"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


கோடைக்காலத்தில் கடுமையான வெப்பத்தையும் குளிர்காலத்தில் மிகவும் குளிர்ச்சியாகவும் உணர்கிறோம். இவைதான் நாம் அனுபவிக்கும் தட்பவெப்ப நிலைகள். ஓர் இடத்தின் தட்ப வெப்பநிலை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நாம் அனுபவிக்கும் சராசரியான கால நிலையைக் குறிப்பது. மழை, சூரிய ஒளி, காற்று, ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை இவையே ஓர் இடத்தின் தட்பவெப்ப நிலையை நிர்ணயிக்கும் காரணிகள்.

சீதோஷ்ணநிலை மாற்றங்கள் திடீரென்றும், வெளிப்படையாகவும் ஏற்படும். ஆனால், தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு நீண்ட காலமாகும். அதனால் அந்தளவுக்கு உடனடியாக அவற்றை உணர முடிவதில்லை. பூமியில் பலவிதமான தட்பவெப்ப மாற்றங்கள் ஏற்படுகின்றன. அனைத்து வகையான உயிரினங்களும் அவற்றுக்கேற்ப இயல்பாகத் தம்மைத் தக்கவைத்து கொண்டிருக்கின்றன.

இருந்தாலும் கடந்த 150-200 ஆண்டுகளில் தட்பவெப்பநிலை மாற்றங்கள் மிகக் குறுகிய காலத்தில் ஏற்பட்டுவருகின்றன. சில குறிப்பிட்ட தாவர மற்றும் விலங்கினங்கள் இப்படிப்பட்ட மாற்றங்களுக்கேற்பத் தகவமைத்துக்கொள்ள முடிவதில்லை. மனிதனுடைய நடவடிக்கைகளே இப்படிப்பட்ட மாற்றங்கள் இவ்வளவு வேகமாக நடைபெறுவதற்கான காரணம் என்று கருதப்படுகிறது.

தட்பவெப்ப நிலை மாற்றங்களுக்கான காரணங்கள்

வெப்பநிலை மாற்றங்கள் ஏற்படுத்துகிற காரணங்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம். இயற்கையானது மற்றும் மனிதனால் ஏற்படுவது.

௧. இயற்கையான காரணங்கள்:

வெப்பநிலை மாற்றங்களுக்கு நிறைய இயற்கையான காரணங்கள் உள்ளன. கண்டங்களின் விலகல், எரிமலைகள், கடல் நீரோட்டங்கள் மற்றும் பூமிசரிவு இதற்கான சில முக்கிய காரணிகள்.

கண்டங்கள் விலகுதல்:

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கும் முன், நிலப்பரப்பு படிப்படியாக விலகியதால் ஏற்பட்டதே இன்று நாம் காணும் கண்டங்கள். இப்படிப்பட்ட இந்த விலகல் மற்றும் கடல் நீரோட்டங்களின் போக்குகளும், நீர்ப்பரப்புகளின் இடங்களை மாற்றின. இவை தட்பவெப்ப நிலையில் தாக்கங்கள் ஏற்படுத்தின. கண்டங்களின் விலகல்கள் இன்றும் தொடர்கின்றன.

எரிமலைகள்:

ஒரு எரிமலை வெடிக்கும்போது, அது மிகப் பெரிய அளவில் சல்ஃபர்-டை-ஆக்ஸைடு, (SO2) நீராவி, தூசி மற்றும் சாம்பல் இவற்றை வாயு மண்டலத்தில் வெளியேற்றுகிறது. இப்படிப்பட்ட இந்த எரிமலை வெடிக்கும் நிகழ்வு சில நாட்களுக்கே நீடிக்கிறது. இருப்பினும், மிகப்பெரும் அளவில் அவற்றிலிருந்து தூக்கி எறியப்படும் வாயு மற்றும் சாம்பல் தட்பவெப்பநிலை முறைகளில் பல வருடங்களுக்குத் தாக்கம் ஏற்படுத்துகிறது. அதிலிருந்து வெளியேறும் வாயுக்கள் மற்றும் தூசி, துகள்கள், சூரிய கதிர்களை ஓரளவுக்கு மறைக்கின்றன. இதனால் குளிர்ச்சி உண்டாகிறது.

