"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619




காலந்தோறும் போர்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன. தேசியப் பெருமிதம், இனமானம், வீரம், எல்லை விரிவாக்கம், கௌரவப்பிரச்சினை என்று போருக்கான காரணங்களை ஆட்சியாளர்களும் ஆள விரும்புவோருமே உருவாக்குகின்றனர். உன்னத இலட்சியம் அல்லது அற்பமான கற்பிதம் என்ற இருபுள்ளிகளுக்கிடையே அலைவுறும் எதுவொன்றையும் போருக்கான காரணமாக கட்டமைத்து விட முடிகிறது அவர்களால். உண்மையில் அவர்கள் இருவேறு முகங்கள் கொண்ட ஒருவரே தான். சுண்டிவிடப்படும் நாணயத்தில் பூவோ தலையோ எது விழுந்தாலும் அது போரை தொடங்குவது அல்லது தொடர்வதற்குரிய சமிக்ஞையாகவே அவர்களது அகராதியில் பொருள் விளக்கம் உள்ளது. எனவே காலமும் களமும்தான் மாறுகிறதேயன்றி போரை அவர்கள் கைவிடுவதாயில்லை. ஆயுதங்களின் மீதான ஈர்ப்பு தவிர்க்கவியலாதபடி தம்மை மனிதவுயிர்கள் மீதான வெறுப்புக்குள் நெட்டித்தள்ளுவதை ஒருபோதும் அவர்கள் உணர்ந்தாரில்லை. முகமும் இருதயமுமற்ற ஆயுதங்களின் முனையில் வழியும் ரத்தத்தால் நிறைகிறது அவர்களது கோப்பை.
சொந்தமக்களின் நாவும் குரலுமே போர்க்கடவுள் கோரும் முதற்படையல். எனவே போரின் நோக்கம் எதுவாயினும் அதன்பொருட்டு நோவதும் சாவதும் யாரென்ற கேள்வி எழாது ஒடுக்குவதிலிருந்தே போர் தொடங்கிவிடுகிறது. அதற்கு பிறகு நடப்பதெல்லாம் தத்தமது படைக்கலத்தில் அணிவகுத்து நிற்கும் ஆயுதங்களின் மேன்மையை சோதித்துப் பார்ப்பதும் வீழ்ந்தத் தலைகளின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதும்தான். இங்கு யுத்ததர்மம் என்று பேசுவதெல்லாம் வியர்த்தம். யுத்தமே தர்மமல்ல என்கிறபோது அதிலென்ன வெங்காயத்துக்கு தர்மமும் இன்னொன்றும்?
எதிரெதிர் முனைகளைப் போல் மேலுக்குத் தோன்றும் வெற்றியும் தோல்வியும் ஒன்றையொன்று ஒட்டியேயிருக்கின்றன. ஒன்றின் இருப்பிலேயே மற்றது மேலெழுகிறது. அரூபமாய் இருக்கிற கருத்தை திடப்படுத்துவது / நிர்மூலமாக்குவது என்ற வெறி இறுதியில் ராணுவத்தின் வழியே நடைமுறைக்கு வருகிறது. எப்படியாயினும் யாரோ ஒரு ஆட்சியாளனுக்காக ஒரு ராணுவமே வெற்றியடைகிறது. தோற்பதென்னவோ இருதரப்பின் மக்களாய் இருப்பதுவே வரலாறாய் நெளிகிறது. இரண்டாம் உலகப்போரிலும் இதுவே நிகழ்ந்தது.
ஜெர்மனியின் பெயரால் ஹிட்லர் தொடங்கி வைத்தப் போர் எல்லையற்றுப் பரவி உலகையே கிடுகிடுங்க வைத்ததை சொல்லிச் செல்ல இதுவல்ல இடம். ஆசிய நாடுகளை ஜப்பானும், ஆப்பிரிக்க நாடுகளை இத்தாலியும் ஐரோப்பிய நாடுகளை ஜெர்மனியும் காலனிகளாக பங்கிட்டுக் கொள்ளும் பேராசையில் டோஜோவும் முசோலினியும் ஹிட்லருடன் கூட்டு சேர்ந்தார்கள். இவர்களது போர்வெறிக்கு முன்னே தாக்குபிடிக்க முடியாமல் சடசட வென சரிந்து விழுந்தன சாம்ராஜ்யங்கள்.
