக்கு வாய்க்கும் எனப் பார்த்தால் – யாரிடம் தைரியம் குறைவாகவும் கருணை அதிகமாகவும் இருக்குமோ – அவர்களால் மட்டுமே இப்படித் தன்னைத்தானே விட்டுக்கொடுத்து பிறர் வெல்ல – ஏதுவாக இருக்க முடியும். இது ஒருவரது பலவீனத்தைக் காட்டும் தன்மையாகும். இந்த நிலையில் உறவு ஆரம்பத்தில் இனிப்பது போலத் தோன்றினாலும், நாளாக ஆக, இப்படிப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படுவர். இவர்களின் மதிப்புக் குறைய நேரும். பிறகு யாருமே கவனிக்கவில்லை, எனக்கென்று யாருமில்லை, என்னால் முன்னேற முடியவில்லை எனப் புலம்ப நேரிடும்.

மேற்கண்ட இரண்டு சதுரங்களையும் சற்றே உற்று நோக்கினால் ஒரு விபரீதம் புரியும். உறவில் சம்பந்தப்பட்ட இருவருள் ஒருவர் – முதல் சதுரத்துக்குச் சொந்தக்காரராகவும், மற்றவர் இரண்டாம் சதுரத்திற்குச் சொந்தக்காரராகவும் இருந்தால் – நடப்பதை யூகித்துப் பாருங்கள்….. அவர், “நான் வெல்வேன்…. நீ தோற்பாய்” என்று களத்தில் இறங்குவார். இவர், “நான் தோற்பேன்…. நீ வெல்வாய்” என்று களத்தில் இருப்பார்.விளைவு என்னாகும்? எந்த வித சுவாரசியமும் இல்லாமல் ஒருவர் வெல்ல மற்றவர் தோற்றுக்கொண்டே இருப்பார். இது ஒருவித (துஷ்பிரயோக நிலைக்குச் சமமாகும்) மிகைப்படுத்துதலுக்குச் சமம்.

மூன்றாவது சதுரம்: “நானும் தோற்பேன் நீயும் தோற்க வேண்டும்” – என்னும் மிகவும் மோசமான மனோபாவத்தைக் குறிக்கிறது. “தனக்கு இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை. அடுத்தவனுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும்” – என்னும் பழிவாங்கும் மனோநிலையைக் குறிக்கிறது.

இந்த நிலையை யார் அடைவர் என்றால், இந்த உறவில் சம்பந்தப்பட்ட இருவரும் சதுரம் – 1ல் கூறப்பட்டிருக்கும் “நான் வெல்வேன் நீ தோற்கவேண்டும்” என்னும் நிலையில் இயங்குபவராய் இருப்பர். இறுதியில் இருவருமே தோற்றுப்போகக் கூடும். இவர்களிடம் ஆணவமும், அதிகாரமும், ஆதிக்க மனோபாவமும் மிகுந்து காணப்படும். இவர்களைப் பொறுத்தவரை – எதிரியின் தோல்வியே முக்கியமானது. இவர்களின் தோல்வி என்பது வெகு சாதாரணமாகிப் போகும். இந்த நிலையின் கொடுமையைக் கொஞ்சம் யூகித்துப் பாருங்கள். இந்த நிலை தேவையா என்று எண்ணிப்பாருங்கள்.

நான்காவது சதுரமானது: “நானும் வெல்வேன் நீயும் வெல்வாய்”-என்னும் ஒருவருக்கொருவர் உறுதுணையாய் இருக்கும் உன்னதமான உறவுநிலை. இந்நிலை – ஒத்துழைப்பு நிலையைக் குறிப்பதாகும். இந்நிலை வாழ்வை ஒரு போட்டியாகக் கருதாமல், உடன்பாடாகவும், கூட்டுறவாகவும் கருதும் நிலையாகும். மேற்கண்ட மற்ற நிலைகளெல்லாம் அந்தஸ்து மற்றும் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும். ஆனால் இந்த நிலை “எல்லோர்க்கும் எல்லாமும் பொது” என்னும் பரந்த மனப்பான்மையின் அடிப்படையிலமைந்த பொது உடைமையைக் குறிக்கும் நிலையாகும்.

ஒருவர் வெற்றிபெற வேண்டுமானால் மற்றவர் தோற்றாக வேண்டும் என்னும் எண்ணமற்ற நிலை இது. இது உனது வழியோ எனது வழியோ அல்ல. “இது நமது வழி” என்னும் சமத்துவத்தை சகோதரத்துவத்தை நிலைநாட்டும் உன்னத நிலை!

கூடிவாழ்தல் என்பது சமூக நிலையில் உயர்ந்த நிலை. யாரையும் சார்ந்து வாழும் அடிமை நிலையிலிருந்து விடுபட்டு – இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து, ஒருவரின் திறமையை ஒருவர் மதித்து ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையையோ வர்த்தகத்தையோ இணைந்து நடத்தும் மகத்தான நிலை. இந்நிலையில் ஈடுபட்டிருக்கும் யார்க்கும் ஆனந்தமே மிஞ்சும்.

இவர்களுக்கு தைரியமும் அதிகமாய் இருக்கும். கருணையும் அதிகமாய் காணப்படும். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படாது. இவர்களின் மனம் பக்குவப்பட்டதாய் இருக்கும். ஒருவரால் எப்பொழுது, தனது உணர்வுகளையும், எண்ணங்களையும் தைரியமாக வெளிப்படுத்தும் அதே நேரத்தில் பிறரின் உணர்வுகளையும், மன உறுதியையும் கேட்டுப்புரிந்து கொள்ளும் கருணை உணர்வும் கொண்டிருந்தால் அதுவே பக்குவநிலை எனப்படும். அதுவே மிக உயர்ந்த நிலையும் ஆகும்.

இதில் காணப்படும் “தைரியம்” – என்பது பொன்முட்டைக்கு உத்திரவாதம் தருவதெனினும், “கருணை” – என்பது தொலைநோக்குப் பார்வையில், சம்பந்தப்பட்ட அனைவருக்குமான வளத்துக்கும் வழிவகுக்கும் குணமாகும். இந்த இரண்டின் அடிப்படையில் அமையும் தலைமையானது – அனைவரின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தவல்லது என்பதில் ஐயமேதுமில்லை.

ஆகவே நாமெல்லோருமே “நானும் வெல்வேன் நீயும் வெல்வாய்” – என்னும் பொது வெற்றியை நோக்கிப் புறப்படுவோம். விரைவில் நம் தேசத்தை வல்லரசாக்கும் இந்த வழியில் நடந்து நம் கனவை நாமே நனவாக்குவோம்.

முரண்பாடுகளைத் தீர்த்து வைக்கும் உடன்பாட்டு உன்னதம்

கீழ்காணும் சதுரத்தைக் கூர்ந்து நோக்குங்கள்

(நான்) நெருங்க
(நீ) விலக
(1) (நான்) நெருங்க
(நீயும்) நெருங்க
(2)
(நான்) விலக
(நீயும்) விலக
(3) (நான்) விலக
(நீ) நெருங்க
(4)

வாழ்க்கை என்னும் சதுரங்கத்தில் ஒருவருக்கு மேற்பட்ட நபர் இணைந்து செயல்படும் எந்தச் சூழ்நிலையானாலும் சரி. (அது குடும்பமாக இருக்கலாம், அலுவலகமாக இருக்கலாம், பொது இடமாக இருக்கலாம், சமூகமாக இருக்கலாம், நிறுவனமாக இருக்கலாம், தொழிற்கூடமாக இருக்கலாம்) அங்கெல்லாம் இருவருக்கிடையிலோ, பலருக்கிடையிலோ கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். கருத்து வேறுபாடுகளுக்கான காரணங்கள் பற்பல. வயது வேறுபடலாம், அனுபவம் வேறுபடலாம், விருப்பம் வேறுபடலாம், தேவையும் இலக்கும் வேறுபடலாம். மொழி, மதிப்பீடு, நம்பிக்கை வேறுபடலாம். அணியாக இயங்கும்போது அப்படிப்பட்ட கருத்து வேறுபாடுகள் தோன்றுதல் தீர்க்கப்படாவிடில் அந்தக் கருத்து வேறுபாடு விசுவரூபம் எடுத்து – அணியின் செயல்பாடுகளுக்கே பங்கம் விளைப்பதாக ஆகி விடும்.

கருத்து வேறுபாடுகள் நீடிக்குமானால் நாளடைவில் அது பூதாகாரமாக வெடித்து – குடும்ப உறவுகள் சிதைந்து போகவோ, நிர்வாக உறவு சீர்கேடு அடையவோ, ஒரு விளையாட்டு அணியின் செயல்வேகம் பாதிக்கப்படவோ, ஒரு இசைக்குழுவின் திறமை வெளிப்படாமல் போகவோ வாய்ப்புகள் உண்டு. அது மட்டுமல்ல – இவர்களின் இலக்குகளை எட்ட முடியாமலும் இலட்சியத்தை அடைய முடியாமலும் போவதோடு – மனித உறவுகளும் சின்னா பின்னமாகிப் போய்விடக் கூடும்.

இப்படிப்பட்ட நிலை வருமுன்னர் காப்பதுதான் – மனிதவளத்தின் மேம்பாட்டுக்கு உதவும் உயரிய செயலாகும். அதுவே நமது வாழ்நிலை மேம்பாட்டுக்கான அடிப்படைத் தேவையுமாகும்.

முதல் சதுரத்தைக் காண்போம்: கருத்து வேறுபாடு கொண்ட இருவரோ அல்லது இரு குழுவோ இப்படி செயல்படக்கூடும். ஒரு சாரார் (ஒருவர்) இணக்கத்தை நாடி வரும்போது மறுசாரார் (மற்றொருவர்) பிணக்கம் கொண்டு உறவை மறுக்கும் சூழ்நிலையை – இது குறிக்கிறது. ஒருவர் அனுசரிக்கும்போது மற்றவர் வீம்பு செய்து விலகிச் செல்லும் நிலை. இதைத்தான் தமிழில் “கெஞ்சினால் மிஞ்சுவது” – என்பார்கள். ஒருவர் அனுசரிக்க மற்றவர் ஆணவத்தோடு விலகும் நிலை – கருத்து வேறுபாட்டை வளர்த்து உறவின் முறிவுக்கு இட்டுச்செல்லும். இந்த அவலநிலை தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

இரண்டாம் சதுரம்: ஒருவர் விலகிச் செல்லச் செல்ல மற்றவர் நெருங்கி நெருங்கி வந்து இணக்கத்தை உருவாக்க முயலும் நிலை. ஒருவர் விட்டுக்கொடுக்கும் இந்நிலை நல்லது என்றாலும் இதுவும் நிலைபெறாது. பிறரை வசப்படுத்துவதுதான் சிரமமான காரியம். நாமே வம்பு செய்து கொண்டிருந்தால் – நமது கருத்து வேறுபாட்டை வேறு யார் வந்து தீர்ப்பர்? எனவே கருத்து வேறுபாட்டால் ஏற்படவிருக்கும் அவல நிலையை உணர்ந்து நாம் நமது அபரிதமான தன் முனைப்பை , ஆணவத்தை சற்றே ஒதுக்கிவிட்டுப் பிறரின் கருத்துக்குக் காது கொடுக்கத் தயாராகி விட்டாலே மனதை ஆட்டுவிக்கும் கருத்து வேறுபாடு குறையவும் – உறவுநிலை மேம்படவும் வாய்ப்பு பிரகாசமாகும். அதை விடுத்து – நமது ஆணவத்தின் காரணமாய்ப் பிறருக்குப் புத்திபுகட்ட நினைத்தால் – இழப்பு நமக்குத்தான். மாறாக விட்டுக் கொடுத்து உறவாடினால் பலன் இருவருக்கும் ஏற்படும் என்பதை மறக்கக்கூடாது. இருவருக்கும் இன்பம் உண்டாகும் நிலையே உயர்நிலை.

மூன்றாம் சதுரம்: “ஒருவர் விலகிச் செல்ல, அடுத்தவரும் விலகி செல்வது!” இந்தச் சதுரத்தில் குறிப்பிடப்படுகிறது. இருவருமே விலகிச் செல்லும் மனோபாவம் – இணக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை அடியோடு தகர்த்துவிடும். இந்த நிலை ஒரு அணியில் முழுவதும் விரும்பத் தகாத நிலை. சம்பந்தப்பட்ட இருவரில் யாரேனும் ஒருவருக்காவது நெருங்கும் விருப்பம் இருந்தால் மூன்றாம் நபரின் தலையீட்டால் இணக்கம் ஏற்படும் சூழலை உருவாக்க முடியும். ஆனால் இருவரும் விலகிச் செல்ல முற்படும்போது அதுவே முரண்பாட்டின் மொத்தமாகக் காட்சியளிக்கும். உடன்படுவதற்கான வாய்ப்பை இது முழுவதுமாகக் கெடுத்துவிடும். எனவே இந்நிலை தவிர்க்கப்பட வேண்டியதாகும். இன்னும் சொல்லப் போனால் இத்தகைய நிலையே ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வதுதான் உகந்தது.

நான்காம் சதுரமாகிய “நெருங்க….. நெருங்க….” – என்றும் நிலை மிகவும் மேம்பட்ட நிலை, உன்னத நிலை. இது இருவரின் பக்குவ நிலையைப் பறை சாற்றும் நிலையாகும். ஏதோ ஒரு சூழலால் அல்லது சந்தர்ப்பத்தால் – மனதளவில் – முரண்பாட்டுக்கு ஆளான இருவரும், பிறகு சிறு கால அவகாசத்தில், அதற்கும் மேலே ஒரு படிபோய்… “நான் நெருங்கி வருகிறேன்…” என்று இருவரும் இணைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு உறவுப் பிணைப்புக்கான – பாலத்தை உருவாக்குதலில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வர். இத்தகையவர்களால் ஒரு குடும்பமோ, நிர்வாகமோ, இயக்கமோ – தனது இலக்கை அடையும் திசையில் பீடு நடைபோட்டு மகத்தான வெற்றியடையும். அந்த அணியில் எப்போதும் உள்ளார்ந்த மகிழ்ச்சியும் ஊக்கமும் உற்சாகமும் நிலைத்திருக்கும்.

எனவே வாழ்க்கை என்னும் சதுரங்கத்தில் முன்னர் குறிப்பிட்ட 1, 2, 3 என்னும் மற்ற மூன்று சதுரங்களும் ஒத்துழையாமைக்கும், ஒற்றுமையின்மைக்கும் வழி வகுத்து – தனது நோக்கத்திலிருந்து ஓர் இயக்கம் வழுவி விடுவதற்கான கூறுகளை உள்ளடக்கிக் கொண்டிருப்பவை. விரும்பத்தகாதவை.