பூமியின் சாய்மானம்:

பூமி தனது சுற்றுப்பாதையில் 23.5o கோணத்தில் செங்குத்தான நிலையில் சாய்ந்திருக்கிறது. இந்தப் பூமியின் சரிவில் ஏற்படும் மாற்றங்கள் பருவகாலங்களின் தீவிரத்தன்மையில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அதிக சரிவு, கோடைக்காலங்களில் அதிக வெப்பத்தையும், குளிர்ந்த காலங்களில் அதிக குளிரையும் ஏற்படுத்துகின்றன. குறைந்த அளவு சாய்மானம் கோடையில் வெப்பத்தையும், குளிர்காலத்தில் குளிரையும் குறைக்கின்றன.

கடல் நீரோட்டங்கள்:

சமுத்திரங்கள் தட்பவெப்ப நிலை அமைப்பில் மிகமுக்கியமான பங்கு வகிக்கின்றன. அவை பூமியின் 71% பகுதியை ஆக்கிரமித்துள்ளன. சூரியன் கதிர்வீச்சை வாயு மண்டலம் மற்றும் நிலப்பரப்பு கிரகித்துக்கொள்வதைவிட இரு மடங்கு அதிகமாக இவை கிரகித்துக் கொள்கின்றன.

௨. மனிதனால் ஏற்படுவது:

பசுமை இல்ல விளைவு

பூமி, சூரியனிடமிருந்து ஆற்றலைப் பெறுகிறது. இது பூமியின் நிலப்பரப்பை வெப்பமாக்குகிறது. இந்த ஆற்றல் வாயு மண்டலத்தினூடே கடந்து செல்கையில், இதன் ஒரு குறிப்பிட்ட அளவு (சுமார் 30%) சிதறுண்டுபோகிறது. பூமியிலிருந்தும், கடல் பரப்பிலிருந்தும் இந்த ஆற்றலின் ஒரு பகுதி, வாயு மண்டலத்திற்குள் பிரதிபலிக்கப்படுகிறது. வாயுமண்டலத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட வாயுக்கள் பூமியைச் சுற்றி ஒரு விதமான போர்வை போர்த்தியது போன்று பரவியுள்ளன. அவையாவன, கார்பன்-டை- ஆக்ஸைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு. இவைதான் ‘பசுமை இல்ல வாயுக்கள்’ (கிரீன்- ஹவுஸ் வாயுக்கள்) என்று அழைக்கப்படுகின்றன. பசுமை இல்ல (கிரீன்- ஹவுஸ்) வாயுக்கள், நீராவியுடன் சேர்ந்து வாயு மண்டலத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன. இவை வாயு மண்டலத்தில் பிரதிபலிக்கப்படுகிற ஆற்றலிருந்து சிறிதளவைக் கிரகித்துக்கொள்கிறது. எப்படிப் பசுமை இல்லத்தின் கண்ணாடி சூரியக் கதிரியக்கத்தின் அதிகப்படியான ஆற்றலைத் தடுக்கிறதோ, அப்படியே இந்த ‘வாயுப் போர்வை’ பூமியில் வெளிப்படுத்தப்படும் சக்தியை கிரகித்துக்கொண்டு வெப்பநிலை அளவுகளைத் தக்க வைத்துக்கொள்கிறது. இதனால் இது ‘பசுமை இல்ல விளைவு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஜீன் - பாப்டிஸ்ட் ஃபோரியர் என்ற பிரஞ்சு நாட்டு விஞ்ஞானி இந்த பசுமை இல்ல விளைவை (கிரீன்- ஹவுஸ் விளைவு) முதன் முதலாக அடையாளம் கண்டவர். அவர் வாயுமண்டலத்தின் நிகழ்வு மற்றும் கிரீன்ஹவுஸ் நிகழ்வின் ஒற்றுமையைச் சுட்டிக் காட்டினார்.

கிரீன் ஹவுஸ் வாயுக்களாளான போர்வை, உலகம் உருவானதிலிருந்தே உள்ளன. ஆனால் மனித குலத்தின் நடவடிக்கைகள் அதிகரிக்க அதிகரிக்க, இந்தக் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் அதிகமதிகமாக வாயு மண்டலத்திற்குள் விடப்படுகின்றன. இதன் விளைவாக, இந்தப் போர்வை தடிமனாகிக்கொண்டிருக்கிறது. இது ‘இயற்கையான கிரீன்ஹவுஸ் விளைவை’ பாதிக்கிறது.

நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற எரிபொருட்களை நாம் எரிக்கும்போது, கார்பன் - டை - ஆக்ஸைடு (கரிம வாயு) வெளியேற்றப்படுகிறது. மற்றும் நாம் காடுகளை அழிக்கும்போது, மரங்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கார்பன் வாயு மண்டலத்தில் கார்பன் - டை - ஆக்ஸைடாகக் கலக்கிறது. அதிகரித்துவரும் விவசாய நடவடிக்கைகள், நிலத்தைப் பயன்படுத்தும் முறையில் ஏற்படும் மாற்றங்கள், மற்றும் வேறுசில நடவடிக்கைகள் இவை அனைத்தும் மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுக்களின் அளவுகளை அதிகரிக்கச் செய்கின்றன. தொழிற்சாலைகளின் நடவடிக்கைகளும் செயற்கையான மற்றும் புதிய கிரீன்ஹவுஸ் வாயுக்கள் அதாவது CFCக்கள் (க்ளோரோஃபுளூரோ கார்பன்கள் (Chlorofluorocarbons) போன்றவற்றை வெளியேற்றுகின்றன. மோட்டார் வாகனங்கள் வெளியேற்றும் புகை ஓஸோனை அதிகரிக்கச் செய்கின்றன. அதிகரிக்கப்பட்ட வரும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் பூமியின் வெப்ப நிலையை அதிகரிக்கிறது. இந்த விளைவு பொதுவாக 'உலகம் வெப்பமயமாதல்' அல்லது 'வெப்பநிலை மாற்றம்' என்று குறிப்பிடப்படுகிறது.

கிரீன் ஹவுஸ் விளைவு மற்றும் வெப்பநிலை மாற்றம் பற்றிய சுருக்க விளக்கம் பார்க்க (ஆங்கிலத்தில்) இங்கே கிளிக் செய்யவும்.

கிரீன்ஹவுஸ் வாயுக்களின் அதிகரிப்பிற்கு நாம் எப்படி காரணமாக இருக்கிறோம்?

நிலக்கரி, பெட்ரோல் போன்ற எரிபொருள்களைப் பயன்படுத்துவது.

அதிக நிலத்திற்காக மரங்களை அதிகமாக வெட்டிப்போடுவது.

மக்கிப் போகாத கழிவுப் பொருள்களின் (ப்ளாஸ்டிக்) பெருக்கம்.

விவசாயத்திற்காக உரங்கள், பூச்சிக்கொல்லிகளைக் கண்மூடித்தனமாகப் பயன்படுத்துதல்.

தட்பவெப்பநிலை மாற்றம் நம்மை எப்படிப் பாதித்தது?

வெப்பநிலை மாற்றம் மனித குலத்துக்கே அபாயமானது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து பூமியின் சராசரி வெப்ப நிலை, 0.3 - 0.60C வரை உயர்ந்துள்ளது. இந்த வெப்ப நிலை உயர்வு நமக்கு மிகவும் குறைந்த அளவாகத் தோன்றலாம். ஆனால், கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் பேரழிவுக்கு இவை வழி வகுக்கும்.

விவசாயம்

அதிகரித்துவரும் மக்கள் தொகை உணவுக்கான தேவையை அதிகரிக்கிறது. இதனால் இயற்கை வளங்களை அதிகமாகப் பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. வெப்பநிலையில் ஏற்படும் வேறுபாடுகள், தட்பவெட்ப நிலை மற்றும் மழை ஆகியவற்றில் மாறுபாடுகளை ஏற்படுத்துவதன் மூலம், விவசாயத்தை நேரடியாக பாதிக்கிறது. மண்வளம், பூச்சிகள் மற்றும் நோய்களின் மாற்றங்கள் மூலமாக மறைமுகமாக விவசாயத்தை பாதிக்கிறது. தானிய வகைகளில் விளைச்சல் இந்தியாவில் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. மிகக் கடுமையான வெப்பம், மிக அதிகமான மழை, வெள்ளம், வறட்சி முதலிய அதீதமான சீதோஷ்ண நிலைகளும் விளைபொருள்களின் உற்பத்தியைப் பாதிக்கின்றன.

வானிலை

உயர்ந்து வரும் வெப்பநிலை, மழை பெய்யும் நிலவரங்களை மற்றக்கூடியது. வறட்சி மற்றும் வெள்ளம் ஏற்படுதலை அதிகரிக்கச் செய்கிறது. பனிப்பாறைகள் மற்றும் துருவப் பனிப்படிவங்கள் உருகுவது அதிகரிப்பதால், கடல் மட்டம் அதிகரிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் புயல், சூறாவளி போன்றவற்றுக்கும் வெப்பநிலை மாற்றங்களின் விளைவுகளே காரணம் என்று கருதப்படுகிறது.

