"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் மனிதனின் வளர்நிலைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. தொழில் நுட்பம் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியில் தொடங்குகின்றது. இதனை மேற்கொள்ளும் அறிவியலார் குழந்தையைச் சுமக்கும் கர்ப்பிணிப் பெண்ணைப் போன்றவர்கள்; நிறைய எதிர்பார்ப்பும் அதைவிட நிறையக் கவலையையும் சுமக்கின்றார்கள். குழந்தை எப்பொழுது பிறக்கும்? அது என்ன பண்புகளைக் கொண்டிருக்கும், அதன் நிறம் என்னவாயிருக்கும் - என்பதைப் போன்ற ஆர்வமும் அதனையும் விழுங்குமளவிற்கு அக்குழந்தை நல்லபடியாகப் பிறக்குமா என்பதைப் போன்ற கவலைகளும் அவர்கள் உள்ளத்தை நிறைத்திருக்கும். புதுக்குழந்தையாக அறிவியல் கண்டுபிடிப்பு வெளிவந்தவுடன் எல்லார் கவனமும் அதன் மேல். அதற்குப் பெயரிடுதலும் காண்பவர் எல்லாரிடமும் தன் கண்டுபிடிப்பைக் காட்டி மகிழ்தலுமாக ஒரே மகிழ்ச்சி வெள்ளந்தான். சில நாட்களில் பள்ளிக் குழந்தையைப் போல் அறிவியல் கண்டுபிடிப்பும் பத்தோடு ஒன்றாகி மறக்கப்படுகின்றது. பின்னர் தொடர்ச்சியான அறிவியல் ஆராய்ச்சியால் அது மெல்ல வளரத் தொடங்குகின்றது. மனித வாழ்வைப்போலவே அறிவியலிலும் விடலைப் பருவம் உண்டு, அது சிறுவனாயிருக்கும் அறிவியல் பிறருக்குப் பயனளிக்கக் கூடிய மனிதனாய் - தொழில்நுட்பமாய் - முதிர்ச்சியடையும் தருனம். அக்கட்டத்தில் அது வளர்ச்சிக்கான வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்து நல்ல தொழில்நுட்பமாக, இளைஞர்களைப் போல சமுதாயத்திற்கு பயன்படும் துடிப்புகொண்டாதாக மாறுகின்றது. பின்னர், வயோதிகனாகப் பரிணமிக்கிறது, முதிர்காலத்தில் தன் அனுபவத்தால் பிறருக்கு அறிவூட்டும் மூதறிஞன் போல இன்றைக்கு கணிதத்தைக் கூறலாம். இளைஞனாகத் திகழ்பவை நிறைய நம்மில் உண்டு - உதாரணமாக குறைகடத்தித் தொழில்நுட்பம் (SEMICONDUCTOR TECHNOLOGY), நோய்த்தடுப்புத் தொழில்நுட்பம் (IMMUNIZATION) , அறுவை சிகிச்சை (SURGERY), இவற்றைக் காட்டலாம்.

இவை எல்லாவற்றையும் விட சுவையான பருவம் - விடலை. இக்கால கட்டத்தில்தான் எத்தனை விரைவான மாற்றங்கள் - தன்னைத் தானே நிலை நிறுத்திக்கொள்ள வேண்டியமை, பிறரிலிருந்து தன்னை மாறுபட்டவனாகக் காட்டிக்கொள்ளுதல், மற்ற வளர்வனவற்றுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் ஆர்வம் - அப்பப்பா, அதுதான் எத்தனைச் சுவையானது. இன்று இத்தகைய நிலையில் இருப்பவையாக நிறைய உள்ளன - மரபு மருத்துவம் (GENE THERAPY), மின்வணிகம் (E-COMMERCE), வானிலை ஆராய்ச்சி (WEATHER PREDICTION), சூழியல் (ECONLOGY) ஆய்வுகள். இவை தங்களுக்கே உரித்தான விரைவில் மாறும், முதிர்ச்சியடையும் திறனால் பலரது கவனத்தை எளிதில் ஈர்க்கின்றன. இத்தகைய விடலைத் தொழில்நுட்பங்களுள் ஒன்று மரபு மாற்றப்பட்ட உணவுகள் (GENETICALLY MODIFIED FOODS, GM FOODS), இதற்குத்தான் எத்தனை எதிர்ப்பு. இது வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ள வகுத்துவரும் இன்னொரு ஆயுதமா? இது சூழலுடன் இயைந்து மாறாமல் தன்னிலையாக மாறுவதால் சூழலைச் சிதைக்கவல்லதா? இது பணமுதலைகளான பன்னாட்டு நிறுவனங்களின் முற்றிலுமான வியாபார தந்திரமா? இதற்குத்தான் எத்தனை ஆதரவும் எதிர்பார்ப்பும் - நாம் உண்ணும் உணவுகளையும் அதன் சுவையையும் திறனையும் உயர்த்த வந்ததா? கட்டுக்கடங்காத மக்கள் பெருக்கத்திற்கு உணவளிக்க வல்ல ஒரே வரப்பிரசாதமா?

தாவரங்களின் தன்மை மாற்றுதல் இன்று நேற்றாக நடந்துவரும் செயலல்ல. இது எப்பொழுது தோன்றியது என்று யாராலும் அறுதியிடமுடியாது. ஒட்டுமாங்கன்றுகளும், பலவண்ண ரோஜாச் செடிகளும் மனிதனால் வடிவமைக்கப்பட்டவை என்பது எல்லோருக்கும் தெரியும். உணவு அறிவியலாளர் டாக்டர் மா. சாம்பசிவம் சுவாமிநாதனின் அயராத முயற்சியால் இந்தியாவிலும் அதைத் தொடர்ந்து CHINA முதல் பிலிப்பைன்ஸ் வரை நிகழ்ந்த பசுமைப்புரட்சி அற்புதங்களையும் நாம் அறிவோம். இது எல்லோராலும் எளிதில் உணரப்பட்டது - ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது தாவர ஒட்டு வளர்ச்சி எனப்படுவது. உயர்குணங்களைக் கொண்ட, சுவையான மாம்பழத்தை அதன் உற்பத்தித் திறனைப் பெருக்க, சுவையற்ற நாரைக்கொண்ட ஆனால் அதிக அளவில் காய்க்கவல்ல நாட்டுப்பழங்களுடன் ஒட்டுப் போட்டு அதன்மூலம் தரமான பழங்களின் உற்பத்தியைப் பெருக்குதல் என்பது நாம் நன்றாக அறிந்ததே.

உயிரிகளின் குணங்களும் தன்மைகளும் அதன் மரபுக்கூறான டி.என்.ஏ எனும் மூலக்கூறினால் நிர்வகிக்கப்படுகின்றது. டி.என்.ஏ, ஒரு நீளமான வாக்கியத்தைப் போன்றது. உதாரணமாக, நெல்மணியின் நீளம் அதன் டி.என்.ஏயின் ஒரு குறிப்பிட்ட சொற்றொடரால் நிர்வகிக்கப்படுகின்றது. இந்த சொற்றொடரை மாற்றி மணிநீளத்தைத் திருத்தியமைக்க இயலும். முன் பத்தியில் சொன்ன தாவர ஒட்டுப் பெருக்கத்திலும் இதுதான் நடைபெறுகின்றது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் மிக எளிதானது, ஒட்டுப் பெருக்கத்தில் விளையும் செடியின் பிற பண்புகளை நம்மால் ஊகிக்கவோ, கட்டுப்படுத்தவோ இயலாது. மரபு மாற்றத்தில் ஒரு குறிப்பிட்ட பண்பைக் குறியாகக் கொண்டு அதற்கான டி.என்.ஏ பகுதியை மாற்றியமைக்க இயலும். உயிர்தொழில்நுட்ப (BIOTECHNOLOGY) வளர்ச்சியாலும் மூலக்கூறு உயிரியல் (MOLECULAR BIOLOGY) முன்னேற்றங்களாலும் இத்தகையை அடிப்படை ஆய்வுகள் இப்பொழுது ஏதுவாகியுள்ளன.

அறிவியல் முறை

இது எவ்வாறு நிகழ்த்தப்படுகின்றது? முதலில் தொழில்நுட்பவியலார் ஒரு குறிப்பிட்ட பண்பினை இலக்காக கொள்வார்கள். உதாரணமாக நோய் எதிர்ப்பு சக்தி எனக் கொள்வோம். இதனை நிர்வகிக்கும் டி.என்.ஏ பகுதியை ஆராய்ந்து தெளிவர், இதன் பின் என்ஸைம்கள் எனப்படும் வேதிக்கலவையால் இப்பகுதியை 'வெட்டி' எடுப்பார்கள். பின்னர் வேறு சில வேதிப்பொருள்களால் பிற உயிரியிலிருந்து (தாவரமோ, விலங்கோ) எடுக்கப்பட்ட உயர்குண டி.என்.ஏ பகுதியை (இதுவும் ஒரு வேதிக்கலவையே) 'ஒட்டுவார்கள்'. பொதுவில் சேர்க்கப்படும் கலவை, சேருமிடத்திற்கு வேதியிணையாக (CHEMICAL PAIR) இருக்கும், இதனால் இவற்றின் சேர்க்கை உறுதியாகும். இதனை மேலும் நிச்சயிக்க சில என்ஸைம்களைச் சேர்ப்பார்கள்.

இதன்பின்னர் நடைபெற வேண்டியவை எல்லாம் வழக்கமான ஆய்வக மற்றும் நடைமுறை சோதனைகள். உருவாகும் தாவரத்தினைப் பெருக்குவார்கள், அதன் பல்வேறு குணங்களை ஆராய்வார்கள்; குறிப்பாக இலக்காக்கப்பட்ட பண்பின் மாற்றத்தை நன்றாக சோதிப்பார்கள். பின்னர் இச்சோதனையால் பிற பண்புகள் மாற்றமடைந்திருந்தால் அவற்றினை உணர்வார்கள். அதன்மூலம் ஏற்படக்கூடிய குறுகியகால மற்றும் நீண்ட கால விளைவுகளை ஆராய்வார்கள்.

ஏற்கனவே விற்பனையாகும் மாற்றப்பட்ட உணவுகள்

நீங்கள் அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ வசிப்பவரென்றால் உங்களை அறியாமலேயே இந்த உணவு வகைகளை நீங்கள் முன்னரே உட்கொண்டிருக்க 80% சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்தியாவிலோ அல்லது இலங்கையிலோ வசிப்பவரென்றால் இந்த சதவிதம் மிகவும் குறைவு; ஆனால் இல்லை என்று சொல்லிவிட முடியாது.

உணவுப் பொருள் - மாற்றப்பட்ட குணாதிசயங்கள்

தக்காளி - கெட்டியான தன்மை, அதிக சத்துப் பொருட்கள், நாட்பட சேமிக்கும் திறன்

உருளைக்கிழங்கு - நோய் எதிர்ப்புத்தன்மை

சோளம் - பூச்சிக்கொல்லியால் பாதிக்கப்படாமை

சோயா மொச்சை - களைக்கொல்லி எதிர்ப்புத்திறன்

கனோலா - நோய் தடுப்புத் திறன்

அமெரிக்க அரசாங்கத்தின் உணவுக் கட்டுப்பாட்டுத் துறையின் பரிந்துரைகளின்படி இத்தகையப் பொருட்களின் விற்பனைப் பெட்டியில் இவை 'மரபு மாற்றப்பட்ட உணவுகள்' எனப் பொறிக்கப்பட வேண்டும். இந்த விதிமுறைகள் இத்தொழில்நுட்பத்திற்கு எதிர்ப்புமிகுந்த ஐரோப்பிய சமுதாய நாடுகளில், குறிப்பாக, பிரிட்டனில் இன்னும் கடுமையானவை. ஆனால் நாளொரு மேனியும், பொழுதொரு தாவரமுமாக வளர்ந்துவரும் இந்தத் தொழில்நுட்பத்தினால் விரைவில் இவைகளுக்கும் வழக்கமான உணவுப் பொருட்களுக்கும் வித்தியாசமில்லாமல் போகக்கூடும். தக்காளியில் வேண்டுமானால் பொறிக்கலாம், தக்காளி கொண்டு தயாரிக்கப்படும் பழச்சாறுகளிலும், பாஸ்டா கலவைகளிலும் சற்றே கவனமாக இருந்து இவ்விதி கடைபிடிக்கப்படுகின்றதா என நோட்டமிடலாம். ஆனால், ஆயத்த உணவுக் கடைகளில் கிடைக்கும் உருளைக்கிழங்கு வறுவலிலும், அதனுடன் வினியோகிக்கப்படும் தக்காளிக் கலவையிலும் எந்தவகையான தாவரம் பயன்படுத்தப்பட்டது எனக் கண்காணிப்பது மிகவும் கடினம். இதற்கான விதிமுறைகளை அரசாங்கங்கள் வகுக்கும்பொழுது, மொன்ஸான்டோ, கால்ஜீன் போன்ற பன்னாட்டு உயிர்தொழில் நுட்ப நிறுவனங்களும், அதனை பெருமளவில் பயன்படுத்தும் கெல்லாக்ஸ், நெஸ்லே, மக்டொனால்ட் போன்ற உணவுத் தயாரிப்பாளர்களிடமிருந்தும் அவர்களின் வணிக சாத்தியக்கூறுகளைப் பாதிப்பதாக பெரும் கூக்குரல் எழுகின்றது. ஒருவிதத்தில் இதற்கும் நியாயம் உள்ளது, இன்றைக்கு நாம் பயன்படுத்தும் தாவர மற்றும் விலங்கு உணவுகளில் 95% க்கும் மேற்பட்டவை ஒட்டுப்போடுதல், மட்டும் தீவிர இனக்கலப்பு செய்தலால் மாற்றப்பட்டவையே, இவற்றைப்பற்றி நாம் கவலைப் படுவதில்லை. நம்மூர் பொன்னி அரிசி மூட்டையில் 'இது பல்வேறு அரிசித்தாவரங்களை செயற்கை முறையில் ஒட்டி, இனப்பெருக்கம் செய்து உருவாக்கப்பட்டது' - என ஒருக்காலும் பொறிக்கப்படுதில்லை.

இதற்கு எதிர்ப்பு ஏன்?

இந்தத் தொழில்நுட்பத்தை எதிர்ப்பவர்கள் பின்வரும் காரணங்களை முன்வைக்கின்றார்கள்:

1. சூழலிலின் ஒரு கூறினை அதற்கு முற்றிலும் ஒவ்வாதவகையில் உடனடிமாற்றம் செய்வதால் சூழல் பாதிக்கப்படுகின்றது.

உதாரணமாக, பூச்சிக்கொல்லி எதிர்ப்பு சக்தி மிகுந்ததாக உருவாக்கப்படும் சூரியகாந்திப்பூவில் வழக்கமாக அதில் தேனருந்தும் வண்டு அதற்குப் போதிய தேன் கிடைக்காததாலோ, அத்தேனின் சுவை குறைவாலோ அதனை விரும்பாமல் போகக்கூடும். நாளடைவில் போதிய உணவின்றி அவ்வண்டினம் அழியக்கூடும். அவ்வண்டின் மூலம் அயல் மகரந்தச் சேர்க்கை கொள்ளும் வேறு தாவரங்களும் அழியக்கூடும். இச்சங்கிலி தொடர்ந்து சூழல் பெரிதும் மாற்றியமைக்கப்படக் கூடும். இத்தகைய மாற்றங்கள் தட்பவெப்ப மாறுபாடுகளுக்கு இட்டுச் செல்லக்கூடும்.

2. சூழல் பன்முகம் பாதிக்கப்படும். உதாரணமாக: களைக்கொல்லி எதிர்ப்பு சக்தி மிக்க கோதுமை பயிரிடப்படுவதால் விவசாயிகள் அளவுக்கு அதிகமான களைக்கொல்லிகளை பயன்படுத்தத் துவங்குவார்கள். இது களைகளை முற்றிலுமாக அழிக்கும். எல்லா களைகளும் உபயோகமற்றவை எனக் கருதுவது தவறு. உதாரணமாக கிளைபோஸேட் எனும் களைக்கொல்லி அழிக்கும் களைகளில் சில மண்ணில் நுண்ணுயிரிகள் வளர உதவி செய்கின்றன. இந் நுண்ணுயிரிகள் நைட்ரஜன் எனும் வளியை மண்ணில் நிலைப்படுத்துகின்றன; மண்ணில் நைட்ரஜன் இருத்தல் பல வழிகளில் தாவரங்களுக்கு இன்றியமையாதது. களைகளை முற்றிலுமாக அழித்தலின் மூலம், களைகள் மற்றுமின்றி இதர தாவர வளர்ச்சியையும் பாதிக்கின்றது.

இது தவிர, உயர் இரகத் தாவரங்களை மாத்திரமே பயிரிடுவதால் ஒரு குறிப்பிட்ட தாவரத்தின் பல்வேறு இனங்கள் அருகிவிட வாய்ப்பிருக்கின்றது. பூவன், தேன்கதளி, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, சிறுமலைப்பழம், செவ்வாழை, மொந்தன், பேயன் என்று ஒருகாலத்தில் விதவிதமாக விளைந்த காவிரிக் கரைகளில் இன்று மொரிஷியஸ் ரொபஸ்டா எனும் பச்சைப் பழம் ஒன்றே பயிரிடப்படுகின்றது, இது நோய் எதிர்ப்புமிக்க, குறுகிய காலத்தில் முதிரக்கூடிய தீவிர ஒட்டு இனமாகும். இதுமாத்திரமே ஆதாயம் கருதி விளைக்கப்படுவதால் வாழையின் பல்வேறு சுவைமிகுந்த இரகங்களை நாம் இழந்து வருவது கண்கூடு. இதைவிட உயிர்தொழில் நுட்பத்தில் கண்டுபிடிக்கக்கூடிய ஒருசில தானியங்களும் தாவரங்களும் பன்மடங்கு விரைவில் மற்றவற்றை நாம் முற்றிலுமாக மறந்துவிடச் செய்யக்கூடிவை

3. மனிதர்களுக்கு உயிரிகளை மாற்றும் உரிமையில்லை - இது சமூக, சமயம் சார்ந்த கொள்கையாகும். இத்தகைய குற்றச்சாட்டைப் பொதுவில் அனைத்து அறிவியல் முன்னேற்றங்களுக்கும் முன்வைக்கலாம்.

4. எல்லா விளைபொருட்களும் போதுமான அளவிற்கு ஆய்வக மற்றும் களச்சோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும். இவற்றால் தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் எந்த ஒரு தீங்கும் இல்லை என்பது அறுதியிடப்பட வேண்டும் - இதில் போதுமான என்பதன் வரையறை அவ்வளவு எளிதான காரியமல்ல. இதுதவிர இன்றைக்கு தாவர உயிர்த்தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள முன்னனி அறிவியலாளர்களில் 80 சதவீதத்தினர் உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் மானியம் பெற்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடுபவர்கள். இவர்களின் ஆய்வகச் சோதனைகள் எந்த அளவிற்கு நம்பகத்தன்மை கொண்டனவாக இருக்கும் என்பதிலும் ஐயப்பாடுள்ளது.

5. இதனால் விளையக்கூடிய சமூக, பொருளாதார மாறுபாடுகள் நிச்சயிக்கப் படவில்லை - பெரும்பாலான தொழில்நுட்பங்கள் முன்னேறிய நாடுகளிலேயே உருவாக்கப் படுகின்றன. இவற்றுடன் அவற்றின் வணிக, மற்றும் அரசியல் ஆதிக்கச் சாத்தியக்கூறுகள் இணைந்தே உள்ளன.

உதாரணமாக: மொன்ஸான்டோ நிறுவனத்தின் ஒரு கண்டுபிடிப்பின்படி, மரபு மாற்றப்பட்ட, உயர்குணங்கள் கொண்ட, தானிய வகைகளின் விதைமணிகளை அவர்கள் விற்கின்றார்கள். இவற்றில் 'இறுக்கும் மரபணுக்கள்' (TERMINATOR GENES) அடங்கியுள்ளன. இதன்படி ஒருமுறை விதைத்து விளைந்ததும் அப்பயிரின் உயர்குணங்கள் அடுத்த பட்டத்திற்கும் தொடர்ந்து வருவதில்லை. வேறு வகையில் சொன்னால், உங்கள் வயலில் விளைந்த நெல்லிலிருந்து நீங்கள் விதைநெல் திரட்ட முடியாது; அவ்வாறு திரட்டப்பட்ட விதைகள் விளையாது அல்லது அவற்றின் தரம் முதல் தலைமுறை (விதை நேரடியாக வாங்கப்பட்டது) பயிரைப்போல உயர்ந்ததாக இருக்காது. இந்த இறுக்கும் மரபணுக்கள் முதல் விளைச்சலிலேய அவற்றின் பண்புகளை மாற்றிக்கொள்ளத் தெரிந்தவை. இதன்மூலம் தொடர்ச்சியாக நீங்கள் மொன்ஸான்டோவிடமே விதை வாங்குவது உறுதி செய்யப்படும்.

6. அறிவியல் கண்டுபிடிப்புகள் காப்புரிமை பெற்றவை. இதன்மூலம் நிறுவனங்கள் 'உயிருக்கு உரிமை' பெறும் அபாயம் இருக்கின்றது.

இதனால் என்ன பயன்கள்?