மாறாக, நான்காம் சதுரமாகிய “நெருங்க…. நெருங்க….” – என்னும் சதுரமோ – அனைவரும் ஒருங்கிணைந்து – ஒட்டுமொத்த சக்தியையும் பிணைத்து – பொது இலக்கை நோக்கி – ஒருமனதாக இயங்கி, குறித்த காலத்தில், குறித்த செலவில், பயணித்து வெற்றிக் குறியீட்டை எட்டுவதோடு – அனைவரின் ஒட்டுமொத்த தன்னம்பிக்கைக்கும் – உயர்வுக்கும், மனிதகுல மேம்பாட்டுக்கும் உதவிடும் ஒப்பற்ற- உயரிய – பக்குவ நிலையாகும்.

இந்நிலையே இனிய நிலையாகும். இதுவே கூடிவாழும் – குடும்பமும், நிறுவனமும், தொழிலகமும், எந்த அணியும் – வெற்றிபெறப் பேருதவி புரியும் அற்புதமான நிலையாகும்! முயன்று – இந்நிலை பெற்று இனிமை காணலாமே!

எழுச்சிமயமான நிலையை எடுத்தியம்பும் சதுரம்

நம் குடும்பத்திலோ, நிறுவனத்திலோ, இயக்கத்திலோ – நம்மோடு இணைந்து இயங்கும் நபர்களின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து – அவர்களின் செயல்திறன் முழுமையாக வெளிப்படவும், செய்நேர்த்தி மேம்படவும் – நாம் புரிந்துகொள்ள வேண்டிய கூறுகளை இந்த ஆறாம் சதுரம் எடுத்து முன்வைக்கிறது.

பெரிய சதுரத்தின் உள்ளே நான்கு சிறிய சதுரங்களைக் காண்கிறீர்கள் அல்லவா…. அவற்றை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்துகிறேன்.

சதுரம்:

1 திறமை இருந்து – அதனை வெளிப்படுத்தும் விருப்பமும் கொண்டு, செயலாற்றும் நபர்களை உள்ளடக்கிய சதுரம் இது. இப்படிப்பட்டவர்கள் நிறைந்த சூழல்தான் செய்நேர்த்தி மிக்கதாக அமைந்திருக்கும். இவர்களின் உற்பத்தித் திறன் முழுமையாக வெளிப்படும். இவர்கள் நிறைந்த இடத்தில் வேலைகள் எளிதில் நிறைவேறும். குழப்பமோ குதர்க்கமோ இருக்காது. மனித உறவுகள் மேம்பட்டு மகிழ்ச்சி நிறைந்த இடமாக இது காட்சியளிக்கும். இன்னும் சொல்லப் போனால் மாற்றங்களை எளிதில் ஏற்றுக்கொள்ளும் இடமாக இது ஒளிரும்.

இதை “ஆக்கநிலை” என்பேன். இது மயக்கமோ, தயக்கமோ, தேக்கமோ இல்லாத நிலையே ஆகும். இதுவே அனைவராலும் விரும்பத்தகுந்த உன்னத நிலையாகும்!

சதுரம்: 2

இந்த சதுரத்திற்குள் இடம் பிடிப்பவர்கள் விருப்பமுள்ளவர்கள். ஆனால் திறமைக் குறைபாடுள்ளவர்கள். இவர்கள் கவலைக் கிடமானவர்கள் அல்ல. காரணம் – இவர்களின் மனோபாவம் தயார் நிலையில் உள்ளது. தடையாக இருப்பது போதுமான பயிற்சியின்மைதான். இவர்களின் திறமை பளிச்சிட வேண்டுமெனில், அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை முறையாகக் கொடுக்க வேண்டும்.

இவர்கள் விருப்பமுள்ளவர்களாக விளங்குவதால், பயிற்சி பெற்றுத் தேர்வதில் வேறு எந்தச் சிக்கலும் இருக்காது. இவர்கள் போதிய பயிற்சி எடுத்துக் கொண்டால் தேக்கநிலை மாறி – உற்பத்தித்திறன் உயரும்.

ஊக்கம் மிகுந்த இவர்களுக்கு – உரிய பயிற்சிகளை மட்டும் முறையாகக் கொடுத்து விட்டால் – அவ்விடத்தின், அத்தொழிலின், அவ்வுறவின் மதிப்பு உயரும்.

சதுரம்: 3

இந்தக் குட்டிச் சதுரத்தில் குவிந்திருப்பவர்கள் திறமையுள்ளவர்களாக இருப்பார்கள், திறமைக்கான போதிய பயிற்சியைப் பெற்றிருப்பார்கள். அந்தத் திறமையில் தேர்ச்சியும் பெற்றிருப்பார்கள் இருந்தும் அதனை வெளிப்படுத்தி – பயன் விளைக்கத் தயாராய் இருக்க மாட்டார்கள். காரணம் என்னவெனப் பார்த்தால் அவர்கள் மனதில் செயலாற்றும் விருப்பம் இருக்காது. விருப்பமின்மை ஏன் ஏற்படுகிறது என்பது பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய விஷயமாகும். போதிய சம்பளமோ, போதிய பாராட்டோ, போதிய அங்கீகாரமோ, போதிய இட வசதியோ, போதிய வெளிச்சமோ, போதிய காற்றோட்டமோ போதிய உபகரணமோ – பல நாட்களாக சரிசெய்யப்படாத மனித உறவோ ஒருவரின் விருப்பமின்மைக்குக் காரணிகளாக அமையலாம். அவற்றை அறிந்து, பட்டியலிட்டுப் பகுத்துப் பார்த்து ஆய்ந்து – நிவர்த்திசெய்ய முற்பட்டால் அத்தகைய நபர்களின் மனக்குறையை நீக்கி, அவர்களை பயன்மிக்க உற்பத்தியாளர்களாக மேம்படுத்திக் காட்டமுடியும். அவர்கள் பயன்பாடு மிக்கவர்களாக மாறுகிறபோது அவர்களின் மதிப்பு மட்டுமல்ல அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மதிப்பும், சமூக மதிப்பும் கூடி விடுகிறது என்பதுதான் உண்மை.

விருப்பம் இல்லையென்றால் செயலில் மனம் வைக்க மாட்டார்கள். இந்நிலை உயர்வுக்கு உதவாது. இந்தத் தயக்க நிலையை உணர்ந்து தீர்வு காண முயல வேண்டும். நமது கவனம் அந்தச் சதுரத்தில் குவிய வேண்டும். ஏனெனில் இப்படிப்பட்டவர்களால் மற்ற நபர்களின் மனமும் பாதிக்கப்படும். விளைவு அனைவரின் செயல்பாடும் குறைந்து – நோக்கம் வீழ்த்தப்படும்… விளைவுகள் விபரீதமானவையாய் மாறும்.

சதுரம்: 4

இந்தச் சதுரம் ஒரு சதுப்பு நிலம் மாதிரி. இவர்களிடம் திறமையும் இருக்காது. திறமையை வளர்த்துக் கொள்ளவோ, வெளிப்படுத்தவோ மனதில் விருப்பமும் இருக்காது. திறமையோ, விருப்பமோ – இரண்டும் இல்லாது போனால் ஒருவனால் எப்படி இயங்க முடியும்? அவனது வாழ்க்கை எப்படி இனிக்கும்? – இந்த நிலை மயக்க நிலையாகும். இவர்களின் மயக்க நிலை நீங்க வேண்டுமெனில் நாம் பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

நேர்மறையான எண்ணங்களை இவர்களின் நெஞ்சில் வளர்த்து போதுமான ஊக்க உணர்வுகளைப் புகட்டி தேவையான பயிற்சிகளை முறையாகக் கொடுக்கத் திட்டமிட்டால் இவர்களும் பயன்பாடுமிக்கவர்களாக, நிறுவனத்தின் மதிப்பை மேலும் உயர்த்துபவர்களாக மாறுவார்கள். மனிதவளமென்பதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட இனிமையான அனுபவமும் நமக்குக் கிடைக்கும். அல்லது இவர்கள் பட்ட மரங்களாகவும் இவர்கள் வாழும் இடம் சதுப்பு நிலங்களாகவும் மாறிவிடக் கூடும். அன்பு காட்டிப் பயிற்சி கொடுத்தால் நாளடைவில் நலம் விளையும்.

மேற்கண்ட சதுரங்களில் – எந்த சதுரத்திற்குள் இடம் பிடித்தால் மனிதர்கள் மேன்மை மிகு சூழலுக்கு உதவுவார்கள் என்பது உற்றுநோக்கத்தக்கது.

முதல் சதுரமே முத்தாய்ப்பான சதுரம். ஏனெனில் அது ஆக்கும் வல்லமை பொறுத்தது.

இரண்டாவது சதுரமோ ஊக்கமிருந்தும் தேக்க நிலையிலிருப்பது. பொருத்தமான பயிற்சியின் மூலம் இந்தத் தேக்க நிலையை மாற்றி ஆக்க நிலைக்குக் கொணர முடியும். கொணரவும் வேண்டும்.

மூன்றாவது சதுரமோ திறமையிருந்தும் விருப்பமின்மையால் இது தயக்க நிலைக்கு வித்திடும். இந்நிலை தவிர்க்கப்பட வேண்டுமெனில், போதுமான ஊக்க சக்தி புகட்டப்பட வேண்டும். உளவியல் ரீதியான அணுகுமுறைகளின் மூலம் மனோபாவ மாற்றத்திற்கு அடிகோல வேண்டும்.

நான்காவது சதுரமோ இயக்கமற்ற மயக்கநிலையைக் குறிப்பதாகும். இவர்களுக்குத் தேவை விழிப்புணர்வு. முறைப்படியான உளவியல் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகளின் மூலம் மட்டுமே இவர்களைக் கடைத்தேறச் செய்ய முடியும்.

இப்படி வகைப்படுத்திப் பார்த்தால் – மனித வளத்தைப் பொருத்தமாக, துரிதமாக, துல்லியமாகப் பயன்படச் செய்து மானுட மதிப்பை மேம்படுத்தப் பெரிதும் துணைபுரிவதாய் இருக்கும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமில்லை.

இலக்கை அடைய வைக்கும் எளிய சதுரம்

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு கனவிருக்கிறது. அல்லது இருப்பது அவசியம். கனவென்பது வேறல்ல அது ஒரு தொலைநோக்கு. ஆமாம் அது ஒரு தொலைக்காட்சி. நாளை நடக்க இருப்பதை இன்றே மனதில் காணும் காட்சி. இதைத்தான் ஆங்கிலத்தில் “ Vision “ என்றும் “Picture” என்றும் “Dream” என்றும் குறிப்பிடுகிறார்கள்.

“ Begin with the end in mind “ என்று ஒரு மேலாண்மை கோட்பாடு கூறுகிறது. “முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை மனதில் நிலைநிறுத்திக் கொண்டு ஒரு செயலை தொடங்க வேண்டும்” என்பது இதன் பொருள். அந்த இறுதிக்கட்டத்திற்குப் பெயர் தான் “ Vision”. இந்த “ Vision” ஐ அடைவதற்கு ஒருவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், பல்வேறு படிநிலைகளைக் கடக்க வேண்டும், பல நாட்கள் காத்திருக்க வேண்டும்.

கனவை நினைவாக்குதல் என்பது கடைசி நிலை. அந்த கடைசி நிலையை அடைய வேண்டுமென்றால் பல இடைநிலைகளைக் கடந்தாக வேண்டும். அந்த இடைநிலைகளை மைல்கற்களால் அடையாளம் காட்டலாம். அந்த மைல்கற்களே “இலக்குகள்” எனப்படும்.

“இலக்கில்லா வாழ்க்கை கிழக்கில்லா வானுக்குச் சமம்” – என்பேன். இலக்குகள் தான் மனிதனை சிறிது சிறிதாக முன்னேறச் சொல்வது. இலக்கு இருக்கும் போதுதான் மனித மனம் ஓரிடத்தில் குவிகிறது. இல்லையென்றால் அது சிதறிப் போகிறது. கவனம் சிதறிவிட்டால் மனிதனால் உயரங்களை எட்ட முடியாது. இலக்கே இல்லாமல் இருவரால் தான் இருக்க முடியும். ஒருவர் மெய்ஞானி மற்றொருவர் அஞ்ஞானி. எல்லாம் அறிந்த ஞானியருக்கு இலக்குகள் எதுவும் தேவையில்லை, அவர்கள் இலக்குகளை கடந்த நிலையை எய்தியிருப்பார்கள். அவர்கள் மனமற்றதன்மையை அடைந்திருப்பார்கள். அதே போன்று ஏதும் அறியாது அறியாமையில் முடங்கி கிடப்போரிடமும் இலக்குகள் இருக்காது. இந்த இரண்டு நிலைக்கும் இடையில் ஆட்பட்டு மனித நிலையில் வாழ்வோர்க்கு இலக்குகள் தான் ஏணிப்படிகள். அப்படிப்பட்ட இலக்குகளை அடைவதற்கு நான்கு முறைகொண்ட ஒரு சுழற்சி வட்டத்தை இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

மேலிருக்கும் சதுரத்தை உற்று கவனியுங்கள்

குறித்த இலக்கை குறித்த நேரத்தில் அடைவதற்கு முறையான ஒரு வழிமுறையை கடை பிடித்தல் அவசியம். இல்லையென்றால் அந்த இலக்கை அடைவது கடினம்.

அந்த வழிமுறைநான்கு நிலைகளைக் கொண்டது

1. திட்டமிடுதல் - Plan
2. செயல்படுதல் - Do
3. சரிபார்த்தல் - Check
4. சரிசெய்தல் - Act

முதலாவதாக “திட்டமிடுதலை” பார்ப்போம். நம்மில் எத்தனைபேர் திட்டமிடுகிறோம்? நம்மில் எத்தனைபேரிடம் இலக்கிருக்கிறது? நம்மில் எத்தனை பேரிடம் கனவிருக்கிறது? (சற்றே உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள் இவை). ஒருவரிடம் உள்ள கனவுதான் அவர்கள் வாழ்க்கைக்கு பொருள் சேர்க்கிறது. கனவுகளே இல்லாத இலக்குகள் முழுமை பெறாது. அதேபோன்று இலக்குகள் ஈடேற வேண்டுமென்றால் திட்டம் அவசியம்.

எது திட்டம்?

எது - அது?
எவர் - அவர்?
எப்பொருள் - அப்பொருள்?
எவ்விடம் - அவ்விடம்?
எப்பொழுது - அப்பொழுது?
எம்முறை - அம்முறை?
எவ்வளவு - அவ்வளவு?

