"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


நாடுகளை அடிமைப்படுத்த தற்போது அணு ஆயுதங்களோ, ராணுவப்படைகளோ தேவை இல்லை. அடிமைப்படுத்த வேண்டிய நாட்டின் மக்களை உளவியல் ரீதியாக, கலாச்சார பண்பாட்டு ரீதியாக, பொருளாதார ரீதியாக அடிமைப்படுத்தி்னாலே போதுமானது.

உதாரணமாக: இங்கிலாந்திடம் அடிமைகளாக இருந்த சுமார் 16 நாடுகள் மட்டுமே விளையாடும் கிரிக்கெட்டில் "உலகக் கோப்பை" போட்டி நடத்தி அடிமை மனோபாவத்தை வளர்த்தெடுக்கலாம். "அழகிப்போட்டி" என்ற பெயரில் ஆபாச கூத்துகளை நடத்தி பெண்களை பாலியல் சின்னங்களாக வெளிப்படுத்தலாம். அறிவியல் கண்டுபிடிப்புகளான கம்ப்யூட்டர், தொலைக்காட்சி உள்ளிட்ட கருவிகள் மூலம் பகுத்தறிவுக்கு எதிரான அனைத்து அம்சங்களையும் பரப்பலாம். இவற்றின் மூலம் எந்த நாட்டு மக்களையும், அவர்களின் கலாச்சார, பண்பாட்டு அம்சங்களுக்கு எதிராக சிந்திக்க, செயல்பட வைக்க முடியும். இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் பொருளாதாரத்தையும் சுரண்டி அந்நாட்டை சீர்குலைக்க முடியும்.

இந்த செயல்திட்டத்தின் அடிப்படையில்தான் நுகர்வு கலாசாரம் இந்தியா போன்ற நாடுகளின் மீது திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. நமக்கு தேவையோ! இல்லையோ, விளம்பரம் செய்யப்படும் அனைத்து பொருட்களையும் வாங்கி குவிக்க வேண்டும் என்ற கருத்து உளவியல் ரீதியாக நம்மீது திணிக்கப்படுகிறது.

நமது இன்றைய வருமானம், இந்த தேவைகளுக்கு ஈடுகொடுப்பதாக இல்லாவிட்டாலும், கடன் பெற்றாவது அந்த பொருட்களை வாங்கி அனுபவிக்க வேண்டும் என்ற வெறி நம்முள் எழுப்பப்படுகிறது. இதற்கான கடனும் பர்சனல் லோன், கிரெடிட் கார்டு என்பது போன்ற கவர்ச்சியான பெயர்களில் நம்மிடம் திணிக்கப்படுகிறது.

விவசாயிகளோ, சிறு வியாபாரிகளோ தங்கள் வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும் தொழிற்கடன்களை கேட்டால் விரட்டியடிக்கும் வங்கிகள், ஊதாரித்தனமான செலவுகளுக்கு பல்வேறு பெயர்களில் கடன்களை வாரிவாரி வழங்குகின்றன.

எனவே நியாயமான காரணங்களுக்கு பணம் தேவைப்படும் பலரும் நியாயமான வட்டியில் கடன் கிடைக்காத நிலையில், அநியாய வட்டி என்று தெரிந்தும் இத்தகைய பகல் கொள்ளைக்காரர்களின் பிடியில் சிக்க நேரிடுகிறது.

நேர்மையாக வாழ்ந்து வரும்/வாழ விரும்பும் எந்த ஒரு நபரும் இத்தகைய மாய (கடன்) வலையில் சிக்காத வரையில் தங்கள் நேர்மையை காப்பாற்றிக் கொள்ளமுடியும். ஆனால், எந்த காரணத்திற்காகவோ இந்த கடன் பொறியில் சிக்கிவிட்டால் அவர் விரும்பினாலும் நேர்மையுடன் வாழ முடியாது. இதற்கு காரணம், இந்த கடனுக்கு வங்கிகள் விதிக்கும் அநியாய வட்டியே காரணமாகும். வட்டியே அதிகம் என்ற நிலையில், இந்தக் கடன் தவணையை உரிய காலத்தில் கட்டத்தவறும் பொது மக்களுக்கு விதிக்கப்படும் அபராதங்களை, பகல் கொள்ளை என்ற வார்த்தையில் கூட அடக்க முடியாது.

