"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


தவணை முறையில் வெற்றி காண்போம்.

சரியான நேரத்தில் எதையும் நிறுத்தத் தெரிந்திருக்க வேண்டும். இது பற்றி ஒரு பெரிய பட்டியலே தயாரிக்கலாம்.

பல விதமான முறைகளில் – பிறப்பு முதல் இறப்பு வரை, கவலையில் இருந்து தற்கொலை வரை – சிலர் தங்கள் துன்பத்தை அதிகரித்துக் கொள்கிறார்கள். வயிறு நிறைந்தவுடன் போதும் என்று சாப்பாட்டை நிறுத்தி விட வேண்டும், இல்லையேல் வயிறு பெருத்து சீக்கிரம் இறந்து விட நேரிடும்.

இது போலவே மதுபானம், பேச்சு போன்றவற்றையும் நிறுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.

பல உதாரணங்களைச் சொல்லலாம். இவைகள் போன்ற உடல் சம்பந்தப்பட்டவற்றை பழக்கத்தினால் நிறுத்தலாம். ஏனெனில் உங்கள் அறிவார்ந்த மனதுக்கு உடல் கட்டுப்படுகிறது. ஆகவே நிறுத்து என்றவுடன் தேவையற்றவைகளை நிறுத்த முடிகிறது.

உள்மனதில் கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிகளை நிறுத்துவது சாத்தியமில்லை. உடல் சம்பந்தப்பட்ட விஷயங்களாக இருந்தால்கூட உணர்ச்சி மயமானதாக இருந்தால் அவற்றையும் உள்மனத்தால் கட்டுப்படுத்த முடியாது.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த ஆரம்பிக்கையில் பிரச்சினைகள் தோன்றுகின்றன. பிரச்சினைகள் நிறைந்த இந்த உலகில் சங்கடங்களுக்கு முக்கிய காரணம் நிறுத்தத் தவறுவது தான். உணர்ச்சிமயமான பிரச்சினையைச் சமாளிக்க எப்படி நிறுத்துவது எப்பொழுது நிறுத்துவது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எதிர்மறை உணர்ச்சியை அதிகரிக்க விடாதீர்கள். குறை கூறுவதைத் தவிர்ப்பது நல்லது. குறை சொல்வதில் பயன் இல்லை. குறை சொல்லத்தான் வேண்டும் என்றால் அதிகம் உணர்ச்சி வசப்படாமல் கூறலாம். அதில் எரிச்சல், பழிவாங்குதல், வெடுவெடுப்பு, வெறுப்பு போன்ற எதுவும் தலைகாட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மிருதுவாக, விசனம் இல்லாமல் நல்ல எண்ணத்தோடு நீங்கள் வழிகாட்டுவதாக உணர்த்திக் குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள். அத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

அது அவர்களுக்குத் தொல்லை தரும் வரை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.

சிறு சண்டையே காரசாரமான விமர்சனங்களுக்கு வழி செய்கிறது. உங்கள் விமர்சனம் எதுவரை செல்லுபடியாகும் என்பதைப் புரிந்து கொண்டு அத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். விவாதத்துக்கு இடம் கொடுத்து சர்ச்சையை வளர்க்காதீர்கள். அந்தப் பேச்சை அதற்குப் பின் எடுக்காதீர்கள்.

உங்கள் உணர்வுகள் பாதிக்கப்பட்டனவா? எல்லோருடைய மனதுக்கும் மூன்று விதமான ஆசைகள் உண்டு:

1) மற்றோர் மனதில் முக்கியமானவர்களாய் இருக்க வேண்டும்.
2) தம்மைப் பிறர் புகழ வேண்டும்.
3) பாராட்ட வேண்டும்.

இவைகளைப் புரிந்து கொள்ளாத சிலர் உங்களை அவமானப்படுத்தி இருக்கலாம். இதனால் உங்கள் உணர்வுகள் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

இவைகளைப் பற்றிக் கவலைப்படுவதை நிறுத்துங்கள். அதை மீண்டும் மீண்டும் நினைத்துக் கவலையை அதிகரிக்காதீர்கள்.

நடந்தது நடந்து விட்டது, நிறுத்துங்கள்.

நடந்தவற்றை மாற்ற முடியாது. அதை நினைத்திருக்காதீர்கள். நிறுத்துங்கள்.

உங்களைப் போலவே மற்றவர்களுக்கும் கவலைகள் உண்டு. கவலையைப் போக்க என்ன செய்தால் என்று யோசித்தால் பலன் உண்டு, துன்பத்திலேயே தோய்ந்திருந்தால் என்ன லாபம்?