தடையற்றப்பாதையில் கிடைத்த வெற்றிகளின் கிறக்கத்தில் மேலும்மேலும் முன்னேறிச் சென்ற ஹிட்லரின் படைகள் சோவியத் யூனியனில் தன் உச்சபட்ச மூர்க்கத்தை வெளிக்காட்டின. எட்டே எட்டு வாரங்களில் சோவியத்தை வீழ்த்தி விடும் திட்டத்தோடு களமிறங்கியதால் அங்கு ஏற்படுத்திய அழிமானங்கள் போர் வரலாற்றில் இதுவரை உலகம் அறியாதது. நிலை குலைந்திருக்கும் நாடுகளது மனிதவுயிர்களின் எண்ணிக்கையில் அர்த்தம் ஒன்று மில்லை. வழக்கத்திலில்லாத கடுமையான வழிமுறைகள் தாக்குதல்கள் மூலம் மட்டுமே பிறரை அச்சுறுத்தக்கூடிய அளவிலானதொரு பயங்கர வெற்றியை ஈட்ட வேண்டும் என்றும் சரணடையும் ரஷ்யர்களைப் பாதுகாக்க உணவுக்கும் மருந்துக்கும் செலவழிக்க வேண்டியிருக்கும் என்பதால் தனிநபர் எவரொருவரின் சரணாகதியையும் ஏற்றுக்கொள்ளாமல் கொல்லப்பட வேண்டும் என்றும் தன்படையினருக்கு உத்தரவிட்டிருந்தான் ஹிட்லர். எனவே சிறைபிடிக்கப்பட்ட 1981000 ரஷ்யர்களின் பேரின் கதி என்னவாகியிருக்கும் என்பதில் மர்மத்துக்கு இடமில்லை. இரவும் மூடுபனியும் என்ற சங்கேதப் பெயரால் அழைக்கப்பட்டகாணாமல் போக்கடித்தல் என்ற கொடூர தண்டனையை நிறைவேற்ற தன் தனிப்படையை ஏவிவிட்டிருந்தான் ஹிட்லர். லெனின், ஸ்டாலின் என்ற பெயர்கள் மீது அவனுக்கிருந்த ஆத்திரத்தால் லெனின் கிராட் மற்றும் ஸ்டாலின் கிராட் நகரங்களையே குண்டுமாரிப் பொழிந்து நிர்மூலமாக்கிவிட வேண்டுமென்று வெறிகொண்டிருந்தான்.
ஆனால் நிலைமை அப்படியே ஏறுமுகமாய் நீடித்துவிடவில்லை ஹிட்லருக்கு. 164 டிவிஷன்களைக் கொண்டிருந்த ரஷ்யப்படைகள் சரிபாதியாக அழிக்கப்பட்டுவிட்ட நிலையிலும், சாவதற்கு முன் பற்களைக் கொண்டாவது ஒரு ஜெர்மானிய ராணுவத்தானின் குரல்வளையைக் கடித்துத் துப்புமளவுக்கு ரஷ்யர்களின் பதிலடி உக்கிரமாகவே இருந்தது. கடும் பனிப்பொழிவு வேறு. -28டிகிரி பாரன்ஹீட் அளவுக்கான குளிர். ஈடுகொடுக்க முடியாத ஹிட்லரின் ராணுவத்தினர் ஒவ்வொரு 7 விநாடிக்கும் சராசரியாக ஒருவர் வீதம் செத்தொழிந்ததாக ஒரு கணக்கிருக்கிறது. உலகையே தன் காலுக்கு கீழிருக்கும் ஒரு பந்தென எண்ணி உதைத்தாடிக் கொண்டிருந்த ஹிட்லரின் தோல்வி அப்போதே தீர்மானமாகிவிட்டது.