கடல் மட்டம் அதிகரித்தல்

வெப்பநிலை மாற்றத்தின் விளைவுகளில் ஒன்று கடல் மட்ட உயர்வு. கடல்நீர் வெப்பமடைதல், பனிப்பாறைகள் மற்றும் போலார் பனி படிவுகள் உருகுதளால், அடுத்த நூற்றாண்டுக்குள் சுமார் அரை மீட்டர் அளவுக்கு கடல் மட்டம் உயரப்போகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வதால், மணல் அரிப்பு ஏற்பட்டு நிலப்பகுதிகள் கடலில் மூழ்குதல், வெள்ளப் பெருக்கு ஏற்படுவது அதிகரிப்பது, நீர்நிலைகள் உவர்ப்பாக மாறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இவை, கடல் பகுதி விவசாயம், குடிநீர் ஆதார வளங்கள், மீன்பிடி தொழில், மக்கள் குடியிருப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

உடல் நலம்

பூமி வெப்பமயமாதல் மனிதகுல ஆரோக்கியத்தை நேரடியாக பாதித்து, வெப்பம் சம்பந்தப்பட்ட நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணமாகும். உடலில் நீரிழப்பு, தொற்று நோய் பரவல், ஊட்டச் சத்துக் குறைபாடு, பொது மருத்துவம் சார்ந்த உள்கட்டமைப்பைப் பாதித்தல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

காடுகள் மற்றும் வன விலங்குகள்

இயற்கையான சூழலில் இருக்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களால் வெகு விரைவில் பாதிக்கப்படுகின்றன. வெப்பமாற்றத்தின் விகிதம் தொடர்ந்து அதிகரித்தால், பல்வேறு தாவர இனங்களும், விலங்கினங்களும் அழியக்கூடிய நிலை ஏற்படலாம்.

தடுப்பு நடவடிக்கைகள்

புதுப்பிக்க முடியாத எரிசக்தி ஆதாரங்களின் உபயோகங்களைக் குறைத்துக்கொள்தல் (உ.ம். நிலக்கரி போன்ற எரிபொருட்கள்).

புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஆதாரங்களின் உபயோகத்தை அதிகரித்தல்- சூரிய மற்றும் காற்று ஆதாரங்கள் முதலியவை.

மரங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேலும் மரங்களை வளர்த்தல்.

மக்கிப் போகாத ப்ளாஸ்டிக் போன்ற பொருட்களின் கண்மூடித்தனமான உபயோகத்தை தவிர்த்தல்.

INDIA DEVELOPMENT GATEWAY





போட்டிகள் மிகுந்து வரும் அவசரமான உலகில் போராடி முன்னேறும் வழிகளை தங்கள் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பெற்றோர் விரும்புகின்றனர். அதன் வெளிப்பாடே சிறு குழந்தைகள் கூட மூட்டையை தூக்கிச் செல்வதை போல புத்தக சுமையை தூக்குகின்ற நிலை. முன்பு ஐந்தாம் வயதில் தான் பள்ளிக்கல்வி தொடங்கியது. அதுவரை பெற்றோரின் தனிப்பட்ட கவனிப்பில் இருந்துகொண்டு அம்மா, அப்பா என சொற்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன. தாய் தான் ஒரு குழந்தையின் முதல் ஆசிரியராக இருந்தார். இன்று பிறந்த சில மாதங்களிலே கல்வி நிலையங்களில் முன்பதிவு. மூன்றாம் வயதில் பாலர் பள்ளி வகுப்பு. நான்காம் வயதில் எல்கேஜி எனப்படும் மழலையர் கீழ்வகுப்பு. ஐந்தாம் வயதில் யுகேஜி எனப்படும் மழலையர் மேல்வகுப்பு. இவற்றிலிருந்து பயிற்சி பெறாவிட்டால், ஒன்றாம் வகுப்பில் இடமில்லை என்று சொல்லுமளவுக்கு இன்றைய காலம் மாறிவிட்டது. தொட்டிலில் தாலாட்டப்பட்டு தாய் வழிக்கல்வி ஊட்டப்பட வேண்டிய வயதில், நான்கு சுவருக்குள் அடைக்கப்பட்டு, தனிப்பட்ட கவனம் செலுத்தப்படாமல், பத்தோடு பதினொன்றாய் வெளிநாட்டு மொழி கற்பிக்கப்படும் நிலை தொடர்கிறது.