தொல்லை தரும் கவலையை, பிரச்சினைகளைத் தீர்க்க ஆக்கபூர்வமாகச் சிந்தியுங்கள். உங்கள் கவலைக்குக் காரணம் எதுவாக இருந்தாலும் நிறுத்திவிடுங்கள். நிறுத்துவது தொடர வேண்டும்.

எல்லோரும் எல்லோரையும் விரும்ப முடியாது. உங்களுக்கு சிலரைப் பிடிக்காமல் இருக்கலாம். அத்தோடு நிறுத்தி விடுங்கள்.

“எனக்குப் பிடிக்காதவரைப் பற்றி நான் நினைப்பதே இல்லை“ என்று ஐசன் ஹோவர் கூறினார்.

அந்த எண்ணங்கள் வந்தவுடன், அவனை/அவளை எனக்குப் பிடிக்காது. நிறுத்தவும். அவ்வளவு தான். அதன் பிறகு மனதில் வேறு எண்ணங்களைச் செலுத்தவும்.

யாருக்குத் தான் தொல்லைகள் இல்லை? அவைகளோடு கவலைகளைச் சேர்த்து துன்பம், பயம் என்று அதிகரித்துக் கொண்டே செல்வானேன்?

எதிர்மறை உணர்வுகளை அதிகரிக்காதீர்கள். முடியுமானால் தீர்வு காணுங்கள், இல்லையேல் நிறுத்தி விடுங்கள்.

விதி ஒரு கதவை மூடினால் நம்பிக்கை மற்றொரு கதவைத் திறக்கிறது. அதை நம்பலாம். நிறுத்தவும்.

மகத்தான நதி போல் செயற்படுங்கள்...!

மகத்தான நதி தன்னுடைய புகலிடம் நோக்கி நகர்ந்த வண்ணம் இருக்கிறது. அது அங்கு நிச்சயம் சென்றடையும். அது தன் வழியை வகுத்துக் கொண்டுவிட்டது.

நீங்களும் அது போல் செயற்படுங்கள்.

நீங்கள் போய் சேர வேண்டுய இடம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைக் குறிக்கோளை அடைய ஒரு வழியும் உங்களுக்குப் புலப்பட வேண்டும்.

மகத்தான நதியைப் போல் அந்த வழியிலேயே உங்கள் பயணம் முன்னேறட்டும்.

வெள்ளம் வந்து நதியின் போக்கை இலேசாக மாற்றலாம். ஆனால் வெள்ளம் வடிந்த பின்னர் நதி தன் வழியாகவே செல்லும். அது தன் இலக்கை நோக்கி ஓடிய வண்ணமே இருக்கும்.

நீங்களும் அவ்வாறே செயல்படுங்கள்.

உங்கள் வழியிலும் பல பிரச்சினைகள் தோன்றலாம். மகத்தான நதியைப் போல் மீண்டும் உங்கள் வெற்றிப் பாதைக்கு வந்து சேருங்கள். உங்கள் குறிக்கோளை நோக்கி நகர்ந்த வண்ணம் இருங்கள்.

நதியின் ஓட்டம் ஒரே சீராக இருக்காது, சில நேரம் வேகமாகவும், சில நேரம் மெதுவாக அமைதியாகவும் ஓடும். ஆனால் தன் புகலிடம் நோக்கி எப்போதும் ஓடியவாறே இருக்கிறது.

நீங்களும் அவ்வாறே செயல்படுங்கள்.

மெல்ல நகர்வது நதியின் ஓட்டத்தைப் பாதிப்பதில்லை, வேகம் முக்கியம் இல்லை. தொடர்ந்து உங்கள் குறிக்கோள் நோக்கிய பயணம் தான் முக்கியம். உங்கள் முன்னேற்றத்தை நதியின் ஓட்டத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். தொடர்ந்து முன்னேறும் இயக்கத்தை உணருங்கள்.

உங்கள் வாழ்க்கை குறிக்கோள் நோக்கி வழிநடக்கட்டும். திட்டமிட்ட வழியிலிருந்து திசை திரும்பாதீர்கள். மகத்தான தடுத்து நிறுத்த முடியாத சக்தியை உங்களுக்குள் உணருங்கள்.உங்கள் குறிக்கோளை அடைவதில் உறுதி மனதில் ஆழமாகப் பதிந்திருக்கட்டும்.

தொடர்ந்து ஓடுவதான, தடுக்க முடியாத மகத்தான ஓர் இயக்கம் உங்கள் வாழ்க்கை சென்றடையும் வழி என்று உணருங்கள்.

இந்த அசையும் நதியின் உணர்வு சதா உங்களுக்குள் இருக்கட்டும்.

-காப்மேயர்