இந்த விவகாரத்தில் அரசு என்ன கடமை ஆற்றுகிறது என்று பார்த்தால், வங்கிகள் அடிக்கும் கொள்ளைக்கும் 4 சதவீத சேவை வரி விதித்து, மத்திய அரசு தனது இறையாண்மையை பாதுகாத்துக் கொள்கிறது. இவ்வாறு அரசு அங்கீகாரத்துடன் மக்களை கொள்ளை அடிக்கும் வங்கிகள், மக்களிடம் கடன் வசூல் நடத்தும் விதம், வெள்ளையர் காலத்தில் நடந்த வரி வசூலே மேல் என்று கூறத்தக்க விதத்தில் உள்ளது. வங்கிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட ரிசர்வ் வங்கியோ கிரெடிட் கார்டு வணிகத்தில் வங்கிகள் செய்யும் அனைத்து முறைகேடுகளையும் கண்டறிந்து, அவற்றை தவிர்க்கக் கூடிய விதிமுறைகளையும் வகுத்துவிட்டு, அவற்றை நடைமுறைப் படுத்துவதோ, கண்காணிப்பதோ தனது வேலையில்லை என்று ஒதுங்கி விடுகிறது.

எனவே, இந்த விவகாரங்களை கையாள வேண்டிய பொறுப்பு மக்களிடமே உள்ளது. அதற்கு முன்னதாக அந்த கிரெடிட் கார்டு வணிகத்தின் பின்னுள்ள பொருளாதார அரசியல் விவகாரங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் பல வங்கிகள் கிரெடிட் கார்டு வணிகத்தில் ஈடுபட்டாலும். இந்த வணிகத்திற்கான மூலதன நிதி அமெரிக்கா போன்ற நாடுகளின் முதலீடாகவே உள்ளது. எனவே, இந்த முதலீட்டிற்கான (அநியாய) வட்டியும் அந்த நாடுகளுக்கே செல்கிறது.

மேலும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொதுமக்கள் வாங்கிக் குவிக்கும் பெரும்பாலான பொருட்களும் அந்நிய நாட்டுப் பொருட்களே! உலகமயம்! தனியார் மயம்! தாராள மயம்! என்ற பெயரில் உள்ளூர் கோலி சோடாவிலிருந்து, தொலைக்காட்சி/கம்ப்யூட்டர் வரையிலான அனைத்து உயர்நுட்ப தொழில்களையும் இழுத்து மூடிவிட்டு அந்நிய தயாரிப்புகளே இந்திய சந்தையில் விற்கப்படும் நிலையில், கிரெடிட் கார்டு மூலமாவும் அந்நிய தயாரிப்புகளே நமது தலையில் கட்டப்படுகிறது என்பதை சொல்லத் தேவையில்லை.

இதற்கேற்ற வகையிலேயே, செய்தி மற்றும் பொழுதுபோக்கு ஊடகங்களும் இந்திய மூளைகளை முடமாக்கி, இந்திய மக்களையே நுகர்வுப் பொறிகளாக்கி அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றன. உலக வங்கி என்ற பெயரில் வளரும் நாடுகளின் அரசுகளை கொள்ளையடிக்கும் சக்திகளே, அந்நாட்டு மக்களையும் கொள்ளையடிக்கவே இதுபோன்ற நூதன, மோசடித் திட்டங்களை வகுக்கின்றன.

போலிப்பகட்டற்ற எளிமையான வாழ்க்கை, யதாரத்த நிலையை புரிந்து கொள்ளும் மனப்பக்குவம், எதையும் தெளிந்தறியும் அறிவியல் மனப்பான்மை உள்ளிட்ட மனநிலையை பெறுவதே இத்தகைய சமூக, பண்பாட்டு, கலாசார, பொருளியல் தாக்குதல்களிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள உதவும் அம்சங்களாகும். அதன் மூலமே சுயசிந்தனை, உண்மையான பகுத்தறிவு, சமூக நோக்கு உள்ளிட்ட குணாதிசயங்களை நாம் பெற முடியும்.

நம்மை அடிமைப் படுத்தும் சமூக, பண்பாட்டு, கலாசார, பொருளியல் சீரழிவுகளுக்கான நுழைவுச் சீட்டே இந்த "கிரெடிட் கார்டு" என்பதை புரிந்து கொள்வதே இத்தகைய பிரசினைகளை தவிர்க்கும் வழியாகும். இந்த புரிதல் மூலமாகத்தான் கிரெடிட் கார்டை நமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதா? அல்லது கிரெடிட் கார்டின் கட்டுப்பாட்டில் நாம் வாழ்வதா? என்ற கேள்விக்கு விடை காண முடியும். இது தனிநபர் பிரசினை அல்ல என்பதையும், இந்த விவகாரம் இந்திய இறையாண்மைக்கே சவால் விடுவதையும் புரிந்து கொண்டால்தான் இந்த மாயவலையை அறுத்தெரியும் பாதை அமைக்க முடியும்.