- என்று தீர்மானித்துக் கொள்வதையே “திட்டம்” என்கிறோம். செய்யவிருக்கும் செயல் எது? அந்தச் செயலை யார்யாரைக் கொண்டு செய்யப் போகிறோம்? அந்தச் செயலைச் செய்து முடிக்க எவ்வளவு பொருள் தேவைப்படுகிறது? அந்தச் செயல் செய்வதற்கு பொருத்தமான இடம் எது? அந்தச் செயலை மேற்கொள்வதற்கு உரிய நேரம் எது? அந்தச் செயலை எந்த முறையில் செய்ய விரும்புகிறோம்? செய்ய விரும்பும் அந்தச் செயலின் அளவு (Size of the project) எவ்வளவு? – என்பதையெல்லாம் தீர்மானிப்பதற்குப் பெயர்தான் திட்டமிடுதல் ஆகும்.

வீட்டின் வரவு செலவுத் திட்டம், ஒரு திருமணத்தை நடத்தி முடிப்பதற்கான திட்டம், ஒரு வீட்டைக் கட்டி முடிப்பதற்கான திட்டம், ஒரு புதிய தொழிலைத் தொடங்குவதற்கான திட்டம் – என செய்ய விரும்பும் ஒவ்வொரு செயலுக்கும் நாம் திட்டமிடமுடியும். அதை காலத்தின் அடிப்படையிலும் வரையறைசெய்யலாம். ஒரு வாரத்திட்டம், ஒரு மாத கால திட்டம், ஓர் ஆண்டுத் திட்டம், மூவாண்டுத் திட்டம், ஐந்தாண்டு திட்டம், பத்தாண்டு திட்டம், 20 ஆண்டு காலத் திட்டம் என குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களாகவும் செயலுக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம்.

இரண்டாவதாக நாம் மேற்கொள்ள வேண்டியது “செயல்படுதல்”. செயல்படுதல் என்பது நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல எளிதானது அல்ல. முதலில் அதற்கொரு திட்டம் தேவை. திட்டமற்றசெயல்பாடு பெரும்பாலும் தோல்வியில் முடியக்கூடும். அது மட்டும் அல்ல நேரமும், பொருளும், மனித ஆற்றலும் விரையமாகக் கூடும். அப்படிப்பட்ட செயல்களால் ஏற்படும் பயனைவிட இழப்புக்களே அதிகம். எனவே எந்த ஒரு செயலையும் திட்டமிட்டுத் தொடங்கினால் வெற்றி நிச்சயம். திட்டமிட்டு தொடங்கும் செயல் 50 விழுக்காடு வெற்றி பெற்றதாகவே பொருள் படும்.

திட்டமிடுதலுக்கும் செயல்படுத்தலுக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. திட்டமிடுதலும் ஒரு செயல் தான் என்றாலும் அது மனம் சார்ந்தது. ஆனால் செயல் என்று வரும்போது அது உடல் உழைப்பையும் பிறரோடு உறவாடும் திறமைகளையும் சார்ந்து இருக்கிறது. மேலும் ஒவ்வொரு செயலையும் செய்வதற்கென்று ஒரு செய்முறைஉண்டு. அதன்படி செய்தால் தான் அந்த செயல் முழுமை பெறும்.

“வெல்டிங்” செய்வதற்கென ஒரு முறைஉண்டு. சமையலுக்கென ஒரு முறைஉண்டு. ஓவியம் வரைவதற்கென்று ஒரு முறை, கட்டிடம் கட்டுவதற்கென்று ஒரு முறை. விமானம் ஓட்டுவதற்கென ஒரு முறைஉண்டு. விவசாயம் செய்வதற்கென்று ஒரு முறைஉண்டு. இப்படிச் செய்தொழில் ஒவ்வொன்றும் வெவ்வேறு முறைகளை கொண்டிருக்கிறது. ஒன்றைச் சிறப்பாகச் செய்பவரால் மற்றொன்றைச் சிறப்பாகச் செய்ய முடியாமல் போகலாம். இது இயற்கையானது. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ள அஷ்டாவதானிகளும், தஸாவதானிகளும் – பல செயல்களை ஒரே நேரத்தில் சரியாகச் செய்ய பழகியிருப்பர்.

எனவே ஒரு முறையாகச் செயல்பட வேண்டுமெனில், சோம்பல் கூடாது. அலட்சியம் கூடாது; அவசரம் கூடாது. ஒருவரைப் பார்க்க உகந்த நேரம் எது? முடியாது எனச் சொல்லும் ஒருவரிடம் சம்மதம் பெறுவது எப்படி? ஒருவரைச் சந்திக்கச் செல்லும் போது அவர் அங்கு இல்லையென்றால் அடுத்து என்ன செய்வது? நேரத்தை எப்படி முறையாகப் பயன்படுத்துவது? – போன்றபற்பல கலைகளிலும் தேர்ச்சிபெற்றால்தான் செயல்பாட்டில் வெல்ல முடியும். பலரின் முயற்சிகள் தோற்பதன் காரணம் – இந்தக் கலைகளில் தேர்ச்சி இன்மையே.

கூடுதல் உழைப்பு, நேர்மை, பிறரைப் புரிந்துகொள்ளுதல், பொறுமை – போன்றபல நற்பண்புகள் இருந்தால் செயல்பாட்டில் சிறக்க முடியும்.

மூன்றாம் நிலை “சரிபார்க்கும்” நிலையாகும். சரி பார்ப்பதற்கென நேரம் ஒதுக்க வேண்டும். திட்டமும் செயலும் ஒத்துப்போகிறதா எனப் பார்க்க வேண்டும். வாரம் ஒரு முறையோ, மாதம் ஒரு முறையோ சரிபார்க்க வேண்டும். தினமும் கூட அதைச் செய்யலாம். திட்டத்தின்படி செயல் நடைபெறவில்லையென்றால் காரணங்களை ஆய்ந்து அறிய வேண்டும். ஒரு செயல் – குறித்த நேரத்தில் முடியாவிட்டால் – அது எதனால் நேர்ந்தது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்போதுதான் நாம் எங்கே பின்தங்கியிருக்கிறோம் என்பதை அறிய முடியும். அதுமட்டுமல்ல இப்படிப்பட்ட பரிசீலனைதான் நமது முன்னேற்றத்தைத் துரிதப்படத்த உதவும்.

நாம் தற்சோதனை செய்து கொள்ளாவிட்டால், நம்மை நாமே தணிக்கை செய்து கொள்ளாவிட்டால், நாம் எங்கிருக்கிறோம்! என்னும் நிலையே தெரியாமல் போய்விடும். விளைவு, நம்மை பாதாளத்தில் தள்ளிவிடும். எனவே… நம்மை நாம் அறிந்து கொள்ள உதவும் கட்டம் தான் “சரிபார்க்கும்” கட்டம்.

திட்டத்திற்கும் – செயலுக்கும் இடையில் உள்ள இடைவெளிகளை, நிறைகுறைகளைக் கண்டறிந்துவிட்டால் அவற்றைப் பட்டியலிட்டு, ஒவ்வொன்றாகச் சரி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய முயற்சிகளை உடனுக்குடன் மேற்கொண்டுவிட்டால் பெரிய தாமதங்களையும் – அதனால் ஏற்படும் இழப்புக்களையும் தவிர்த்துவிடலாம்.

இப்படிச் சரிபார்க்கும்போதுதான் – நாம் இட்ட திட்டத்தின் குறைபாடுகளும் நமக்குப் புரியும். அனுபவக் குறைவால் ஏற்பட்டிருக்கும் ஏற்றத்தாழ்வுகளும் நமக்குத் தெரிய வரும். எனவே இந்தப் புள்ளிவிபர அடிப்படையில் – நமது திட்டத்தையே மறுபரிசீலனைக்குட்படுத்தி உரிய மாற்றத்தைச் செய்து கொள்ளலாம். திட்டத்தில் உரிய மாற்றம் செய்து கொண்டால் – அதனை நிறைவேற்றுவதில் முரண்பாடு இல்லாமல் முறையாக , முழுமையாக நிறைவேற்றமுடியும்!

இப்படியாக இந்த நான்கு நிலைகளைக் கொண்ட வட்டத்தை, நாம் எடுத்துக்கொண்ட இலக்கு நிறைவேறும் வரை அடிக்கடி ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் சரிபார்த்து, நிலைமை சரிசெய்யப்பட வேண்டும். அப்படி இடைவிடாமல் பரிசோதனை செய்து கொண்டால் திட்டத்திற்கும் – செயல்பாட்டிற்கும் இடைவெளி நேராமல். குறித்தபடி இலக்குகளை எட்ட முடியும்…. அது தானே நமது நோக்கமும் கூட.

ஊக்கத்திலிருந்து ஞானத்திற்கு

டீக்கடை பெஞ்ச்சிலும் சரி பாராளுமன்றத்திலும் சரி பேசப்படும் செய்திகளை கூர்ந்து நோக்கினால் ஒன்று தெளிவாகப் புலப்படும். நம் நாட்டின் நிலவரம் சரியில்லை என்பதுதான் அது! ஒரு புறம் அரசியல்வாதிகளின் போக்கு சரியில்லை என்கிறார்கள். மறுபுறம் அதிகாரிகளின் நடவடிக்கைகள் சரியில்லை என்கிறார்கள். மற்றொருபுறம் பொதுமக்கள் விழிப்புணர்வின்றி செயல்படுவதாக குற்றம் சுமத்துகிறார்கள். மேலும் பல விவாத மேடைகளில் பெற்றோர்களும் பிள்ளைகளும் குற்றம் சுமத்தப்படுகிறார்கள். இளைஞர்களும் யுவதிகளும் பழிக்கப்படுகிறார்கள்.

ஒட்டு மொத்தமாகச் சொல்வதென்றால் நம்மை நாமே குறைகூறிக் கொண்டிருக்கின்றோம்! என்னுடைய கேள்வி என்னவென்றால் “நாம் எல்லோருக்குமே குறைகள் தெளிவாகத் தென்படுகின்ற போதும் நம்மால் ஏன் அவற்றை நிறை செய்ய முடியவில்லை?” என்பதுதான்!

மகான்களும் பெரிய தலைவர்களும் காலம்காலமாக சரியான செய்திகளை நமக்கு சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இருந்தும் நம் மக்களின் வாழ்வில் ஏன் விரும்பத்தகுந்த மாற்றங்கள் விரைவாக நிகழவில்லை என்பது நியாயமான ஆதங்கமாகவே இருந்து வருகிறது.

இதற்கான காரணத்தையும், நாம் செய்ய வேண்டிய காரியத்தையும் இந்த படிநிலைகள் தெளிவாக்கவிருக்கின்றன. வாசித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் மாற்றம் காண்பீர்கள்.

மாற்றத்தை விரும்பும் யாரும் கீழ்க்காணும் நான்கு நிலைகளை கடந்தே ஆகவேண்டும். இந்த நிலைகளை காணாதவர்களால் – கடக்காதவர்களால், மாற்றத்தை காண முடியாது. ஆனால் ஒருவர் எவ்வளவு விரைவில் இந்த நான்கு நிலைகளுக்கு ஆட்படுகிறாரோ, அத்தனை விரைவில் அவரது ஏற்றம் தரும் மாற்றம் நிகழ்ந்தே தீரும்.

அந்த நான்கு நிலைகள்:

1. அறிதல் 2. புரிதல் 3. உணர்தல் 4. தெளிதல்

முதலில் அறிதலைப் பார்ப்போம்

எந்த ஒரு புதிய தகவலோ கருத்தோ செய்தியோ பொருளோ ஒருவருக்கு வெளியிலிருந்துதான் முதலில் அறிமுகமாகின்றது. ஒரு மனிதர் மூலமாகவோ. காட்சி மூலமாகவோ. சம்பவத்தின் முலமாகவோ. செய்தித்தாள், புத்தகம், தொலைக்காட்சி, கடிதம், இணையதளம், வானொலி, கருத்தரங்கம் என எண்ணற்ற ஊடகங்களின் வாயிலாகவே ஒன்றை நாம் அறிய நேருகிறது. சுருக்கமாகச் சொன்னால் அறிதல் என்பது வெளியிலிருந்து பெறப்படுவது. இப்படி வெளியிலிருந்து பெறப்படும் ஒன்றால் மனித மனதில் மாறுதல் உடனடியாக நிகழ்ந்துவிடுவதில்லை. ஏனென்றால் யாரோ சொன்னதலிருந்தும் எங்கோ கேட்டதிலிருந்தும் நமக்குள் ஏற்படும் தாக்கங்கள் அழுத்தமாகவோ ஆழமாகவோ பதிவதில்லை. எனவே இந்நிலையில் மாற்றங்கள் நிகழ்வது அரிதுÐ

இரண்டாம் படியாகிய “புரிதலை” எடுத்துக் கொள்வோம்.

மேற்கண்ட பல வழிகளின் மூலம் நாம் பெற்ற அறிவை நமக்குள் சுழலவிட்டுச் சிந்தித்துப் பார்ப்பதையே நாம் “புரிதல்” என்கிறோம். “எண்ணிப் பார்த்தல்” என்றும், “யோசித்தல்” என்றும், “அலசி ஆராய்தல்” என்றும், நடைமுறையில் கூறப்படுவதையே “சிந்தித்தல்” என்கிறோம். ஒரு கணிப்பொறியைப் பற்றி நாம் அறிந்து கொண்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த கணிப்பொறி எனக்கு எந்தெந்த வகையில் பயன்படும்? அது இப்போது எனக்கு தேவையா? அதை வாங்கிக் கொள்ள எவ்வளவு பணம் தேவை? அதை வாங்குவதால் உடனடி இலாபம் உண்டா? என சிந்தித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வருவதையே “புரிதல்” என்கிறோம்.

சுருக்கமாக சொன்னால் “புரிதல்” என்பது உள்ளுக்குள் நிகழ்வது. ஒரு நபரின் மனதுக்குள் நிகழ்வது. ஒரு மாற்றத்தை உருவாக்குவதில் புரிதல் என்பது இரண்டாம் நிலையை வகிக்கிறது. ஒன்றை அறிந்த நிலையைக் கடந்து, புரிந்த நிலைக்கு வரும் போது ஓரளவு மாற்றங்கள் நிகழக்கூடும். ஆனாலும் மாற்றம் கட்டாயம் நிகழ்ந்துவிடும் என்று சொல்வதற்கு இல்லை. ஏனென்றால் அன்றாட வாழ்வில் எத்தனையோ கருத்துக்களை புரிந்து கொண்டவர்கள் கூட நடைமுறையில் மாறுவதில்லை!

புகைப்பது தவறு புகைப்பதால் புற்று நோய் வரும் சாத்தியக் கூறு அதிகம் என்பதை புரிந்து ஏற்றுக் கொள்பவர்களால் கூட புகைப்பதை நிறுத்த முடிவதில்லை என்பது கண்கூடு. எனவேதான் புரிதலையும் கடந்து, அதற்கு நாம் அடுத்த நிலையை நோக்கி நகர வேண்டும்.

மூன்றாம் படியாகிய “உணர்தல்” பற்றி அறிவோம்.