உலகின் மக்கள்தொகையில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஏழை நாடுகளில் வசிப்பவர்களே. இதில் கனிசமான பங்கினர் ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ளனர். இந்நாடுகளின் நிலங்களில் பெரும்பங்கு பயிரிடப்படுவதில்லை அல்லது பயிரிடுவதற்கு ஏற்றதல்ல. தரமான உணவுப்பயிர்களை குறைந்த செலவில் உற்பத்தி செய்யமுடியுமென்றால் இவற்றின் பஞ்சம் தீருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இன்னும் தீவிரமாகச் சொல்லப்போனால் உயிர்தொழில்நுட்பம் போன்ற முற்றிலும் புரட்சிகரமான கருவிகள் இல்லாமல், மக்கள் வெள்ளத்தின் இந்த பெரும்பங்கிற்குப் பசி தீர்ப்பதென்பது முற்றிலும் இயலாத காரியம். கடந்த சில ஆண்டுகளாக உலகில் சிசுச்சாக்காடு (INFACT MORTALITY) அதிகரித்து வருகின்றது (குறிப்பாக மத்திய ஆப்பிரிக்கா), இது அரைநூற்றாண்டுகளாகத் தொடர்ச்சியான ஆரோக்கிய நிலைக்குத் தலைகீழாக உள்ளது - பெரிதும் கவலையைத் தரக்கூடியது. சமீபத்திய ஐக்கிய நாடுகளின் ஆய்வறிக்கை ஒன்று இந்தியாவை தர்மசங்கடமான நிலையில் காட்டுகின்றது - இந்தியக் குழந்தைகளில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கீகரிக்கப்பட்ட சத்துணவு அளவினைப் பெறுவதில்லை. இது தவிர பெருகிவரும் இயற்கையின் சீற்றத்தாலும் வழக்கமான பயிர்முறைகள் பலனில்லாமல் போய்வருகின்றன. இந்நிலையில் வளர்ந்துவரும் நாடுகளுக்கு உயிர்த்தொழில் நுட்பம் ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையில்லை.

பன்னாட்டு நிறுவனங்கள் காட்டும் நிலவரம் மிகவும் அற்புதமாக உள்ளது. உலகில் நீரும், விளைநிலமும் உயரப்போவதில்லை, இந்நிலையில் மும்மடங்கு விளைச்சளைத் தரவல்ல புதிய இரகங்கள் உலகின் பசிதீர்க்க இன்றியமையாததாகின்றன. இருக்கும் விளைநிலத்தை முற்றிலுமாகப் பயன்படுத்துவதன் மூலம் காடுகளை அழித்து விளைநிலமாக்களைத் தடுக்கலாம். இது உயிர்பன்முகத்தை (BIODIVERSITY) நிலைசெய்யும். குறுகியகால அறுவடையை உறுதிசெய்வதன் மூலம் கட்டுக்கடங்காது தப்பிவரும் பருவங்களைப் பற்றிய கவலையைக் குறைத்துக் கொள்ளலாம். வளரும் பயிர்களை மேலும் சுவையானதாகவும் சத்துள்ளதாகவும் மாற்றுவதன் மூலம் உலகின் உணவுத்தேவையை எளிதில் நிறைவேற்றலாம். சேமிப்புத்திறனைப் பெருக்குதல் மூலம் தேவையான நாடுகளுக்கு எளிதில் ஏற்றுமதி செய்யலாம். குறைந்த பூச்சிகொல்லி மற்றும் களைக்கொல்லியைப் பயன்படுத்துவதன் மூலம் இயற்கையான விவசாய முறைகளுக்கு மாறாலாம். தங்கள் முன் வைக்கப்படும் எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் இந்நிறுவனங்கள் அநேகமாகச் சரிவர பதிலளிக்கின்றன, முடியாத இடங்களில் பதிலற்ற எதிர்கேள்விகளை எழுப்புகின்றன. உதாரணமாக: 'உயிரிகளை மாற்றும் உரிமை மனிதனுக்குக் கிடையாது' எனும் சமயநெறி சார்ந்த கடுமையான வாதத்திற்கு, 'நீங்கள் உட்கொள்ளும் உணவுவகையில் மனிதானால் ஒருபொழுதும் மாற்றியமைக்கப்படாத தானியங்களோ, பழவகைகளோ என்னவிருக்கிறது எனக்காட்டுங்கள்' என்று கேட்கின்றார்கள்.

உண்மை நிலை

ஆனால் உண்மை நிலை வேறுவிதமாகக் காட்சியளிக்கின்றது. களைக்கொல்லி எதிர்ப்புதிறன் தம் தாவரங்களுக்கு உண்டென்பதால் அதிகக் களைக்கொல்லியைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்க முயலுகின்றனர். உலகின் பெரும்பகுதிக் காடுகளும், பன்முகம் கொண்ட சூழலும் பெரிதும் வளரும் நாடுகளிலேயே உள்ளன (உதாரணத்திற்கு பரப்பளவில் குறைந்த இந்தியாவின் தாவர மற்றும் விலங்குப் பன்முகத்தை அமெரிக்காவுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். கிரீன்பீஸ் எனும் தன்னார்வ சூழியல் பாதுகாப்புக் குழுவின் அறிக்கைப்படி இந்தியாவில் 50,000 க்கும் மேற்பட்ட அரிசி வகைகள் பயிரிடப்படுகின்றன, அல்லது ஒருகாலத்தில் பயிரிடப்பட்டன). பன்முகப் பாதுகாப்பு எனும் பெயரில் பயிரிடும் உரிமையையும் திறமையையும் தமக்குள்ளே பங்கிட்டு குழுவுரிமையாக்க முயற்சி செய்கின்றன. மாற்றியமைக்கப்பட்ட தாவரங்கள் முற்றிலும் எக்காலத்திலும் சிறந்ததாக விளங்கும் எனச் சொல்லுவதற்கில்லை. உதாரணமாக பசுமைப்புரட்சி காலத்தில் நெல்லைப் பாதிக்கும் எட்டு முக்கியமான வியாதிகளுக்கும், கிருமிகளுக்கும் எதிர்ப்பு கொண்டதாக அறிவிக்கப்பட்டு ஐ.ஆர்-36 எனும் நெல் வெளியிடப்பட்டது. விரைவிலேயே இதுவரை நெல்லைத் தாக்காத இரண்டு கிருமிகளால் பாதிக்கப்பட்டு அது குட்டையாகின்றது எனத் தெரியவந்தது.

மனிதனால் மாற்றப்படாத உணவுப்பொருளைக் காட்டச் சொல்லிக் கேட்கும் நிறுவனங்களின் வாதத்தில் ஒரு அடிப்படை முரண் பொதிந்துள்ளது. இதுவரை செயற்கையாகச் செய்யப்பட்டவை எல்லாம் மரபுத்தொடரில் மேலிருந்து கீழாகச் செய்யப்பட்டவை. இரண்டு பயிர்களை ஒட்டுவதன் பலன் அடுத்த தலைமுறையில் கிடைக்கும், அதன்பின் தலைமுறைகளில் அவை மரபுவிதிகளுக்குக் கட்டுப்பட்டுத் தொடரும். உயிர்தொழில் நுட்ப மாற்றங்கள் இவ்வாறில்லை. இது இணைக்கப்பட்ட உயிர் அந்த தலைமுறையிலேயே மாற்றம் காணும். இறுக்கும் மரபணு தொழில்நுட்பம் போன்றனவற்றால் அது அடுத்த தலைமுறைக்குத் தொடராது - ஆனால் நம்மால் ஊகிக்க முடியாத பிற பக்கவிளைவுகள் தொடரக்கூடும் - அவை சில தலைமுறைகளுக்குப் பின் முற்றிலும் அபாயகரமானவையாக மாறக்கூடும்.

இன்னமொரு முற்றிலும் புரட்சிகரமான, அபாயகரமான வேறுபாடும் உள்ளது. இதுவரைப் புழக்கத்திலிருக்கும் ஒட்டுதல் முறையில் மரபு சம்பந்தமுள்ள இரண்டு உயிரிகளையே இணைக்க முடியும் - உதாரணமா நெற்பயிருடன் மாங்கன்றை ஒட்டிட முடியாது. ஆனால் உயிர்தொழில் நுட்பத்தில் இது சாத்தியம், ஏன், இதற்கு ஒருபடி மேலேயே போய் தாவரங்களின் டி.என்.ஏ-வைப் பிளந்து அதில் மனித டி.என்.ஏ துண்டை ஒட்டிட இயலும். இதன்மூலம் எண்ணிப்பார்க்கவியலாத சாத்தியங்கள் புலப்படுகின்றன. விளையும் தாவரம் பலதலைமுறை இயற்கை மரபு மாற்றங்களுக்குப் பிறகு என்னவாக மாறும் என்பது யாராலும் ஊகிக்க முடியாதது.

கட்டுரைத் தொடக்கத்தில் குறிப்பிட விடலைத் தொழில்நுட்பம் எனும் தொடருக்கு இப்பொழுது விளக்கம் கிடைத்திருக்கும் என நம்புகின்றேன். உயிர்தொழில் நுட்ப வளர்ச்சியில் இது முக்கியமான கட்டமாகும் - நல்லனவாகவும் தீயனவாகவும் மாறுவது இந்தப் நிலையில்தான். இதில் நாளொரு வளர்ச்சியும், பொழுதொரு வேதனையும் தவிர்க்க முடியாதவை. எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் ஆக்கமும் உண்டு அழிவும் உண்டு. பலசமயங்களில் நாம் ஆபத்தைத் தெளிந்து தவிர்க்கின்றோம். சிலசமயங்களில் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற விலைகளைக் கொடுத்து உண்மைகளை அறிந்து கொள்கின்றோம். எனினும் இயற்கையை அறியும் மனிதனின் அடிப்படை உணர்வுக்கு எப்பொழுது அழிவு கிடையாது. இது மனிதனுக்கும் இயற்கைக்குமான ஓட்டப்பந்தயம் எனக்கருதுவதைவிட மனிதனும் இயற்கையுமாக கால்களைப் பிணைத்துக்கொண்டு மூன்றுகால் ஓட்டம் ஓடுவதாகவே கொள்ளவேண்டும், மனிதன் வேகமாக ஓடினால் இயற்கை அவனைப் பின்னுக்கிழுக்கின்றது. சக்திமிக்க இயற்கை இழுக்கும் திசையில் அவன் செல்லாவிடில் அவனுக்கு கால்வலி நிச்சயம். எல்லா கட்டங்களிலும் இயற்கைக்கு எதிராக ஓடத்துவங்கினால் கால்வலி ஏற்பட்டு ஓட்டம் மட்டுப்படுத்தப்படுவது உறுதி.

- வெங்கடரமணன் 


திண்ணை.காம்

தொடர்புள்ள இணையப் பக்கங்கள்:

கலியோர்னிய பல்கலை (டேவிஸ்) தாவர உயிர்த் தொழில்நுட்பம் குறித்த தகவல் பக்கங்கள்

மரபுமாற்றப்பட்ட உணவுகள் - உண்மைகள்

மரபுமாற்றப்பட்ட உணவுகள் குறித்த ஒரு பன்னாட்டுத் தன்னார்வ முனைப்பின் நிலையறிக்கை

உயிர்த் தொழில்நுட்பம்குறித்த அணைத்து விபரங்களுக்கும்

பன்னாட்டு உயிர்த் தொழில்நுட்ப நிறுவனம் - மொன்ஸான்டோ



HIV (வைரஸ்) எப்படி செயல்படுகிறது?

வைரசே "எய்ட்ஸ்" நோய்க்குக் காரணமாகும்

பொதுவாக HIV மனித உடலில் உள்ள எல்லா திரவங்களிலும் படிந்திருக்கிறது என்றாலும் கூட, இரத்தம், விந்து, பெண்ணுருப்புகளில் உருவாகும் திரவம், தாய்ப்பால் ஆகியவற்றின் வாயிலாகத்தான்பரவுகின்றது.

இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை சிறிது சிறிதாக அழித்து விடுகின்றன. அதன் விளைவாக "எய்ட்ஸ்" தோன்றுகிறது.

பரவும் முறைகள்

HIV பின்வரும் நான்கு வழிகளில் ஒருவரைத் தொற்றிக் கொள்கிறது.

1. பாதுகாப்பற்ற உடலுறவு
ஆணுறையைப் பயன்படுத்தாமல் மேற்கொள்ளும் பெண்ணுறுப்புப் புணர்ச்சி, ஆசன வாய்ப்புணர்ச்சி, வாய்வழிப் புணர்ச்சி ஆகியவற்றின் மூலம் ஒருவருக்கு HIV தொற்றிக் கொள்கிறது. எனவே எந்தப் பாதுகாப்பற்ற உடலுறவும் HIV தொற்றைப் பரப்புகிறது.

2. சுத்திகரிக்கப்படாத ஊசியைப் பயன்படுத்துதல்
போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாலோ சுத்தம் செய்யாத ஊசியை ஒருவருக்கொருவர் செலுத்திக் கொள்வதன் மூலம் HIV பரவுகிறது. இதே போல் அறுவை சிகிச்சையிலும் சுத்திகரிக்கப்படாத ஆயுதங்களைப் பயன்படுத்துவதனாலும், HIV பரவுகிறது.

3. பாதுகாப்பற்ற இரத்த பரிமாற்றம்
HIV உள்ள இரத்தம் மற்றும் இரத்தப் பொருட்களின் மூலம் எளிதாக பரவுகிறது.

4. பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுதல்
கர்ப்பகாலம், பேறு காலம், தாய்ப்பால் புகட்டும் காலம் ஆகிய காலங்களில் தாய் மூலம் குழந்தைக்கு HIV பரவுகிறது.

HIV பின்வரும் முறைகளினால் பரவுவதில்லை

1. கைகுலுக்குதல்
2. முத்தம்
3. தும்முதல், இருமுதல்
4. உணவு மற்றும் பொருட்களைப் பகிர்ந்து கொள்ளுதல்
5. கட்டித் தழுவுதல்
6. விளையாடுதல்
7. புகை வண்டி மற்றும் பேருந்தில் பயணம் செய்தல்
8. ஒரே அறையில் தங்குதல்
9. பொதுக் கழிவறைகளைப் பயன்படுத்துதல்
10. கொசுக்கடி மற்றும் பூச்சிகள்
11. பிமிக்ஷி மற்றும் "எய்ட்ஸ்" நோயாளிகளைக் காப்பாற்றுவோரிடமிருந்து
12. இரத்த தானம்
13. வியர்வை, கண்ணீர, சிறுநீர் ஆகியவற்றின் மூலம்

அறிகுறிகள்

HIV பாதிப்புக்குள்ளான பலரிடம் ஆரம்பநிலையில் அதற்கான அறிகுறிகள் தெரிவதில்லை. இருந்தபோதிலும் சிலரிடம் இது "ஃப்லு ஜீரமாக" (காய்ச்சல்) வெளிப்படுகிறது. அதுவும் இந்த வைரஸ் மூன்று முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகே தெரிகிறது.

இந்தத் தீவிர HIV பாதிப்பினால் ஏற்படும் உடல் நலக்குறைவு, காய்ச்சல், தலைவலி, உடல்ச்சோர்வு, குமட்டல், வயிற்றுப்போக்கு, நெறிகட்டுதல் (அக்குள், கழுத்துகவட்டி) போன்றவற்றினைத் தோற்றுவிக்கின்றது. இந்த அறிகுறிகள் கூட HIV தொற்றிய ஒரு சில நாட்களில் தெரிவதில்லை. மேலும் இது, ஆரம்பநிலையில் வேறு ஏதோ ஒரு வைரஸ் என்று தவறாகவே இனங் காணப்படுகிறது. எனவே ஆரம்ப நிலையில் HIV தொற்றைக் கண்டுபிடிப்பது கடினமாகும்.

தொற்று ஏற்பட்ட முதல் மூன்று மாதங்களில் வைரசின் எண்ணிக்கை கணக்கற்றுப் பெருகி, உடலின் பல பாகங்களிலும் பரவுகின்றன. குறிப்பாக மூட்டுக்களில் உள்ள திசுக்கள் இதனால் பாதிக்கின்றன. இந்நிலையில் அத்தொற்று, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகப் பரவிவிடுகின்றது.

உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் (வெள்ளை அணுக்கள்) அனைத்தும் ஒன்று திரண்டு போராடத் தொடங்கும் போதுதான் HIV யின் வேகம் சற்று குறைகிறது.

HIV தொற்றின் தீவிரமான அறிகுறிகள் தெரிய பல வருடங்கள் ஆகின்றன. பெரியவர்களுக்கு HIV தொற்றிய பிறகு அது வெளித் தெரிவதற்கு 10 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. HIV தொற்றோடு பிறக்கும் குழந்தைகளுக்கு அது தெரிய இரண்டு வருடங்கள் ஆகின்றன. இவ்வாறு அறிகுறிகள் தெரியாத நிலை மனிதருக்கு மனிதர் மாறுபடும்.

"எய்ட்ஸ்" வெளியில் தெரிய ஆரம்பித்த உடன் பாதிக்கப்பட்டவர் அடிக்கடி நோய் வாய்ப்படுவர். உடல் எடை குறைவு, தொடர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகியன எய்ட்ஸின் முக்கியமான அறிகுறிகளாகும். மேலும் எய்ட்ஸ் நோயாளிகள், காசநோய், பூஞ்சான் நோய் தொற்று, சில வகைப்புற்று நோய்கள், நிமோனியா போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

எய்ட்ஸ் பாதுகாப்பு

HIV தொற்றுவராமல் இருக்க தடுப்பூசிகளோ அதனை குணப்படுத்துவதற்கு மருந்துகளே இல்லை. HIV தொற்று வராமல் இருக்க ஒரே வழி பாதுகாப்பான நடத்தைகளே ஆகும்.

உடலுறவின் மூலம் பரவுவதைத் தடுத்தல்

பாதுகாப்பான உடலுறவுக்குப் பின்வரும் வழிகாட்டு நெறிகள் உதவும்.
ஒருவருக்கொருவர் உண்மையாக இருத்தல் வேண்டும். பாலுறவு நடத்தைகள் நபருக்கு நபர் வேறுபடுவதால் ஒருவருக்கொருவர் நம்பிக்கையோடு இருத்தல் வேண்டும். இருப்பினும் ஒருவர் மற்றொருவரை உண்மையாக இருக்க வலியுறுத்த வேண்டும்.

புணர்ச்சியில் கவனம் :- ஆணுறை கிடைக்கவில்லை என்றோ, ஆணுறை அணிந்து புணர்வது பிடிக்கவில்லை என்றோ கூறி, பெண்ணுறுப்புப் புணர்ச்சி, ஆசன வாய்ப் புணர்ச்சி, வாய்ப் புணர்ச்சி ஆகிய எதையும் மேற்கொள்ளக் கூடாது.

உடலுறவு கொள்வோரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். எண்ணற்ற நபர்களிடம் உடலுறவு கொள்வதை மாற்ற வேண்டும். இதே போல் அடிக்கடி உடலுறவு கொள்வோரை மாற்றுவதையும் குறைத்துக் கொள்ள வேணடும்

பிற பாதுகாப்பு முறைகள்

ஒரே முறை பயன்படுத்தக் கூடிய ஊசியை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக நரம்புகளில் செலுத்தும் ஊசியைப் பயன்படுத்தும் போது இதை கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும்.
இது முடியாமல் பல முறை பயன்படுத்தக் கூடிய ஊசியை ஏற்க வேண்டியிருந்தால் அது நன்கு சுத்திகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

அறுவை சிகிச்சையின் போதும் சுத்திகரிக்கப்பட்ட ஆயுதங்களையே பயன்படுத்த வேண்டும்.

கருவுற்ற பெண்கள், "தாய் சேய் தொற்றுத் தடுப்பு மையத்தை" அணுக வேண்டும். அங்கு பரிசோதனை செய்து கொண்டு HIV இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் மருத்துவர்களின் அறிவுரையைப் பின்பற்றி குழந்தைகளுக்கு இத்தொற்று பரவாமல் இருக்க முயற்ச்சிக்க வேண்டும்.

இரத்தம் தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட இரத்த வங்கிகளை அணுக வேண்டும். HIV தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் கூடிய இரத்தத்தைப் பெறுவது அவசியமாகும்.

ஒருவர் பால்வினை நோயைப் பெற்றிருந்தால், அவர் உடலுறவு கொள்ளும் போது அந்நோய் அதிகரித்து பல்வேறு மாற்றங்களை அடைந்து HIV தொற்றாக மாறிவிடும். எனவே பால்வினை நோய் உள்ளவர்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக தகுந்த சிகிச்சையினை மேற்கொண்டு இந்நோயை குணப்படுத்த வேண்டும்.

சிகிச்சை

HIV தொற்றை அழிக்க மருந்துகள் கிடையாது. எனவே எய்ட்ஸை குணப்படுத்த முடியாது. இருந்த போதிலும் HIV யின் வேகத்தைக் குறைக்கக் கூடிய மருந்துகள் இப்போது கிடைக்கின்றன. சந்தர்ப்பவாத தொற்றுக்களுக்கான சிகிச்சையுடன் இந்த மருந்துகளையும் எடுத்துக்கொண்டால் HIV பாதிப்பு உள்ளவர்கள் கூட ஆரோக்கியத்துடன் பல வருடங்கள் உயிர் வாழலாம்.
HIV கட்டுப்படுத்தம் மருந்துகள் "ஆண்டி ரெட்ரோ வைரஸ் மருந்துகள்" என்று அழைக்கப் படுகின்றன. இம்மருந்துகள் பல்வேறு நிறுவனங்களின் மூலம் மூன்று நிலைகளில் கிடைக்கின்றன. இவை இரத்தத்தில் கலந்துள்ள வைரசின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன. மருந்துகளில் ஏற்படும் ஒவ்வாமையைக் குறைக்க பொதுவாக "ஆன்டி ரெட்ரோ வைரஸ் மருந்துகளை கலப்பு சிகிச்சை முறையில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆன்டி ரெட்ரோ வைரஸ் மருந்துகளை எடுத்துக் கொள்பவர் முறையாகவும் தொடர்ச்சியாகவும் சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகும். இது மருந்தின் ஆற்றலை அறிந்து கொள்ளவும் அல்லது அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை அறிந்து விரைவாக அவற்றைப் போக்கவும் முடியும். ஒரு முறை "ஆன்டி ரெட்ரோ வைரஸ் மருந்துகளை எடுத்துக்கொள்ள தொடங்கிவிட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அம்மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மருந்துகளின் விலை மிக அதிகமாகும். தற்போது இம்மருந்துகளின் விலை குறைக்கப்பட்டிருக்கிறது.

HIV தொற்றுகளுக்கும் பால்வினை தொற்றுகளுக்குமான தொடர்பு

பால்வினை தொற்றுகளும் HIV தொற்றுகளும் உடலுறவின் மூலமே பரவுகின்றன.