உலகம் அதுவரை கண்டறியாத வகையில் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சியை நடத்தி மார்க்சிய லெனினிய அடிப்படையில் சோசலிச நிர்மாணத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த சோவியத் யூனியன் மீது ஹிட்லரின் படையெடுப்பு உலக முதலாளித்துவவாதிகளுக்கு உள்ளூர மகிழ்ச்சியையே தந்தது. சோசலிசக் கட்டுமானத்தில் குவிந்திருந்த கவனத்தை வழி மாற்றித் திருப்பிவிட முடிந்ததற்காக அவர்கள் மானசீகமாய் ஹிட்லரைப் பாராட்டினர். ஆனால் சோவியத்தின் இறுதி அத்தியாயம் ஹிட்லரால் எழுதப்படவிருக்கிறது என்ற அவர்களின் கணிப்பும் விருப்பும் பொய்த்துப்போயின. சோவியத் படைகள் தமது நாட்டை மட்டுமல்லாது ஹிட்லரிடமிருந்து உலகத்தையும் காப்பாற்றியது. ஹிட்லரின் படைகளை அவை புறப்பட்ட இடத்திற்கே விரட்டிச் சென்ற சோவியத் படைகள், இறுதியாக ஜெர்மனியையும், ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றையும் விடுவித்தன.
இரண்டாம் உலகப்போரில் கொல்லப்பட்ட சோவியத் மக்கள் மற்றும் படையினர் ஒவ்வொருவருக்கும் ஒருநிமிடம் அஞ்சலி செலுத்த விரும்புகிற ஒருவருக்கு தொடர்ந்து 38 ஆண்டுகள் தேவைப்படுமாம். போரின் மொத்த உயிரிழப்பு சுமார் ஐந்து கோடிப்பேர். அவர்களில் 3 கோடிப்பேர் சோவியத் யூனியனைச் சேர்ந்தவர்கள். இது வெறும் உயிரிழப்பு பற்றிய தோராயமான கணக்குதான். பொருளிழப்பு, உளவியல் பாதிப்பு, அங்கவீனம் குறித்து யாதொரு கணக்கீடும் இதுகாறும் இறுதிப்படுத்தப்படவில்லை.
அனோனிமா இந்த போர்ச்சூழலுக்கிடையே வாழ்ந்த ஒரு ஜெர்மானியள். 12 ஐரோப்பிய நாடுகளில் சுற்றித் திரிந்திருந்தாலும் பெர்லின் நகரத்தில் வாழ்வதே அவளுக்கு உவப்பானதாய் இருக்கிறது. அனாதைச்சிறுமி தெருவிலே அலைவதுதான் நியதி என்பதை தன்னளவில் மறுத்து சுயமரியாதையோடு வாழ்ந்து கொண்டிருந்தவள். ஹிட்லரின் படைகளை விரட்டி வந்த ரஷ்யப் படைகள் ஜெர்மனிக்குள்ளேயே நுழைந்துவிட்டதையடுத்து நடந்த குண்டுவெடிப்பில் அவளது மூச்சுக்காற்றாலும் புத்தகங்கள் ஓவியங்களாலும் நிரம்பியிருந்த அவளது வீடு சிதறிப்போனது. அவளுக்கு சொந்தமென்று இருந்த எல்லாவற்றையுமே இழந்துவிட்டதால் கண்ணுக்குத் தெரிந்த எல்லாவற்றையுமே தனக்கு சொந்தமானவையென்று வரித்துக் கொண்டு ஒரு அன்னிய வீட்டின் நிலவறையில் பதுங்கி வாழும் சாமானியர்களில் ஒருத்தியாக அனோனிமா அறிமுகமாகிறாள் நமக்கு. இடையறாத குண்டுமழைக்கூடாக போர்ச்சூழலின் பதற்றங்களை, கவலைப்படுவதால் ஆகக்கூடியது எதுவுமில்லை என்பதால் ஒரு வேடிக்கை மனோபாவத்துடன் குறிப்பெழுதத் தொடங்குகிறாள். அவளது குறிப்புகள் யார் மீதுமான புகார்ப்பட்டியலாகவுமின்றி அன்றையச் சூழலை அதன் முழுப்பரிமாணத்தோடு ஒவ்வொரு தனிமனிதரும் எவ்வாறு எதிர் கொண்டனர் என்பதன் மனவோட்டமாக உருப்பெற்றுள்ளன.