ஒன்றை அறிந்து கொண்டு அதைப் புரிந்து கொண்ட பின்னர் அதைச் செயல் வடிவில் செய்து பார்த்து, அதனால் கிடைக்கும் அனுபவத்திலிருந்து பெறப்படுவதையே உணர்தல் என்கிறோம்.

சர்க்கரை என்று பிறர் சொல்லக் கேட்பது “அறிதல்” ஆகும். இதை உண்டால் இனிய சுவை கிடைக்கும் என்று சிந்தித்தால் அதை “புரிதல்” என்கிறோம்.

அந்த சர்க்கரையை எடுத்து நாவில் வைத்து ருசித்துப் பார்த்தால் கிடைக்கும் அனுபவத்தையே “உணர்தல்” என்கிறோம். அதே போன்று ஒரு கருத்தை (அ) கோட்பாட்டை நடைமுறைப் படுத்திட அதனால் கிடைக்கும் அனுபவம் நமக்குள் அழுத்தமான பதிவை ஏற்படுத்தும். ஒரு சிலரால் நடைமுறைப்படுத்தி பார்க்காமலே கூட கற்பனையாலேயே அடுத்து வரவிருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

ஒரு கணிப்பொறியை அறிந்து கொள்வதோடு விட்டுவிடாமல் அதனைப் பற்றிய புரிதலோடு அதை இயக்கத்தைப் பார்த்து அதன் முழுப் பரிமாணத்தையும் அனுபவித்து உணர்ந்து கொள்ளும் போது அது ஏற்படுத்தும் தாக்கம் நிரந்தரமாக இருக்கும். எனவே நமக்குள் உணர்தல் ஏற்பட்டுவிட்டால் அதுவே மிகப்பெரிய உந்துசக்தியாகிவிடும். எனவே மாற்றமானது எளிதில் நடந்துவிடும்.

நான்காவது படியாகிய “தெளிதல்” என்பது ஞானத்தைக் குறிப்பதாகும்.

ஒன்றை மீண்டும் மீண்டும் கற்பனையில் ஆழ்ந்தோ நடைமுறைப் படுத்தியோ நம் அனுபவம் முழுமையானதாகும். இத்தகைய தெளிவு ஏற்படும் போது யானை நமக்கு யானையாகவே தெரியும். அப்படியில்லாமல் ஒருமுறை உணர்ந்த நிலையிலோ (அ) புரிந்த நிலையிலோ (அ) அறிந்து கொண்ட நிலையிலோ நின்றுவிட்டால் யானையின் சில பகுதிகளை மட்டும் பார்த்தவர்களாக இருப்போம். அதுமட்டுமல்ல... வாழ்நாள் முழுவதும் அந்தப் பகுதி மட்டுமே யானை என்றும் அடம் பிடிப்போம். முழுமையைக் காணும் முயற்சியின்றி உண்மையை உணராமலே வாழ்ந்து முடித்துவிடக் கூடும்.

முழுமைபெறாத இத்தகைய நிலையில் மாற்றங்கள் நிகழ்வதில்லை. திருவள்ளுவர், புத்தர், விவேகானந்தர், ஏசுநாதர், நபிகள்நாயகம் போன்ற சான்றோர்களும் காந்தி, ஆப்ரகாம்லிங்கன், மார்டின் லூதர்கிங், காரல் மார்க்ஸ், லெனின், சர்ச்சில் போன்ற உலகம் போற்றும் அரசியல் தலைவர்களும், தாகூர், பாரதியார், வேர்ட்ஸ் வொர்த், ஷெல்லி, கீட்ஸ், ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா போன்ற இலக்கிய – தத்துவஞானிகளும், ஐன்ஸ்டீன், நியூட்டன், எடிசன், ஆர்க்கிமிடிஸ், சர்.சி.வி.ராமன், மேரிகியூரி, இராமானுஜம் போன்ற அறிவியல் – கணித மேதைகளும் கொலம்பஸ், வாஸ்கோட காமா போன்ற புவியியல் கண்டுப்பிடிப்பாளர்களும். ஹென்றி போர்டு, ஜி.டி நாயுடு போன்ற தொழில்நுட்ப வர்த்தக மேதைகளும் இத்தகைய தெளிவைப் பெற்றிருந்தார்கள். இன்றும் சிலர் இந்நிலையை (தெளிவு பெற்ற நிலையை) அடைந்திருக்கிறார்கள் என்றாலும் நம்மில் பலர் அறிந்தும், ஆனால் புரியாமலும், புரிந்தும் ஆனால் உணராமலும், உணர்ந்தும் ஆனால் தெளிவு பெறாமலும் பல்வேறு நிலைகளில் இருந்து வருகிறார்கள். எல்லோருமே உயர்ந்த நிலையாகிய தெளிவினை அடைய வேண்டும். அப்போதுதான் மாற்றங்கள் உடனுக்குடன் நிகழும்! உன்னதம் நிலை பெறும்! இந்த நான்கு நிலைகளும் ஒருவரை அறியாமையிலிருந்து ஞானத்தை நோக்கி இட்டுச் செல்வதற்கான நான்கு படிக்கட்டுகள். இதனை உணர்வோம், தெளிவோம், ஏற்றமிகு மாற்றத்தை விரைவில் காண்போம்!

- தேவகோட்டை ம.திருவள்ளுவர் (நமது நம்பிக்கை)







லகெங்கும், பொருளாதாரப் பின்னடைவின் விளைவாக பலருக்கும் வேலை வாய்ப்பு பறிபோகிறது. குறிப்பாக, தனியார் நிறுவனங்களில் இந்த நிலை பெருமளவில் இருக்கிறது. ஆட்குறைப்பு, நிறுவனத்தின் உற்பத்தியோ, தொழிலோ குறைவதால் ஏற்படுகிறது. இதற்குப் பெரிய அளவில் தீர்வுகள் எதுவும் தென் படவில்லை.

அலுவலர் அல்லது ஊழியரின் செயல்திறன் நன்றாகவே இருந்தாலும், தொழில்சூழல் சரியாக இல்லாத போது வேலையை விட்டு விலக்குவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே ஆகிவிட்ட சூழலில், வேலையை இழக்க நேரும் தனிமனிதர்கள் இந்தச் சூழலை எப்படியெல்லாம் எதிர்கொள்ளலாம்? யாருக்காவது வேலை போனால், உடனடியாக என்ன செய்யலாம்? இந்தக் கேள்விக்கு, உலக அளவில் மனிதவள மேம்பாட்டு நிறுவனர்கள் விடையளித்து வருகிறார்கள். வேலைவாய்ப்பு ஆலோசகர் மார்தா ஃபின்னே இது குறித்து ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அவரது வழிகாட்டுதல்கள் சிலவற்றை உள்வாங்கிக் கொண்டு, இந்தியச் சூழலில் சில ஆலோசனைகள் இங்கே தரப்படுகின்றன.

ஒரு வேளை – உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாருக்காவது இப்படியொரு சூழல் ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு இந்தக் கட்டுரை பயன்படக்கூடும். இந்தக் கட்டுரைக்கான அவசியம் உங்களுக்கோ உங்கள் நண்பர்களுக்கோ ஏற்படக்கூடாது என்கிற பிரார்த்தனையுடன் இந்தக் கட்டுரையை வெளியிடுகிறோம்.

- மரபின்மைந்தன் ம முத்தையா (ஆசிரியர் நமது நம்பிக்கை)

1. வேலை நீக்கம் குறித்த அறிக்கை, முன்னறிவிப்பின்றி தரப்படுகிற சூழலில் உடனடியாக அதில் கையெழுத்திடாதீர்கள். உங்கள் வேலை இழப்பிற்கு ஓரளவேனும் நியாயமான இழப்பீடு வழங்கப்படுகிறதா என்பதை உறுதிசெய்து கொண்டு, இருக்கிற சூழலில் இதைவிட நல்ல தொகை கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தால் மட்டுமே கையெழுத்திடுங்கள்.

2. பதட்டம் காரணமாக, நிர்வாகத்திடமோ, மேலதிகாரியிடமோ கடுமையாக மோதாதீர்கள். வேறு வழியின்றி நிறுவனம் இந்த முடிவை மேற்கொள்கிறது. நாளை சூழ்நிலை மாறலாம். உங்களுக்கு அவர்களும், அவர்களுக்கு நீங்களும் தேவைப்படலாம்.

3. விஷயத்தைக் கேட்டதும் கண்ணீர் வருகிறதா? மான அவமானம் பார்க்காமல் அழுதுவிடுங்கள். உங்கள் மன அழுத்தம் கண்ணீர் வழியே கரைந்தோடும். உங்கள் உடல் நலனுக்கும், அடுத்த கட்ட முடிவுகளை நோக்கித் தெளிவாக நகரவும் இது உங்களுக்குத் துணை செய்யும்.

4. வருமானத்திற்கு நல்ல வழியை நோக்கி சில ஏற்பாடுகளை செய்துகொள்ள மூன்று மாதங்களாவது ஆகும். எனவே சிக்கனமாக இருக்கப் பழகுங்கள். வேலை இருந்தாலும் இழந்தாலும் சிக்கனம் நல்லதுதான்.

5. வங்கி முதலீடுகளை ஒழுங்குபடுத்தி, வட்டித் தொகை சமச்சீராக வருகிறதா என்று பாருங்கள். வேறு வழியே இல்லாமல் போனாலே ஒழிய சொத்துகளைக் குறைந்த விலைக்கு அவசரப்பட்டு விற்காதீர்கள்.

6. உங்கள் தொழில் திறமை – அனுபவம் போன்றவற்றை, ஒரே நிறுவனத்திற்கு என்றில்லாமல் பல நிறுவனங்களுக்கும் பயன்படும் விதமாக ஆலோசகர் பொறுப்பேற்க முயலுங்கள். உங்களுக்குப் பல ஆயிரங்கள் சம்பளம் கொடுத்த நிறுவனத்திற்குக் கூட சில ஆயிரங்கள் பெற்றுக் கொண்டு பகுதிநேரப் பணிபுரியும் சூழல் அடுத்த சில மாதங்களில் உருவாகலாம்.

7. உண்மை நிலையை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மாற்று வழிகளை அவர்களுடன் கலந்து ஆலோசியுங்கள். குழந்தைகளுக்கு என்ன வயதோ அதற்கேற்ப விஷயத்தைப் பக்குவமாகச் சொல்லுங்கள். பதறாதீர்கள். பதட்டமடையச் செய்யாதீர்கள்.

8. கோவையில் மேட்டுப்பாளையம் – சிறுமுகை பக்கங்களில் பல தொழில் முனைவோர்கள் குறுகிய காலங்களில் தோன்றி, கடின உழைப்பால் முன்னேறி இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். அந்தப் பகுதிகளில் இருந்த பல நிறுவனங்கள் திடீரென்று மூடப்பட்டதால், பெரும் பின்னடைவைச் சந்தித்து, சொந்த முயற்சியில் தாங்களே நிறுவனங்கள் தொடங்கி வளர்ந்தார்கள் அவர்கள். எனவே, இருட்டிலிருந்து மீண்டு வெற்றியின் வெளிச்சத்தைத் தொடும் வாய்ப்பை வாழ்க்கையே வழங்கும் என்பதை நம்புங்கள்.

9. பதட்டத்திலும் பயத்திலும் பெருமளவு சக்தி வீணாகிறது. அதை ஆக்கபூர்வமான சக்தியாக மடைமாற்றம் செய்யுங்கள். “அடுத்தது என்ன” என்கிற கேள்வியையும் தேடலையும் உங்களுக்குள்ளேயே தீவிரமாக்குங்கள்.

10. நிறுவனத்திலிருந்து வெளியேறும்போது கோப்புகள் – விவரணைகளை எடுத்து வர முயலாதீர்கள். ஆனால் நிறுவனம் வழியே நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட தனிப்பட்ட தொடர்புகளை கைவிட்டுவிடாதீர்கள். உங்கள் புதிய தொழிலுக்கு அந்தத் தொடர்புகள் பெருமளவில் துணை செய்யும்.

11. உலகையே உலுக்கும் பொருளாதாரப் பின்னடைவிற்கு நீங்கள் எவ்விதத்திலும் காரணமில்லை. வேலை இழக்க நேர்ந்தது உங்கள் குறைபாட்டால் இல்லை என்பதை உணருங்கள். அதே நேரம், அடுத்தொரு நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் வாய்ப்புக் கிடைத்தால் உங்களை அங்கே தவிர்க்க முடியாதவராக நிலைநிறுத்தும் அளவு உங்கள் செயல்திறனைக் கூர்மைப்படுத்துங்கள்.

12. எத்தனை மோசமான பின்னடைவுகளிலும் முனைப்புள்ளவர்கள் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தப் பின்னடைவு, உங்கள் செயல்திறனை உங்களுக்கே நினைவூட்டக் கிடைத்த நல்வாய்ப்பு என்பதை மனதில் கொண்டு முன்னைவிடவும் முனைப்போடும் நம்பிக்கையோடும், இந்தப் புதிருக்கான விடையைக் கண்டடையுங்கள்.



குழந்தைகள் நடைபழகும் முன்னே, மழலையர் பள்ளி (Nursery / Montessori) போன்றவற்றில் சேர்க்கப்படுகிறார்கள். இந்தப் பழக்கம் நல்லதா, கெட்டதா என்ற விவாதம் ஒருபக்கம் இருக்க, இனிவரும் காலங்களில், இந்தப் பிள்ளைகள் வளர்ந்து வரும் வேளையில், படிப்பு, வேலைவாய்ப்பு போன்றவற்றில் போட்டி இன்னும் அதிகமாகும் வாய்ப்புத்தான் காணமுடிகிறது. இதே போக்கின் அடிப்படையில், பள்ளியில் ஆத்திச்சூடி சொல்லிக் கொடுக்கும் பொழுதே, பிள்ளைகளுக்குக் கணிணிப் பிரயோகம் பற்றியும் பெரும்பாலான பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

விளையாட்டுப்போல கற்றுக்கொள்ள ஆரம்பித்து, விரைவில் இந்தப் பிள்ளைகள் இணையத் தளங்களைப் பார்வையிடவும் தயாராகி விடுகிறார்கள். தானாகவே பாட்டி – தாத்தாவுக்கு அஞ்சல் அனுப்புவது எனத் தொடங்கி, விளையாட்டுத் தளங்களில் விளையாடுவது, அதன் மூலம் நண்பர்கள் அறிமுகம், அவர்களுடன் Instant Messenger இல் அரட்டை, என்று வளர்கிறார்கள். ஒரு கட்டத்தில், பெற்றோர்களிடம் " என் அந்தரங்க மடல்களைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்" என்று சொல்லும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள்.