பால்வினைத் தொற்றுகள் HIV தொற்றுக்கு வழிவகுக்கின்றன. பிறப்புறுப்பில் ஏற்படும் புண் வழியே HIV தொற்று எளிதாக உடம்பில் புகுந்து விடுகின்றன. இது சாதாரணப் புணர்ச்சியை விட 10 மடங்கு வேகத்தோடு பரவுகின்றன. இதே போல் பிறப்புறுப்பில் உருவாகும் திரவம் மற்றும் விந்து வெளிபாடு ஆகியவற்றின் மூலம் 5 மடங்கு வேகமாக பரவுகிறது.

உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள்

பால்வினை நோய்கள் உடல் உறவின் மூலம் தான் மிகமுக்கியமாக வருகின்றன. வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் ஆகியவையே இவற்றிற்குக் காரணமாகும். இவ்வகையில் குறைந்தபட்சம் 25 வேறுபட்ட பால்வினை நோய்கள் உள்ளன. இவை எல்லாமே 5 விதமான அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன.

1. பிறப்புறுப்புப் புண்:- இந்த வகைப் புண்கள் ஒன்றோ பலவோ இருக்கும். இவை வலியுடனோ வலி இல்லாமலோ இருக்கும். இவை சாதாரணக் கட்டியாகவோ நீருடன் கூடிய சிறு சிறு கொப்புளங்களாகவோ காணப்படும். இவை ஆண், பெண் இருவருக்கும் வரும்.

2. பிறப்புறுப்பிலிருந்து வெளிவரும் அசாதாரணப்போக்கும்:- ஒரு மனிதனின் சிறுநீர் துவாரத்தின் வழி சீழ் வெளிப்படுமானால் அது நிச்சயமாகப் பால்வினை நோயின் அறிகுறியாகும். இது அடிக்கடி சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலுடனோ வலியுடனோ வெளிப்படும். பெண்களுக்குத் துர்நாற்றத்தோடு ஒழுக்கு வெளிப்பட்டு துணிகள்கறைபடியுமானால் அது பால்வினை நோயின் அறிகுறியாகும்.

3. கவட்டியில் நெறிகட்டுதல் :- ஆண், பெண் இருபாலருக்கும் கவட்டியில் நெறிகட்டுதல். இது மிகவும் வலியினை ஏற்படுத்தும்.

4. விதைப்பை வீக்கம் :- மனிதனுக்கு விதைப்பை வீக்கமும் வலியும் பால் வினை நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

5. அடிவயிற்றில் தொடர்ச்சியான வலி :- பெண்களுக்கு தொடர்ச்சியான அடிவயிற்று வலி பால்வினை நோயாக இருக்கலாம். உடலுறவின் போது எப்போதும் மிகுந்த வலி ஏற்படுமானால் அது நிச்சயமாகப் பால்வினை நோயின் அறிகுறியே ஆகும்.

பால்வினை நோய்க்கான சிகிச்சை

1. அறிகுறிகள் தென்படவில்லை என்றாலும் கூட சிகிச்சையை முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அறிகுறிகள் மறைந்துவிட்டன என்பதனால் நோய் முழுதும் குணமாகி விட்டது என்று கருதிவிட முடியாது.

2. உடலுறவில் ஈடுபடும் இருவரும் ஒரே சமயத்தில் இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் மீண்டும் தொற்று ஏற்படாமல் இருக்கும்.

பால்வினை நோய்களிடமிருந்து பாதுகாப்பு


சுகாதாரம்

1. மாதவிலக்குக் காலங்களில் நன்கு துவைக்கப்பட்டு வெயிலில் காய வைத்தத் துணிகளைப் பயன்படுத்த வேண்டும். அல்லது கடைகளில் விற்கும் பஞ்சு (அ) நாப்கின்கள் பயன்படுத்த வேண்டும்.

2. மாதவிலக்கு காலங்களில் வெளிப்பாடு குறைவாக இருந்தாலும் கூட 6 லிருந்து 8 மணி நேரத்திற்கு ஒரு முறை துணி அல்லது பஞ்சு (அ) நாப்கின்களை மாற்ற வேண்டும்.

3. சிறுநீர் மற்றும் மலம் கழிந்த பின்பு பாலுறுப்புகளை நன்கு நீரால் சுத்தம் செய்து உலர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.

4. மலம் கழித்த பின்பு பிறப்புறுப்பிலிருந்து ஆசனவாய் நோக்கி நன்கு சுத்தம் செய்ய வேண்டும். மாறாக ஆசன வாயிலிருந்து பிறப்புறுப்பு நோக்கி சுத்தம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் கிருமிகளால் தொற்று ஏற்படும், மேலும் வயிற்றில் சீரணத்திற்கு உதவும் பாக்டீரியா வெளிவந்து பிறப்புறுப்பில் தொற்றினை ஏற்படுத்தும்.

5. காட்டன் உள்ளாடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேகமாகப் பீச்சியடித்து உடலைக் கழுவும் சாதனங்கள் வாசனை சோப்புகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்

6. பால்வினை நோய்களுக்கு சிகிச்சை அளிக்காமை அல்லது அறைகுறை சிகிச்சை ஆகியவற்றின் விளைவுகள் சிகிச்சை அளிக்கப்படாத பால்வினை நோய் ஆண்களை விட பெண்களைக் கடுமையாக பாதிக்கிறது. அது பின்வருமாறு அமைகிறது

அது HIV பரவுதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது
மலட்டுத்தன்மை
அடிக்கடி கருக்கலைதல்
இயல்பான உடல் நலனில் மாறுதல்கள்
புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தொற்று நோய்கள் பாதித்தல்

கருப்பை வாயில் புற்று நோய் வருவதற்கான ஆபத்து.

புணர்ச்சி உறை, அல்லது பாதுகாப்பு உறை

உடல்உறவின் போது பயன்படுத்தும் உறைகள் இருவகைப்படும். 1. ஆண்களுக்கானது, 2. பெண்களுக்கானது. ஆண்களுக்கான ஆணுறை எளிதாகக் கிடைக்கிறது. அது உடல் உறவின் போது மிகமுக்கியமான பாதுகாப்பாக அமைகிறது. பெண்களுக்கான உடல் உறவின் உறை சமீபத்தில்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது எளிதாகக் கிடைப்பதில்லை. ஆணுறையை ஒப்பிடும் போது பெண்களுக்கான உடல் உறவு உறையின் விலை மிக அதிகமானதாகும். இதை உடல் உறவுக்கு முன்பே அணிய வேண்டும். மேலும் இதைப் பயன்படுத்துவதற்கு முன்பு 2 அல்லது 3 முறை பெண்ணுறுப்பினை நன்கு கழுவ வேண்டும் என்று கூறப்படுகிறது.

ஆணுறைகள் லேடக்ஸ் இரப்பரால் செய்யப்பட்டவை. உடல் உறவின் போது ஆண்குறி விறைப்படைந்த உடன் ஆணுறையை அணிய வேண்டும். இது பாலுறுப்புகளிலிருந்தும் அவை வெளிப்படுத்தும் திரவங்களிலிருந்தும் பாதுகாக்கிறது. தொடர்ந்து ஆணுறையை பயன்படுத்துவது என்பது ஒவ்வொரு முறை உடல் உறவின் போதும் அதனைப் பயன்படுத்துவதாகும். இது HIV தொற்றிலிருந்து முழுமையான பாதுகாப்பை அளிக்கும்.

ஆணுறை பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிகள்

1.ஆணுறை காலாவதியாகும் தேதியைப் பார்த்து வாங்க வேண்டும்

2. ஆணுறையைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும். சூரிய ஒளி, வெப்பம், ஈரம் ஆகியவைபடாமலும்
எலி போன்றவை கடித்துவிடாமலும், ஆணுறையின் மீது அழுத்தம் கொடுக்கக் கூடிய பொருட்களை வைக்காமலும் பாதுகாக்க வேண்டும். பேண்டினுடைய பின் பையில் வைக்கக்கூடாது, பேனா போன்ற கூர்மையான ஆயுதங்கள் அதன் மீது பட்டுவிடாமலும் பாதுகாக்க வேண்டும்.

3. ஆணுறை ஒன்றை ஒரு முறைதான் பயன்படுத்த வேண்டும். உராய்வினைப் போக்கக் கூடிய எந்த பொருளையும் ஆணுறையின் மீது தடவக்கூடாது. ஆசன வாய்ப்புணர்ச்சியில் ஈடுபட்டால் அப்போது உராய்வினைப் போக்க வேண்டும் என்று விருப்பினால் மட்டும் "K-Y ஜெல்" என்பன போன்ற நீர்மப் பொருளை அடிப்படையாகக் கொண்ட உராய்வு நீக்கியைப் பயன்படுத்த வேண்டும்.

4. உடல் உறவில் ஈடுபடுவதற்கு முன்பு ஆணுறையை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்துப் பயிற்சி எடுத்துக் கொள்வது நல்லது. இப்பயிற்சியானது உடலுறவுக் காலத்தில் ஆணுறையை சரியாகவும், திறமையாகவும் பயன்படுத்த உதவும்.

5.ஆணுறையைப் பயன்படுத்தவதற்கு முன்பு பாலுறுப்புகள் ஒன்றோடு ஒன்று இணைவதைத் தவிர்க்க வேண்டும்.

6. ஆணுறை அடங்கிய பையானது கிழியாமல் உள்ளதா ? பையிள் ஆணுறை ஒட்டிக் கொள்ளாமல் உள்ளதா ? எண்ணெய் பசையுடன் வழவழப்பாக உள்ளதா குறிப்பிட்ட தேதி முடிவடைந்து உள்ளதா என்பவற்றைச் சோதித்த பிறகே, ஆணுறையைப் பயன்படுத்த வேண்டும்.

7. பையைத் திறந்து ஆணுறையை மிக எச்சரிக்கையுடன் எடுக்க வேண்டும். ஆணுறை அடங்கிய பையைத் திறப்பதற்கு நகத்தையோ வேறுக் கூர்மையான பொருட்களையோ பயன்படுத்தக் கூடாது.

8. ஆண்குறி விரைப்படைந்த நிலையில் ஆணுறை அணிந்து கொள்ள வேண்டும். ஆண்குறி முழுவதும் கடைசிவரை பொறுத்தி உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

9. உடல் உறவின் போது விந்து வெளிப்பட்ட உடன் ஆணுறை அணிந்த நிலையிலேயே குறியினைப் பெண்ணுறுப்பு அல்லது ஆசன வாயிலிருந்து விடுவிக்க வேண்டும்.

10. விந்து வெளியில் சிந்தாத வண்ணம் ஆணுறையை வெளியில் எடுத்து ஒரு முடிச்சு போட்டு குழந்தைகள் மற்றும் மற்றவர்கள் கண்களில் படாத வண்ணம் பேப்பரில் மடித்து குப்பை கூடையில் போட வேண்டும்.

இந்தியாவில் HIV மற்றும் எய்ட்ஸின் நிலை

இன்று எய்ட்ஸ் நோயானது நாட்டின் வளர்ச்சி மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கு எதிரான மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது. நாகோவின் (NACO) கணக்கெடுப்பின் படி இந்தியாவில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2004 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி எய்ட்ஸ் நோயாளிகளில் பெண்கள் 39 % சதவீதத்தினர், கிராமப்புறத்தில் மட்டும் 58 % சதவீதத்தினர் இந்நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். அந்நோயாளிகளுக்கான சேவையும் குறைவாகவே உள்ளது.
"நாகோ" ஆய்வின் படி கி.பி. 2005 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் 1, 16, 905 எய்ட்ஸ் நோயாளிகள் என்றும் இதில் 34,177 பேர் பெண்கள் என்றும் கூறுகிறது. இந்தப் புள்ளி விவரம் தெரிவிக்கும் மற்றொரு செய்தி இவைகளில் 30 வயதுக்கும் குறைவான இளைஞர்கள் மூன்றில் ஒரு பங்கு உள்ளனர் என்பதே. இதில் பல எய்ட்ஸ் நோயாளிகள் கணக்கெடுப்பிற்குள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2005 ஆம் ஆண்டு டிசம்பரில் எடுத்த ஆய்வின்படி இறந்தவர்களின் எண்ணிக்கை (எய்ட்ஸால்) 8097.

நாட்டின் எல்லா இடங்களிலும் HIV பரவியுள்ளது. பொதுவாக எல்லா இடங்களிலும் 85.7 % உடல் புணர்ச்சியின் மூலம் பரவியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் போதை ஊசிகள் மூலம் HIV பரவியுள்ளது. HIV பரவும் மற்ற விதங்களைப் பார்த்தால் பின்வரும் சதவிகிதத்தில் அமைகிறது.

3.6% பெற்றோர்களின் மூலம் பரவியுள்ளது.
பயன்படுத்திய ஊசியையே மீண்டும் பயன்படுத்துவதால் 24 % பரவியுள்ளது.
2.0 % பாதுகாப்பற்ற இரத்தம் மற்றும் இரத்தப் பொருட்களைப் பயன்படுத்துவதனால்
8 % காரணம் கண்டு பிடிக்க முடியாத வகையில் HIV பரவியுள்ளது.
அதிமான எய்ட்ஸ் நோயாளிகள் உள்ள மாநிலங்களுள் தமிழ்நாடே முதலிடம் வகிக்கிறது. அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ஆந்திரபிரதேசம் ஆகியன இரண்டாம், மூன்றாம் இடங்களில் வருகின்றன.

எய்ட்ஸ்சுக்கான அரசின் நடவடிக்கை

கி.பி. 1986 ஆம் ஆண்டு சில HIV மற்றும் எய்ட்ஸ் நோயாளிகள் குறித்த ஆய்வறிக்கையைக் கண்டவுடன் இதன் ஆபத்தினை உணர்ந்து இந்திய அரசு இந்நோய்க்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியது.

1986 ஆம் ஆண்டு "தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக்குழு" அமைத்தது. இக்குழுவானது எய்ட்ஸ் குறித்த விழிப்புண்ர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. இக்குழுவானது 1987 ஆம் ஆண்டு பாலியல் தொழிலாளர்களிடம் இரத்தப் பரிசோதனை மேற்கொள்ள தொடங்கியது.

உலக சுகாதார மையத்துடன் இந்திய அரசு இணைந்து இடைக்காலத் திட்டம் ஒன்றைத் தயாரித்தது (1990-1992). இத்திட்டம் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மணிப்பூர், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களையும், குறிப்பாக மும்பை, சென்னை, கல்கத்தா, டில்லி ஆகிய நகரங்களை மையப்படுத்தி அமைந்தது. ஆரம்பத்தில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்துதல், செய்திகளை கொண்டு செல்லுதல், கல்வி, பிரச்சாரம், கடுமையான மேற்பார்வை ஆகியவற்றின் மூலம் இந்நோய்க்கு எதிரான செயல்திட்டத்தில் இறங்கியது.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு ஒரு சார்பு நிலையிலான தன்னாட்சி அமைப்பாகும். இதனை குடும்பநலம் மற்றும் சுகாதார அமைச்சகமும் உலக வங்கியும் இணைந்து 1992 ஆம் ஆண்டு நிறுவியது. இந்திய அரசின் அங்கீகாரத்துடன் ஐந்தாண்டுத் திட்டத்தை உருவாக்கியது. கி.பி. 1992 முதல் 1999 வரையிலான காலத்தை முதல் பகுதியாக எடுத்துக் கொண்டது. இது, இரத்தப் பாதுகாப்பு மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வினை ஊக்குவித்தல் ஆகியவற்றை முதன்மையாகக் கடமையாக கொண்டது. இந்த திட்டத்தின் மூலம் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு சில இலக்குகளை அடைந்தது. இரத்ததானம் செய்வதையே தொழிலாகக் கொண்டவர்களை சட்டபூர்வமாகத் தடுத்து நிறுத்தியது. இத்திட்டத்தின் முதல் பகுதியின் முடிவில் பரிசோதனைக்குப்பின் தான் இரத்த தானம் என்ற நிலையை உலகப் பொதுமை ஆக்கியது. 1996 முதல் மார்ச் 2006 வரையிலான காலம் இரண்டாவது பகுதிக்கான செயல் திட்ட காலமாக அறிவிக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் இத்திட்டம் விரிவடைந்தது. அரசு ஊழியர்களும் பிற அமைப்பாளரும் இத்திட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டனர். இதன் முக்கிய இலக்கு பாலியல் தொழிலாளர்களிடமும் பொது மக்களிடம் எய்ட்ஸ் பாதுகாப்பு வழிமுறைகளை வலியுறுத்துதல் ஆகியனவாகும். எய்ட்ஸ் நோய்க்கான நேரடியான மற்றும் மறைமுகமான காரணங்களை ஆராந்து அவற்றை நீக்குதல் மூன்றாம் பகுதியின் முக்கிய இலக்காகும் மேலும் இரண்டாம் பகுதியின் செயல் திட்டத்தை ஆராய்ந்து தேவையான ஆலோசனைகளை மேற்கொள்ளுதல் ஆகும்.

பிரதம மந்திரியைத் தலைவராகக் கொண்ட தேசிய எய்ட்ஸ் ஆலோசனை மையம், எய்ட்ஸ் தொடர்பான மையக்கருத்துகளை அரசுத் துறைகளிலும், பிற அமைப்புகளிலும் பரப்புகின்றது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம், மாநில அளவில் நிகழ்ச்சிகளை விரிவுபடுத்தியுள்ளது. 35 மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகங்கள், 3 மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கங்கள் 10 மண்டல பிமிக்ஷி பரிசோதனை மையங்கள், 800 பாலியல் சிகிச்சை மையங்கள், 750 பொதுத்துறை பாதுகாப்பிடங்கள், 800 தன்னார்வ ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்கள் ஆகியவற்றை நாடு முழுதும் உள்ள 604 மாவட்டங்களில் ஏற்படுத்தியுள்ளது.

2001 ஆம் ஆண்டு ஜீன் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இந்தியா உறுப்பு நாடுகளுடன் இணைந்து பிமிக்ஷி மற்றும் எய்ட்ஸ்சுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியது. பிமிக்ஷி மற்றும் எய்ட்ஸ் ஆகியவற்றை இந்த நூற்றாண்டின் இலக்காகக் கொண்டு, 2015 ஆம் ஆண்டுக்குள் இந்நோயினை ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற செய்தியை அத்தீர்மானம் வெளிப்படுத்துகிறது.

எய்ட்ஸ் கட்டுப்பாட்டிற்கு பொது மக்களின் பங்களிப்பு அவசியம் என்பதை 2003 ஆம் ஆண்டு இந்தியா உணர்ந்து கொண்டது. மத்திய மாநில அரசு ஊழியர்கள் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்களாக உள்ளனர். எனவே தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு நேரடியாக அவர்களை அணுகுவதைவிட, இந்திய மத்திய, மாநில அரசு ஊழியர்களின் மூலம் பொதுமக்களை அணுகுவது எளிதானது என்று கருதி செயல்படத் தொடங்கியது. எனவே தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்புக் கழகங்களின் வாயிலாக அரசு ஊழியர்களைத் தொடர்பு கொண்டது. இதனால் நாடு முழுதும் 933 இலக்குகளை அடைய முடிந்தது. மேலும் இவர்களைக் கொண்டே பள்ளிகளில் எய்ட்ஸ் கல்வி குறித்த நிகழ்ச்சிகளையும் நடத்தின.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பினையும் தாண்டி அரசு ஊழியர்களின் அமைப்புகள் எய்ட்ஸ் குறித்த நெறிகாட்டுதல்களைச் செய்து வருகின்றன. அரசு ஊழியர்களின் அமைப்புகள் எய்ட்ஸ் குறித்த நெறிகாட்டுதல்களைச் செய்து வருகின்றன. அரசு ஊழியர்களின் மற்றுமொரு குறிக்கத்தக்க சாதனை எய்ட்ஸ் குறித்த அரசுடன் இணைந்து ஒரு சட்ட வரைவினைக் கொண்டு வந்ததாகும். 2003 லிருந்து 2005 ஆம் ஆண்டுகள் இச்சாதனை நடைபெற்றது. சமூக நல அமைப்புகள் மனித உரிமைக் குழுக்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பெண்கள் குழந்தைகள் கொண்ட குழுக்கள், நலப்பணியாளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரின் ஆலோசனைகளைக் கொண்டு இந்தச் சட்ட வரைவு உருவாக்கப்பட்டது.

உரிமைகள்

இந்தியாவில் சட்டத்தின் முன் அனைவருக்கும் சமமான உரிமைகள் உண்டு. பிறப்பு, பால், இனம், மதம் முதலிய வேறுபாடுகள் இன்றி உரிமைகள் அனைவருக்கும் பொதுவானவை. பிமிக்ஷி யால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதற்காக அவர்களுக்கு இந்த உரிமைகள் மறுக்கப்படக் கூடாது.
தெரிந்து தெளிவடைதல்

ஒப்புக் கொள்ளுதல் என்பது ஒரு விஷயத்தையும் அதற்கு உட்பட்டவர், அதனைப் புரிந்து கொண்டு சுயமாக முடிவெடுப்பதாக இருக்க வேண்டும். மருத்துவர் மற்றும் நோயாளியின் உறவு நிலை புரிதலின் அடிப்படையில் அமைய வேண்டும். எனவே மருத்துவர், ஒரு நோயாளியிடம் பரிசோதனை மேற்கொள்கிறார் என்றால் அதன் உண்மையான நிலையினை அந்த நோயாளியிடம் தெரிவித்துவிட வேண்டும். அவருடைய முழுமையான சம்மதத்தை தெரிந்த பிறகே அந்தப் பரிசோதனையைத் தொடருவதோ, விடுவதோ செய்ய வேண்டும். பிமிக்ஷி பாதிப்பானது மற்ற நோய்களிலிருந்து மிகபெரிய வித்தியாசத்தை உடையது. எனவே இது குறித்து பரிசோதனை என்றால் சம்பந்தப்பட்டவருக்குத் தெளிவாக இப்பரிசோதனை குறித்துத் தெரிவித்துவிட வேண்டும். வேறு ஏதோ ஒரு பரிசோதனையை செய்யக் கூடாது. இது உங்களுடைய உரிமையாகும். அப்படி ஏதேனும் தவறு நேர்ந்தால் அது குறித்து நீங்கள் நீதி மன்றத்தை அணுக முடியும்.

