"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619

புகழ்பெற்ற வேட்கோவர் பெர்னாட் பாலிஸி அழகான வண்ணங்களில் எனாமல் பூசப்பட்ட பளபளப்பான சீனப் பீங்கான் செய்யும் முறையை, மறைந்துபோன அந்தக் கலை ரகசியத்தை மீண்டும் கண்டுபிடிக்க விரும்பினார்.

மாதக்கணக்காக, ஆண்டுக் கணக்காக சோர்வு அடையாமல் தமது பரிசோதனைகளைச் செய்து வந்தார். தம்முடைய உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் தம்முடைய ஆராய்ச்சிக்கே பயன்படுத்தினார். இரவு பகலாய் பல நாட்கள் தாம் கட்டிய சூளையிலேயே கவனம் செலுத்தினார், பீங்கான் கோப்பைகள் செய்யவும் அவற்றை சுடவும் புதிய புதிய முறைகளை முடிவே இல்லாதபடி பரீட்சை செய்து பார்த்துக் கொண்டிருந்தார். யாரும் அவருக்கு உதவி செய்யவோ உற்சாகமூட்டவோ இல்லை. அவருடைய நண்பர்களும் அண்டை அயலாரும் அவரைப் பைத்தியக்காரன் என்றார்கள், அவருடைய மனைவிகூட அவரைக் குறை கூறினாள்.

பணம் இல்லாமல் பல தடவைகள் அவர் தம் பரிசோதனைகளை நிறுத்திவைக்க வேண்டியிருந்தது. ஆனால் பணம் கிடைத்ததும் புதிய துணிவோடு வேலையைத் தொடங்குவார். கடைசியாக ஒரு நாள் அவரிடம் சூளைக்கு வேண்டிய விறகுக்குக்கூட வழியில்லாது போயிற்று. அதனால் குடும்பத்தாரின் ஓலத்தையும் பயமுறுத்தல்களையும் சட்டை செய்யாமல் மேசைகள் நாற்காலிகள் முதலிய தமது மர சாமான்களையெல்லாம் கடைசிக் குச்சிவரை நெருப்பில் போட்டுவிட்டார்.

அவை எல்லாம் எரிந்து சாம்பலாயின. பிறகு அவர் சூளையைத் திறந்தார். அது பளபளப்பான பீங்கானால் நிரம்பியிருந்தது. அதனால் அவருக்குப் பெரும் புகழ் கிடைத்தது. ஆனால் அதைக் கண்டுபிடிக்க அவர் எத்தனை ஆண்டுகள் தியாகம் செய்ய வேண்டியிருந்தது!

அவருடைய வெற்றிவேளை வரும் வரை காத்திருக்க முடியாமல், அவருக்கு அளவற்ற தொல்லைகள் கொடுத்து அவருடைய வேலையை மேலும் கஷ்டமாக்கிய அவருடைய மனைவிக்கும் நண்பர்களுக்கும் என்ன இல்லை? பொறுமை இல்லை, அவ்வளவுதான். அது அவரிடம் ஒருபோதும் குறையாது இருந்தது, அவரை ஒருபோதும் கைவிடாதிருந்தது, முடிவில் எல்லாக் கஷ்டங்களையும், இகழ்ச்சிகளையும் வெல்லச் செய்தது. எது? விடாமுயற்சி. எல்லா சக்திகளையும் விட வல்லமையுடைய சக்தி அது.

இந்த உலகில் எதுவுமே விடாமுயற்சியை எதிர்த்து நிற்க முடியாது. மிகப்பெரிய சாதனைகளும் அயராத சிறு முயற்சிகள் பலவற்றின் திரண்ட தொகுதிதான்.

மழைத் துளிகள் ஒன்றன்பின் ஒன்றாக ஒரே இடத்தில் விழுவதனால் பிரம்மாண்டமான பாறைகள் முற்றிலும் அழிந்து போயிருக்கின்றன.

ஒரு மணல் துகள் அதிக சக்தி வாய்ந்ததில்லைதான். ஆனால் அவைகளே நிறைய சேரும்போது மணற் குன்றுகளாகி பெருங்கடலைத் தடுத்துவிடுகின்றன.

நீங்கள் இயற்கை வரலாறு (தாவர இயல், விலங்கு நூல், கருப்பொருள் நூல் இம்மூன்றின் தொகுதி) பற்றிப் படிக்கும்போது எவ்வாறு சிறு உயிரினங்கள் ஒன்றன்மேல் ஒன்றாகப் படிந்து கடலுக்கடியில் மலைகள் உருவாகியுள்ளன, அவற்றின் விடாப்பிடியான முயற்சியினால் எப்படி அற்புதமான தீவுகளும் தீவுக் கூட்டங்களும் கடல் அலைகளுக்கு மேலாகத் தோன்றுகின்றன என்று படிப்பீர்கள்.

நீங்கள் திரும்பத் திரும்பச் செய்யும் சிறு சிறு முயற்சிகளும் பெரிய சாதனைகளைச் செய்ய முடியும் என்று நீங்கள் கருதவில்லையா?

ஸ்ரீ அரவிந்த ஆசிரமக் காலாண்டு வெளியீடு
பொழிபெயர்ப்பு : ச. மகாலிங்கம்