- உண்மை


லகின் முன்னேறிய நாடுகள் பலவற்றிலும் சுற்றுச்சூழலியலும், அது சார்ந்த சட்டவியலும் பெரு வளர்ச்சி அடைந்து வருகின்றன. குறிப்பாக சுற்றுச்சூழல் சட்டவியலின் அடிப்படை அம்சங்களாக “முன்னெச்சரிக்கை கோட்பாடு” (Precautionary Principle) மற்றும் “சீரழிப்பவரே இழப்பீடு செலுத்த வேண்டும்” (Polluter Pays) ஆகிய கோட்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்படுகின்றன.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடியதும், சூழலை மாசுபடுத்தக்கூடியதுமான பல தொழில்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அமெரிக்காவில் கடந்த 1973ம் ஆண்டுக்கு பிறகு ஒரு புதிய அணுஉலை கூட அமைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக அழியா ஆற்றல் மூலங்களான சூரிய சக்தி, காற்றாலை போன்றவற்றை பயன்படுத்தி மின்சக்தி தயாரிக்கும் வழிமுறைகள் அதிகரித்து வருகின்றன.

ஆனால் இந்தியாவில் இதுபோன்ற சூழல் பாதுகாப்புக் கொள்கைகள் நடைமுறையில் பின்பற்றப் படுவதில்லை. இதற்கு உதாரணமாக போபால் விஷவாயு விபத்தைக் கூறலாம். 1984ஆம் ஆண்டில் நடந்த இந்த விபத்தின் காரணமாக சுமார் 15 ஆயிரம் உயிரிழந்துள்ளனர். பல்வேறு விதங்களிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டுகிறது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் தனியாக நீதிமன்றத்தை அணுகக்கூடாது என்று கூறிய மத்திய அரசு, பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக அரசே வழக்கு தொடுக்கும் என்று அறிவித்தது. ஆயினும் இம்மக்களுக்கான தீர்வு விபத்து நடந்து 25 ஆண்டுகள் கழிந்த பின்னரும் முழுமையாக கிடைக்கவில்லை. இறையாண்மை மிக்க இந்தியாவின் நாடாளுமன்றமுமம், நீதி மன்றை அமைப்புகளும், பிற அதிகார அமைப்புகளும் போபால் விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகமே இழைத்து வருகின்றன. போபால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களின் வாரிசுகளும் இழப்பீடு கேட்டு போராட்டம் நடத்தினால் தடியடிகளும், சிறைத்தண்டனைகளுமே பரிசாக வழங்கப்படுகின்றன.

இந்த விபத்திலிருந்து இதுவரை இந்தியா எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளவில்லை. நாட்டிலுள்ள அணுமின் நிலையங்களும் போபாலுக்கு எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல. ஆபத்து மிகுந்த இந்த அணுமின் நிலையங்கள் பாதுகாப்பானவையோ, சிக்கனமானவையோ, ஆற்றல்மிகுந்தவையோ அல்ல என்பதை சூழலியல் நிபுணர்கள் பலமுறை நிரூபணம் செய்துள்ளனர். எனினும் இந்த அணுஉலைகளை தொடர்ந்து இயக்குவதில் அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

இன்றைய நிலையில் அணுமின் நிலையங்களில் விபத்தே ஏற்படாது என அரசு உட்பட யாரும் உறுதி கூற முடியாது. அணுமின் நிலையங்கள் இயங்குவது நிகழ்கால ஆபத்து. அணுமின் நிலையத்தில் வெளியாகும் கழிவுகள் எதிர்காலத்தில் பல்லாயிரம் வருடங்களுக்கான ஆபத்தாக விளங்கும். இதை அணுசக்தி ஆதரவாளர்கள் யாரும் மறுப்பதும் இல்லை. இவ்வளவு ஆபத்தான அணுசக்தி தேவைதானா? என்ற கேள்விக்கு நேரடியான பதில் அளிப்பதும் இல்லை.