இரகசியம் பேணும் உரிமை

இரண்டு பேருக்கு இடையில் உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் அமைவதே இரகசியமாகும். நீங்கள் உங்களுக்கும் நம்பிக்கையான ஒருவரிடம் ஒரு இரகசியத்தைக் கூறினால், அதனை அவர் பேண வேண்டும். அப்படி அவர் அந்த இரகசியத்தைக் காப்பாற்றத் தவறினால் அது நம்பிக்கை துரோகமாகும். ஒரு மருத்துவரின் அடிப்படைக் கடமை, தன்னுடைய நோயாளியின் இரகசியத்தைக் காப்பாற்றத் தவறினால், நீங்கள் நீதி மன்றம் செல்லலாம். உங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுக்காக அந்த மருத்துவர் மீது வழக்கு தொடுக்கலாம். ஆனால் பிமிக்ஷி மற்றும் எய்ட்சுடன் வாழும் மக்கள் நீதி மன்றம் செல்ல அஞ்சுகின்றனர். ஏனெனில் வெளி உலகத்திற்குத் தங்களின் நிலைமை தெரிந்துவிடும் என்று பயப்படுகின்றனர். இது ஓரளவு உண்மையென்றாலும் கூட எய்ட்ஸ் நோயாளிகள் தங்களின் உண்மையான பெயரைப் பயன்படுத்தாமல், வேறு புனைப் பெயரின் மூலம் வழக்கு மேற்கொள்ளலாம். அவர்களுக்கு எந்த வேறுபாடும் இன்றி நீதி கிடைக்கும்.

வேறுபடுத்திப் பார்க்கும் போக்கிற்கு எதிரான உரிமை

எல்லோரையும் சமமாக நடத்த வேண்டியது அடிப்படை உரிமையாகும். இதனை அரசாங்கம் போற்றுகிறது. ஆனால் தனியாரிடம் இது காணப்படவில்லை. இது குறித்து சட்டம் தெரிவிக்கும் கருத்து, அரசுத்துறையோ அல்லது அரசு சார்புடைய நிறுவனங்களோ, தங்களிடம் பணிபுரிந்தவர்கள் இடையே வேறுபாடு காட்டக்கூடாது என்பதாகும். தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டுதல் என்பது ஒவ்வொரு மனிதருக்குமான அடிப்படை உரிமையாகும். எனவே பிமிக்ஷி நோயாளிகள் பரிசோதனைக்காக மருத்துவமனையை அணுகும் போது, அவர்களை மருத்துவமனைகளில் சேர்க்க மறுப்பதோ, சிகிச்சைஅளிக்க மறுப்பதோ கூடாது. அப்படி நடந்தால் அதற்கு எதிராக சட்டத்தை நாடலாம்.

அதே போல் பணிபுரியும் இடங்களில் HIV நோயாளிகளை வேறுபடுத்திப் பார்க்கக்கூடாது. உடல் நலக் குறைவின் காரணமாக, ஒருவர் தொடர்ந்து வெகுநாள் பணிக்கு வரவில்லை என்றால் அவர்களை வேலையை விட்டு நீக்கலாம். ஆனால் பிமிக்ஷி உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக ஒருவரை வேலையை விட்டு நீக்க கூடாது. அப்படிச் செய்தால், அவர்கள் (பிமிக்ஷி நோயாளிகள்) சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். எனவே சாதாரண மனிதர்களைப் போலவே பிமிக்ஷி எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. அந்த உரிமைகள் மறுக்கப்படும்போது அவர்கள் நீதி மன்றத்தை நாடலாம்.

HIV மற்றும் எய்ட்ஸ் - சில கட்டுக்கதைகளும் உண்மைகளும்

க.கதை :- நான் திருமணமானவன், எனக்கு பிமிக்ஷி பற்றி நினைக்க வேண்டிய அவசியமில்லை.
உண்மை :- திருமணம் என்பது பிமிக்ஷி யிலிருந்து பாதுகாப்பு தருவது கிடையாது. உண்மையில் எய்ட்ஸ் நோயாளிகளில் 80% சதவீதம் பேர் திருமணம் ஆனவர்கள்.

க.கதை :- நான் என் கணவர் மீது முழு நம்பிக்கை உள்ளவள். அவர் என் மீது அக்கறை உள்ளவர். எனவே அவர் ஆணுறை அணிய வேண்டிய அவசியம் இல்லை.
உண்மை :- அக்கறையானவர் என்பது HIV யிலிருந்து பாதுகாப்பு தருவது அல்ல. நம்பிக்கை என்பது இருவரிடமும் இருக்க வேண்டும்.

க.கதை :- நான் ஆரோக்கியமானவன், எனக்கு HIV இருப்பதற்கு வாய்ப்பு இல்லை.
உண்மை :- HIV தொற்று என்பது உடனடியாக அறிகுறிகளை வெளிப்படுத்தக் கூடியது அல்ல. ஒருவரைப் பார்த்த உடன் அவர் HIV ஆல் பாதிக்கப்பட்டவரா என்று கண்டறிய முடியாது. பரிசோதனை மூலமே தெரிந்து கொள்ளலாம். அப்படி பரிசோதனையில் HIV இல்லை என்று வந்தாலும் மூன்று மாதம் கழிந்து மீண்டும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் அந்த இடைப்பட்ட காலத்தில் பாதுகாப்பான நடத்தையை மேற்கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் பிமிக்ஷி வருவதற்கான வாய்ப்பு இல்லை.

க.கதை :- பாலுறவுத் தொழிலாளிகளுக்கும், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோருக்கும், போதை ஊசியைப் பயன்படுதுவோருக்கும் மட்டுமே HIV தொற்று வரும் இதில் எந்தப் பழக்கமும் எனக்கு இல்லை. எனவே எனக்கு பிமிக்ஷி வராது.
உண்மை :- இது வெறும் நடத்தை பற்றி விஷயமே அல்ல. பாதுகாப்பான நடத்தையை நாம் பின்பற்றினால் பாலுறவுத் தொழிலாளர்களுக்கும், போதைப் பொருளைப் பயன்படுத்துவோருக்கும் கூட HIV வருவதற்கு வாய்ப்பு இல்லை. இதற்கு எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு அவசியம்.
க.கதை :- ஒரு பெண்ணிற்கு HIV இருக்கிறது என்றால் அவரள் நடத்தை கெட்டவள் என்று பொருளா?
உண்மை :- இது ஒருவருக்குத் தெரியாமலேயே கூட தொற்றிக் கொள்ள வாய்ப்பு உண்டு. எனவே பிமிக்ஷி உள்ளது என்பதற்காக அந்தப் பெண்ணை நடத்தை கெட்டவள் என்று கூறுவதும் கேலி செய்வதும் தவறு.

க.கதை :- எனக்கு HIV உள்ளதால் குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறார்கள்.
உண்மை :- குழந்தை பெற்றுக் கொள்வதா ? வேண்டாமா ? என்பது ஒரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பம். மருத்துவரின் அறிவுரைப்படி நடந்தால் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.

க.கதை :- எனக்கு HIV இருக்கிறது, எனவே நான் இறக்கப் போகிறேன்.
உண்மை :- HIV தொற்று ஏற்பட்ட பிறகும் கூட நீண்ட நாள் உயிர்வாழ முடியும். தகுந்த உணவு, ஓய்வு, சிகிச்சை, பாதுகாப்பான உடலுறவு, ஆகியவற்றைக் கடைப்பிடித்தால் நீண்ட நாள் உயிர் வாழலாம்.

INDIA DEVELOPMENT GATEWAY









முதல் சதுரம்

நம்மை நமக்குக் காட்ட உதவும் உன்னதம்

நமக்கு என்னென்னவோ தெரியும். பொது அறிவிலிருந்து, புது அறிவு வரை எல்லாம் தெரிகிறது. எத்தனையோ இயல்கள் எத்தனையோ இசங்கள் எத்தனையோ புத்திகள் எத்தனையோ தத்துவங்கள் எத்தனையோ மொழிகள் – எல்லாம் அத்துப்படி.

ஆனால் நமக்கு ஒன்று மட்டும் – உறுதியாகப் பிடிபடுவதில்லை. அதென்ன கடவுளா? – இல்லை. நம்மைத் தெரிவதில்லை நமக்கு. நமக்கே நம்மைத் தெரியாத நிலைதான் மிகவும் பரிதாபத்திற்குரியது. நமக்கு உலகத் தலைவர்களைத் தெரியும், உலக விஞ்ஞானிகளைத் தெரியும், உலகக் கலைஞர்களைத் தெரியும், உலக ஞானிகளைத் தெரியும். ஆனால் நம்மிடமே இருக்கும் நம்மை மட்டும் தெரியாது. நமக்கு நம்மைக் காட்டும் கண்ணாடியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை.

நம்மை எப்படி நமக்குத் தெரியாமல் போனது? “எனக்கு நன்றாகத் தெரியும்” – என விவாதிக்க நம்மில் பலர் காத்துக் கொண்டிருக்கலாம். முதலில் அவர்களின் துணிவுக்கும், நம்பிக்கைக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். “என்னை எனக்குத் தெரியும்” – என்று சொல்லத் தேவையான துணிவை விட பன்மடங்கு துணிவு என்னை எனக்குத் தெரியவில்லை – என்று ஒத்துக்கொள்ளத் தேவைப்படுகிறது என்பதுதான் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அதிசயமாகும்.

நண்பர்களே... நம்மை நாமே அறிய உதவும் ஒரு சதுரத்தை – முதல் சதுரமாய் இப்போது காண்போம். வெறும் சதுரத்தையா காணப்போகிறோம். நம்மையே நாம் காணப்போகிறோம். உங்களுக்குள் உற்சாகம் ஊற்றெடுக்கிறதா இல்லையா? உற்சாகமும், ஊக்கமும் பிறக்க வேண்டும். ஏனெனில் நம்மில் பலருக்கும் நம்மைக் கண்டுகளிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

வாருங்கள்… அந்தச் சதுரத்தைக் காண்போம். இது நான்கு சதுரங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய சதுரம். இது ஒரு ஜன்னல் மாதிரி. நான்கு கதவுகள் இதற்கு உண்டு. இந்த ஜன்னல் வழியாக நாம் புறத்தைக் காணப் போவதில்லை. நம் அகத்தைக் காணப் போகிறோம். ஆமாம். நம் மனதைக் காணப் போகிறோம்.

மனமென்பது உருவமோ அல்லது வடிவமோ இல்லாதது. அதை எப்படி ஒரு ஜன்னலின் வழியாகக் காண்பது என்னும் வியப்பு – ஒரு பெரும் வினாக்குறியாக நம் மனதில் விழக்கூடும்.

சற்றே கீழ்காணும் சதுரத்தை உற்று நோக்குங்களேன்.

மனம்

ஒன்றாம் சதுரம் நம் மனதின் – திறந்த பகுதியை அடையாளங்காட்டுவது.

இரண்டாம் சதுரம் நம் மனதின் – மறைந்த பகுதியை அடையாளங்காட்டுவது.

மூன்றாம் சதுரம் நம் மனதின் – குருட்டுப் பகுதியை அடையாளங்காட்டுவது.

நான்காம் சதுரம் நம் மனதின் – இருண்ட பகுதியை அடையாளங்காட்டுவது.

அதென்ன திறந்த பகுதி, மறைந்த பகுதி, குருட்டுப் பகுதி – என்கிறீர்களா? நல்ல கேள்வி. இவை நான்கும் – நம்மை நமக்குக் காட்டப்போகும் கதவுகளாகும்.

திறந்த பகுதி என்பது – திறந்து கிடக்கும் வீடு மாதிரி, உள்ளிருப்பவை வெளியில் தெரியும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத நிலையிலிருக்கும் ஒரு பகுதி. தன்னைப்பற்றித் தனக்கும் தெரிந்திருக்கும் – தன்னோடு பழகும் பிறருக்கும் தெரியும்.

மறைத்த பகுதி என்பது – தன்னைப் பற்றித் தனக்குத் தெரிந்த சில விஷயங்கள் பிறருக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கும் பகுதி. விரும்பியோ அல்லது விரும்பாமலோ வெளிப்படுத்தப்படாமல் இருக்கும் பகுதி.

குருட்டுப் பகுதி என்பது – தன்னைப்பற்றி பிறருக்கெல்லாம் தெரிந்தாலும் தனக்கு மட்டும் தெரியாதிருக்கும் – பகுதியைக் குறிக்கிறது. (நம் செயல்பாடுகள் பிறருக்குத் தெரியும் ஆனால் நாம் அதனை உணராதவர்களாகவே வாழ்ந்து கொண்டிருப்போம்).

இருண்ட பகுதி என்பது – தன்னைப்பற்றி தனக்கும் தெரியாமல், பிறருக்கும் தெரியாமல் மர்மமாய் இருக்கும் மனப்பகுதி. இங்குதான் வாழ்வின் எதிர்காலம் புதைந்து கிடக்கின்றது. தோண்டித் துருவி எடுத்து மேம்படுத்தப்பட வேண்டிய கற்பக விருட்சமோ, அட்சய பாத்திரமோ இதனுள்தான் இருக்கிறது.

மேற்கண்ட 4 பகுதிகளில் எந்தப் பகுதி சிறந்த பகுதி? எந்தப் பகுதி அதிகமாக இருந்தால் வாழ்க்கை சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் அமையும்? மனதின் திறந்த பகுதி அதிகமாக இருந்தால் மகிழ்ச்சி தானே வரும். மறைந்தும் குருடாகியும் இருண்டும் கிடக்கும் மனதால் எவ்விதப் பயனுமில்லை. எனவே நான்காய் பிரிந்து கிடக்கும் மனதை திறந்து கொண்டு ஒரு பெரிய மனதாய் மாற்றியமைக்க வேண்டும். அதற்கு மற்ற மூன்று பகுதிகளையும் சிறிது சிறிதாய் குறைக்க வேண்டும்.

சரி… அதை எப்படிச் செய்வது எனக் காண்போம். முதலில் மறைத்த பகுதியைக் குறைக்க பிறரோடு நமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்க வேண்டும். மிகவும் நெருங்கியவர்களிடமாவது நமது மனதைத் திறந்து “பேச” முற்படவேண்டும். உண்மை பேச வேண்டும். பேசப்பேசத் தான் மறைத்த மனது குறையத் தொடங்கும். மனதின் பாரம் குறைந்து விடும். மனம் லேசாகும்.

அடுத்த பகுதியாகிய குருட்டுப் பகுதியைக் குறைக்க வேண்டுமெனில் நம்மிடம் அக்கறை கொண்ட பிறரைப் பேச அனுமதிக்க வேண்டும். அதுமட்டுமல்ல அவற்றைக் காது கொடுத்தும் கேட்கவும் வேண்டும். பிறர் சொல்லை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் கேட்டுக் கொள்ளவும், கவனிக்கவும் தயக்கம் காட்டக்கூடாது. அப்போதுதான் நம்முடைய குறைபாடுகள் நமக்குத் தெரியவரும். நமது குறைபாடு நமக்குத் தெரிந்து விட்டால் – அவற்றை மாற்றிக்கொள்ள நாம் முயற்சி மேற்கொள்ளலாம். அப்போது நம் வாழ்வில் மேம்பாடு நிகழும்.

அடுத்ததாக இருண்ட பகுதியைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டுவதெல்லாம் “தேடல்” தான். நம்மிடமுள்ள திறமைகள் என்ன? நமது ஆர்வம் அல்லது விருப்பமென்ன? நமது இலக்கு என்ன? நமக்கான வாய்ப்புகள் என்னென்ன? நமக்கான தடைகளை எப்படித் தகர்த்து முன்னேறுவது – எனத் தொடரும் “தேடல்” மூலம் இந்த இருண்ட பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் கொணர முடியும்.

மேற்கண்ட முயற்சிகளால் – நம் மனதை நன்றாகத் திறந்துகொள்ள முடியும். மனம் திறந்து கொண்டால் மற்றவர்கள் நம்மை புரிந்து ஏற்றுக் கொள்வார்கள், நம்மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும். அதனால் நமது தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். மனம் திறக்க திறக்க நமது வெற்றிக்கான மார்க்கமெல்லாம் புலப்படத் தொடங்கும்.

அதனால் மனதில் நிம்மதியும் ஆனந்தமும் நிரந்தரமாய் தங்கிவிடும்.

விளைவு: நம் சிந்தனையும், முடிவுகளும், செயல்பாடுகளும் சிறப்பாய் அமையும்.

காலத்தின் அருமையை உணர்ததும் உன்னதம்

மூன்றாவது சதுரம் மிகவும் முக்கியமான காலத்தை உணர்த்துவது. காலம் மிகவும் அற்புதமானது. காலம் என்பது கடந்துவிட்டால் மீண்டும் கிடைக்காதது. காலம் என்பது அனைவருக்கும் பொதுவானது. காலம் என்பது ஒவ்வொருவர் கையிலும் கிட்டியிருக்கும் பொக்கிஷமாகும். மனிதவளம் என்பது – இந்தப் பிரபஞ்சத்தின் மூலதனம் என்றால் காலமானது – இந்த மனிதவளத்தின் மூலதனம் என்பது மறுக்க முடியாததாகும். இந்த மூலதனத்தை முறையாகப் பயன்படுத்தும் மார்க்கம் தெரியாததால் நம்மில் பலரும்

வாழ்வின் மிக முக்கியமான அம்சங்களை இழந்து நிற்கிறோம். பலவற்றை இழந்த பிறகே – பலருக்கும் இந்தக் காலத்தின் அற்புதம் புரிய வருகிறது. இந்நிலை ஏற்படாமல் தடுத்து இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் பொருட்டு நாம் இந்த சதுரத்தைப் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டியிருக்கிறது.

உற்று நோக்கினால் மேற்கண்ட நான்கு சதுரங்களில் காலம் சதுரங்கம் ஆடுவதைக் காணலாம். மேற்கண்ட பெரிய சதுரத்தின் மீது கவனத்தைக் குவியுங்கள்.

சதுரம் – 4 ல் குறிப்பிட்டுள்ள காரியங்கள் யாவும் எந்தவித அவசரமோ, அவசியமோ அற்றவையாகும். இவை குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவையே இல்லை. ஆனால் நமது அன்றாடச் செயல்பாடுகளில் பலவும் இத்தகைய வகையைச் சேர்ந்ததே ஆகும். எடுத்துக்காட்டாக கூறவேண்டுமெனில் எந்தவித தேவையுமற்ற தொலைபேசி உரையாடல்கள், வெற்று அரட்டைகள், வெறும் கேளிக்கைகள், எந்த நோக்கமுமற்ற பொழுதுபோக்குகள் இவையாவும் – அவசரமோ, அவசியமோ அற்ற செயல்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும், இவற்றை நாம் அடையாளம் காண வேண்டும். அடையாளம் கண்டு அவற்றைத் தவிர்க்க முயற்சிகள் எடுக்க வேண்டும். முனைப்புடன் செயல்பட வேண்டும்.

சதுரம் – 3 : இதில் அவசியமற்ற ஆனால் அவசரமான செயல்களை உள்ளடக்கிய சதுரமாக இது விளங்குகிறது. நம்மைத் தொந்தரவு செய்யும் வேண்டாத சில தொலைபேசி அழைப்புகள், எதிர்பாராத சில விருந்தாளிகளின் வருகை, சில கூட்டங்கள், சில மனுக்கள் தயாரித்தல், சில கடிதங்கள் எழுதுதல் போன்றவை அவசியமாய் இருக்க மாட்டா. ஆனால் அவசரமாய் செய்தாக வேண்டியவையாய் இருக்கும். இவை பெரும்பாலும், பிறருக்காகச் செய்யப்படும் செயல்களாக இருக்குமே அன்றி, நமது குறிக்கோளை அடைவதற்கான காரியங்களாக இருக்கமாட்டா என்பதை உணர்தல் அவசியமாகும்.

மேற்கண்ட சதுரம் – 4 மற்றும் சதுரம் – 3 – இவை இரண்டையும் ஊன்றி நோக்கினால் ஒன்றை உணரலாம். இவை இரண்டிலும் அதிக நேரத்தைச் செலவிடுபவர்கள் எதற்கும் அதிகமாக அலட்டிக் கொள்ளாதவர்களாகவும், பெரும் பொறுப்பு எதையும் ஏற்றுச் செய்யாதவர்களாகவும் இருப்பார்கள். பொழுதுபோக்கும் முகமாக – பிறரின் காரியங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்பவர்களாகவும் காணப்படுவார்கள். இவர்கள்.

செயல்திறனும், செய்நேர்த்தியும் மிக்கவர்கள் இந்த இரண்டு சதுரங்களுக்குள் சிக்கிக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில், அவசரமாய் இருந்தாலும் அவசியமில்லை என்பதால் அவசியமற்றதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார்கள். எனவே நாமும் செய்நேர்த்தி மிக்கவர்களாக வாழ வேண்டுமெனில் அவசியமற்றவற்றை ஒதுக்கிவிட்டு நேரத்தை முறையாகப் பயன்படுத்தப் பழக வேண்டும்.

இப்போது, முதல் சதுரத்தைப் பாருங்கள். அங்கே குவிந்து கிடக்கும் காரியங்கள் யாவும் அவசரமாகச் செய்து முடிக்கப்பட வேண்டிய நிலையிலும், அவசியம் செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்திலும் இருப்பதை நம்மால் உணர முடியும். பெரும்பாலான சமயங்களில் நமது செயல்பாடுகள் இப்படித்தான் உள்ளன.

எல்லாச் செயல்பாடுகளையுமே, இப்படி ஒரு நெருக்கடி காலச் செயல்களாக மாற்றிக்கொண்டு அவதிப்படுகிறோம். அவற்றை எப்போது செய்து முடித்திருக்க வேண்டுமோ அப்போது அவற்றைச் செய்து முடிக்க முனைவதில்லை. ஒத்திப் போடுதல் என்னும் மனோபாவம் நம்மை உதறிப் போட்டு விடுகிறது.