எவ்வளவு வேகத்தில் ஒரு பிள்ளை இத்தகைய தேர்ச்சி பெற்றுவிடுகிறது என்பது அதன் சாமர்த்தியத்தைப் பொறுத்ததாக இருந்தாலும், இதுவே இவர்களுக்கு இணையத்தில் இருக்கும் அபாயங்களையும் பாதுகாப்பு முறைகளையும் சொல்லிக் கொடுப்பதற்கான சரியான தருணம். வீடு விட்டு வெளியே செல்லும்போது பிள்ளைகளிடம் எப்படி நாம் "பத்திரமாக போப்பா, சாலையில் வாகனங்கள் பல வந்துகொண்டே இருக்கும், நீ தான் கவனமாகச் செல்லவேண்டும்" என்று புத்திமதி சொல்வதுபோல தான், இணையத்தில் சஞ்சரிப்பதற்கும், கோப்புகளைத் தரவிறக்கம் செய்வது குறித்தும் நாம் அவர்களுக்கு நல்லது – கெட்டது சொல்லித்தர வேண்டும்.

பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியர் போல் கையில் பிரம்போடு சொன்னால், அது சரிவராது. பிள்ளைகள் பொதுவாகவே துரு-துருவென்றுதான் இருப்பார்கள். இது அவர்களின் இயல்பு நிலை. நாம் கடுமையாகச் சொல்லும் விஷயங்களை அவர்கள் விளையாட்டென நினைத்து அலட்சியப்படுத்தி விடுவார்கள். அதையே நாம் விளையாட்டாய்ச் சொன்னால், நினைவில் வைத்துக்கொண்டு செயற்படுவார்கள். நாம் சொல்லும்படி அவர்கள் கேட்காவிட்டால், அவர்கள் கேட்கும்படி நாம்தான் மாற்றிச் சொல்ல வேண்டும்.

விதிமுறைகளும் வரைமுறைகளும்:- 5-15 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் இணையத்தைப் பயன்படுத்துவதுக்கு முன்னே சில விதிமுறைகளையும் வரைமுறைகளையும் கண்டிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் அமைக்கவேண்டும்.

அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களுக்கோ அரட்டைச் செய்திகளுக்கோ (Online Chat) எக்காரணம் கொண்டும் பதில் எழுதக் கூடாது. மௌனம் உத்தமம்.

நிஜப் பெயர், ஊர், நகரம், வீட்டு விலாசம், பிறந்த நாள், பெற்றொர்களின் பெயர், அலுவலகத்தின் பெயர், இதர குடும்பத்தினரின் விவரங்கள் போன்ற அந்தரங்கத் தகவல்களைக் கண்டிப்பாகச் சொல்லக்கூடாது. பிள்ளைக்குத் தெரிந்தவர்களேயானாலும், இணையத்தில் கேட்டால் சொல்லக்கூடாது. இது மட்டுமன்றி, அப்படிக் கேட்டவரின் விவரம் பெற்றோருக்கும் உடனடியாகத் தெரியப்படுத்தவும் வேண்டும்.

பெற்றோரின் மேற்பார்வை இல்லாமல் Web Cam & Microphone ஐ பயன்படுத்தக்கூடாது. பார்த்துப் பேசும்பொழுது அந்தரங்கத் தகவல்களை அறியாமலேயே பிள்ளைகள் சொல்லிவிடுவார்கள்.

உங்களது இணைய உலாவி (Browsers, like Firefox , IE, chrome) இல் ஆபாசமான சொற்கள் அடங்கிய தளங்களுக்கு தடை விதிக்கச்செய்யவும்.

உங்களது மேற்பார்வை இல்லாமல் எந்தக் கோப்பையும் தரவிறக்கம் செய்ய அனுமதிக்காதீர்கள். நச்சு நிரல் பாதுகாப்பிற்காக மட்டுமன்றி, தகவல்களைத் திருடும் Phishing தளத்தில் இருந்தும் பாதுகாக்க இது மிக அவசியம்.

எல்லோருக்கும் பொது :- கணினியை உங்கள் வரவேற்பறையில் / குடும்பத்தினர் எல்லோரும் வந்து போகும் பொது இடத்தில் வைக்கவும். உங்கள் பிள்ளை கணினியைப் பயன்படுத்தும் பொழுது நீங்கள் பக்கத்திலேயே உட்கார வேண்டும் என்பது இல்லை, உங்கள் பார்வை இருந்தாலே போதுமானது. யாருடைய மேற்பார்வையும் இல்லாமல் இணையத்தில் இயங்க அனுமதிக்காதீர்கள்.

பேசுங்கள் – பழகுங்கள் :- உங்கள் பிள்ளை இணையத்தைப் பயன்படுத்தும்போது நீங்கள் அவ்வப்போது பேச்சுக் கொடுத்துகொண்டு இருங்கள். "என்ன செய்கிறாய், ஏன் செய்கிறாய்" போன்ற கேள்விகளைத் தவிர்த்து " இதை நான் படித்தேன், நீ படித்தாயா?... உனக்கு வந்திருக்கும் நகைச்சுவைக் கடிதத்தை என் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்புகிறாயா?" மாதிரியான பேச்சு இலகுவாக இருக்கும்.

நில் - கவனி செல் :- சாலையைக் கடக்க பிள்ளைகளுக்குப் பயிற்சி அளிக்கும்போது நாம் பயன்படுத்தும் இந்தத் தாரக மந்திரம் இணயத்திற்கும் பொருந்தும். குறைந்த பட்சம் வாரம் ஒருமுறையாவது இணையத்தில் இருக்கும் அபாயங்களைக் குறித்து குடும்பத்துடன் விவாதியுங்கள். எம்மாதிரியான தளங்கள் ஆபத்தானவை, ஏன் தனி நபர் விவரங்களை இணையத்தில் வெளியிடக்கூடாது, பெற்றோர்கள் அறிமுகப்படுத்தாத நபர்களிடம் Instant Messenger இல் பேசுவதோ தனி மடல் பரிமாற்றம் வைத்துக்கொள்வதோ கூடாது என்பதற்கான காரணம் போன்றவற்றை ஓர் ஆசிரியராக இல்லாமல், ஒரு நண்பனாக அலசுங்கள்.

சந்தேகங்கள் கேட்கப் பயப்படவேண்டாம் :- சில விஷயங்களைப் பெற்றொருடன் பகிர்ந்துகொள்ள பிள்ளைகள் பயப்படுவார்கள், சங்கோஜப்படுவார்கள். நீங்கள் அவர்களைப் பற்றித் தவறாக நினைப்பீர்களோ, இம்மாதிரி சந்தேகங்கள் கேட்டால், உங்களிடமிருந்து திட்டு – தண்டனை வருமோ என்ற பயம் இப்படிப் பலகாரணங்கள். அதனால், எந்த மாதிரியான சந்தேகங்களையும் அரைகுறையாக தெரிந்துகொண்டு செயற்படுவதைவிட பெற்றொரிடத்தில் தைரியமாக கேட்கலாமென்று நீங்கள் தான் ஊக்கம் குடுக்க வேண்டும்.

உங்கள் வீட்டில் 5 – 15 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் அதிகமாக கணிணி / இணையம் பயன்படுத்தாதீர்கள்? அப்படி என்றால் இங்கே சொல்லியிருக்கும் முறைகளை உங்கள் வீட்டில் அமல்படுத்திப் பாருங்கள். உங்களுக்கும் பயம் விலகும், பிள்ளைகளுக்கும் உங்கள் மேல் மரியாதை உண்டாகும்.

- தீபா கோவிந்த்

ஈழநேசன்.காம்


முன்னேற்றத்திற்குப் பல்வேறு மூலதளங்கள் என்றால் அவற்றுக்கெல்லாம் அடித்தளமாக இருக்கக் கூடியது மனிதநேயமாகும். அப்படி என்றால், மனிதநேயம் என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

சக மனிதனை நேசிக்கிற மாண்பு, சக மனிதனை மனிதனாகப் பார்க்கிற அணுகுமுறை. தனக்கு இருக்கிற அனைத்து உணர்வுகளும், தனக்குள்ள அனைத்து அடிப்படைத் தேவைகளும் அடுத்தவருக்கும் வேண்டும் என்று எண்ணி ஏற்று அங்கீகரிக்கிற தன்மை. சக மனிதனைப் பாசத்தோடும், பரிவோடும், கருணையோடும் நோக்கும் அன்பு நிலையே மனிதநேயம்.

வள்ளுவரும் வள்ளலாரும்

இதுதான் உயிருள்ள மனிதனின் இயல்பான நிலை, இயற்கையான நிலை. “அன்பின் வழியது உயிர் நிலை” என்பது திருவள்ளுவரின் திருவாக்கு. எனவேதான் தந்தை பெரியார் மனிதனை நினை என்றார். ஆண்டவனைக்கூட “அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலை’ என்கிறார் வள்ளலார்.

மனித நேயம் மரணத்தைத் தடுக்கும்

மனிதனை நேசிக்கிற மனிதனை நினைக்கிற தன்மை இருக்குமெனில் வீழ்ச்சி என்பதே இல்லை, வளர்ச்சி என்பது மட்டுந்தான். முன்னேற்றமே மிஞ்சி நிற்கும் பின்னேற்றம் இருக்காது. அன்புமயமான சூழலில் தனி மனிதனுக்கோ… சமூகத்திற்கோ, அல்லது நாட்டிற்கோ முன்னேற்றத்தைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்.

அன்பான மனிதன், சக மனிதன் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் அல்லற்படுவதைக் கண்டும் காணாமல் கிடக்க இயலுமா? தனக்குப் போக மிஞ்சியிருப்பதை சக மனிதனுக்குப் பகிர்ந்தளித்துப் பசியாற்றினால் எங்காவது இல்லாமையும், பட்டினிச்சாவும் இந்த மனிதகுலத்தில் நிகழுமா?

விழாக்களில் விரயம் தவிர்ப்போம்

ஈந்து உவந்த வாழ்க்கை இன்றில்லை. வருவோர் போவோர்க்கெல்லாம் பசியாற்றிய பண்பாடும், விருந்தோம்பிய வீட்டுத் திண்ணைகளும் இன்றில்லை. விதை நெல்லைக்கூட எடுத்துச் சமைத்து விருந்தோம்பியவர்கள் தமிழர்கள் என்பதை நமது இலக்கியங்கள் காட்டுகின்றன. இன்னொரு பக்கம் திருமண விழாவின் போது பல்லாயிரக் கணக்கானவர்களை அழைத்து இதுபோல யாரும் இப்படி நடத்தியதில்லை என்று சொல்லும்படியாகச் செய்ய வேண்டும் என்று ஒன்றை மற்றொன்று விஞ்சுகிறவகையில் வசதி படைத்தவர்கள் ஏராளமாக உணவையும், பொருளையும் விரயமாக்குகிற செயல்கள் பெருகி வருகின்றன.

சொந்தபந்தங்களை மிக நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்து மண விழாக்கள் நடைபெற்றால் சில நூறு பேர்களுடன் முடிந்து விடும். இப்படி திருமணத்தின் பெயரால் நடத்தப்படும் உணவுப் பொருள் விரயத்தைத் தவிர்த்தும் அதையே அரசுக்குத் தொகையாக தந்தால் நாட்டில் பட்டினியாய் யாரும் இல்லை என்றநிலையை உருவாக்கிடலாம். இன்னும் ஒருபடி சென்று மதுவுக்கும், புகைக்கும் செலவழிக்கிற பணத்தை மிச்சப்படுத்தினால் ஏழைகளுக்கு முப்போதும் உணவளிக்க முடியும். இதற்கு மனிதநேயம் இருந்தால் போதும். பட்டினிச்சாவுகள் இல்லாத நாடே முன்னேறிய நாடு.

வள்ளுவரும் பாரதியும்

‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்’

என வள்ளுவர், பசியால் வாடும் மக்களைப் படைத்த மகேசனையே சாடுகிறார். பாரதியோ ‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடு வோம்’ என்று பசியால் பரிதவிக்கும் நிலைகண்டு இந்தப் பார்தான் அதற்குக் காரணம் என்று எண்ணிய பாரதி மனிதநேயம் இல்லாத இந்த மண்ணுலகம் இருந்தென்ன பயன் என்கிறார்.

வேற்றுமையை வேரறுப்பது மனிதநேயம்

மனிதனை நேசிக்கிற எந்த ஒரு மனிதனாலும் சக மனிதனை தீண்டத்தகாதவனாகப் பார்க்க முடியுமா? மனிதனை நேசிக்கிற எந்த மனிதனும், பிறப்பின் அடிப்படையிலான பேதங்களைப் போற்றமாட்டான். பிறப்பின் அடிப்படையிலான பேதங்கள் இல்லாத நாட்டில் சக மனிதனுக்குச் சம உரிமை அளித்துப் பார்க்கிற சமநோக்கு இருக்கும். எங்கே உரிமைகள் சமமாகிறதோ, உள்ளன்போடு தன்னைச் சூழ்ந்துள்ள மனிதனையும் நேசிக்கிறசூழல் மலர்கிறதோ அங்கே சமவுடைமை இயல்பாக நிலவும். எங்கே உரிமையும், உடைமையும் சமமாகிக் கிடக்கிறதோ அங்கே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதம் இருக்காது. ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு ஏற்படாது. ஆணாதிக்கம், பெண்ணுரிமை என்ற பேச்சுக்கே இடமிருக்காது. அன்பின் ஆதிக்கமே மிகுந்திருக்கும்.

தீண்டாமையும், பிறவி பேதமும், இனபேதமும் இல்லாத நாட்டில் அனைவரும் கல்வி பெற, வேலை வாய்ப்புகளைப் பெற, அவரவருக்குத் தேவையான அடிப் படை வசதிகளையும் பெற தடையிருக்காது. எல்லோர்க்கும் எல்லாம் என்ற நிலையிருக்கும். அங்கே முன்னேற்றம் மட்டுமே இருக்கும்.

எல்லோர்க்கும் எல்லாமும் என்ற நிலையில் திருட்டுக்கு வழியிருக்க முடியுமா? ஒருவனுடையதை மற்றவன் அபகரிக்கும் சூழ்நிலை இல்லாத சூழல் இனிமையானதாகத்தானே இருக்க முடியும். எல்லோருக்கும் வேலை இருந்து விட்டால் “சாலையோரத்தில் வேலையற்றதுகளும் இருக்காது. வேளையற்றதுகளின் உள்ளத்தே விபரீத எண்ணங்களுக்கும் வேலை இருக்காது” விபரீத எண்ணங்கள் விளையாத நாட்டில் விளைவது முன்னேற்றம் மட்டுமே!

சத்குருவின் தத்துவ விளக்கம்

நாட்டில் மட்டுமன்று வீட்டிலும் தான். மனித நேயம் மலிந்து கிடக்கிற இல்லத்தில் மனவருத்தத்திற்கு இடமில்லை. ஆணும், பெண்ணும் அன்புடன் நட்போடு வாழும் வாழ்வில் மகிழ்ச்சியும், இன்பமும், ஆனந்தமும் நிலைத்திருக்கும். இஃதென்ன அன்பு, மகிழ்ச்சி, இன்பம், ஆனந்தம் என்கிறீர்களா?