யாருடைய அனுதாபத்தையும் கோரி நிற்காமல் மனதிற்குப்பட்டதை எழுதிச் செல்கிறாள். பின்னாளில் இக்குறிப்புகள் புத்தகமாக வெளியானபோது அது அவளது வாழ்க்கை மட்டுமல்ல, போர்ச்சூழலுக்குள் வாழநேரும் எவரொருவருக்குமானதுதான் என்கிற எளிய உண்மை அதில் பொதிந்திருப்பதைக் கண்டது உலகம். எனவே அவள் தனது தனித்தப் பெயரையும் அடையாளத்தையும் துறந்து அனோனிமா ( முகம் மறைத்தவள்) என்று புத்தகத்துக்குத் தலைப்பிட்டது கவித்துவ உணர்விலல்ல.
சகமனிதர் மீதான வெறுப்பும் ஆயுதங்களையும் போரையும் கொண்டாடும் முனைப்பும் கொண்ட ஒரு ஆட்சியாளனின் கீழ் வாழ நேர்ந்த குடிமக்கள், அந்த ஒரு காரணத்திற்காகவே அனுபவிக்க நேரும் துயரங்களின் தொகுப்பான இந்நூல் இன்றைய காலத்திற்கான கேள்விகள் பலவற்றை தன்போக்கில் எழுப்பிச் செல்கிறது. தனது தனித்த அனுபவங்களைச் சொல்லிச் செல்லும் போக்கில் தன்னொத்தப் பெண்களுக்கு நேர்ந்த அவலங்களையும் விவரித்துப்போகிறாள். பெண் என்றான பிறகு அவள் எந்த நாட்டிலிருந்தாலும் அவளது அனுபவங்கள் ஒன்றெனவே இருப்பதை தன்னியல்பில் அம்பலப்படுத்துகிறாள். இதன் பொருட்டு அவள் தன்னை ஜெர்மானியள் என்று பெருமிதம் கொள்வதிலிருந்தும் ரஷ்யர்களையோ மற்றவர்களையோ வெறுத்தொதுக்குவதிலிருந்தும் வெகு இயல்பாகவே விலகி நின்றுவிடுகிறாள்.
இரண்டு ராணுவங்கள் தமக்கிடையே போரிட்டுக் கொள்ளும் போது அது வெறுமனே குறிப்பிட்ட யுத்தக்களங்களில் நடந்து முடிந்துவிடுவதில்லை. தவிர்க்கவியலாத வகையில் எந்த வொரு போரும் குடிமக்களையே தாக்கெல்லையாக மையப்படுத்துகிறது. ராணுவங்கள் குடிமக்களின் வாழ்வுரிமைகளை எந்தளவிற்கு பொருட்படுத்துகின்றன / உதாசீனப்படுத்துகின்றன என்பதும், ராணுவத்தின் பார்வையில் ஒரு பெண்ணின் பெறுமதி என்னவென்பதுவுமே அனோனிமாவின் பேசு புள்ளிகளாக மேலெழுகின்றன. எனவே அவள் ஜெர்மன் ராணுவம் சோவியத்யூனியனில் நிகழ்த்திய அத்துமீறல்களையும் அவற்றுக்கு எதிர்வினையாக ரஷ்யராணுவம் ஜெர்மனியில் நிகழ்த்திய அத்துமீறல்களையும் அருகருகாக வைத்துப் பார்க்கிறாள். சோவியத்தின் குழந்தைகளை சுட்டுக்கொன்றதும், குழந்தைகளின் கால்களை கயிற்றால் கட்டி குழந்தைகள் மண்டையை சுவரில் மோதி சிதறடித்ததுமான ஜெர்மானியப் படையினரின் அட்டூழியங்களுக்கான விலையை யாராவதொருவர் கொடுத்துத்தானேயாக வேண்டும் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்கிறாள்.