“வேலை இல்லை வேலை இல்லை” – என அங்கலாய்க்கும் இளவட்டங்கள் கூட தங்கள் வேலைக்கான மனுவை உரிய நேரத்தில் அஞ்சலில் சேர்க்காமல், இறுதி நாளில் அதை எடுத்துக்கொண்டு, அடுத்த நாளே சேர வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டுமெனப் பலரிடமும் கேட்டுத் திரிவதைக் காண முடியும். “ஏன்? இத்தனை நாளாய் என்ன செய்தாய் என்று கேட்டுப் பார்த்தால்; இன்னும் நாள் இருக்கிறதே என்று தள்ளிப் போட்டேன். கடைசியாய் பார்த்தால், தாசில்தார் ஊரில் இல்லாமல் போய், சாதிச்சான்றிதழுக்காக ஒரு வாரம் காத்திருக்க வேண்டியதாயிற்று” – என்பார் அந்த இளைஞர்.

ஏன் இந்த நிலைமை? காலத்தின் அருமையை உணராமைதான் காரணம். சோம்பலும், எது முக்கியம் அல்லது எது அவசரம் எனப் புரியாமையுமே – இதற்குக் காரணம். ஒரு நொடி தாமதிப்பதால் ஏற்படும் இழப்பை – முதலாவதாய் வந்து தன் முத்திரையைப் பதிக்க முடியாமற்போகும் ஒரு விளையாட்டு வீரன் உணர்வான்! இழந்தபின் அழுது என்ன பயன்? ஆகவே காலத்தின் அருமையை அறிந்து உணர்தல் அவசியம். நேரத்தின் அவசியத்தை உணர வேண்டுமெனில் நமது அன்றாடப் பணிகளைப் பட்டியலிட வேண்டும். பிறகு அவசியமானவற்றையும் அவசரமானவற்றையும் அடையாளம் காண வேண்டும்.

மாறாக சதுரம் – 2 ஐக் கவனியுங்கள். அங்கே “அவசரமற்ற ஆனால் அவசியமான” – காரியங்கள் மட்டுமே மிஞ்சும். இந்தச் செயல்களை உடனடியாக முடிக்க வேண்டிய அவசரமில்லை. ஆனால் அவசியம் முடித்தாக வேண்டும் என்பவை இவை. இவற்றில்தான் நாம் நமது முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தினால் நமக்கும் அவசரமோ, ஆத்திரமோ இல்லாமல் நிதானமாகத் திட்டமிட்டு தீர்க்கமாக வெற்றிகரமாக நமது காரியங்களைச் செய்து முடிக்க முடியும். அத்தகைய காரியங்களே நம்மை செய்நேர்த்தி மிக்கவர்களாக உலகுக்கு அடையாளம் காட்டும்.

வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தால் அவர்களெல்லாம் சதுரம் – 4 மற்றும் சதுரம் 3 இரண்டையும் புறக்கணித்து விட்டவர்களாகவும், சதுரம் – 1ஐ ஏறிட்டும் பார்க்க வேண்டிய அவசியமில்லாத வர்களாகவும் திகழ்வார்கள்.

காரணம் என்னவெனில் அவர்களின் கவனமும் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் சதுரம் -2 லேயே குவிந்திருக்கும்.

அவர்களுக்கு “எது அவசியம்” – என்பது புரிந்திருக்கும். அதுமட்டுமல்ல அவசரமானாலும் கூட அவசியமற்றதென்றால் அவர்கள் அதனைப் புறக்கணித்துவிடத் தயங்காத உறுதியான உள்ளம் படைத்தவர்களாகவும் திகழ்வார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்கள் எல்லாம் தங்களுக்கென சில இலக்குகளை முன்வைத்து இயங்கிக் கொண்டிருப்பதால் அவசியமில்லாமல் பிறரின் செயல்பாடுகளில் மூக்கை நுழைத்து தமது காலத்தை வீணடிக்கும் தவறான காரியத்தைச் செய்யமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

என்ன? – இனி நாமும் நமது அன்றாடச் செயல்களை மேற்கண்ட நான்கு சதுரங்களாக வரையறுத்து – இரண்டாம் சதுரத்தில் நமது மனதை ஒருமுகப்படுத்தி வெற்றி காண்போமா?

அணியணியாய் இணைய உதவும் அழகிய சதுரங்கம்

நான்காவது சதுரம் நம்மைப் பிணைக்கும் சதுரம். நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுதலின் அவசியத்தை நமக்கு உணர்த்தும் ஒற்றுமைச் சதுரம்.

கீழ்காணும் சதுரத்தை உற்று நோக்கிடுங்கள். அது என்ன சொல்கிறது என்பது நமக்குப் பிடிபடும். அந்தச் சதுரத்தின் கிடைக்கோடு நமது தைரியத்தைக் குறிப்பதாகக் கொள்வோம். செங்குத்துக் கோடு நமது கருணையைக் குறிப்பதாக கொள்வோம். இந்த இரண்டு கோடுகளை அடிப்படையாகக் கொண்டுஅமையும் நான்கு சதுரங்களை நன்கு கவனிப்போம்.

முதலில் “வெல்ல …. தோற்க….” – என்னும் முதலாம் சதுரத்தை எடுத்துக்கொள்வோம். இதன் பொருள் என்னவெனில் “நான் வெல்வேன்…. நீ தோற்பாய்” -என்கிற அடிப்படையில் தொடங்கப்படும் முயற்சியை அல்லது நடவடிக்கையைக் குறிக்கும். இத்தகைய மனோபாவம் – விளையாட்டின் போதும், போரின் போதும் காணப்படக் கூடியதாகும். வாழ்க்கைக்கோ, வர்த்தகத்துக்கோ, உறவுமுறைக்கோ ஒத்துவராததாகும். “நான் வெல்ல வேண்டும் நீ தோற்க வேண்டும்” – என்று முனைகிறபோது, அவரிடம் தைரியம் அதிகமாகவும் கருணை மிகவும் குறைவாகவும் உள்ளதென்று பொருள். அதாவது முரட்டுத் தனம் மிகுந்து காணப்படும். வேகம் இருக்கும். ஆனால் விவேகம் இருக்காது. – இத்தகைய நிலை வாழ்க்கையை வசப்படுத்தவும் தலைமை தாங்கவும் உதவாது. “வெட்டு ஒன்று துண்டு ரெண்டு” என நடந்து கொள்ளும் இவர்களைப் பெரும்பாலானோர்க்குப் பிடிக்காமற்போகும். அவரது பேச்சில் பக்குவம் இருக்காது. இவர்களது செயலில் நிதானம் இருக்காது.. இதனால் உறவுகள் இனிமையாய் இருக்காது. இது அதிகாரம் தொனிக்கும் நிலைமையைக் குறிக்கும். “தானே முக்கியமானவன்” – என்னும் தன்மை தொனிக்கும்.

இரண்டாம் சதுரம்: “நான் தோற்கிறேன் நீ வெல்ல” என்பதாகும். அதாவது, “நான் விட்டுக் கொடுக்கிறேன் நீ வெல்ல” – என்னும் மனோபாவத்தைக் குறிக்கும் சதுரமாகும். இப்படிப்பட்ட மனோபாவம் யாருக்கு வாய்க்கும் எனப் பார்த்தால் – யாரிடம் தைரியம் குறைவாகவும் கருணை அதிகமாகவும் இருக்குமோ – அவர்களால் மட்டுமே இப்படித் தன்னைத்தானே விட்டுக்கொடுத்து பிறர் வெல்ல – ஏதுவாக இருக்க முடியும். இது ஒருவரது பலவீனத்தைக் காட்டும் தன்மையாகும். இந்த நிலையில் உறவு ஆரம்பத்தில் இனிப்பது போலத் தோன்றினாலும், நாளாக ஆக, இப்படிப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படுவர். இவர்களின் மதிப்புக் குறைய நேரும். பிறகு யாருமே கவனிக்கவில்லை, எனக்கென்று யாருமில்லை, என்னால் முன்னேற முடியவில்லை எனப் புலம்ப நேரிடும்.

மேற்கண்ட இரண்டு சதுரங்களையும் சற்றே உற்று நோக்கினால் ஒரு விபரீதம் புரியும். உறவில் சம்பந்தப்பட்ட இருவருள் ஒருவர் – முதல் சதுரத்துக்குச் சொந்தக்காரராகவும், மற்றவர் இரண்டாம் சதுரத்திற்குச் சொந்தக்காரராகவும் இருந்தால் – நடப்பதை யூகித்துப் பாருங்கள்….. அவர், “நான் வெல்வேன்…. நீ தோற்பாய்” என்று களத்தில் இறங்குவார். இவர், “நான் தோற்பேன்…. நீ வெல்வாய்” என்று களத்தில் இருப்பார்.விளைவு என்னாகும்? எந்த வித சுவாரசியமும் இல்லாமல் ஒருவர் வெல்ல மற்றவர் தோற்றுக்கொண்டே இருப்பார். இது ஒருவித (துஷ்பிரயோக நிலைக்குச் சமமாகும்) மிகைப்படுத்துதலுக்குச் சமம்.

மூன்றாவது சதுரம்: “நானும் தோற்பேன் நீயும் தோற்க வேண்டும்” – என்னும் மிகவும் மோசமான மனோபாவத்தைக் குறிக்கிறது. “தனக்கு இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை. அடுத்தவனுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும்” – என்னும் பழிவாங்கும் மனோநிலையைக் குறிக்கிறது.

இந்த நிலையை யார் அடைவர் என்றால், இந்த உறவில் சம்பந்தப்பட்ட இருவரும் சதுரம் – 1ல் கூறப்பட்டிருக்கும் “நான் வெல்வேன் நீ தோற்கவேண்டும்” என்னும் நிலையில் இயங்குபவராய் இருப்பர். இறுதியில் இருவருமே தோற்றுப்போகக் கூடும். இவர்களிடம் ஆணவமும், அதிகாரமும், ஆதிக்க மனோபாவமும் மிகுந்து காணப்படும். இவர்களைப் பொறுத்தவரை – எதிரியின் தோல்வியே முக்கியமானது. இவர்களின் தோல்வி என்பது வெகு சாதாரணமாகிப் போகும். இந்த நிலையின் கொடுமையைக் கொஞ்சம் யூகித்துப் பாருங்கள். இந்த நிலை தேவையா என்று எண்ணிப்பாருங்கள்.

நான்காவது சதுரமானது: “நானும் வெல்வேன் நீயும் வெல்வாய்”-என்னும் ஒருவருக்கொருவர் உறுதுணையாய் இருக்கும் உன்னதமான உறவுநிலை. இந்நிலை – ஒத்துழைப்பு நிலையைக் குறிப்பதாகும். இந்நிலை வாழ்வை ஒரு போட்டியாகக் கருதாமல், உடன்பாடாகவும், கூட்டுறவாகவும் கருதும் நிலையாகும். மேற்கண்ட மற்ற நிலைகளெல்லாம் அந்தஸ்து மற்றும் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும். ஆனால் இந்த நிலை “எல்லோர்க்கும் எல்லாமும் பொது” என்னும் பரந்த மனப்பான்மையின் அடிப்படையிலமைந்த பொது உடைமையைக் குறிக்கும் நிலையாகும்.

ஒருவர் வெற்றிபெற வேண்டுமானால் மற்றவர் தோற்றாக வேண்டும் என்னும் எண்ணமற்ற நிலை இது. இது உனது வழியோ எனது வழியோ அல்ல. “இது நமது வழி” என்னும் சமத்துவத்தை சகோதரத்துவத்தை நிலைநாட்டும் உன்னத நிலை!

கூடிவாழ்தல் என்பது சமூக நிலையில் உயர்ந்த நிலை. யாரையும் சார்ந்து வாழும் அடிமை நிலையிலிருந்து விடுபட்டு – இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து, ஒருவரின் திறமையை ஒருவர் மதித்து ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையையோ வர்த்தகத்தையோ இணைந்து நடத்தும் மகத்தான நிலை. இந்நிலையில் ஈடுபட்டிருக்கும் யார்க்கும் ஆனந்தமே மிஞ்சும்.

இவர்களுக்கு தைரியமும் அதிகமாய் இருக்கும். கருணையும் அதிகமாய் காணப்படும். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படாது. இவர்களின் மனம் பக்குவப்பட்டதாய் இருக்கும். ஒருவரால் எப்பொழுது, தனது உணர்வுகளையும், எண்ணங்களையும் தைரியமாக வெளிப்படுத்தும் அதே நேரத்தில் பிறரின் உணர்வுகளையும், மன உறுதியையும் கேட்டுப்புரிந்து கொள்ளும் கருணை உணர்வும் கொண்டிருந்தால் அதுவே பக்குவநிலை எனப்படும். அதுவே மிக உயர்ந்த நிலையும் ஆகும்.

இதில் காணப்படும் “தைரியம்” – என்பது பொன்முட்டைக்கு உத்திரவாதம் தருவதெனினும், “கருணை” – என்பது தொலைநோக்குப் பார்வையில், சம்பந்தப்பட்ட அனைவருக்குமான வளத்துக்கும் வழிவகுக்கும் குணமாகும். இந்த இரண்டின் அடிப்படையில் அமையும் தலைமையானது – அனைவரின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தவல்லது என்பதில் ஐயமேதுமில்லை.

ஆகவே நாமெல்லோருமே “நானும் வெல்வேன் நீயும் வெல்வாய்” – என்னும் பொது வெற்றியை நோக்கிப் புறப்படுவோம். விரைவில் நம் தேசத்தை வல்லரசாக்கும் இந்த வழியில் நடந்து நம் கனவை நாமே நனவாக்குவோம்.

முரண்பாடுகளைத் தீர்த்து வைக்கும் உடன்பாட்டு உன்னதம்

கீழ்காணும் சதுரத்தைக் கூர்ந்து நோக்குங்கள்

(நான்) நெருங்க
(நீ) விலக
(1) (நான்) நெருங்க
(நீயும்) நெருங்க
(2)
(நான்) விலக
(நீயும்) விலக
(3) (நான்) விலக
(நீ) நெருங்க
(4)

வாழ்க்கை என்னும் சதுரங்கத்தில் ஒருவருக்கு மேற்பட்ட நபர் இணைந்து செயல்படும் எந்தச் சூழ்நிலையானாலும் சரி. (அது குடும்பமாக இருக்கலாம், அலுவலகமாக இருக்கலாம், பொது இடமாக இருக்கலாம், சமூகமாக இருக்கலாம், நிறுவனமாக இருக்கலாம், தொழிற்கூடமாக இருக்கலாம்) அங்கெல்லாம் இருவருக்கிடையிலோ, பலருக்கிடையிலோ கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். கருத்து வேறுபாடுகளுக்கான காரணங்கள் பற்பல. வயது வேறுபடலாம், அனுபவம் வேறுபடலாம், விருப்பம் வேறுபடலாம், தேவையும் இலக்கும் வேறுபடலாம். மொழி, மதிப்பீடு, நம்பிக்கை வேறுபடலாம். அணியாக இயங்கும்போது அப்படிப்பட்ட கருத்து வேறுபாடுகள் தோன்றுதல் தீர்க்கப்படாவிடில் அந்தக் கருத்து வேறுபாடு விசுவரூபம் எடுத்து – அணியின் செயல்பாடுகளுக்கே பங்கம் விளைப்பதாக ஆகி விடும்.

கருத்து வேறுபாடுகள் நீடிக்குமானால் நாளடைவில் அது பூதாகாரமாக வெடித்து – குடும்ப உறவுகள் சிதைந்து போகவோ, நிர்வாக உறவு சீர்கேடு அடையவோ, ஒரு விளையாட்டு அணியின் செயல்வேகம் பாதிக்கப்படவோ, ஒரு இசைக்குழுவின் திறமை வெளிப்படாமல் போகவோ வாய்ப்புகள் உண்டு. அது மட்டுமல்ல – இவர்களின் இலக்குகளை எட்ட முடியாமலும் இலட்சியத்தை அடைய முடியாமலும் போவதோடு – மனித உறவுகளும் சின்னா பின்னமாகிப் போய்விடக் கூடும்.

இப்படிப்பட்ட நிலை வருமுன்னர் காப்பதுதான் – மனிதவளத்தின் மேம்பாட்டுக்கு உதவும் உயரிய செயலாகும். அதுவே நமது வாழ்நிலை மேம்பாட்டுக்கான அடிப்படைத் தேவையுமாகும்.

முதல் சதுரத்தைக் காண்போம்: கருத்து வேறுபாடு கொண்ட இருவரோ அல்லது இரு குழுவோ இப்படி செயல்படக்கூடும். ஒரு சாரார் (ஒருவர்) இணக்கத்தை நாடி வரும்போது மறுசாரார் (மற்றொருவர்) பிணக்கம் கொண்டு உறவை மறுக்கும் சூழ்நிலையை – இது குறிக்கிறது. ஒருவர் அனுசரிக்கும்போது மற்றவர் வீம்பு செய்து விலகிச் செல்லும் நிலை. இதைத்தான் தமிழில் “கெஞ்சினால் மிஞ்சுவது” – என்பார்கள். ஒருவர் அனுசரிக்க மற்றவர் ஆணவத்தோடு விலகும் நிலை – கருத்து வேறுபாட்டை வளர்த்து உறவின் முறிவுக்கு இட்டுச்செல்லும். இந்த அவலநிலை தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

இரண்டாம் சதுரம்: ஒருவர் விலகிச் செல்லச் செல்ல மற்றவர் நெருங்கி நெருங்கி வந்து இணக்கத்தை உருவாக்க முயலும் நிலை. ஒருவர் விட்டுக்கொடுக்கும் இந்நிலை நல்லது என்றாலும் இதுவும் நிலைபெறாது. பிறரை வசப்படுத்துவதுதான் சிரமமான காரியம். நாமே வம்பு செய்து கொண்டிருந்தால் – நமது கருத்து வேறுபாட்டை வேறு யார் வந்து தீர்ப்பர்? எனவே கருத்து வேறுபாட்டால் ஏற்படவிருக்கும் அவல நிலையை உணர்ந்து நாம் நமது அபரிதமான தன் முனைப்பை , ஆணவத்தை சற்றே ஒதுக்கிவிட்டுப் பிறரின் கருத்துக்குக் காது கொடுக்கத் தயாராகி விட்டாலே மனதை ஆட்டுவிக்கும் கருத்து வேறுபாடு குறையவும் – உறவுநிலை மேம்படவும் வாய்ப்பு பிரகாசமாகும். அதை விடுத்து – நமது ஆணவத்தின் காரணமாய்ப் பிறருக்குப் புத்திபுகட்ட நினைத்தால் – இழப்பு நமக்குத்தான். மாறாக விட்டுக் கொடுத்து உறவாடினால் பலன் இருவருக்கும் ஏற்படும் என்பதை மறக்கக்கூடாது. இருவருக்கும் இன்பம் உண்டாகும் நிலையே உயர்நிலை.

மூன்றாம் சதுரம்: “ஒருவர் விலகிச் செல்ல, அடுத்தவரும் விலகி செல்வது!” இந்தச் சதுரத்தில் குறிப்பிடப்படுகிறது. இருவருமே விலகிச் செல்லும் மனோபாவம் – இணக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை அடியோடு தகர்த்துவிடும். இந்த நிலை ஒரு அணியில் முழுவதும் விரும்பத் தகாத நிலை. சம்பந்தப்பட்ட இருவரில் யாரேனும் ஒருவருக்காவது நெருங்கும் விருப்பம் இருந்தால் மூன்றாம் நபரின் தலையீட்டால் இணக்கம் ஏற்படும் சூழலை உருவாக்க முடியும். ஆனால் இருவரும் விலகிச் செல்ல முற்படும்போது அதுவே முரண்பாட்டின் மொத்தமாகக் காட்சியளிக்கும். உடன்படுவதற்கான வாய்ப்பை இது முழுவதுமாகக் கெடுத்துவிடும். எனவே இந்நிலை தவிர்க்கப்பட வேண்டியதாகும். இன்னும் சொல்லப் போனால் இத்தகைய நிலையே ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வதுதான் உகந்தது.

நான்காம் சதுரமாகிய “நெருங்க….. நெருங்க….” – என்றும் நிலை மிகவும் மேம்பட்ட நிலை, உன்னத நிலை. இது இருவரின் பக்குவ நிலையைப் பறை சாற்றும் நிலையாகும். ஏதோ ஒரு சூழலால் அல்லது சந்தர்ப்பத்தால் – மனதளவில் – முரண்பாட்டுக்கு ஆளான இருவரும், பிறகு சிறு கால அவகாசத்தில், அதற்கும் மேலே ஒரு படிபோய்… “நான் நெருங்கி வருகிறேன்…” என்று இருவரும் இணைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு உறவுப் பிணைப்புக்கான – பாலத்தை உருவாக்குதலில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வர். இத்தகையவர்களால் ஒரு குடும்பமோ, நிர்வாகமோ, இயக்கமோ – தனது இலக்கை அடையும் திசையில் பீடு நடைபோட்டு மகத்தான வெற்றியடையும். அந்த அணியில் எப்போதும் உள்ளார்ந்த மகிழ்ச்சியும் ஊக்கமும் உற்சாகமும் நிலைத்திருக்கும்.

எனவே வாழ்க்கை என்னும் சதுரங்கத்தில் முன்னர் குறிப்பிட்ட 1, 2, 3 என்னும் மற்ற மூன்று சதுரங்களும் ஒத்துழையாமைக்கும், ஒற்றுமையின்மைக்கும் வழி வகுத்து – தனது நோக்கத்திலிருந்து ஓர் இயக்கம் வழுவி விடுவதற்கான கூறுகளை உள்ளடக்கிக் கொண்டிருப்பவை. விரும்பத்தகாதவை.

மாறாக, நான்காம் சதுரமாகிய “நெருங்க…. நெருங்க….” – என்னும் சதுரமோ – அனைவரும் ஒருங்கிணைந்து – ஒட்டுமொத்த சக்தியையும் பிணைத்து – பொது இலக்கை நோக்கி – ஒருமனதாக இயங்கி, குறித்த காலத்தில், குறித்த செலவில், பயணித்து வெற்றிக் குறியீட்டை எட்டுவதோடு – அனைவரின் ஒட்டுமொத்த தன்னம்பிக்கைக்கும் – உயர்வுக்கும், மனிதகுல மேம்பாட்டுக்கும் உதவிடும் ஒப்பற்ற- உயரிய – பக்குவ நிலையாகும்.