பாலர் பள்ளி வகுப்புக்கு செல்லும்போதே தனது குழந்தை படிப்பில் முதல் இடம் பெற வேண்டும் என்ற ஆசையும் ஏக்கமும் அடையும் பெற்றோர், தங்கள் குழந்தைகள் பேசி பழகுவதற்கு முன்னரே வண்ணப்படங்கள், அறிவை வளர்க்கும் விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றின் மூலம் பல பயிற்சிகள் அளிக்கின்றனர். இதுபோல தங்கள் குழந்தைகளின் அறிவை வளர்க்க பெற்றோர் கையாளும் முறைகளில் ஒன்று தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க பழக்கப்படுத்துவது. அந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் குழந்தைகள் பேச பழகுவதோடு, அறிவுக்கூர்மையும் பெறுவர் என்று பலர் எண்ணுகின்றனர். புற்றீசல்போல் புதிதாக முளைத்துவரும் தொலைக்காட்சிகள் குழந்தைகளுக்கு தொல்லைக்காட்சிகளாக மாறிவருவது ஒருபுறம். அதிலும் குறிப்பாக கல்வி தொலைக்காட்சியையோ, கல்வித் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையோ குழந்தைகள் பார்ப்பதால் அறிவுக்கூர்மை அடைவர் என்ற அசையாத நம்பிக்கை பெற்றோர் பலரிடம் உள்ளது. இதற்காக குழந்தைகள் பிறந்த சில மாதங்களிலே இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு வசதி செய்துகொடுக்கின்றனர். ஆனால் கல்வி தொலைக்காட்சியை குழந்தைகள் குறிப்பாக பிறந்த முதல் இரண்டு ஆண்டுககால மழலைப் பருவத்தில் பார்ப்பதால் நன்மை கிடைக்குமா என்பது பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. தொலைக்காட்சி பார்ப்பதால் அறிவு வளரும் என்ற பெற்றோரின் நம்பிக்கைக்கு மாறான முடிவுகளை இந்த ஆய்வு வெளியிட்டுள்ளது. இரண்டு வயதிற்குட்ப்பட்ட மழலையரின் மூளை வளர்ச்சிக்கு கல்வி தொலைக்காட்சிகளோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோ உதவவில்லை என்று இவ்வாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலுள்ள குழந்தைகள் மருத்துவமனையின், ஊடகம் மற்றும் குழந்தைகள் நல மையத்தின் துணை ஆய்வாளர் Marie Evans Schmidt அம்மையார் இந்த ஆய்வை மேற்கொண்டார். அப்போது 800 இளைஞர்களை பற்றி அவர் ஆராய்ந்தார். முதல் மூன்று ஆண்டுகால மழலைப்பருவத்தில் அவர்களின் நேரம் செலவிடப்பட்ட விபரங்களை பெற்றோரிடம் கேட்டு தெரிந்து கொண்டார். குறிப்பாக தொலைக்காட்சியை பார்ப்பதில் அல்லது குறுந்தகடு மூலம் படங்கள் பார்ப்பதில் அவர்கள் செலவிட்ட நேர அளவையும், அவர்களின் மொழி மற்றும் உடலளவில் இயங்கி செயல்படும் திறன்களை பற்றியும் பதிவு செய்தார். குழந்தைகள் ஓடியாடுவது, மண்ணில் விளையாடி வடிவங்கள் செய்து மகிழ்வது போன்றவற்றை தான் உடலளவில் இயங்கி செய்யும் திறன்கள் என்கிறோம்.

Marie Evans அம்மையார் மேற்கொண்ட ஆய்வுபடி, பொதுவாக அந்த இளைஞர்கள் இரண்டு வயது வரையான, மழலைப்பருவத்தில் நாளுக்கு 1.2 மணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பதில் செலவிட்டிருந்தனர். இந்த தகவல்களை ஆராய்ந்தபோது, தொலைக்காட்சி பார்ப்பதில் அதிக நேரம் செலவிட்டவர்கள் மூன்று வயதாகியபோது, மொழி மற்றும் உடலளவில் இயங்கி செயல்படும் இதர திறன்களில் மோசமாக இருந்ததை Marie Evans அறியவந்தார். இந்த கட்டத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகம் பார்த்ததால் எதிர்மறை பாதிப்பு அடைந்த குழந்தைகள் மொழி மற்றும் இதர திறன்களில் மோசமாக இருந்தனர் என்று எண்ணினர்.