இந்நிலையில் அணுமின் உலைகளில் விபத்து ஏற்பட்டால் இழப்பீடு அளிப்பது குறித்த சட்டம் ஒன்றை நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. மனிதர்களுக்கு பாதிப்பே இல்லாத வகையில் மின்சக்தி தயாரிக்கும் வழியை கண்டுபிடிப்பதைவிட்டு இழப்பீடு தருவதற்காக ஒரு சட்டமா என்று சினம் கொள்ளாதீர்கள். இது நீங்கள் நினைப்பதைப்போல பாதிக்கப்படும் இந்தியர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கான சட்டம் அல்ல.

அதற்கு பதிலாக பாதிப்பை ஏற்படுத்தும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, குறிப்பாக அமெரிக்க அணுசக்தி நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கும் நயவஞ்சக திட்டத்தை, ஒரு சட்டமாக மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது. இந்த சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன்பு இதற்கான தேவை குறித்து பார்ப்போம்.

இந்தியாவில் இயங்கும் அனைத்து அணு உலைகளையும் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான இந்திய அணுசக்திக் கழகம் என்ற அமைப்பே இயக்கி வருகிறது. இந்த நிறுவனத்துடன் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் அரசுகளோ, நிறுவனங்களோ இணைந்து செயல்படுகின்றன. இவற்றில் அமெரிக்காவே இந்தியாவில் அதிகம் முதலீடு செய்வதற்கு முனைந்து செயல்படுகிறது. இந்த முதலீட்டுத் தொகையும், அதற்குரிய லாபமும் சிறிதும் குறையாமல் கிடைக்கவேண்டும் என்று அமெரிக்க நிறுவனங்கள் விரும்புகின்றன. விபத்துகள் ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவதன் மூலம் தங்கள் வருவாய்க்கு இழப்பு ஏற்படக்கூடாது என்று இந்த நிறுவனங்கள் கருதுகின்றன. எனவே விபத்துகளுக்கான இழப்பீடு வழங்குவதிலிருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும் என்று இந்த நிறுவனங்கள் மத்திய அரசுக்கு நிபந்தனை விதித்தன.

இதையடுத்து, “The Civil Liability for Nuclear Damage Bill, 2010” என்ற பெயரிலான “அணுஉலை விபத்து இழப்பீட்டு வரம்பு நிர்ணயிக்கும் சட்ட” த்தை கொண்டுவருவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இந்த சட்டத்தின் 6வது அம்சம் அணு உலை விபத்துக்கான இழப்பீட்டிற்கான உச்சவரம்பு அதிகபட்சமாக சுமார் ரூபாய் இரண்டாயிரத்து நூறு கோடி (2100 கோடி ரூபாய்) என்று நிர்ணயம் செய்கிறது. ஆனால் அமெரிக்காவில் இதுபோன்ற விபத்து ஏற்பட்டால் இதைப்போல சுமார் 23 மடங்கு இழப்பீடு வழங்கப்படும். இந்த 2100 கோடி ரூபாயிலும் வெறும் 500 கோடி ரூபாயை மட்டும் அந்த அணுஉலைக்கான தொழில்நுட்பத்தை வழங்கும் நிறுவனங்கள் செலுத்தினால் போதுமானது. (அதையும் அந்த நிறுவனங்கள் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் வசூலித்துவிடும் என்பது வேறு கதை!) மீதித் தொகையான சுமார் 1587 கோடி ரூபாயை இந்திய அணுசக்தி கழகம் என்ற பொதுத்துறையின் பெயரால் இந்திய அரசு வழங்கி விடும். இதற்கான தொகை எங்கிருந்து வரும் என்று கேட்கிறீர்களா இந்திய குடிமக்கள் கட்டும் பல்வேறு வரிகளிலிருந்து திரட்டப்படும் அரசு நிதிதான், இந்தியர்களுக்கு பேரழிவு ஏற்படும்போது வெளிநாட்டு நிறுவனங்களை காப்பாற்றும் நோக்கத்தில் செலவழிக்கப்படும்.