இந்நிலையே இனிய நிலையாகும். இதுவே கூடிவாழும் – குடும்பமும், நிறுவனமும், தொழிலகமும், எந்த அணியும் – வெற்றிபெறப் பேருதவி புரியும் அற்புதமான நிலையாகும்! முயன்று – இந்நிலை பெற்று இனிமை காணலாமே!

எழுச்சிமயமான நிலையை எடுத்தியம்பும் சதுரம்

நம் குடும்பத்திலோ, நிறுவனத்திலோ, இயக்கத்திலோ – நம்மோடு இணைந்து இயங்கும் நபர்களின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து – அவர்களின் செயல்திறன் முழுமையாக வெளிப்படவும், செய்நேர்த்தி மேம்படவும் – நாம் புரிந்துகொள்ள வேண்டிய கூறுகளை இந்த ஆறாம் சதுரம் எடுத்து முன்வைக்கிறது.

பெரிய சதுரத்தின் உள்ளே நான்கு சிறிய சதுரங்களைக் காண்கிறீர்கள் அல்லவா…. அவற்றை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்துகிறேன்.

சதுரம்:

1 திறமை இருந்து – அதனை வெளிப்படுத்தும் விருப்பமும் கொண்டு, செயலாற்றும் நபர்களை உள்ளடக்கிய சதுரம் இது. இப்படிப்பட்டவர்கள் நிறைந்த சூழல்தான் செய்நேர்த்தி மிக்கதாக அமைந்திருக்கும். இவர்களின் உற்பத்தித் திறன் முழுமையாக வெளிப்படும். இவர்கள் நிறைந்த இடத்தில் வேலைகள் எளிதில் நிறைவேறும். குழப்பமோ குதர்க்கமோ இருக்காது. மனித உறவுகள் மேம்பட்டு மகிழ்ச்சி நிறைந்த இடமாக இது காட்சியளிக்கும். இன்னும் சொல்லப் போனால் மாற்றங்களை எளிதில் ஏற்றுக்கொள்ளும் இடமாக இது ஒளிரும்.

இதை “ஆக்கநிலை” என்பேன். இது மயக்கமோ, தயக்கமோ, தேக்கமோ இல்லாத நிலையே ஆகும். இதுவே அனைவராலும் விரும்பத்தகுந்த உன்னத நிலையாகும்!

சதுரம்: 2

இந்த சதுரத்திற்குள் இடம் பிடிப்பவர்கள் விருப்பமுள்ளவர்கள். ஆனால் திறமைக் குறைபாடுள்ளவர்கள். இவர்கள் கவலைக் கிடமானவர்கள் அல்ல. காரணம் – இவர்களின் மனோபாவம் தயார் நிலையில் உள்ளது. தடையாக இருப்பது போதுமான பயிற்சியின்மைதான். இவர்களின் திறமை பளிச்சிட வேண்டுமெனில், அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை முறையாகக் கொடுக்க வேண்டும்.

இவர்கள் விருப்பமுள்ளவர்களாக விளங்குவதால், பயிற்சி பெற்றுத் தேர்வதில் வேறு எந்தச் சிக்கலும் இருக்காது. இவர்கள் போதிய பயிற்சி எடுத்துக் கொண்டால் தேக்கநிலை மாறி – உற்பத்தித்திறன் உயரும்.

ஊக்கம் மிகுந்த இவர்களுக்கு – உரிய பயிற்சிகளை மட்டும் முறையாகக் கொடுத்து விட்டால் – அவ்விடத்தின், அத்தொழிலின், அவ்வுறவின் மதிப்பு உயரும்.

சதுரம்: 3

இந்தக் குட்டிச் சதுரத்தில் குவிந்திருப்பவர்கள் திறமையுள்ளவர்களாக இருப்பார்கள், திறமைக்கான போதிய பயிற்சியைப் பெற்றிருப்பார்கள். அந்தத் திறமையில் தேர்ச்சியும் பெற்றிருப்பார்கள் இருந்தும் அதனை வெளிப்படுத்தி – பயன் விளைக்கத் தயாராய் இருக்க மாட்டார்கள். காரணம் என்னவெனப் பார்த்தால் அவர்கள் மனதில் செயலாற்றும் விருப்பம் இருக்காது. விருப்பமின்மை ஏன் ஏற்படுகிறது என்பது பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய விஷயமாகும். போதிய சம்பளமோ, போதிய பாராட்டோ, போதிய அங்கீகாரமோ, போதிய இட வசதியோ, போதிய வெளிச்சமோ, போதிய காற்றோட்டமோ போதிய உபகரணமோ – பல நாட்களாக சரிசெய்யப்படாத மனித உறவோ ஒருவரின் விருப்பமின்மைக்குக் காரணிகளாக அமையலாம். அவற்றை அறிந்து, பட்டியலிட்டுப் பகுத்துப் பார்த்து ஆய்ந்து – நிவர்த்திசெய்ய முற்பட்டால் அத்தகைய நபர்களின் மனக்குறையை நீக்கி, அவர்களை பயன்மிக்க உற்பத்தியாளர்களாக மேம்படுத்திக் காட்டமுடியும். அவர்கள் பயன்பாடு மிக்கவர்களாக மாறுகிறபோது அவர்களின் மதிப்பு மட்டுமல்ல அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மதிப்பும், சமூக மதிப்பும் கூடி விடுகிறது என்பதுதான் உண்மை.

விருப்பம் இல்லையென்றால் செயலில் மனம் வைக்க மாட்டார்கள். இந்நிலை உயர்வுக்கு உதவாது. இந்தத் தயக்க நிலையை உணர்ந்து தீர்வு காண முயல வேண்டும். நமது கவனம் அந்தச் சதுரத்தில் குவிய வேண்டும். ஏனெனில் இப்படிப்பட்டவர்களால் மற்ற நபர்களின் மனமும் பாதிக்கப்படும். விளைவு அனைவரின் செயல்பாடும் குறைந்து – நோக்கம் வீழ்த்தப்படும்… விளைவுகள் விபரீதமானவையாய் மாறும்.

சதுரம்: 4

இந்தச் சதுரம் ஒரு சதுப்பு நிலம் மாதிரி. இவர்களிடம் திறமையும் இருக்காது. திறமையை வளர்த்துக் கொள்ளவோ, வெளிப்படுத்தவோ மனதில் விருப்பமும் இருக்காது. திறமையோ, விருப்பமோ – இரண்டும் இல்லாது போனால் ஒருவனால் எப்படி இயங்க முடியும்? அவனது வாழ்க்கை எப்படி இனிக்கும்? – இந்த நிலை மயக்க நிலையாகும். இவர்களின் மயக்க நிலை நீங்க வேண்டுமெனில் நாம் பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

நேர்மறையான எண்ணங்களை இவர்களின் நெஞ்சில் வளர்த்து போதுமான ஊக்க உணர்வுகளைப் புகட்டி தேவையான பயிற்சிகளை முறையாகக் கொடுக்கத் திட்டமிட்டால் இவர்களும் பயன்பாடுமிக்கவர்களாக, நிறுவனத்தின் மதிப்பை மேலும் உயர்த்துபவர்களாக மாறுவார்கள். மனிதவளமென்பதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட இனிமையான அனுபவமும் நமக்குக் கிடைக்கும். அல்லது இவர்கள் பட்ட மரங்களாகவும் இவர்கள் வாழும் இடம் சதுப்பு நிலங்களாகவும் மாறிவிடக் கூடும். அன்பு காட்டிப் பயிற்சி கொடுத்தால் நாளடைவில் நலம் விளையும்.

மேற்கண்ட சதுரங்களில் – எந்த சதுரத்திற்குள் இடம் பிடித்தால் மனிதர்கள் மேன்மை மிகு சூழலுக்கு உதவுவார்கள் என்பது உற்றுநோக்கத்தக்கது.

முதல் சதுரமே முத்தாய்ப்பான சதுரம். ஏனெனில் அது ஆக்கும் வல்லமை பொறுத்தது.

இரண்டாவது சதுரமோ ஊக்கமிருந்தும் தேக்க நிலையிலிருப்பது. பொருத்தமான பயிற்சியின் மூலம் இந்தத் தேக்க நிலையை மாற்றி ஆக்க நிலைக்குக் கொணர முடியும். கொணரவும் வேண்டும்.

மூன்றாவது சதுரமோ திறமையிருந்தும் விருப்பமின்மையால் இது தயக்க நிலைக்கு வித்திடும். இந்நிலை தவிர்க்கப்பட வேண்டுமெனில், போதுமான ஊக்க சக்தி புகட்டப்பட வேண்டும். உளவியல் ரீதியான அணுகுமுறைகளின் மூலம் மனோபாவ மாற்றத்திற்கு அடிகோல வேண்டும்.

நான்காவது சதுரமோ இயக்கமற்ற மயக்கநிலையைக் குறிப்பதாகும். இவர்களுக்குத் தேவை விழிப்புணர்வு. முறைப்படியான உளவியல் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகளின் மூலம் மட்டுமே இவர்களைக் கடைத்தேறச் செய்ய முடியும்.

இப்படி வகைப்படுத்திப் பார்த்தால் – மனித வளத்தைப் பொருத்தமாக, துரிதமாக, துல்லியமாகப் பயன்படச் செய்து மானுட மதிப்பை மேம்படுத்தப் பெரிதும் துணைபுரிவதாய் இருக்கும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமில்லை.

இலக்கை அடைய வைக்கும் எளிய சதுரம்

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு கனவிருக்கிறது. அல்லது இருப்பது அவசியம். கனவென்பது வேறல்ல அது ஒரு தொலைநோக்கு. ஆமாம் அது ஒரு தொலைக்காட்சி. நாளை நடக்க இருப்பதை இன்றே மனதில் காணும் காட்சி. இதைத்தான் ஆங்கிலத்தில் “ Vision “ என்றும் “Picture” என்றும் “Dream” என்றும் குறிப்பிடுகிறார்கள்.

“ Begin with the end in mind “ என்று ஒரு மேலாண்மை கோட்பாடு கூறுகிறது. “முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை மனதில் நிலைநிறுத்திக் கொண்டு ஒரு செயலை தொடங்க வேண்டும்” என்பது இதன் பொருள். அந்த இறுதிக்கட்டத்திற்குப் பெயர் தான் “ Vision”. இந்த “ Vision” ஐ அடைவதற்கு ஒருவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், பல்வேறு படிநிலைகளைக் கடக்க வேண்டும், பல நாட்கள் காத்திருக்க வேண்டும்.

கனவை நினைவாக்குதல் என்பது கடைசி நிலை. அந்த கடைசி நிலையை அடைய வேண்டுமென்றால் பல இடைநிலைகளைக் கடந்தாக வேண்டும். அந்த இடைநிலைகளை மைல்கற்களால் அடையாளம் காட்டலாம். அந்த மைல்கற்களே “இலக்குகள்” எனப்படும்.

“இலக்கில்லா வாழ்க்கை கிழக்கில்லா வானுக்குச் சமம்” – என்பேன். இலக்குகள் தான் மனிதனை சிறிது சிறிதாக முன்னேறச் சொல்வது. இலக்கு இருக்கும் போதுதான் மனித மனம் ஓரிடத்தில் குவிகிறது. இல்லையென்றால் அது சிதறிப் போகிறது. கவனம் சிதறிவிட்டால் மனிதனால் உயரங்களை எட்ட முடியாது. இலக்கே இல்லாமல் இருவரால் தான் இருக்க முடியும். ஒருவர் மெய்ஞானி மற்றொருவர் அஞ்ஞானி. எல்லாம் அறிந்த ஞானியருக்கு இலக்குகள் எதுவும் தேவையில்லை, அவர்கள் இலக்குகளை கடந்த நிலையை எய்தியிருப்பார்கள். அவர்கள் மனமற்றதன்மையை அடைந்திருப்பார்கள். அதே போன்று ஏதும் அறியாது அறியாமையில் முடங்கி கிடப்போரிடமும் இலக்குகள் இருக்காது. இந்த இரண்டு நிலைக்கும் இடையில் ஆட்பட்டு மனித நிலையில் வாழ்வோர்க்கு இலக்குகள் தான் ஏணிப்படிகள். அப்படிப்பட்ட இலக்குகளை அடைவதற்கு நான்கு முறைகொண்ட ஒரு சுழற்சி வட்டத்தை இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

மேலிருக்கும் சதுரத்தை உற்று கவனியுங்கள்

குறித்த இலக்கை குறித்த நேரத்தில் அடைவதற்கு முறையான ஒரு வழிமுறையை கடை பிடித்தல் அவசியம். இல்லையென்றால் அந்த இலக்கை அடைவது கடினம்.

அந்த வழிமுறைநான்கு நிலைகளைக் கொண்டது

1. திட்டமிடுதல் - Plan
2. செயல்படுதல் - Do
3. சரிபார்த்தல் - Check
4. சரிசெய்தல் - Act

முதலாவதாக “திட்டமிடுதலை” பார்ப்போம். நம்மில் எத்தனைபேர் திட்டமிடுகிறோம்? நம்மில் எத்தனைபேரிடம் இலக்கிருக்கிறது? நம்மில் எத்தனை பேரிடம் கனவிருக்கிறது? (சற்றே உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள் இவை). ஒருவரிடம் உள்ள கனவுதான் அவர்கள் வாழ்க்கைக்கு பொருள் சேர்க்கிறது. கனவுகளே இல்லாத இலக்குகள் முழுமை பெறாது. அதேபோன்று இலக்குகள் ஈடேற வேண்டுமென்றால் திட்டம் அவசியம்.

எது திட்டம்?

எது - அது?
எவர் - அவர்?
எப்பொருள் - அப்பொருள்?
எவ்விடம் - அவ்விடம்?
எப்பொழுது - அப்பொழுது?
எம்முறை - அம்முறை?
எவ்வளவு - அவ்வளவு?

- என்று தீர்மானித்துக் கொள்வதையே “திட்டம்” என்கிறோம். செய்யவிருக்கும் செயல் எது? அந்தச் செயலை யார்யாரைக் கொண்டு செய்யப் போகிறோம்? அந்தச் செயலைச் செய்து முடிக்க எவ்வளவு பொருள் தேவைப்படுகிறது? அந்தச் செயல் செய்வதற்கு பொருத்தமான இடம் எது? அந்தச் செயலை மேற்கொள்வதற்கு உரிய நேரம் எது? அந்தச் செயலை எந்த முறையில் செய்ய விரும்புகிறோம்? செய்ய விரும்பும் அந்தச் செயலின் அளவு (Size of the project) எவ்வளவு? – என்பதையெல்லாம் தீர்மானிப்பதற்குப் பெயர்தான் திட்டமிடுதல் ஆகும்.

வீட்டின் வரவு செலவுத் திட்டம், ஒரு திருமணத்தை நடத்தி முடிப்பதற்கான திட்டம், ஒரு வீட்டைக் கட்டி முடிப்பதற்கான திட்டம், ஒரு புதிய தொழிலைத் தொடங்குவதற்கான திட்டம் – என செய்ய விரும்பும் ஒவ்வொரு செயலுக்கும் நாம் திட்டமிடமுடியும். அதை காலத்தின் அடிப்படையிலும் வரையறைசெய்யலாம். ஒரு வாரத்திட்டம், ஒரு மாத கால திட்டம், ஓர் ஆண்டுத் திட்டம், மூவாண்டுத் திட்டம், ஐந்தாண்டு திட்டம், பத்தாண்டு திட்டம், 20 ஆண்டு காலத் திட்டம் என குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களாகவும் செயலுக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம்.

இரண்டாவதாக நாம் மேற்கொள்ள வேண்டியது “செயல்படுதல்”. செயல்படுதல் என்பது நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல எளிதானது அல்ல. முதலில் அதற்கொரு திட்டம் தேவை. திட்டமற்றசெயல்பாடு பெரும்பாலும் தோல்வியில் முடியக்கூடும். அது மட்டும் அல்ல நேரமும், பொருளும், மனித ஆற்றலும் விரையமாகக் கூடும். அப்படிப்பட்ட செயல்களால் ஏற்படும் பயனைவிட இழப்புக்களே அதிகம். எனவே எந்த ஒரு செயலையும் திட்டமிட்டுத் தொடங்கினால் வெற்றி நிச்சயம். திட்டமிட்டு தொடங்கும் செயல் 50 விழுக்காடு வெற்றி பெற்றதாகவே பொருள் படும்.

திட்டமிடுதலுக்கும் செயல்படுத்தலுக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. திட்டமிடுதலும் ஒரு செயல் தான் என்றாலும் அது மனம் சார்ந்தது. ஆனால் செயல் என்று வரும்போது அது உடல் உழைப்பையும் பிறரோடு உறவாடும் திறமைகளையும் சார்ந்து இருக்கிறது. மேலும் ஒவ்வொரு செயலையும் செய்வதற்கென்று ஒரு செய்முறைஉண்டு. அதன்படி செய்தால் தான் அந்த செயல் முழுமை பெறும்.

“வெல்டிங்” செய்வதற்கென ஒரு முறைஉண்டு. சமையலுக்கென ஒரு முறைஉண்டு. ஓவியம் வரைவதற்கென்று ஒரு முறை, கட்டிடம் கட்டுவதற்கென்று ஒரு முறை. விமானம் ஓட்டுவதற்கென ஒரு முறைஉண்டு. விவசாயம் செய்வதற்கென்று ஒரு முறைஉண்டு. இப்படிச் செய்தொழில் ஒவ்வொன்றும் வெவ்வேறு முறைகளை கொண்டிருக்கிறது. ஒன்றைச் சிறப்பாகச் செய்பவரால் மற்றொன்றைச் சிறப்பாகச் செய்ய முடியாமல் போகலாம். இது இயற்கையானது. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ள அஷ்டாவதானிகளும், தஸாவதானிகளும் – பல செயல்களை ஒரே நேரத்தில் சரியாகச் செய்ய பழகியிருப்பர்.

எனவே ஒரு முறையாகச் செயல்பட வேண்டுமெனில், சோம்பல் கூடாது. அலட்சியம் கூடாது; அவசரம் கூடாது. ஒருவரைப் பார்க்க உகந்த நேரம் எது? முடியாது எனச் சொல்லும் ஒருவரிடம் சம்மதம் பெறுவது எப்படி? ஒருவரைச் சந்திக்கச் செல்லும் போது அவர் அங்கு இல்லையென்றால் அடுத்து என்ன செய்வது? நேரத்தை எப்படி முறையாகப் பயன்படுத்துவது? – போன்றபற்பல கலைகளிலும் தேர்ச்சிபெற்றால்தான் செயல்பாட்டில் வெல்ல முடியும். பலரின் முயற்சிகள் தோற்பதன் காரணம் – இந்தக் கலைகளில் தேர்ச்சி இன்மையே.

கூடுதல் உழைப்பு, நேர்மை, பிறரைப் புரிந்துகொள்ளுதல், பொறுமை – போன்றபல நற்பண்புகள் இருந்தால் செயல்பாட்டில் சிறக்க முடியும்.

மூன்றாம் நிலை “சரிபார்க்கும்” நிலையாகும். சரி பார்ப்பதற்கென நேரம் ஒதுக்க வேண்டும். திட்டமும் செயலும் ஒத்துப்போகிறதா எனப் பார்க்க வேண்டும். வாரம் ஒரு முறையோ, மாதம் ஒரு முறையோ சரிபார்க்க வேண்டும். தினமும் கூட அதைச் செய்யலாம். திட்டத்தின்படி செயல் நடைபெறவில்லையென்றால் காரணங்களை ஆய்ந்து அறிய வேண்டும். ஒரு செயல் – குறித்த நேரத்தில் முடியாவிட்டால் – அது எதனால் நேர்ந்தது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்போதுதான் நாம் எங்கே பின்தங்கியிருக்கிறோம் என்பதை அறிய முடியும். அதுமட்டுமல்ல இப்படிப்பட்ட பரிசீலனைதான் நமது முன்னேற்றத்தைத் துரிதப்படத்த உதவும்.

நாம் தற்சோதனை செய்து கொள்ளாவிட்டால், நம்மை நாமே தணிக்கை செய்து கொள்ளாவிட்டால், நாம் எங்கிருக்கிறோம்! என்னும் நிலையே தெரியாமல் போய்விடும். விளைவு, நம்மை பாதாளத்தில் தள்ளிவிடும். எனவே… நம்மை நாம் அறிந்து கொள்ள உதவும் கட்டம் தான் “சரிபார்க்கும்” கட்டம்.

திட்டத்திற்கும் – செயலுக்கும் இடையில் உள்ள இடைவெளிகளை, நிறைகுறைகளைக் கண்டறிந்துவிட்டால் அவற்றைப் பட்டியலிட்டு, ஒவ்வொன்றாகச் சரி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய முயற்சிகளை உடனுக்குடன் மேற்கொண்டுவிட்டால் பெரிய தாமதங்களையும் – அதனால் ஏற்படும் இழப்புக்களையும் தவிர்த்துவிடலாம்.

இப்படிச் சரிபார்க்கும்போதுதான் – நாம் இட்ட திட்டத்தின் குறைபாடுகளும் நமக்குப் புரியும். அனுபவக் குறைவால் ஏற்பட்டிருக்கும் ஏற்றத்தாழ்வுகளும் நமக்குத் தெரிய வரும். எனவே இந்தப் புள்ளிவிபர அடிப்படையில் – நமது திட்டத்தையே மறுபரிசீலனைக்குட்படுத்தி உரிய மாற்றத்தைச் செய்து கொள்ளலாம். திட்டத்தில் உரிய மாற்றம் செய்து கொண்டால் – அதனை நிறைவேற்றுவதில் முரண்பாடு இல்லாமல் முறையாக , முழுமையாக நிறைவேற்றமுடியும்!

இப்படியாக இந்த நான்கு நிலைகளைக் கொண்ட வட்டத்தை, நாம் எடுத்துக்கொண்ட இலக்கு நிறைவேறும் வரை அடிக்கடி ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் சரிபார்த்து, நிலைமை சரிசெய்யப்பட வேண்டும். அப்படி இடைவிடாமல் பரிசோதனை செய்து கொண்டால் திட்டத்திற்கும் – செயல்பாட்டிற்கும் இடைவெளி நேராமல். குறித்தபடி இலக்குகளை எட்ட முடியும்…. அது தானே நமது நோக்கமும் கூட.