“உடல் நிலையை ஒரு சுகமான, இனிமையான நிலையில் வைத்திருந்தால் அதனை ஆரோக்கியம், இன்பம் என்கிறோம். மனநிலையில் ஓர் இனிமை யான நிலையிருந்தால் இதனை மகிழ்ச்சி என்கிறோம். உணர்ச்சி நிலையில் இனிமையான நிலை நிலவினால் அதனை அன்பு, நேசம் என்கிறோம். உயிர்சக்தி நிலையில் இனிமையான நிலை ஏற்பட்டால் பேரானந்தம் என்கிறோம்” என்பது சத்குருவின் விளக்கம்.

அன்பும், இன்பமும், மகிழ்ச்சியும், ஆனந்தமும் நிறைந்த மனிதர்கள் குடும்பத்தின் முன்னேற்றத்தை உலகின் எந்த சக்தியாவது தடுத்து நிறுத்திவிட முடியுமா? மனித நேயமிக்க அன்புமயமான குடும்பங்கள் வாழும் சமூகத்தின் முன்னேற்றம் எப்போதும் மேட்பட்டே இருக்கும். முன்னேற்றமான வாழ்வைக் கொண்ட சமூகங்களைக் கொண்ட நாடே வளர்ந்த நாடாகும்.

போர் ஒடுங்கில் புவி ஓங்கும்

வளர்ந்த நாடுகளை வல்லரசு என்கிறார்கள். வல்லரசுகள் வல்லூறு அரசுகளாக இருப்பது எதனால்? மனிதநேயம் மங்கிக்கிடப்பதனால். மனிதநேயம் இருக்கிற எந்த மனிதனும் அடுத்த மனிதன் மீதும், அடுத்த நாட்டின் மீதும் ஆதிக்கம் செலுத்த மாட்டான். எப்போது ஒரு மனிதன் அடுத்த மனிதன் மீது ஆதிக்கம் செலுத்தவில்லையோ? அங்கே சண்டையில்லை. எப்போது ஒரு நாடு அடுத்த நாட்டின்மீது ஆதிக்கம் செலுத்தவில்லையோ அங்கே போர் இல்லை. எங்கே போர் இல்லையோ அங்கே வளர்ச்சி, மேம்பாடு, முன்னேற்றம் உறுதி.

ஆனால் மனிதநேயம் மரித்துப் போனால் ஆணவம் ஆதிக்கம் செலுத்தும். ஆணவம் எங்கெல்லாம் ஆதிக்கம் செய்கிறதோ அங்கெல்லாம் வன்முறை தலைவிரித்தாடும். வன்முறை எங்கு நிகழ்ந்தாலும் அழிவே மிஞ்சும். முன்னேற்றம் முடங்கிப் போகும்.

அன்பு மலருமிடத்தில், மனிதநேயம் மிளிருமிடத்தில் ஆணவத்திற்கும், ஆதிக்கத்திற்கும் இடமில்லை. அன்பு செத்துவிட்ட அல்லது வற்றிப்போன மனிதர்களிடையில் வன்முறையே எஞ்சும். வன்முறையின் முடிவு முன்னேற்றமன்று. அன்பு அடம்பிடிக்கும் வாழ்வில் முன்னேற்றம் இடம் பிடிக்கும். சிகரத்திற்குச் செல்ல தடம் அமைக்கும். ஆணவம் ஆதிக்கம் செலுத்தும் வாழ்வில் குழப்பமும், வெறுப்பும், வன்முறையும், அழிவுமே மிஞ்சும்.

மனிதநேயத்தை வளர்ப்பது எப்படி?

மனிதநேயத்தை வளர்க்கத் தேவையில்லை. பிறக்கிறமனிதன் நேயமுள்ள அன்புள்ள மனிதனாகத்தான் பிறக்கிறான். அன்பாக இருப்பதே மனிதனின் இயல்பான தன்மை. வெளியிலிருந்து யாரும் கொட்டி நிரப்பத் தேவையில்லை. அன்பு என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயற்கையாகவே இருக்கிறது.

“எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே”

என்று கவிஞர் பாடினார். ஆகவே அன்பை வளர்க்கத் தேவையில்லை. அதை வளர அனுமதித்தால் போதும். அது பொங்கி வழியும்.

இயற்கையிலேயே உங்களுக்குச் சொந்தமாக அமைந்திருக்கும் ஓர் உணர்வு அன்பு மட்டுமே. பரிவு, இரக்கம், கருணை, நட்பு என்று பலவகையான குணங்களின் ஒட்டு மொத்தமே அன்பு.

குழந்தைகள் இரக்கத்தின் விதைகள். விதைக்குள் முளைப்பு இருப்பதுபோல மனிதனுக்குள் நேயம் நிரம்ப இருக்கிறது. குழந்தைகளும் அன்புக்காக ஏங்குகிறார்கள். மாறிவரும் பொருள் மைய வாழ்க்கையில் கணவன் மனைவி இருவரும் பொருள் ஈட்டுவதில் பெரும்பகுதி நேரத்தைச் செலவிடுகிறவர்கள், குழந்தைகளிடம் அன்பைப் பொழியக்கூட நேரமில்லை, அல்லது அது நிகழவில்லை.

பிள்ளைகளைப் பேணும் முறை

ஒரு மனிதன் அன்பான நிலையில் பேசுவதெல்லாம், சிந்திப்பதெல்லாம் நேர்மறையாகவே இருக்கின்றன. ஆனால் அன்பற்றுப் போன மனிதனின் பேச்சில், எண்ணத்தில், செயலில் எதிர்மறையே ஏகோபித்து இருக்கிறது. நமது பிள்ளைகளிடம் கூட பெற்றோர் பெரும்பாலும் எதிர்மறைச் சொற்களைத்தான் பேசுகிறார்கள். இது நன்று அன்று என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். எப்போதும் குழந்தைகளிடம் செல்லாதே, பேசாதே, ஓடாதே, சிரிக்காதே என்று எதிர்மறையாகப் பேசுவதற்கு பதில் இதைச் செய்க. இப்படிச் செய்க, இது நல்லது, இது சிறந்தது என்று நேர்மையாக இனிமையாகச் சொல்லி வழிகாட்ட வேண்டும்.

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்

என்பார் வள்ளுவர்.

இதைச் செய்யாதே என்று தடை போடும் போது இளமையின் வேகம் அதை மீறிப்பார்க்க விரும்புகிறது. சில நேரங்களில் வெறும் விளையாட்டுத் தனங்களிலும், சின்னத்திரை, வண்ணத் திரை, பொழுது போக்குகளிலுமே ஆழ்ந்து அமிழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளைக் கண்டு பல பெற்றோர்கள் ஆவேசமாகத் திட்டுகிறார்கள், கடுமையாகவும் தங்கள் குழந்தைகளிடம் நடந்து கொள்கிறார்கள்.

இது ஆபத்தானது, அத்தகைய குழந்தைகளின் ஆர்வமும் ஆற்றலும் அறிந்து மனமாற்றம் செய்யத்தவறினால், அவர்களின் ஆற்றலுக்கு கரையமைத்து நெறிப்படுத்தத் தவறினால் பெற்றோருக்கு விரோதிகளாகி சமூகத்துக்கு விரோதமான மனிதர்களாக, வன்முறையாளர்களாக, தீவிரவாதிகளாக, நேர்வழி தவறியவர்களாக மாறிப்போகிறார்கள்.

பெற்றோர்களே உங்கள் பிள்ளைச் செல்வங்களிடம் அன்பைப் பொழியவில்லையானால் இன்று அமெரிக்கா போன்ற நாடுகளில் இருப்பது போன்று பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான பிணைப்பு அழிந்து, உறவுகள் அழிந்து, பெற்றோர்கள் முதுமையில் அன்புக்கும், ஆதரவுக்கும் ஏங்குவதான நிலை வளர்ந்துவிடும். பெற்றோர்களைப் பேணிப் புறந்திடாத பிள்ளைகள் உள்ள நாடும் வாழ்வும் முன்னேற்றமாக இருக்க முடியாது. வெறும் பொருள் வளர்ச்சி மட்டுமே முன்னேற்றம் ஆகிவிட்டது. அகம் சீரழிந்தால் அனைத்தும் சீரழியும். அகம் என்றால் உள்ளம், அகமென்றால் இல்லம்.

- டாக்டர். பெரு. மதியழகன்

http://www.thannambikkai.net/2009/11/01/3098/



லாபமே குறிக்கோள் என்பதில் கம்பெனிகள் தெளிவாக இருப்பது தான் காரணம்.

மற்ற அனைத்துத் தொழில்களையும் விட மருந்து தயாரிப்புத் தொழில் அதிக லாபம் தரக்கூடியது. அதாவது ஆயுத உற்பத்தித் தொழிலுக்கும் சிகரெட் தயாரிப்புத் தொழிலுக்கும் அடுத்து 3வது இடத்தில் இந்த மருந்து தயாரிப்புத் தொழில் இருக்கிறது. பொருளாதார மந்தம் இருக்கின்ற இந்தக் காலத்தில் கூட பல புதிய கம்பெனிகள் உருவாகிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கின்றன. அவசியமானது என்ற பட்டியலில் வரும் மருந்துகளில் லாபம் குறைவு. அவசியமற்ற மருந்துகளில் நோயாளிகளிடமிருந்து எவ்வளவு பறிக்க முடியுமோ அதைப் பொறுத்தது லாபம். ஆனால், இதற்கு மருத்துவர்கள் அந்த மருந்தை எழுதிக் கொடுக்க வேண்டும்.

அரசாங்கம் ஏன் இந்த மருந்துகளை அனுமதிக்கின்றது?

அரசுக்கு இரு நிர்ப்பந்தங்கள் இருக்கின்றன. யாருக்கு செல்வாக்கு அதிகம் இருக்கிறதோ அவர்களுக்குச் சார்பாக அரசின் முடிவுகள் இருக்கின்றன. மருந்து உற்பத்தித் தொழிலில் ஏராளமான பன்னாட்டுக் கம்பெனிகள் ஈடுபட்டுள்ளன. இவற்றின் பணபலம் பயங்கரமானது. இவற்றில் பல கம்பெனிகளின் ஆண்டு வரவுசெலவு நமது தேசத்தின் பட்ஜெட் போல் பெரியது.

அதோடு மருந்து உற்பத்தித் தொழில் மிகப்பெரிய இந்தியக் கம்பெனிகளும் இருக்கின்றன. இந்தக் கம்பெனிகள் தங்களது வருமானத்தின் ஒரு பகுதியையும் தமது செல்வாக்கையும் தங்களுக்கு ஆதரவான கொள்கையை உருவாக்குவதற்காகச் செலவிடுகின்றன. ஒரு புறத்தில் கம்பெனிகளின் இந்த அசுரபலம் என்றால் மறுபக்கத்தில் மக்கள் இருக்கின்றனர். மக்களின் குரல், குறிப்பாக, மருந்துக் கொள்கை போன்ற பிரச்சனைகளில் பலவீனமாக இருக்கிறது. பெரும்பாலான மக்களுக்கு குறிப்பாக ஏழை மக்களுக்கு இந்த மருந்துக் கொள்கை பற்றிய விபரம் தெரிவதில்லை.

நடுத்தர வர்க்கம் குறிப்பாக, அரசியல் அடிப்படையில் அணி திரண்டு இருப்பவர்களுக்கு இது தெரியும். ஆனால், மருத்துவத் தொழில்மீது இருக்கக்கூடிய மரியாதை மற்றும் நவீன விஞ்ஞானத்தோடு தொடர்புடைய ஒன்றை எதிர்ப்பதா என்ற எண்ணம் ஆகிய காரணங்களால் இவர்கள் ஏதும் செய்யாமல் இருக்கின்றனர்.

சில எதிர்ப்புக் குரல்கள் எழுந்தாலும் அவை சக்தியற்ற, தாக்கத்தை ஏற்படுத்தாத, அமைப்பு ரீதியாக வலு இல்லாததாகவும் உள்ளன. சுகாதாரத் துறையில் செயலாற்றும் சில அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அறிவியல் இயக்கங்களும் இப்பிரச்னையைக் கையில் எடுக்கின்றன. இவர்களின் உறுதியான அறிவியல் ரீதியான நிலைப்பாடும் பல நேரங்களில் உச்சநீதிமன்றத்தின் தலையீடும்தான் பல்வேறு சூழலில் ஆபத்தான மருந்துகளைப் புழக்கத்திலிருந்து தடை செய்தது. உண்மையில் உச்சநீதிமன்றத்தின் மூலம்தான் ஆபத்தான மருந்துகளை இக்குழுக்களால் தடை செய்ய முடிந்துள்ளது.

மருந்துத் தொழில்துறையை ஊக்குவிப்பது ரசாயன மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் முக்கியப் பொறுப்பு. ஆனால் மருந்துத் தொழில்துறை தொடர்பான பிரச்னையையும் இந்த அமைச்சகம்தான் பார்த்துக் கொள்கிறது. சுகாதார அமைச்சகத்தின் பங்கு இதில் மிக மிகக் குறைவாக உள்ளது. மருந்து உற்பத்தித் தொழில் துறையை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்துவதிலும் வளர்ப்பதிலும் தான் இத்துறை குறியாக இருக்கிறது. அதையே இலக்காகவும் கொண்டுள்ளனர். எனவே, அவசியமான மருந்துகள் எவை, அவசியமற்ற மருந்துகள் எவை, தேவையானவை எவை என்பதை இத்துறை வேறுபடுத்திப் பார்ப்பதே கிடையாது.

இந்த மருந்துகளை நோயாளிகளுக்கு டாக்டர்கள் ஏன் எழுதிக் கொடுக்கிறார்கள்?

இதைப் புரிந்து கொள்வதற்கு நாம் ஓர் அடிப்படை உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். மருந்து என்பது ஒரு பண்டம் (ஒரு பொருள்) சந்தையிலிருக்கிற இதர பண்டங்களிலிருந்து அது மாறுபட்டது. நாம் ஒரு பேனாவோ, சட்டையோ அல்லது தொலைக்காட்சிப் பெட்டியோ வாங்குவதற்குச் சென்றால், எதை வாங்க வேண்டும் என்பதை, மற்ற கம்பெனி பொருள்களின் தரம் மற்றும் விலையோடு ஒப்பிட்டுப் பார்த்து சிறந்ததை வாங்க முடியும். ஆனால், நீங்கள் மருந்து வாங்கச் சென்றால், எந்த மருந்தை வாங்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. எதை வாங்க வேண்டும் என்பதை டாக்டர்தான் உங்களுக்காகத் தீர்மானிப்பார். அந்த மருந்தை எதற்குக் கொடுக்கிறார், எந்த மருந்து சிறந்தது, அதைச் சாப்பிட்டால் என்ன பக்க விளைவுகள் ஏற்படும், எழுதிக் கொடுத்த மருந்துக்கு மாற்றாக விலை குறைந்த மருந்து எதுவும் இருக்கிறதா என்பதைக் கூட உங்களால் தீர்மானிக்க முடியாது; தெரிந்து கொள்ளவும் இயலாது. இந்த முடிவுகள் அனைத்தும் எடுப்பதற்கு நீங்கள் டாக்டர்கள் மீது நம்பிக்கை வைத்தாக வேண்டும்.