பின்னர், குழந்தைகளை பாதிக்கும் பிற காரணிகளை பற்றி Marie Evansசும் அவரது குழுவினரும் ஆய்வு செய்தனர். பெற்றோரின் கல்வி நிலை மற்றும் வீட்டு வருமானம் ஆகிய பல காரணிகளை ஆராயந்தனர். அப்போது தான் தொலைக்காட்சி பார்ப்பதற்கும் அறிவு வளர்ச்சிக்கும் இடையில் தொடர்பில்லை என்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குழந்தைகளின் அறிவு வளர்ச்சியில் செல்வாக்கு ஏற்படுத்தவில்லை. ஆனால் பெற்றோரின் கல்வி நிலை மற்றும் பொருளாதாரா நிலைகள் தான் ஆழமான செல்வாக்கை ஏற்படுத்தி இருந்தது தெரியவந்தது. ஆய்வின் தொடக்கத்தில் தொலைக்காட்சி பார்ப்பது குழந்தைகளின் அறிவு வளர்ச்சியோடு தொடர்புடையதாக தோன்றியது. ஆனால் வீட்டிலுள்ள பிற சுற்றுச்சூழல்களால் ஏற்பட்ட விளைவே அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்க செய்துள்ளது என்பதை பிந்தைய ஆய்வின் போது தெரிந்து கொண்டனர்.

இரண்டு வயதிற்குட்ப்பட்ட மழலையரை தொலைக்காட்சி பார்க்க செய்வதால் அவர்களின் அறிவு வளர்வதில்லை என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அப்படியானால் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை தூண்டவிரும்பும் பெற்றோர் என்ன தான் செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களா? குழந்தைகளோடு குழந்தையாக விளையாடி மகிழ வேண்டும். அவர்களோடு பேசி உரையாடி, கற்றுக்கொடுக்க வேண்டும். சைகைகளால் பரிமாறி அவர்களை பண்படுத்த வேண்டும். நல்லவை செய்யும்போது பாராட்டி, தீயவை செய்யும்போது அறியாமல் செய்வதால் கனிவோடு திருத்தி சொல்லிக்கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட சாதராண நடைமுறைகள் தான் குழந்தைகளை பண்படுத்தி அவர்களின் மொழி, சொல் வளம், இதர சிறப்பு திறன்களை உயர்த்த உதவுகின்றன.

இன்று தந்தையும் தாயும் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தால், தொலைக்காட்சி பெட்டிக்கு முன்னால் முடங்கிபோகின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட தனக்கு தரவில்லையே என்று ஏங்கும் குழந்தைகள் வீட்டிலுள்ள தொலைக்காட்சி பெட்டியாக இருக்க விரும்புகிறேன் என்று கூறுமளவுக்கு இன்றைய சூழ்நிலை உருவாகியுள்ளது. தொலைக்காட்சி பெட்டியின் முன் செலவிடும் நேரத்தை குழந்தைகளோடு செலவிட்டால், குழந்தைகளின் வளர்ச்சி நமக்கே புலப்படும்.

சீன வானொலி


னித வாழ்வில் பலவகையான பருவ நிலைகளை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். குழந்தை பருவம், வளர் இளம் பருவம், வாலிப் பருவம், இடைநிலை பருவம், முதியோர் பருவம் என ஒருவாறு பெயரிடலாம். எல்லாப் பருவ நிலைகளிலும் பொதுவாக இதையே ஆண்கள், பெண்கள் என இரு பாலர்களுக்கும் ஒவ்வொரு பருவகால கட்டங்களிலும் அந்தந்த பருவ நிலைக் கேற்ப உடல் மற்றும் மன நிலைகளில் மாறுதல்கள் தோன்றக்கூடும், நலமான வாழ்க்கை என்பது பொதுவாகவே நலமான உடல், நலமான மனம் என்ற இரண்டையும் உள்ளடக்கியதுதான். ஒன்றுக்கொன்று தொடர்புடையதும் கூட, நலவாழ்விற்கு உடல், மனம் என்ற தனிமனித பக்கமும் சமூகம் என்ற மூன்றாம் பக்கமும் உண்டு. இந்த மூன்று பக்கங்கள் அல்லது முப்பரிமானங்கள் ஒன்றொடு ஒன்று தொடர்புடைய காரணத்தினால் ஒன்றின் குறை ஒன்றை பாதிக்கவே செய்யும். உடல் குறை மனதைப் பாதிக்கும், பாதிக்கப்பட்ட மனநிலை உடல் நலனைப் பாதிக்கும். சமூகச் சூழல் உடல், மனம் இவ்விரண்டையுமே பாதிக்கும் தன்மை உடையது.