ஊக்கத்திலிருந்து ஞானத்திற்கு

டீக்கடை பெஞ்ச்சிலும் சரி பாராளுமன்றத்திலும் சரி பேசப்படும் செய்திகளை கூர்ந்து நோக்கினால் ஒன்று தெளிவாகப் புலப்படும். நம் நாட்டின் நிலவரம் சரியில்லை என்பதுதான் அது! ஒரு புறம் அரசியல்வாதிகளின் போக்கு சரியில்லை என்கிறார்கள். மறுபுறம் அதிகாரிகளின் நடவடிக்கைகள் சரியில்லை என்கிறார்கள். மற்றொருபுறம் பொதுமக்கள் விழிப்புணர்வின்றி செயல்படுவதாக குற்றம் சுமத்துகிறார்கள். மேலும் பல விவாத மேடைகளில் பெற்றோர்களும் பிள்ளைகளும் குற்றம் சுமத்தப்படுகிறார்கள். இளைஞர்களும் யுவதிகளும் பழிக்கப்படுகிறார்கள்.

ஒட்டு மொத்தமாகச் சொல்வதென்றால் நம்மை நாமே குறைகூறிக் கொண்டிருக்கின்றோம்! என்னுடைய கேள்வி என்னவென்றால் “நாம் எல்லோருக்குமே குறைகள் தெளிவாகத் தென்படுகின்ற போதும் நம்மால் ஏன் அவற்றை நிறை செய்ய முடியவில்லை?” என்பதுதான்!

மகான்களும் பெரிய தலைவர்களும் காலம்காலமாக சரியான செய்திகளை நமக்கு சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இருந்தும் நம் மக்களின் வாழ்வில் ஏன் விரும்பத்தகுந்த மாற்றங்கள் விரைவாக நிகழவில்லை என்பது நியாயமான ஆதங்கமாகவே இருந்து வருகிறது.

இதற்கான காரணத்தையும், நாம் செய்ய வேண்டிய காரியத்தையும் இந்த படிநிலைகள் தெளிவாக்கவிருக்கின்றன. வாசித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் மாற்றம் காண்பீர்கள்.

மாற்றத்தை விரும்பும் யாரும் கீழ்க்காணும் நான்கு நிலைகளை கடந்தே ஆகவேண்டும். இந்த நிலைகளை காணாதவர்களால் – கடக்காதவர்களால், மாற்றத்தை காண முடியாது. ஆனால் ஒருவர் எவ்வளவு விரைவில் இந்த நான்கு நிலைகளுக்கு ஆட்படுகிறாரோ, அத்தனை விரைவில் அவரது ஏற்றம் தரும் மாற்றம் நிகழ்ந்தே தீரும்.

அந்த நான்கு நிலைகள்:

1. அறிதல் 2. புரிதல் 3. உணர்தல் 4. தெளிதல்

முதலில் அறிதலைப் பார்ப்போம்

எந்த ஒரு புதிய தகவலோ கருத்தோ செய்தியோ பொருளோ ஒருவருக்கு வெளியிலிருந்துதான் முதலில் அறிமுகமாகின்றது. ஒரு மனிதர் மூலமாகவோ. காட்சி மூலமாகவோ. சம்பவத்தின் முலமாகவோ. செய்தித்தாள், புத்தகம், தொலைக்காட்சி, கடிதம், இணையதளம், வானொலி, கருத்தரங்கம் என எண்ணற்ற ஊடகங்களின் வாயிலாகவே ஒன்றை நாம் அறிய நேருகிறது. சுருக்கமாகச் சொன்னால் அறிதல் என்பது வெளியிலிருந்து பெறப்படுவது. இப்படி வெளியிலிருந்து பெறப்படும் ஒன்றால் மனித மனதில் மாறுதல் உடனடியாக நிகழ்ந்துவிடுவதில்லை. ஏனென்றால் யாரோ சொன்னதலிருந்தும் எங்கோ கேட்டதிலிருந்தும் நமக்குள் ஏற்படும் தாக்கங்கள் அழுத்தமாகவோ ஆழமாகவோ பதிவதில்லை. எனவே இந்நிலையில் மாற்றங்கள் நிகழ்வது அரிதுÐ

இரண்டாம் படியாகிய “புரிதலை” எடுத்துக் கொள்வோம்.

மேற்கண்ட பல வழிகளின் மூலம் நாம் பெற்ற அறிவை நமக்குள் சுழலவிட்டுச் சிந்தித்துப் பார்ப்பதையே நாம் “புரிதல்” என்கிறோம். “எண்ணிப் பார்த்தல்” என்றும், “யோசித்தல்” என்றும், “அலசி ஆராய்தல்” என்றும், நடைமுறையில் கூறப்படுவதையே “சிந்தித்தல்” என்கிறோம். ஒரு கணிப்பொறியைப் பற்றி நாம் அறிந்து கொண்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த கணிப்பொறி எனக்கு எந்தெந்த வகையில் பயன்படும்? அது இப்போது எனக்கு தேவையா? அதை வாங்கிக் கொள்ள எவ்வளவு பணம் தேவை? அதை வாங்குவதால் உடனடி இலாபம் உண்டா? என சிந்தித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வருவதையே “புரிதல்” என்கிறோம்.

சுருக்கமாக சொன்னால் “புரிதல்” என்பது உள்ளுக்குள் நிகழ்வது. ஒரு நபரின் மனதுக்குள் நிகழ்வது. ஒரு மாற்றத்தை உருவாக்குவதில் புரிதல் என்பது இரண்டாம் நிலையை வகிக்கிறது. ஒன்றை அறிந்த நிலையைக் கடந்து, புரிந்த நிலைக்கு வரும் போது ஓரளவு மாற்றங்கள் நிகழக்கூடும். ஆனாலும் மாற்றம் கட்டாயம் நிகழ்ந்துவிடும் என்று சொல்வதற்கு இல்லை. ஏனென்றால் அன்றாட வாழ்வில் எத்தனையோ கருத்துக்களை புரிந்து கொண்டவர்கள் கூட நடைமுறையில் மாறுவதில்லை!

புகைப்பது தவறு புகைப்பதால் புற்று நோய் வரும் சாத்தியக் கூறு அதிகம் என்பதை புரிந்து ஏற்றுக் கொள்பவர்களால் கூட புகைப்பதை நிறுத்த முடிவதில்லை என்பது கண்கூடு. எனவேதான் புரிதலையும் கடந்து, அதற்கு நாம் அடுத்த நிலையை நோக்கி நகர வேண்டும்.

மூன்றாம் படியாகிய “உணர்தல்” பற்றி அறிவோம்.

ஒன்றை அறிந்து கொண்டு அதைப் புரிந்து கொண்ட பின்னர் அதைச் செயல் வடிவில் செய்து பார்த்து, அதனால் கிடைக்கும் அனுபவத்திலிருந்து பெறப்படுவதையே உணர்தல் என்கிறோம்.

சர்க்கரை என்று பிறர் சொல்லக் கேட்பது “அறிதல்” ஆகும். இதை உண்டால் இனிய சுவை கிடைக்கும் என்று சிந்தித்தால் அதை “புரிதல்” என்கிறோம்.

அந்த சர்க்கரையை எடுத்து நாவில் வைத்து ருசித்துப் பார்த்தால் கிடைக்கும் அனுபவத்தையே “உணர்தல்” என்கிறோம். அதே போன்று ஒரு கருத்தை (அ) கோட்பாட்டை நடைமுறைப் படுத்திட அதனால் கிடைக்கும் அனுபவம் நமக்குள் அழுத்தமான பதிவை ஏற்படுத்தும். ஒரு சிலரால் நடைமுறைப்படுத்தி பார்க்காமலே கூட கற்பனையாலேயே அடுத்து வரவிருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

ஒரு கணிப்பொறியை அறிந்து கொள்வதோடு விட்டுவிடாமல் அதனைப் பற்றிய புரிதலோடு அதை இயக்கத்தைப் பார்த்து அதன் முழுப் பரிமாணத்தையும் அனுபவித்து உணர்ந்து கொள்ளும் போது அது ஏற்படுத்தும் தாக்கம் நிரந்தரமாக இருக்கும். எனவே நமக்குள் உணர்தல் ஏற்பட்டுவிட்டால் அதுவே மிகப்பெரிய உந்துசக்தியாகிவிடும். எனவே மாற்றமானது எளிதில் நடந்துவிடும்.

நான்காவது படியாகிய “தெளிதல்” என்பது ஞானத்தைக் குறிப்பதாகும்.

ஒன்றை மீண்டும் மீண்டும் கற்பனையில் ஆழ்ந்தோ நடைமுறைப் படுத்தியோ நம் அனுபவம் முழுமையானதாகும். இத்தகைய தெளிவு ஏற்படும் போது யானை நமக்கு யானையாகவே தெரியும். அப்படியில்லாமல் ஒருமுறை உணர்ந்த நிலையிலோ (அ) புரிந்த நிலையிலோ (அ) அறிந்து கொண்ட நிலையிலோ நின்றுவிட்டால் யானையின் சில பகுதிகளை மட்டும் பார்த்தவர்களாக இருப்போம். அதுமட்டுமல்ல... வாழ்நாள் முழுவதும் அந்தப் பகுதி மட்டுமே யானை என்றும் அடம் பிடிப்போம். முழுமையைக் காணும் முயற்சியின்றி உண்மையை உணராமலே வாழ்ந்து முடித்துவிடக் கூடும்.

முழுமைபெறாத இத்தகைய நிலையில் மாற்றங்கள் நிகழ்வதில்லை. திருவள்ளுவர், புத்தர், விவேகானந்தர், ஏசுநாதர், நபிகள்நாயகம் போன்ற சான்றோர்களும் காந்தி, ஆப்ரகாம்லிங்கன், மார்டின் லூதர்கிங், காரல் மார்க்ஸ், லெனின், சர்ச்சில் போன்ற உலகம் போற்றும் அரசியல் தலைவர்களும், தாகூர், பாரதியார், வேர்ட்ஸ் வொர்த், ஷெல்லி, கீட்ஸ், ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா போன்ற இலக்கிய – தத்துவஞானிகளும், ஐன்ஸ்டீன், நியூட்டன், எடிசன், ஆர்க்கிமிடிஸ், சர்.சி.வி.ராமன், மேரிகியூரி, இராமானுஜம் போன்ற அறிவியல் – கணித மேதைகளும் கொலம்பஸ், வாஸ்கோட காமா போன்ற புவியியல் கண்டுப்பிடிப்பாளர்களும். ஹென்றி போர்டு, ஜி.டி நாயுடு போன்ற தொழில்நுட்ப வர்த்தக மேதைகளும் இத்தகைய தெளிவைப் பெற்றிருந்தார்கள். இன்றும் சிலர் இந்நிலையை (தெளிவு பெற்ற நிலையை) அடைந்திருக்கிறார்கள் என்றாலும் நம்மில் பலர் அறிந்தும், ஆனால் புரியாமலும், புரிந்தும் ஆனால் உணராமலும், உணர்ந்தும் ஆனால் தெளிவு பெறாமலும் பல்வேறு நிலைகளில் இருந்து வருகிறார்கள். எல்லோருமே உயர்ந்த நிலையாகிய தெளிவினை அடைய வேண்டும். அப்போதுதான் மாற்றங்கள் உடனுக்குடன் நிகழும்! உன்னதம் நிலை பெறும்! இந்த நான்கு நிலைகளும் ஒருவரை அறியாமையிலிருந்து ஞானத்தை நோக்கி இட்டுச் செல்வதற்கான நான்கு படிக்கட்டுகள். இதனை உணர்வோம், தெளிவோம், ஏற்றமிகு மாற்றத்தை விரைவில் காண்போம்!

- தேவகோட்டை ம.திருவள்ளுவர் (நமது நம்பிக்கை)







லகெங்கும், பொருளாதாரப் பின்னடைவின் விளைவாக பலருக்கும் வேலை வாய்ப்பு பறிபோகிறது. குறிப்பாக, தனியார் நிறுவனங்களில் இந்த நிலை பெருமளவில் இருக்கிறது. ஆட்குறைப்பு, நிறுவனத்தின் உற்பத்தியோ, தொழிலோ குறைவதால் ஏற்படுகிறது. இதற்குப் பெரிய அளவில் தீர்வுகள் எதுவும் தென் படவில்லை.

அலுவலர் அல்லது ஊழியரின் செயல்திறன் நன்றாகவே இருந்தாலும், தொழில்சூழல் சரியாக இல்லாத போது வேலையை விட்டு விலக்குவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே ஆகிவிட்ட சூழலில், வேலையை இழக்க நேரும் தனிமனிதர்கள் இந்தச் சூழலை எப்படியெல்லாம் எதிர்கொள்ளலாம்? யாருக்காவது வேலை போனால், உடனடியாக என்ன செய்யலாம்? இந்தக் கேள்விக்கு, உலக அளவில் மனிதவள மேம்பாட்டு நிறுவனர்கள் விடையளித்து வருகிறார்கள். வேலைவாய்ப்பு ஆலோசகர் மார்தா ஃபின்னே இது குறித்து ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அவரது வழிகாட்டுதல்கள் சிலவற்றை உள்வாங்கிக் கொண்டு, இந்தியச் சூழலில் சில ஆலோசனைகள் இங்கே தரப்படுகின்றன.

ஒரு வேளை – உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாருக்காவது இப்படியொரு சூழல் ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு இந்தக் கட்டுரை பயன்படக்கூடும். இந்தக் கட்டுரைக்கான அவசியம் உங்களுக்கோ உங்கள் நண்பர்களுக்கோ ஏற்படக்கூடாது என்கிற பிரார்த்தனையுடன் இந்தக் கட்டுரையை வெளியிடுகிறோம்.

- மரபின்மைந்தன் ம முத்தையா (ஆசிரியர் நமது நம்பிக்கை)

1. வேலை நீக்கம் குறித்த அறிக்கை, முன்னறிவிப்பின்றி தரப்படுகிற சூழலில் உடனடியாக அதில் கையெழுத்திடாதீர்கள். உங்கள் வேலை இழப்பிற்கு ஓரளவேனும் நியாயமான இழப்பீடு வழங்கப்படுகிறதா என்பதை உறுதிசெய்து கொண்டு, இருக்கிற சூழலில் இதைவிட நல்ல தொகை கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தால் மட்டுமே கையெழுத்திடுங்கள்.

2. பதட்டம் காரணமாக, நிர்வாகத்திடமோ, மேலதிகாரியிடமோ கடுமையாக மோதாதீர்கள். வேறு வழியின்றி நிறுவனம் இந்த முடிவை மேற்கொள்கிறது. நாளை சூழ்நிலை மாறலாம். உங்களுக்கு அவர்களும், அவர்களுக்கு நீங்களும் தேவைப்படலாம்.

3. விஷயத்தைக் கேட்டதும் கண்ணீர் வருகிறதா? மான அவமானம் பார்க்காமல் அழுதுவிடுங்கள். உங்கள் மன அழுத்தம் கண்ணீர் வழியே கரைந்தோடும். உங்கள் உடல் நலனுக்கும், அடுத்த கட்ட முடிவுகளை நோக்கித் தெளிவாக நகரவும் இது உங்களுக்குத் துணை செய்யும்.

4. வருமானத்திற்கு நல்ல வழியை நோக்கி சில ஏற்பாடுகளை செய்துகொள்ள மூன்று மாதங்களாவது ஆகும். எனவே சிக்கனமாக இருக்கப் பழகுங்கள். வேலை இருந்தாலும் இழந்தாலும் சிக்கனம் நல்லதுதான்.

5. வங்கி முதலீடுகளை ஒழுங்குபடுத்தி, வட்டித் தொகை சமச்சீராக வருகிறதா என்று பாருங்கள். வேறு வழியே இல்லாமல் போனாலே ஒழிய சொத்துகளைக் குறைந்த விலைக்கு அவசரப்பட்டு விற்காதீர்கள்.

6. உங்கள் தொழில் திறமை – அனுபவம் போன்றவற்றை, ஒரே நிறுவனத்திற்கு என்றில்லாமல் பல நிறுவனங்களுக்கும் பயன்படும் விதமாக ஆலோசகர் பொறுப்பேற்க முயலுங்கள். உங்களுக்குப் பல ஆயிரங்கள் சம்பளம் கொடுத்த நிறுவனத்திற்குக் கூட சில ஆயிரங்கள் பெற்றுக் கொண்டு பகுதிநேரப் பணிபுரியும் சூழல் அடுத்த சில மாதங்களில் உருவாகலாம்.

7. உண்மை நிலையை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மாற்று வழிகளை அவர்களுடன் கலந்து ஆலோசியுங்கள். குழந்தைகளுக்கு என்ன வயதோ அதற்கேற்ப விஷயத்தைப் பக்குவமாகச் சொல்லுங்கள். பதறாதீர்கள். பதட்டமடையச் செய்யாதீர்கள்.

8. கோவையில் மேட்டுப்பாளையம் – சிறுமுகை பக்கங்களில் பல தொழில் முனைவோர்கள் குறுகிய காலங்களில் தோன்றி, கடின உழைப்பால் முன்னேறி இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். அந்தப் பகுதிகளில் இருந்த பல நிறுவனங்கள் திடீரென்று மூடப்பட்டதால், பெரும் பின்னடைவைச் சந்தித்து, சொந்த முயற்சியில் தாங்களே நிறுவனங்கள் தொடங்கி வளர்ந்தார்கள் அவர்கள். எனவே, இருட்டிலிருந்து மீண்டு வெற்றியின் வெளிச்சத்தைத் தொடும் வாய்ப்பை வாழ்க்கையே வழங்கும் என்பதை நம்புங்கள்.

9. பதட்டத்திலும் பயத்திலும் பெருமளவு சக்தி வீணாகிறது. அதை ஆக்கபூர்வமான சக்தியாக மடைமாற்றம் செய்யுங்கள். “அடுத்தது என்ன” என்கிற கேள்வியையும் தேடலையும் உங்களுக்குள்ளேயே தீவிரமாக்குங்கள்.

10. நிறுவனத்திலிருந்து வெளியேறும்போது கோப்புகள் – விவரணைகளை எடுத்து வர முயலாதீர்கள். ஆனால் நிறுவனம் வழியே நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட தனிப்பட்ட தொடர்புகளை கைவிட்டுவிடாதீர்கள். உங்கள் புதிய தொழிலுக்கு அந்தத் தொடர்புகள் பெருமளவில் துணை செய்யும்.

11. உலகையே உலுக்கும் பொருளாதாரப் பின்னடைவிற்கு நீங்கள் எவ்விதத்திலும் காரணமில்லை. வேலை இழக்க நேர்ந்தது உங்கள் குறைபாட்டால் இல்லை என்பதை உணருங்கள். அதே நேரம், அடுத்தொரு நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் வாய்ப்புக் கிடைத்தால் உங்களை அங்கே தவிர்க்க முடியாதவராக நிலைநிறுத்தும் அளவு உங்கள் செயல்திறனைக் கூர்மைப்படுத்துங்கள்.

12. எத்தனை மோசமான பின்னடைவுகளிலும் முனைப்புள்ளவர்கள் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தப் பின்னடைவு, உங்கள் செயல்திறனை உங்களுக்கே நினைவூட்டக் கிடைத்த நல்வாய்ப்பு என்பதை மனதில் கொண்டு முன்னைவிடவும் முனைப்போடும் நம்பிக்கையோடும், இந்தப் புதிருக்கான விடையைக் கண்டடையுங்கள்.



குழந்தைகள் நடைபழகும் முன்னே, மழலையர் பள்ளி (Nursery / Montessori) போன்றவற்றில் சேர்க்கப்படுகிறார்கள். இந்தப் பழக்கம் நல்லதா, கெட்டதா என்ற விவாதம் ஒருபக்கம் இருக்க, இனிவரும் காலங்களில், இந்தப் பிள்ளைகள் வளர்ந்து வரும் வேளையில், படிப்பு, வேலைவாய்ப்பு போன்றவற்றில் போட்டி இன்னும் அதிகமாகும் வாய்ப்புத்தான் காணமுடிகிறது. இதே போக்கின் அடிப்படையில், பள்ளியில் ஆத்திச்சூடி சொல்லிக் கொடுக்கும் பொழுதே, பிள்ளைகளுக்குக் கணிணிப் பிரயோகம் பற்றியும் பெரும்பாலான பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

விளையாட்டுப்போல கற்றுக்கொள்ள ஆரம்பித்து, விரைவில் இந்தப் பிள்ளைகள் இணையத் தளங்களைப் பார்வையிடவும் தயாராகி விடுகிறார்கள். தானாகவே பாட்டி – தாத்தாவுக்கு அஞ்சல் அனுப்புவது எனத் தொடங்கி, விளையாட்டுத் தளங்களில் விளையாடுவது, அதன் மூலம் நண்பர்கள் அறிமுகம், அவர்களுடன் Instant Messenger இல் அரட்டை, என்று வளர்கிறார்கள். ஒரு கட்டத்தில், பெற்றோர்களிடம் " என் அந்தரங்க மடல்களைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்" என்று சொல்லும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள்.

எவ்வளவு வேகத்தில் ஒரு பிள்ளை இத்தகைய தேர்ச்சி பெற்றுவிடுகிறது என்பது அதன் சாமர்த்தியத்தைப் பொறுத்ததாக இருந்தாலும், இதுவே இவர்களுக்கு இணையத்தில் இருக்கும் அபாயங்களையும் பாதுகாப்பு முறைகளையும் சொல்லிக் கொடுப்பதற்கான சரியான தருணம். வீடு விட்டு வெளியே செல்லும்போது பிள்ளைகளிடம் எப்படி நாம் "பத்திரமாக போப்பா, சாலையில் வாகனங்கள் பல வந்துகொண்டே இருக்கும், நீ தான் கவனமாகச் செல்லவேண்டும்" என்று புத்திமதி சொல்வதுபோல தான், இணையத்தில் சஞ்சரிப்பதற்கும், கோப்புகளைத் தரவிறக்கம் செய்வது குறித்தும் நாம் அவர்களுக்கு நல்லது – கெட்டது சொல்லித்தர வேண்டும்.

பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியர் போல் கையில் பிரம்போடு சொன்னால், அது சரிவராது. பிள்ளைகள் பொதுவாகவே துரு-துருவென்றுதான் இருப்பார்கள். இது அவர்களின் இயல்பு நிலை. நாம் கடுமையாகச் சொல்லும் விஷயங்களை அவர்கள் விளையாட்டென நினைத்து அலட்சியப்படுத்தி விடுவார்கள். அதையே நாம் விளையாட்டாய்ச் சொன்னால், நினைவில் வைத்துக்கொண்டு செயற்படுவார்கள். நாம் சொல்லும்படி அவர்கள் கேட்காவிட்டால், அவர்கள் கேட்கும்படி நாம்தான் மாற்றிச் சொல்ல வேண்டும்.

விதிமுறைகளும் வரைமுறைகளும்:- 5-15 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் இணையத்தைப் பயன்படுத்துவதுக்கு முன்னே சில விதிமுறைகளையும் வரைமுறைகளையும் கண்டிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் அமைக்கவேண்டும்.

அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களுக்கோ அரட்டைச் செய்திகளுக்கோ (Online Chat) எக்காரணம் கொண்டும் பதில் எழுதக் கூடாது. மௌனம் உத்தமம்.

நிஜப் பெயர், ஊர், நகரம், வீட்டு விலாசம், பிறந்த நாள், பெற்றொர்களின் பெயர், அலுவலகத்தின் பெயர், இதர குடும்பத்தினரின் விவரங்கள் போன்ற அந்தரங்கத் தகவல்களைக் கண்டிப்பாகச் சொல்லக்கூடாது. பிள்ளைக்குத் தெரிந்தவர்களேயானாலும், இணையத்தில் கேட்டால் சொல்லக்கூடாது. இது மட்டுமன்றி, அப்படிக் கேட்டவரின் விவரம் பெற்றோருக்கும் உடனடியாகத் தெரியப்படுத்தவும் வேண்டும்.

பெற்றோரின் மேற்பார்வை இல்லாமல் Web Cam & Microphone ஐ பயன்படுத்தக்கூடாது. பார்த்துப் பேசும்பொழுது அந்தரங்கத் தகவல்களை அறியாமலேயே பிள்ளைகள் சொல்லிவிடுவார்கள்.

உங்களது இணைய உலாவி (Browsers, like Firefox , IE, chrome) இல் ஆபாசமான சொற்கள் அடங்கிய தளங்களுக்கு தடை விதிக்கச்செய்யவும்.

உங்களது மேற்பார்வை இல்லாமல் எந்தக் கோப்பையும் தரவிறக்கம் செய்ய அனுமதிக்காதீர்கள். நச்சு நிரல் பாதுகாப்பிற்காக மட்டுமன்றி, தகவல்களைத் திருடும் Phishing தளத்தில் இருந்தும் பாதுகாக்க இது மிக அவசியம்.

எல்லோருக்கும் பொது :- கணினியை உங்கள் வரவேற்பறையில் / குடும்பத்தினர் எல்லோரும் வந்து போகும் பொது இடத்தில் வைக்கவும். உங்கள் பிள்ளை கணினியைப் பயன்படுத்தும் பொழுது நீங்கள் பக்கத்திலேயே உட்கார வேண்டும் என்பது இல்லை, உங்கள் பார்வை இருந்தாலே போதுமானது. யாருடைய மேற்பார்வையும் இல்லாமல் இணையத்தில் இயங்க அனுமதிக்காதீர்கள்.

பேசுங்கள் – பழகுங்கள் :- உங்கள் பிள்ளை இணையத்தைப் பயன்படுத்தும்போது நீங்கள் அவ்வப்போது பேச்சுக் கொடுத்துகொண்டு இருங்கள். "என்ன செய்கிறாய், ஏன் செய்கிறாய்" போன்ற கேள்விகளைத் தவிர்த்து " இதை நான் படித்தேன், நீ படித்தாயா?... உனக்கு வந்திருக்கும் நகைச்சுவைக் கடிதத்தை என் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்புகிறாயா?" மாதிரியான பேச்சு இலகுவாக இருக்கும்.

நில் - கவனி செல் :- சாலையைக் கடக்க பிள்ளைகளுக்குப் பயிற்சி அளிக்கும்போது நாம் பயன்படுத்தும் இந்தத் தாரக மந்திரம் இணயத்திற்கும் பொருந்தும். குறைந்த பட்சம் வாரம் ஒருமுறையாவது இணையத்தில் இருக்கும் அபாயங்களைக் குறித்து குடும்பத்துடன் விவாதியுங்கள். எம்மாதிரியான தளங்கள் ஆபத்தானவை, ஏன் தனி நபர் விவரங்களை இணையத்தில் வெளியிடக்கூடாது, பெற்றோர்கள் அறிமுகப்படுத்தாத நபர்களிடம் Instant Messenger இல் பேசுவதோ தனி மடல் பரிமாற்றம் வைத்துக்கொள்வதோ கூடாது என்பதற்கான காரணம் போன்றவற்றை ஓர் ஆசிரியராக இல்லாமல், ஒரு நண்பனாக அலசுங்கள்.

சந்தேகங்கள் கேட்கப் பயப்படவேண்டாம் :- சில விஷயங்களைப் பெற்றொருடன் பகிர்ந்துகொள்ள பிள்ளைகள் பயப்படுவார்கள், சங்கோஜப்படுவார்கள். நீங்கள் அவர்களைப் பற்றித் தவறாக நினைப்பீர்களோ, இம்மாதிரி சந்தேகங்கள் கேட்டால், உங்களிடமிருந்து திட்டு – தண்டனை வருமோ என்ற பயம் இப்படிப் பலகாரணங்கள். அதனால், எந்த மாதிரியான சந்தேகங்களையும் அரைகுறையாக தெரிந்துகொண்டு செயற்படுவதைவிட பெற்றொரிடத்தில் தைரியமாக கேட்கலாமென்று நீங்கள் தான் ஊக்கம் குடுக்க வேண்டும்.

உங்கள் வீட்டில் 5 – 15 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் அதிகமாக கணிணி / இணையம் பயன்படுத்தாதீர்கள்? அப்படி என்றால் இங்கே சொல்லியிருக்கும் முறைகளை உங்கள் வீட்டில் அமல்படுத்திப் பாருங்கள். உங்களுக்கும் பயம் விலகும், பிள்ளைகளுக்கும் உங்கள் மேல் மரியாதை உண்டாகும்.

- தீபா கோவிந்த்

ஈழநேசன்.காம்


முன்னேற்றத்திற்குப் பல்வேறு மூலதளங்கள் என்றால் அவற்றுக்கெல்லாம் அடித்தளமாக இருக்கக் கூடியது மனிதநேயமாகும். அப்படி என்றால், மனிதநேயம் என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

சக மனிதனை நேசிக்கிற மாண்பு, சக மனிதனை மனிதனாகப் பார்க்கிற அணுகுமுறை. தனக்கு இருக்கிற அனைத்து உணர்வுகளும், தனக்குள்ள அனைத்து அடிப்படைத் தேவைகளும் அடுத்தவருக்கும் வேண்டும் என்று எண்ணி ஏற்று அங்கீகரிக்கிற தன்மை. சக மனிதனைப் பாசத்தோடும், பரிவோடும், கருணையோடும் நோக்கும் அன்பு நிலையே மனிதநேயம்.

வள்ளுவரும் வள்ளலாரும்

இதுதான் உயிருள்ள மனிதனின் இயல்பான நிலை, இயற்கையான நிலை. “அன்பின் வழியது உயிர் நிலை” என்பது திருவள்ளுவரின் திருவாக்கு. எனவேதான் தந்தை பெரியார் மனிதனை நினை என்றார். ஆண்டவனைக்கூட “அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலை’ என்கிறார் வள்ளலார்.

மனித நேயம் மரணத்தைத் தடுக்கும்

மனிதனை நேசிக்கிற மனிதனை நினைக்கிற தன்மை இருக்குமெனில் வீழ்ச்சி என்பதே இல்லை, வளர்ச்சி என்பது மட்டுந்தான். முன்னேற்றமே மிஞ்சி நிற்கும் பின்னேற்றம் இருக்காது. அன்புமயமான சூழலில் தனி மனிதனுக்கோ… சமூகத்திற்கோ, அல்லது நாட்டிற்கோ முன்னேற்றத்தைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்.

அன்பான மனிதன், சக மனிதன் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் அல்லற்படுவதைக் கண்டும் காணாமல் கிடக்க இயலுமா? தனக்குப் போக மிஞ்சியிருப்பதை சக மனிதனுக்குப் பகிர்ந்தளித்துப் பசியாற்றினால் எங்காவது இல்லாமையும், பட்டினிச்சாவும் இந்த மனிதகுலத்தில் நிகழுமா?

விழாக்களில் விரயம் தவிர்ப்போம்

ஈந்து உவந்த வாழ்க்கை இன்றில்லை. வருவோர் போவோர்க்கெல்லாம் பசியாற்றிய பண்பாடும், விருந்தோம்பிய வீட்டுத் திண்ணைகளும் இன்றில்லை. விதை நெல்லைக்கூட எடுத்துச் சமைத்து விருந்தோம்பியவர்கள் தமிழர்கள் என்பதை நமது இலக்கியங்கள் காட்டுகின்றன. இன்னொரு பக்கம் திருமண விழாவின் போது பல்லாயிரக் கணக்கானவர்களை அழைத்து இதுபோல யாரும் இப்படி நடத்தியதில்லை என்று சொல்லும்படியாகச் செய்ய வேண்டும் என்று ஒன்றை மற்றொன்று விஞ்சுகிறவகையில் வசதி படைத்தவர்கள் ஏராளமாக உணவையும், பொருளையும் விரயமாக்குகிற செயல்கள் பெருகி வருகின்றன.

சொந்தபந்தங்களை மிக நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்து மண விழாக்கள் நடைபெற்றால் சில நூறு பேர்களுடன் முடிந்து விடும். இப்படி திருமணத்தின் பெயரால் நடத்தப்படும் உணவுப் பொருள் விரயத்தைத் தவிர்த்தும் அதையே அரசுக்குத் தொகையாக தந்தால் நாட்டில் பட்டினியாய் யாரும் இல்லை என்றநிலையை உருவாக்கிடலாம். இன்னும் ஒருபடி சென்று மதுவுக்கும், புகைக்கும் செலவழிக்கிற பணத்தை மிச்சப்படுத்தினால் ஏழைகளுக்கு முப்போதும் உணவளிக்க முடியும். இதற்கு மனிதநேயம் இருந்தால் போதும். பட்டினிச்சாவுகள் இல்லாத நாடே முன்னேறிய நாடு.

வள்ளுவரும் பாரதியும்

‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்’

என வள்ளுவர், பசியால் வாடும் மக்களைப் படைத்த மகேசனையே சாடுகிறார். பாரதியோ ‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடு வோம்’ என்று பசியால் பரிதவிக்கும் நிலைகண்டு இந்தப் பார்தான் அதற்குக் காரணம் என்று எண்ணிய பாரதி மனிதநேயம் இல்லாத இந்த மண்ணுலகம் இருந்தென்ன பயன் என்கிறார்.

வேற்றுமையை வேரறுப்பது மனிதநேயம்

மனிதனை நேசிக்கிற எந்த ஒரு மனிதனாலும் சக மனிதனை தீண்டத்தகாதவனாகப் பார்க்க முடியுமா? மனிதனை நேசிக்கிற எந்த மனிதனும், பிறப்பின் அடிப்படையிலான பேதங்களைப் போற்றமாட்டான். பிறப்பின் அடிப்படையிலான பேதங்கள் இல்லாத நாட்டில் சக மனிதனுக்குச் சம உரிமை அளித்துப் பார்க்கிற சமநோக்கு இருக்கும். எங்கே உரிமைகள் சமமாகிறதோ, உள்ளன்போடு தன்னைச் சூழ்ந்துள்ள மனிதனையும் நேசிக்கிறசூழல் மலர்கிறதோ அங்கே சமவுடைமை இயல்பாக நிலவும். எங்கே உரிமையும், உடைமையும் சமமாகிக் கிடக்கிறதோ அங்கே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதம் இருக்காது. ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு ஏற்படாது. ஆணாதிக்கம், பெண்ணுரிமை என்ற பேச்சுக்கே இடமிருக்காது. அன்பின் ஆதிக்கமே மிகுந்திருக்கும்.

தீண்டாமையும், பிறவி பேதமும், இனபேதமும் இல்லாத நாட்டில் அனைவரும் கல்வி பெற, வேலை வாய்ப்புகளைப் பெற, அவரவருக்குத் தேவையான அடிப் படை வசதிகளையும் பெற தடையிருக்காது. எல்லோர்க்கும் எல்லாம் என்ற நிலையிருக்கும். அங்கே முன்னேற்றம் மட்டுமே இருக்கும்.

எல்லோர்க்கும் எல்லாமும் என்ற நிலையில் திருட்டுக்கு வழியிருக்க முடியுமா? ஒருவனுடையதை மற்றவன் அபகரிக்கும் சூழ்நிலை இல்லாத சூழல் இனிமையானதாகத்தானே இருக்க முடியும். எல்லோருக்கும் வேலை இருந்து விட்டால் “சாலையோரத்தில் வேலையற்றதுகளும் இருக்காது. வேளையற்றதுகளின் உள்ளத்தே விபரீத எண்ணங்களுக்கும் வேலை இருக்காது” விபரீத எண்ணங்கள் விளையாத நாட்டில் விளைவது முன்னேற்றம் மட்டுமே!

சத்குருவின் தத்துவ விளக்கம்

நாட்டில் மட்டுமன்று வீட்டிலும் தான். மனித நேயம் மலிந்து கிடக்கிற இல்லத்தில் மனவருத்தத்திற்கு இடமில்லை. ஆணும், பெண்ணும் அன்புடன் நட்போடு வாழும் வாழ்வில் மகிழ்ச்சியும், இன்பமும், ஆனந்தமும் நிலைத்திருக்கும். இஃதென்ன அன்பு, மகிழ்ச்சி, இன்பம், ஆனந்தம் என்கிறீர்களா?

“உடல் நிலையை ஒரு சுகமான, இனிமையான நிலையில் வைத்திருந்தால் அதனை ஆரோக்கியம், இன்பம் என்கிறோம். மனநிலையில் ஓர் இனிமை யான நிலையிருந்தால் இதனை மகிழ்ச்சி என்கிறோம். உணர்ச்சி நிலையில் இனிமையான நிலை நிலவினால் அதனை அன்பு, நேசம் என்கிறோம். உயிர்சக்தி நிலையில் இனிமையான நிலை ஏற்பட்டால் பேரானந்தம் என்கிறோம்” என்பது சத்குருவின் விளக்கம்.

அன்பும், இன்பமும், மகிழ்ச்சியும், ஆனந்தமும் நிறைந்த மனிதர்கள் குடும்பத்தின் முன்னேற்றத்தை உலகின் எந்த சக்தியாவது தடுத்து நிறுத்திவிட முடியுமா? மனித நேயமிக்க அன்புமயமான குடும்பங்கள் வாழும் சமூகத்தின் முன்னேற்றம் எப்போதும் மேட்பட்டே இருக்கும். முன்னேற்றமான வாழ்வைக் கொண்ட சமூகங்களைக் கொண்ட நாடே வளர்ந்த நாடாகும்.

போர் ஒடுங்கில் புவி ஓங்கும்

வளர்ந்த நாடுகளை வல்லரசு என்கிறார்கள். வல்லரசுகள் வல்லூறு அரசுகளாக இருப்பது எதனால்? மனிதநேயம் மங்கிக்கிடப்பதனால். மனிதநேயம் இருக்கிற எந்த மனிதனும் அடுத்த மனிதன் மீதும், அடுத்த நாட்டின் மீதும் ஆதிக்கம் செலுத்த மாட்டான். எப்போது ஒரு மனிதன் அடுத்த மனிதன் மீது ஆதிக்கம் செலுத்தவில்லையோ? அங்கே சண்டையில்லை. எப்போது ஒரு நாடு அடுத்த நாட்டின்மீது ஆதிக்கம் செலுத்தவில்லையோ அங்கே போர் இல்லை. எங்கே போர் இல்லையோ அங்கே வளர்ச்சி, மேம்பாடு, முன்னேற்றம் உறுதி.

ஆனால் மனிதநேயம் மரித்துப் போனால் ஆணவம் ஆதிக்கம் செலுத்தும். ஆணவம் எங்கெல்லாம் ஆதிக்கம் செய்கிறதோ அங்கெல்லாம் வன்முறை தலைவிரித்தாடும். வன்முறை எங்கு நிகழ்ந்தாலும் அழிவே மிஞ்சும். முன்னேற்றம் முடங்கிப் போகும்.

அன்பு மலருமிடத்தில், மனிதநேயம் மிளிருமிடத்தில் ஆணவத்திற்கும், ஆதிக்கத்திற்கும் இடமில்லை. அன்பு செத்துவிட்ட அல்லது வற்றிப்போன மனிதர்களிடையில் வன்முறையே எஞ்சும். வன்முறையின் முடிவு முன்னேற்றமன்று. அன்பு அடம்பிடிக்கும் வாழ்வில் முன்னேற்றம் இடம் பிடிக்கும். சிகரத்திற்குச் செல்ல தடம் அமைக்கும். ஆணவம் ஆதிக்கம் செலுத்தும் வாழ்வில் குழப்பமும், வெறுப்பும், வன்முறையும், அழிவுமே மிஞ்சும்.

மனிதநேயத்தை வளர்ப்பது எப்படி?

மனிதநேயத்தை வளர்க்கத் தேவையில்லை. பிறக்கிறமனிதன் நேயமுள்ள அன்புள்ள மனிதனாகத்தான் பிறக்கிறான். அன்பாக இருப்பதே மனிதனின் இயல்பான தன்மை. வெளியிலிருந்து யாரும் கொட்டி நிரப்பத் தேவையில்லை. அன்பு என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயற்கையாகவே இருக்கிறது.

“எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே”

என்று கவிஞர் பாடினார். ஆகவே அன்பை வளர்க்கத் தேவையில்லை. அதை வளர அனுமதித்தால் போதும். அது பொங்கி வழியும்.

இயற்கையிலேயே உங்களுக்குச் சொந்தமாக அமைந்திருக்கும் ஓர் உணர்வு அன்பு மட்டுமே. பரிவு, இரக்கம், கருணை, நட்பு என்று பலவகையான குணங்களின் ஒட்டு மொத்தமே அன்பு.

குழந்தைகள் இரக்கத்தின் விதைகள். விதைக்குள் முளைப்பு இருப்பதுபோல மனிதனுக்குள் நேயம் நிரம்ப இருக்கிறது. குழந்தைகளும் அன்புக்காக ஏங்குகிறார்கள். மாறிவரும் பொருள் மைய வாழ்க்கையில் கணவன் மனைவி இருவரும் பொருள் ஈட்டுவதில் பெரும்பகுதி நேரத்தைச் செலவிடுகிறவர்கள், குழந்தைகளிடம் அன்பைப் பொழியக்கூட நேரமில்லை, அல்லது அது நிகழவில்லை.

பிள்ளைகளைப் பேணும் முறை

ஒரு மனிதன் அன்பான நிலையில் பேசுவதெல்லாம், சிந்திப்பதெல்லாம் நேர்மறையாகவே இருக்கின்றன. ஆனால் அன்பற்றுப் போன மனிதனின் பேச்சில், எண்ணத்தில், செயலில் எதிர்மறையே ஏகோபித்து இருக்கிறது. நமது பிள்ளைகளிடம் கூட பெற்றோர் பெரும்பாலும் எதிர்மறைச் சொற்களைத்தான் பேசுகிறார்கள். இது நன்று அன்று என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். எப்போதும் குழந்தைகளிடம் செல்லாதே, பேசாதே, ஓடாதே, சிரிக்காதே என்று எதிர்மறையாகப் பேசுவதற்கு பதில் இதைச் செய்க. இப்படிச் செய்க, இது நல்லது, இது சிறந்தது என்று நேர்மையாக இனிமையாகச் சொல்லி வழிகாட்ட வேண்டும்.

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்

என்பார் வள்ளுவர்.

இதைச் செய்யாதே என்று தடை போடும் போது இளமையின் வேகம் அதை மீறிப்பார்க்க விரும்புகிறது. சில நேரங்களில் வெறும் விளையாட்டுத் தனங்களிலும், சின்னத்திரை, வண்ணத் திரை, பொழுது போக்குகளிலுமே ஆழ்ந்து அமிழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளைக் கண்டு பல பெற்றோர்கள் ஆவேசமாகத் திட்டுகிறார்கள், கடுமையாகவும் தங்கள் குழந்தைகளிடம் நடந்து கொள்கிறார்கள்.

இது ஆபத்தானது, அத்தகைய குழந்தைகளின் ஆர்வமும் ஆற்றலும் அறிந்து மனமாற்றம் செய்யத்தவறினால், அவர்களின் ஆற்றலுக்கு கரையமைத்து நெறிப்படுத்தத் தவறினால் பெற்றோருக்கு விரோதிகளாகி சமூகத்துக்கு விரோதமான மனிதர்களாக, வன்முறையாளர்களாக, தீவிரவாதிகளாக, நேர்வழி தவறியவர்களாக மாறிப்போகிறார்கள்.

பெற்றோர்களே உங்கள் பிள்ளைச் செல்வங்களிடம் அன்பைப் பொழியவில்லையானால் இன்று அமெரிக்கா போன்ற நாடுகளில் இருப்பது போன்று பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான பிணைப்பு அழிந்து, உறவுகள் அழிந்து, பெற்றோர்கள் முதுமையில் அன்புக்கும், ஆதரவுக்கும் ஏங்குவதான நிலை வளர்ந்துவிடும். பெற்றோர்களைப் பேணிப் புறந்திடாத பிள்ளைகள் உள்ள நாடும் வாழ்வும் முன்னேற்றமாக இருக்க முடியாது. வெறும் பொருள் வளர்ச்சி மட்டுமே முன்னேற்றம் ஆகிவிட்டது. அகம் சீரழிந்தால் அனைத்தும் சீரழியும். அகம் என்றால் உள்ளம், அகமென்றால் இல்லம்.

- டாக்டர். பெரு. மதியழகன்

http://www.thannambikkai.net/2009/11/01/3098/