மருந்துக் கம்பெனிகள் தங்களது மருந்துகளை விற்பனை செய்வதற்கு எடுக்கின்ற பிரதான முயற்சி என்னவென்றால், தனது கம்பெனியின் மருந்தை டாக்டர்களை எழுத வைப்பதுதான், மருத்துவத் தொழிலின் கட்டமைப்பை இந்த வேலையைச் செய்வதற்கு அக்கம்பெனிகள் திறமையாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. இதைச் செயல்படுத்துவதற்குக் கையாளும் சில உத்திகளைக் கீழே காண்போம்.

* ஒவ்வொரு மருந்துக் கம்பெனியும், தமது மருந்து விற்பனைப் பிரதிநிதி மூலம் தொடர்ச்சியாக டாக்டரைச் சந்திக்கின்றன. குறைந்தபட்சம் மாதம் ஒருமுறை இவர்கள் டாக்டரைச் சந்தித்து கம்பெனியின் பெயர்களுடன் மருந்துகளை அறிமுகப்படுத்தி, இலவசமாக சில மருந்துகளையும், பரிசுப்பொருட்களையும் கொடுத்துச் செல்லுவார்கள்.

* இதற்கு அடுத்தபடியாக, இந்தக் கம்பெனிகள் டாக்டர்களின் கூட்டங்களை நடத்தி மருந்துகளைப் பிரபலப்படுத்தி அவற்றின் விற்பனையைப் பெருக்க நடவடிக்கை எடுக்கின்றன. கம்பெனிகளின் மருந்துகளை எழுதுவதற்காக டாக்டர்களுக்குப் பரிசுகளையும், சிறப்புச் சலுகைகளையும் அவை கொடுக்கின்றன.

* மருந்து எழுதுகிற சீட்டுகள், மருத்துவமனைகளில் ஒட்டுகிற சுவரொட்டிகள் இதர பரிசுப்பொருட்களில் தங்கள் கம்பெனியின் பெயர்களை அச்சடித்து டாக்டர்களிடம் கொடுப்பதன் மூலம் தங்கள் கம்பெனியின் பெயர்களைத் தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. இவ்வகை பிரசாரம் அக்கம்பெனியின் பெயரை டாக்டர்களின் மனதில் ஆழப்பதிய வைக்கிறது. கடைசியில் அந்த மருந்தின் வர்த்தகப் பெயரை மட்டுமே டாக்டர்கள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்.

* அக்கம்பெனிகள் அளிக்கும் தகவல்கள் மூலம் தான் மருந்துகளைப் பற்றி டாக்டர்கள் தெரிந்து கொள்கின்றனர். இவர்கள் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் மருந்துகளைப் பற்றிப் படித்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், இது பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது. நவீன கால மருந்துகளை டாக்டர்கள் தெரிந்து கொள்வதற்கான ஏற்பாடுகள், நவீன முன்னேற்றத்துக்கு ஏற்ப மருத்துவ அறிவை வளர்த்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் டாக்டர்களின் தற்போதைய அறிவை பரீட்சித்துப் பார்ப்பதற்கான ஏற்பாடு இல்லை. டாக்டர்கள் சிறப்பு முயற்சி எடுத்து, கூட்டங்களில் கலந்து கொண்டோ, புத்தகங்களை வாங்கிப் படித்தோ தெரிந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அப்படி முயற்சி மேற்கொள்ளாத டாக்டர்கள், மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் மூலம் தான் புதிய மருந்துகளை பற்றித் தெரிந்து கொள்கின்றனர். வளர்ந்த நாடுகளில் டாக்டர்களுக்கென கட்டாய தொடர்கல்விமுறை உள்ளது. ஆனால் இந்தியாவில் அவ்வகை ஏற்பாடுகள் இல்லை.

* என்ன நோய்க்கு என்ன மருந்தைக் கொடுக்கலாம் என்று விவரங்கள், அக்கம்பெனிகள் அவற்றைப் பயன்படுத்தும் முறைகள், அவற்றால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படுமா என்ற விவரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகிய தகவல்கள் அடங்கிய புத்தகத்தை மாதம் தோறும் அல்லது சில மாதங்களுக்கு ஒரு முறை வளர்ந்த நாடுகளின் அரசுகள் வெளியிடுகின்றன. இந்தப் புத்தகங்களில் மருந்துக் கம்பெனிகளின் விளம்பரங்களை அனுமதிப்பது இல்லை. இந்த முறைக்கு தேசிய மருந்து விதிமுறைகள் என்று பெயர். இந்தியாவில் மருந்துக் கம்பெனிகளே தயாரித்து வெளியிடுகின்ற புத்தகங்கள் இங்கு கிடைக்கின்றன. தாம் தயாரிக்கும் மருந்துகளின் விற்பனையைப் பெருக்குவதை நோக்கமாகக் கொண்ட விளம்பரங்களும் அத்தகைய புத்தகங்களை மருந்துக் கம்பெனிகள் வெளியிடுகின்றன. மருந்துகளைப் பற்றிய வர்த்தக நோக்கம் இல்லாத நம்பகமான உடனடி தகவல்கள் இந்தியாவில் டாக்கடர்களுக்குக் கிடைப்பது இல்லை.

மற்றொரு முக்கியக் காரணம் வியாதி. அதைக் குணப்படுத்துவது சுகாதாரம் ஆகியவை தொடர்பான தற்போதைய பழக்கவழக்கங்கள் ஆகும். டாக்டரைப் பார்த்து ஏன் இந்த மருந்தை எழுதிக் கொடுத்தீர்கள்? என்று கேட்டால் நோயாளிகள் கேட்டார்கள் அதனால் எழுதிக் கொடுத்தோம் என்கிறார்கள். தொழிலை நடத்துவதில் டாக்டர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்கு இடையிலான போட்டி மேலும் கடுமையாகிறது. தங்களிடம் வருகிற நோயாளிகளுக்கு உடனடி நிவாரணம் அளிக்கவில்லை என்றால், வேறு டாக்டரிடம் அவர்கள் சென்று விடுவார்கள் என பயப்படுகின்றனர்; அதனால் ஊசிகளைப் போட்டு இந்த மருந்துகளை எழுதுகின்றனர். ஊசிகள், மாத்திரைகளின் சக்தியைப் பார்த்து பரவசமடைந்த டாக்டர்களே இந்தப் பழக்கவழக்கத்தையும் தொடங்கி வைத்திருக்கலாம்.

ஆனால், எப்படியோ டாக்டர்கள் தொடங்கி விட்டு விட்ட பழக்கத்திலிருந்து மீளமுடியாமல் ஊசி போடுதல், மாத்திரை வழங்கல் என்ற வட்டத்துக்குள் அவர்கள் சிக்கிக் கொண்டு விட்டனர். நோயாளிகளிடம் நோயின் தன்மைகள் அதற்கு எவ்வகையான சிகிச்சை தேவை என்பதை விளக்கிக் கூறினால் நோயாளிகள் அச்சிகிச்சை முறைகளைச் செய்து பார்க்க ஒப்புக் கொள்வார்கள். இதனைச் செய்தால் நோயாளிகள் மருந்துகளை நாட வேண்டிய அவசியம் குறையும். பெரும்பாலும் டாக்டர் நோயாளிகளிடம் இது சிறு கோளாறு தான்; தானே சரியாகிவிடும் என்றோ, அல்லது இது என்ன நோய் என எனக்குத் தெரியவில்லை என்றோ அல்லது இது என்ன நோய் என்று தெரிகிறது; ஆனால் இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றோதான் கூற வேண்டியிருக்கும்.

ஆனால் டாக்டர்கள் என்றால் அவர் ஏதோ மந்திரவாதி. மாயம் செய்யக்கூடியவர் என்ற கருத்தே நிலவுகிறது. எனவே நோயாளி வந்தவுடன் டாக்டர் அவரது கையைப் பிடித்து நாடி பார்க்க வேண்டும். நாக்கை நீட்டச் சொல்லி, கண்களை இழுத்துப் பார்க்க வேண்டும். ஸ்டெத்தாஸ்கோப்பை நெஞ்சிலும் முதுகிலும் வைத்துப் பார்ப்பதுடன் மேலும் சோதனைகளை உடனே நடத்த வேண்டுமென்ற கருத்தும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது. அதோடு அந்த நோய் என்ன என்பதை அவர் எப்போதும் கண்டுபிடித்து விடுவார். அதை குணமாக்கிட மருந்துகளையும் அவர் அறிந்திருப்பார் என்கிற அளவுக்கு டாக்டர்களைப் பற்றி மாயையான கருத்து ஏற்பட்டு விட்டது. அறிவியலையே மந்திரவாதம் போலச் சித்திரிக்கத் தொடங்கி விட்டனர். டாக்டருக்கு அது அற்புத சுகமளிக்கும் சக்தியைக் கொடுத்திருப்பதாக நினைக்கத் தொடங்கி விட்டனர்.

ஆனால் உண்மை என்னவெனில், விஞ்ஞானம் இன்னும் பலவற்றிற்கு விடை கண்டுபிடிக்கவில்லை. வினோதம் என்னவென்றால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்குப் பதிலாக டாக்டர்கள் தங்களது மாயத் தோற்றத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டியது தமது கடமை என நம்புகின்றனர். டானிக்குகள் அவசியமற்ற மருந்துகளை எழுதிக் கொடுப்பதை நியாயம் என்று கருதினர். பெரும்பாலான நேரங்களில், நோயாளிக்கு வந்துள்ள நோய்க்குக் காரணம் என்ன என்று தெரியாவிட்டாலும் கூட அல்லது, தானாகவே அந்தக் கோளாறு சரியாகிவிடும் என அவர்கள் கருதினாலும் கூட அல்லது முக்கியமாக, அது என்ன நோய் என்பதை தெரிந்திருப்பதோடு, அதற்கு மருந்து ஏதும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும் அறிந்திருந்தாலும் கூட, தேவை இல்லாமல் பல மருந்துகளை நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்கின்றனர். அது தவறானது என்ற உணர்வே டாக்டர்களுக்கு பெரும்பாலும் இல்லாமல் போய்விட்டது.

உதாரணத்திற்கு, மஞ்சள் காமாலையை எடுத்துக் கொள்வோம். மஞ்சள் காமாலை வந்து விட்டால் போதும். நோயாளி பெரும் கவலையில் மூழ்கிவிடுவார். அதில் நியாயம் இருக்கிறது. அதை உடனே டாக்டரிடம் காட்ட வேண்டும். கல்லீரல் சுரக்கும் பித்த நீர் இரைப்பைக்குக் கொண்டு செல்லும் வழியில் ஏற்படும் அடைப்பினால் சில நேரங்களில் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுவதுண்டு. டாக்டர் இதை அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்துவார். இருந்தாலும் மஞ்சள் காமாலை அதிகமாக ஏற்படுவது கிருமிகளால்தான். இதைக் குணப்படுத்த, பயனுள்ள ஒரு சிகிச்சை முறையை இன்னும் விஞ்ஞானம் கண்டுபிடிக்கவில்லை. இருந்தாலும் ஓய்வெடுப்பதன் மூலமும், சிலவகை மருந்துகளைத் தவிர்ப்பதன் மூலமும் சாதாரண வகைப்பட்ட மஞ்சள் காமாலை தானாகவே குணமாகிவிட வாய்ப்புண்டு. சில நேரத்தில் நோய் கடுமையாகி விடும். அதையும் தடுக்க முடியாது. அது மருத்துவ விஞ்ஞானத்தினால் கணிக்க முடியாததும் கூட.

மஞ்சள் காமாலையில் இரு வகைகள் உள்ளன என்பதை தற்போது மருத்துவ விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ளது ஒரு சாதனை ஆகும். அவற்றில் கல்லீரலில் இருந்து பித்த நீர் செல்லும் பாதையில் தடை ஏற்படுவதால் வரக்கூடிய மஞ்சள் காமாலை நோயால் தாக்கப்பட்டவர்களைக் காப்பாற்றி விட முடியும். உண்மை இப்படியிருக்க, தானாகவே குணமாகக்கூடிய இன்னொரு வகை மஞ்சள் காமாலை நோயால் தாக்கப்பட்ட நோயாளிகளுக்கும் மருந்துகளைக் கொடுப்பதன் அவசியம் என்ன? அவர்களுக்கு வந்துள்ள நோய் என்ன? இந்த நோய் தானாகவே குணமாகிவிடும். அல்லது குணமாக விடுங்கள் என்று ஏன் நோயாளிகளிடம் சொல்லக்கூடாது? இப்படிச் சொன்னால் நோயாளிக்கு நிறைய பணம் மிச்சமாகாதா? எனினும், மஞ்சள் காமாலைக்கு மருந்து கொடுக்காமல் இருப்பதை நோயாளிகளும் சரி, டாக்டர்களும் சரி அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

இதை நோயாளிகளிடம் விளக்கினால், நோயாளிகள் தங்களை நம்பமாட்டார்கள் என டாக்டர்கள் கருதுகின்றனர். அதோடு நோயாளியிடம் விளக்கிக் கூற டாக்டர்களுக்கு நேரமும் இருப்பதில்லை. அந்தச் சிந்தனையும் வருவதில்லை. பரவலாகக் காணப்படும் இச்சாதாரண நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்தை டாக்டர் வைத்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார் நோயாளி. ஆயுர்வேத மருத்துவ முறையிலும் நாட்டு மருந்துகள் மூலமும் மஞ்சள் காமாலைக்குச் சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறும்போது, நவீன அறிவியல் இந்நோய்க்கு மருந்தை நிச்சயம் கண்டுபிடித்திருக்கும் என நோயாளி நம்புகிறார்.

இதற்கு டாக்டர்கள் மருந்து கொடுக்கவில்லையென்றால் டாக்டரிடம் தான் ஏதோ கோளாறு என்றோ, அல்லது ஆங்கில மருத்துவ முறையில் தான் ஏதோ கோளாறு என்றோ நோயாளி நினைக்கத் தொடங்கி விடுகிறார். நோயாளிகளிடம் காணப்படும் இந்தப் பழக்கத்தைத் தவறாகப் பயன்படுத்தியும் மேலும் ஊக்குவிப்பதன் மூலமும் மருந்துக் கம்பெனிகள் தமது வியாபாரத்தைப் பெருமளவு பெருக்கி அதன் மூலம் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன. தானாகவே குணமாகக் கூடிய மஞ்சள் காமாலைக்குக் கூட மருந்தை உற்பத்தி செய்து கோடிக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதிக்கின்றனர்.