இது போன்ற பேரழிவுகளுக்கு வெளிநாட்டு தனியார் நிறுவனங்களே காரணம் என்று நிரூபிக்கப்பட்டால்கூட அந்த நிறுவனத்துக்கு எதிராக அந்நிறுவனம் அமைந்துள்ள நாட்டின் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் உரிமையும் இந்திய குடிமக்களுக்கு இந்த சட்டத்தின் வாயிலாக மறுக்கப்படுகிறது. (பிரிவு 17)

உண்மையைச் சொல்லப்போனால் இந்த சட்டம், அணு உலை விபத்து ஏற்படும் பட்சத்தில் அது குறித்து விசாரிக்கும் அதிகாரத்தை இந்திய நீதிமன்றங்களிடம் இருந்தே பறித்து விடுகிறது. (பிரிவு 35)

விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளிப்பதற்காக அணு உலை பாதிப்பு இழப்பீடு ஆணையம் அமைக்கப்படும். இதன் ஆணையர்கள் மேற்கொள்ளும் முடிவுகளே இறுதியானவை. இதற்கு எதிராக நாட்டின் எந்த நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்ய முடியாது.

ஒரு அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் அதன் தீய விளைவுகள் பல பத்தாண்டுகளுக்கு நீடிக்கும். இம்மாதிரியான விளைவுகள் குறித்து இதுவரை எந்த முழுமையான ஆய்வும் இதுவரை நிறைவு பெறவில்லை. இந்நிலையில் இந்திய அணுஉலைகளில் விபத்து ஏற்பட்டால், இழப்பீடு கோருவதற்கு வெறும் பத்தாண்டு காலத்தை மட்டுமே காலக்கெடுவாக விதிக்க இந்த புதிய சட்டம் வழி வகுக்கிறது. அதாவது அணுஉலை விபத்து ஏற்பட்ட தினத்திலிருந்து 10 ஆண்டுகளுக்குள் மட்டுமே இழப்பீடு கோர முடியும் என்று இந்த சட்டம் வரம்பு விதிக்கிறது. (பிரிவு 18) விபத்து ஏற்பட்டு அதன் விளைவான தீய விளைவுகள் 10 ஆண்டுகள் கழித்து தெரியவந்தால் அதற்காக இழப்பீடு கோர முடியாது என்பதுதான் இந்தப் பிரிவின் கருப்பொருள்.

இது போன்று இந்திய மக்களுக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்றுவதற்கான சர்வதேச கடமைகள் ஏதும் இந்தியாவிற்கு இல்லை என்ற போதிலும் அமெரிக்க எஜமானர்களுக்கு அடிபணிந்து நடக்கும் இந்திய ஆட்சியாளர்களின் பணிவு வேட்கையே இத்தகைய சட்டத்தை இங்கு கொண்டு வரமுயற்சிக்கிறது.

இந்த சட்டத்திற்கான முன்வடிவை பரிசீலனை செய்த பிரபல அரசியல் அமைப்புச் சட்டநிபுணர் சோலி சொராப்ஜி, “இந்திய அரசியல் சட்டத்திற்கும், உச்சநீதிமன்றத்தின் பல முன்மாதிரி தீர்ப்புகளுக்கும் எதிரான இந்த சட்டத்திற்கான தேவை எதுவும் இன்று இல்லை. இந்த சட்டம் யாருடைய நிர்பந்தத்தில் கொண்டு வரப்படுகிறது என்பதும் புரியவில்லை!” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் பல்வேறு ஐரோப்பிய யூனியன் நாடுகள் அணுசக்தி தொடர்பான பல்வேறு வர்த்தகங்களை செய்து வருகின்றன. ஆனால் இந்தியாவில் கொண்டுவர முயற்சிக்கப்படும் இந்த சர்ச்சைக்குரிய சட்டத்தைப்போல ஐரோப்பிய நாடுகளிலோ, வேறு வளரும் நாடுகளிலோகூட எந்த சட்டமும் இல்லை.

சாமானியர்களுக்கும் சட்டத்துக்கும் தொடர்பில்லை என்ற தவறான கருத்து சமூகத்தில் உள்ளது. வழக்கறிஞர்கள் சட்டத்தை பயன்படுத்துகின்றனரே தவிர, சட்டத்தை உருவாக்கும் பணி சாமானிய மக்களின் பெயரால், மக்களின் பிரதிநிதிகளால்தான் நடைபெறுகிறது. எனவே சமூக ஆர்வம் கொண்ட எவரும் சட்டத்தை திறனாயும் நோக்கத்தில் படித்தே ஆக வேண்டியது காலத்தின் கட்டாயம்! மேலும் மக்களுக்கு எதிரான இது போன்ற சட்டங்களை அனைத்து தளங்களிலும் எதிர்ப்பது, நமது சந்ததிகளுக்கு நாம் செய்யவேண்டிய வரலாற்றுக் கடமையாகும்!

PEOPLE'S LAW