இது தாண்டிய ஆன்மீக உணர்வு என்பது உடலையும், மனதையும் பாதிக்க வல்லது. தெளிவாக சொல்லப்போனால் மாற்றவல்லது என்றாலும் கூட இக்கட்டுரையில் ஆன்மீக தொடர்பு பற்றி நாம் பேசப் போவது இல்லை. அதிலும் குறிப்பாக வளர் இளம் பருவத்தில் பெண்களுக்கு ஏற்படக் கூடிய பாலியல் சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே இங்கு தொட்டுச் செல்லப் போகிறோம். மேலை நாட்டு மருத்துவமான ஆங்கில மருத்துவத்தில் நாம் முன்னர் பேசி ஒருங்கிணைந்த விஷயங்களான உடல் நலம், மனநலம், மூன்றாவதான சமூகநலம் என்ற மூன்றின் ஒருங்கிணைந்த நலப்போக்கு [INTEGRATED HEALTH PERPECTIVE] அவ்வளவாகக் காணப்படுவதில்லை. ஆங்கில மருத்துவத்தில் நல வாழ்க்கை எது என்று கேள்வி கேட்கப்படும் பொழுது அது சிக்கலான கேள்வியாக இருக்கிறது.

மனிதர்களின் நல வாழ்வுக்கு பொறுப்புடைய அரசுகள் பெரும்பாலும் மேலைநாட்டு மருத்துவத்தின் அடிப்படையிலேயே பார்க்கின்றன. அரசு மருத்துவமனைகள் மேலைநாட்டு தத்துவத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்ற காரணத்தினால் பெரும் செலவில் மருத்துவ நிலையங்கள் (மருத்துவ கல்வி + மருத்துவமனைகள்) நடத்தப்படுகின்றன. பல பரிசோதனை ஆய்வுகள், கருவிகள் சார்ந்ததாகவே இருக்கிறது. அதனால் குணப்படுத்துதல் என்பது பணத்தின் அடிப்படையில் அமைந்து விடுகிறது. எல்லா மக்களுக்கும் சென்றடையக் கூடிய மருத்துவம் மாற்று மருத்துவம்தான், ஏனெனில் இது ஒரு ஒருங்கிணைந்த நலவாழ்வு கொள்கை அடிப்படையில் அமைந்துள்ளது.

வளர் இளம் பருவத்தில் பாலியல் மாற்றம் மற்றும் பாலியல் உறுப்புகள் வளர்ச்சி காரணமாக ஒரு சுதந்திரப் போக்கினை மனதில் இனம் கண்டு கொள்ள முடியும். இது பெரும்பாலும் உடல் இயல் சார்ந்ததாகவே இருக்கின்றது. இதுவரை பெற்றோர்கள் கூறும் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த இந்த வளர் இளம் பருவத்தினர் தம் வயது ஒத்தவர்களின் ஆலோசனைகளுக்கே முக்கியத்துவம் தருவார்கள். இது சுதந்திரமான மனக்போக்கின் முதல் அறிகுறி ஆகும். இந்த கால கட்டங்களில் பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களை அறிவுரையாக கூறுவதை விடுத்து ஆலோசனைகளாகக் கூறும் போக்கினை கைக் கொள்ள வேண்டும். குழந்தைத்தனமாக வாழ்க்கையில் நோக்குகின்ற போக்கிலிருந்து இந்த பருவத்தினர்கள் முற்றிலும் விடுபட்டு விட்டார்கள் என்று சொல்ல முடியாது எனவே இவர்களை வயது முதிர்ந்தவர்களாக தங்களை தாங்களே கருதிக் கொள்வார்கள். தங்கள் பாலியல் சார்ந்த பிரச்சனைகளை தங்கள் வயது ஒத்தவர்களிடமே பகிர்ந்து கொள்ளும் காரணத்தினால் அவர்களுடைய தோழமை யார், யாரிடம் இருக்கின்றன என்பதிலும் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். நல்ல பழக்க வழக்கங்களை உடையவர்களோடு பழகுவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.

ரகசியங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் இந்த பருவத்தினரிடம் அதிகம் காணப்படும். எதிர் பாலினரிடம் அதிக கவர்ச்சி தோன்றக் கூடிய பருவம் இது. இதில் மிக அதிகமான கண்டிப்பு காட்டுவதன் மூலம் பெற்றோர்கள் தங்களிடமிருந்து வளர் இளம் பருவத்தினரை நெருக்கமான மன உறவு நிலையிலிருந்து தள்ளி வைத்துவிடும் அல்லது கண்டு கொள்ளாத மனநிலை தோன்ற வாய்ப்பு ஏற்பட்டு விடும். [DISTANTING OR INDIFFERENT ATTITUDE] எதிர் பால் இனக்கவர்ச்சி காரணமாக தங்களை மிகவும் அழகு படுத்திக் கொள்கின்ற ஆர்வம் மிகுதியும் காணப்படும். கண்ணாடியின் முன்பு அதிக நேரம் நின்று தங்களை முன்னும், பின்னும் பார்த்து தங்களாகவே தங்கள் உடலை ரசிக்கும் போக்கும் காணப்படும். இதை மிகப்பெரிய தவறாக எண்ணிவிடக் கூடாது. அழகு சாதனங்கள் மூலம் தங்கள் அழகை மிகைப் படுத்திக்கொள்ள எண்ணுகின்ற இவர்களின் போக்கை வியாபார நோக்கோடு பயன்படுத்துகின்ற விளம்பரங்கள் இன்றைய கால கட்டத்தில் மிக, மிக அதிகம், தொலைக்காட்சி விளம்பரங்கள் இந்த மனப்போக்கை முதலீடாக வைத்துத்தான் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர் என்று சொன்னால் மிகையாகாது.