ஏன் மக்கள் இந்த மருந்துகளை உட்கொள்கின்றனர்?

நாம் ஏற்கெனவே 2 முக்கியக் காரணங்களை விவாதித்துள்ளோம். முதலாவதாக மருந்து என்பது ஒரு பண்டம். மற்ற பண்டங்களிலிருந்து மாறுபட்டது. இங்கு எந்த வகை மருந்துகளை வாங்க வேண்டும் என்பதை நோயாளியாகிய நுகர்வோர் தீர்மானிப்பது இல்லை; டாக்டர் தான் தீர்மானிக்கிறார். தேவையற்ற இத்தனை மருந்துகளையெல்லாம் சாப்பிட வேண்டும் என்ற விருப்பத்தை ஒரு நோயாளிக்கு டாக்டர் ஏற்படுத்த முடியாது என்பது தெளிவு. அப்படியானால், நோயாளிக்கு இந்த விருப்பம் எப்படி உருவாக்கப்படுகிறது.

பலவித உடல்நலக் கோளாறுகள் நோயாளிக்கு ஏற்படக்கூடும் என்பது முதல் விஷயம். அந்நோய்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதும் அதற்கு மருந்துகள் அவசியம் தேவை என்பதையும் மறுக்க முடியாது. பிரச்னை என்னவென்றால் தமக்குத் தேவையான மருந்துகள் எவை, தேவையற்ற மருந்துகள் எவை என்பதை வேறுபடுத்திப் பார்க்க நோயாளிக்குத் தெரியாது. இதற்குக் காரணம் நோயாளிக்கு மருந்தைப் பற்றி சரியான தகவல்கள் கிடைக்காததுதான்.

டாக்டர்களோ, என்ன நோய் வந்திருக்கிறது என்பதைப் பற்றியும் கொடுக்கப்படுகிற மருந்துகளைப் பற்றியும் நோயாளிக்கு விளக்குவதில்லை. நோயாளிகளும் இதைப்பற்றி டாக்டர்களிடம் கேட்பதில்லை. மருந்துகளின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுகின்றனர். ஒரு மருந்தை எதற்குப் பயன்படுத்துவது என்பது பற்றியும் அதன் பக்கவிளைவுகள் என்ன என்பது பற்றியும் எந்தத் தகவலும் பெரும்பாலும் மருந்துகளுடன் கொடுக்கப்படுவதில்லை. ஒருவேளை, மேற்படி விவரங்கள் கொடுக்கப்பட்டு இருந்தாலும் அவை ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. மருந்துகளின் பெயர்களை தமிழிலோ, அந்தந்த மாநில மொழிகளிலோ எழுதப்படுவதில்லை. மருந்துகளின் பெயர்களை பல மொழிகளில் அச்சிடுவது கம்பெனிக்கு கஷ்டமான காரியம் என நீங்கள் நினைத்து விடக்ககூடாது.

நீங்கள் ஒரு குலோப் ஜாமூன் மாவு பாக்கெட் வாங்கிப் பாருங்கள். அந்தப் பாக்கெட்டில் கூட அதைப் பயன்படுத்தும் முறைகள் பற்றி 15 மொழிகளில் எழுதப்பட்டிருக்கும். பிரான்ஸ் நாட்டு மக்கள் தொகையைவிட தமிழகத்தில் மக்கள் தொகை அதிகமாகும்.

ஆனால், தமிழகத்தில் விற்பனையாகும் மருந்துகளில் அவற்றின் பெயர்கள் தமிழில் எழுதப்படுவதில்லை. எனவே, தமிழில் மருந்துப் பெயர்களை அச்சிட முடியாது என்பதெல்லாம் உண்மையல்ல. மருத்துவரின் சீட்டுகளைத் தமிழில்தான் எழுத வேண்டும். மருந்துப் பெயர்களையும் தமிழில் தான் எழுத வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் டாக்டர்கள் சங்கம் இம்முயற்சியை எதிர்த்தது. நோயாளிகள் நலனைக் கருத்தில் கொண்டு, மருந்துகளின் பெயர்கள் அவர்களுக்குத் தெரியக்கூடாது என டாக்டர்கள் வாதிட்டனர். இது ஏற்றுக் கொள்ளக்கூடியதா?

மருந்துகளைப் பற்றிப் போதிய அறிவு இல்லாதிருப்பது மற்றொரு முக்கியக் காரணம். அவை பெரும்பாலும் வர்த்தகப் பெயர்களில் விற்கப்படுவதாகும். ஒவ்வொரு மருந்துக்கும் 2 பெயர்கள் உண்டு. ஒன்று மருத்துவ விஞ்ஞானத்தால் வழங்கப்பட்ட மருந்தின் வேதியியல் மூலத் தொகுதிப் பெயர். (இது வேதிப் பொருளின் பெயர்) மற்றொன்று வர்த்தகப் பெயர். இது மருந்தைத் தயாரிக்கும் கம்பெனி சூட்டிக் கொண்ட பெயர். வேதிப் பொருளால் தயாரிக்கப்படும் மருந்தை ஒவ்வொரு கம்பெனியும் வெவ்வேறு வர்த்தகப் பெயர்களில் விற்கின்றன. இப்படி ஒரே வகை மருந்துக்கு நூற்றுக்கணக்கான வர்த்தகப் பெயர்கள் உள்ளன.

பிளஸ்பிரின், கால்பால், மெலிடன்ஸ், இஃபிமால், குரோசின் இவை அனைத்தும் பாராசிட்டமால் என்ற ஒரே மருந்துதான். பாராசிட்டமால் என்பது அதில் உள்ள வேதிப்பொருளின் மருத்துவ விஞ்ஞானப் பெயர். மற்றவை அனைத்தும் வர்த்தகப் பெயர்கள். சட்டப்படி மூல மருத்துவப் பெயர்களை ஒவ்வொரு மருந்திலும் கட்டாயமாக அச்சிட வேண்டும் இதையும் கம்பெனிகள் செய்கின்றன. ஆனால் மிகமிகச் சிறிய எழுத்தில் அவை அச்சிடப்பட்டு இருக்கும். டாக்டர்கள் வர்த்தகப் பெயரை மட்டும் தான் எழுதிக் கொடுக்கின்றனர். எனவே, டாக்டர் கொடுப்பது என்ன மருந்து என்பதை அறிந்து கொள்ளமுடிவதில்லை; ஏற்கெனவே நாம் சாப்பிட்ட மருந்துதானா இது என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதோடு, இந்த மருந்தைச் சாப்பிட்டால் நமக்கு ஒத்துக் கொள்ளுமா அல்லது ஒவ்வாமை ஏற்படுமா என்பன போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள முடிவதில்லை.

ஒரு டாக்டர் எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டில் என்ன மருந்தை அவர் எழுதியிருக்கிறார் என்பதை மற்றொரு டாக்டரால் கூட படித்துப் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஏனென்றால் இருநூறு, முந்நூறு மருந்துப் (வர்த்தப்பெயர்) பெயர்களுக்கு மேல் யாராலும் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாது. ஆனால் பல்வேறு மருந்துகள் 40,000க்கும் மேற்பட்ட வர்த்தகப் பெயர்களில் சந்தையில் விற்கப்படுகின்றன.

ஒரு மருந்தின் வேதியியல் மூலத் தொகுதிப் பெயரை அதாவது மருத்துவ அறிவியல் பெயரை மட்டுமே மருந்து அட்டை மீது எழுத வேண்டும் என சட்டம் இயற்றினால் அவற்றின் எண்ணிக்கை சுமார் 300 தான் வரும். எனவே, அம்மருந்துகளின் பெயர்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதும் எளிது. அதோடு ஒவ்வொரு நோயாளியும் தான் உட்கொள்ளும் மருந்து என்ன என்பதையும் நன்றாகத் தெரிந்து கொள்ள முடியும்.

மருத்துவ அறிவியல் பெயர்களை மட்டும் அச்சிட்டால் போதும், வர்த்தகப் பெயர்கள் கூடாது என்பதை எதிர்க்கும் கம்பெனிகளும் டாக்டர்களும் அதற்கு ஒரு காரணத்தைக் கூறுகின்றனர். மருத்துவ அறிவியல் பெயரை (வேதிப் பொருளின்) மட்டும் வைத்தால், தரக்குறைவான மருந்துகளை உற்பத்தி செய்யும் சிறிய கம்பெனிகளும், ஓரளவு தரமான மருந்துகளைத் தயாரிக்கும் பெரிய நிறுவனங்களைப் போல தமது மட்டமான மருந்துகளை விற்றுவிடமுடியும் என்று வாதிடுகின்றனர்.

இது சொத்தையான வாதமாகும். மருந்துகளின் அறிவியல் (வேதிப் பொருளின்) பெயருக்குக் கீழே அவற்றைத் தயாரிக்கும் கம்பெனிகளின் பெயர் கட்டாயமாக இடம் பெற்றாக வேண்டும். ஒரு மருந்தின் எந்தக் கம்பெனியின் தயாரிப்பு வேண்டும் என்று டாக்டர்களும் நோயாளிகளும் விரும்புகிறார்களோ, அந்தக் கம்பெனியின் பெயரைப் பார்த்து மருந்துகளை வாங்க முடியும். பெரிய கம்பெனியோ, சிறிய கம்பெனியோ எல்லாவற்றின் தயாரிப்பிலும்தான் தரக் குறைவான மருந்து பிரச்னை இருக்கிறது. மருந்துப் பரிசோதனை முறையையும் தரக்கட்டுப்பாட்டை பலப்படுத்துவதும் தான் தரக்குறைவான மருந்துப் பிரச்னைக்குத் தீர்வாகும்.

நிலைமை இந்த அளவுக்கு மோசமாக இருப்பதற்கு உடல் நலம் பற்றிய கருத்தும் பழக்க வழக்கங்களும் கூட மற்றொரு முக்கியக் காரணமாகும். நல்ல உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், அடிப்படை சுகாதார வசதிகள், தூய்மையான சுற்றுச்சூழல், தகுதிக்கேற்ற வேலை, போதுமான வருமானம் மற்றும் பிற காரணங்களைப் பொறுத்ததே உடல் நலமாகும். சுகாதாரத் துறையின் மிக முக்கிய கடமை, நோய்கள் வராமல் தடுப்பதாகும். தாய் சேய் நலத்தைக் காப்பது தான் அடுத்த முக்கியப் பணி; ஏனென்றால் எளிதில் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகக் கூடியவர்கள் அவர்கள். இதையும் மீறி நோய்கள் மக்களைத் தாக்கும் போது தான் டாக்டருக்கும் மருந்துகளுக்கும் அங்கு வேலை. அப்போதும் கூட ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்த மருந்துகளிலும் பெரும்பாலானவை வீரியம் குறைவான சாதாரண மருந்துகள் தான். அவற்றை துணை மருத்துவ ஊழியர்கள் (சுகாதார ஊழியர்கள்), மருந்தாளர்கள், பயிற்சி பெற்ற ஊழியர்களே கூட கொடுத்து விட முடியும். அவர்களால் சிகிச்சை அளிக்க முடியாத நோயாக இருந்தால் மட்டுமே பெரிய மருத்துவமனைகளுக்கு அவர்களை அனுப்ப வேண்டும்.

மருந்து மாத்திரைகளைக் கொடுப்பதன் மூலமும், நோய்க்குச் சிகிச்சை அளிப்பதன் மூலமும் நமது ஆரோக்கியமான வாழ்க்கையை டாக்டரால் தான் உத்தரவாதப்படுத்த முடியும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். நமது சமூக அமைப்பும், அதிலிருந்து கிடைத்த அறிவும் தான் இதற்குக் காரணம். ஒரு நோய்க்கு உண்மையில் மருந்து தேவையா, இல்லையா என்பதைப் பற்றிப் பொருட்படுத்தாமல் எல்லாவித நோய்களுக்கும் மருந்து எழுதிக் கொடுக்குமாறு வற்புறுத்துவதற்குக் காரணமும் இதுதான். மருந்து உற்பத்தித் தொழிலின் வியாபாரத்தைப் பெருக்க இந்த மனோபாவத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

- தி. சுந்தரராமன்




http://nukarvor-nalan.blogspot.com/search/label/மருத்துவம்



கிரெடிட் கார்டு நுகர்வோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய அம்சங்கள் பில் கணக்கிடும் தேதியும், அந்த பில் தொகையை கட்ட வேண்டிய கடைசி தேதியும் ஆகும்.

இந்த தேதிகளை முதல் பில்லில் கண்டு கொள்ள முடியும். பில் தயாரிக்கப்படும் தேதி பில்லிங் தேதியாகும். அந்த பில்லில் கூறப்பட்டுள்ள தொகையை கட்டுவதற்கு அனுமதிக்கப்படும் கடைசி நாள் பேமென்ட் தேதியாகும்.

இந்த இருநாட்களுக்கும் இடையில் சுமார் 22 நாட்கள் இருக்கும். இந்த நாள் வட்டியில்லா கடன் நாட்களாகும்.

பில் தேதிக்கு முதல் நாள் பொருள் வாங்கும் நுகர்வோருக்கு வட்டியில்லா கடன் நாட்கள் 23 நாட்களாகும். பில் தேதிக்கு அடுத்த நாள் பொருள் வாங்கும் நுகர்வோருக்கு 52 நாட்கள் வட்டியில்லா கடன் நாட்களாக இருக்கும்.

உதாரணமாக, பில் தயாரிக்கப்படும் தேதி 4 ஆகவும், பணம் செலுத்துவதற்கான கடைசித்தேதி 26 ஆகவும் இருக்கும் ஒரு நுகர்வோர்...

3ம் தேதி பொருள் வாங்கினால்
23 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்

4ம் தேதி பொருள் வாங்கினால்
22 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்

5ம் தேதி பொருள் வாங்கினால்
53 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்
...பெற முடியும்.

மற்றொரு உதாரணமாக, பில் தயாரிக்கப்படும் தேதி 28 ஆகவும், பணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி 20 ஆகவும் இருக்கும் ஒரு நுகர்வோர்...

27ம் தேதி பொருள் வாங்கினால்
23 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்

28ம் தேதி பொருள் வாங்கினால்
22 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்

29ம் தேதி பொருள் வாங்கினால்
53 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்

...பெற முடியும். இதை முழுமையாக புரிந்து கொண்டால் இந்த கிரெடிட் கார்டை லாபகரமாக பயன்படுத்துவதை கற்றுக்கொள்ளலாம்.

http://nukarvor-nalan.blogspot.com/