அன்பு என்பது ஒரு அற்புதமான உணர்வு அது தீவிரமானதாக ஆகும்பொழுது அதனை காதல் என்றும் சொல்லலாம். இந்த அன்பு அல்லது பாசம் பரிமாற்றத்தின் மூலம் தான் புரிந்து கொள்ளப்படுகிறது. அன்னை குழந்தையிடம் கொள்ளும் அன்பு, ஆசிரியர்கள் மாணவர்களிடம் கொள்ளும் அன்பு, மனிதர்கள் மிருகங்களிடம் கொள்ளும் அன்பு, குடும்பத்தார்க்கு இடையில் ஒருவருக்கொருவரிடம் ஏற்படுகின்ற அன்பு, மனிதர்கள் கடவுளிடம் கொள்ளும் அன்பு என்பதான இறை அன்பு என பல பரிமாணங்கள் உண்டு. என்றாலும் கூட காதல் என்றவுடன் ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படுகின்ற அன்பு என்பதாக மட்டுமே பல சமயங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதுண்டு. வளர் இளம் பருவத்தினிரான ஆண் பெண் இடையே தோன்றும் இனக்கவர்ச்சி கூட பல சமயங்களில் தீவிரமான அன்பாக புரிந்து கொள்ளப்படுவதுண்டு. இவர்களுக்கிடையே ஏற்படக்கூடிய அன்பு பரிமாற்றம் உடலியல், பாலியல் ரீதியாக மாறி உடலுறவு கொள்ளுதல் என்னும் நிலையாக உருப்பெருமேயானால் அந்த அன்புறவு திருமணம் எனும் உறவாக முழுமை பெறாமல் முறிந்து விடும்போது அது பெருமளவில் பெண்களைத்தான் பாதிக்கும் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது.

அதிலும் ஆணாதிக்க சமூக அடிப்படையில் அமைந்துள்ள நம் இந்திய கலாச்சாரத்தில் இது போன்ற பாதிப்புக்குள்ளான ஆண்களை விட பெண்களுக்கு திருமண வாய்ப்பு என்பது மிகவும் அரிதாகி விடுவதாகவோ அல்லது திருமண வாழ்வுக்குப் பின் நிம்மதியற்ற வாழ்க்கையாக அமைந்துவிடவோ கூடும்.

எனவே வளர் இளம் பெண்கள் பூப்பு எய்தும் முன்னரே இது பற்றிய புரிதலை பக்குவமாக கற்றுத்தர வேண்டியது பெரியவர்களான எல்லாருடைய கடமையும், குறிப்பாக பெற்றோரின் கடமையும் ஆகும். இது படிக்கின்ற குழந்தைகள் மற்றும் பணி செய்யும் குழந்தைகள் எல்லோர்க்கும் பொருந்தக் கூடியது ஒன்றுதான், என்றாலும் பணி செய்யும் குழந்தைகளை விட பள்ளிக் குழந்தைகளிடம் இந்த காதல் வயப்படும் மனநிலை தோன்றும் போது படிப்பில் கவனம் சிதறுதல் காரணமாக தொடர்கல்வி கடுமையாக பாதிக்கப்படும்.

நம்மவர்களிடையே மனநல ஆலோசனைக்காக நிபுணர்களை கலந்து ஆலோசிக்கும் பழக்கம் மிகவும் குறைவு. அடிப்படை நிலையிலேயே இனம் கண்டு கொண்டால் மனச்சிதைவு ஏற்படும் நிலைக்கு தள்ளப்படாமல் தப்பிக்கலாம். ஆங்கில மருத்துவத்தைவிட ஹோமியோ மற்றும் மலர் மருத்துவங்களில் நல்ல குணம் பெற வாய்ப்புகள் உண்டு என்பதோடு மிகக்குறைந்த செலவிலேயே பூரண மிக்க நலம் பெறலாம்.

- மாற்று மருத்துவ இதழ்