தேசியவாதம் / இனப்பெருமிதத்தின் பெயரால் தன் தரப்பை விமர்சனமின்றி மொன்னையாக ஆதரிக்கும் நிலையை ஒரு போதும் அவளால் எடுக்கவே முடியவில்லை. ஆடுகளத்தின் மையத்தில் நின்றாட வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருந்த போதிலும் அவள் ஆட்டத்துக்கு வெளியே நின்று எல்லா நிகழ்வுகளையும் ஒரு மூன்றாவது கண்ணைப்போல பார்த்து பதிவு செய்திருக்கிறாள். இதன் வழியே வெளிப்படும் கசப்பான உண்மைகள் ஈராக்கில், ஆப்கனில், காஷ்மீரில், மணிப்பூர் உள்ளிட்ட இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில், இலங்கையில் அந்த மக்களின் வெகு அடிப்படையான உயிர் வாழும் உரிமைக்கும் சுயமரியாதைக்கும் எதிராக ராணுவங்கள் எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை சுளீரென சொடுக்கி நினைவூட்டி அலைக்கழிக்கின்றன. ராணுவம் / ஆயுதங்களின் கண்காணிப்புக்குக் கீழே வாழநேர்வதன் கொடுமைகளை வரலாற்றிலிருந்து கற்றறிவதற்கு இன்றைய உலகம் இனியும் தயங்கக்கூடாது என்ற பதற்றத்திலிருந்தே, குழந்தைப் போராளியை மொழிபெயர்த்த தேவா, இந்த அனோனிமாவையும் மொழி பெயர்க்கத் தெரிவு செய்திருக்கக்கூடும்.
கொடுங்கோலாட்சியாளர்களிடமிருந்து மக்களைக் காக்கவென ஆரம்பிக்கப்பட்ட ஒரு விடுதலை இயக்கம், தன் கையிலிருக்கும் ஆயுதங்களையும் அவ்வாயுதங்களின் வழியே உருவாகும் அதிகாரங்களையும் எப்படி தன் சகபோராளிகளுக்கும் சொந்த மக்களுக்கும் எதிராகவே பயன்படுத்தியது என்பது குழந்தைப் போராளியின் மையம். ஒரு நாட்டை ஆளும் கட்சி / தத்துவம் எதுவாக இருப்பினும் அதன் ராணுவம் எப்போதும் ஒரு மரபான ராணுவத்திற்கேயுரிய குணநலன்கள் / குணக்கேடுகளுடன் தான் மக்களை அணுகும் என்பது அனோனிமாவின் மையம். இவ்விரண்டு எதிரெதிர் துருவ அமைப்புகளிடமுள்ள ஆயுதங்களும் அதிகாரமும் சாமானிய மக்களை என்ன பாடுபடுத்தும் என்கிற கொடிய அனுபவங்களைப் பெற்றிருக்கும் இலங்கைத் தமிழர்களிலிருந்து ஒருவர் இந்த இரண்டு நூல்களையும் மொழி பெயர்த்திருப்பது இலக்கிய ஆர்வத்திலிருந்து அல்ல என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
குழந்தைப்போராளி சைனா கெய்ட்ரஸியும் அனோனிமாவும் இருவேறு பெண்களல்ல. ஒரேவகையான கொடுமைகளை வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு முகாம்களிலிருந்து பெற்றுக்கொள்ள நேரிட்டப் பெண்களின் மாதிரிப் படிமங்கள்.
ஸீக்ரிப்ட் லென்ஸ் எழுதிய நிரபராதிகளின் காலம் நாடகத்தின் கதாபாத்திரங்கள், ஒரு குற்றம் நிகழ்கிறபோது அதில் தனக்கு உடன்பாடில்லை என்று மறுப்புரைக்கவோ எதிர்க்கவோ முன் வராதவர்கள் அந்தக் குற்றத்தின் இயல்பான பங்குதாரிகளா இல்லையா என்று ஓயாது வாதிட்டுக்கொள்வதைப் போலத்தான் அனோனிமாவும் அவளுடன் தங்கியிருப்பவர்களும் தர்க்கித்துக் கிடக்கிறார்கள். ஹிட்லர் என்ற போர்வெறியன் கையில் அதிகாரத்தைக் கொண்டு சேர்த்ததன் மூலம் அவனது எல்லா பழிபாவங்களிலும் தமக்கும் பங்கிருக்கிறது என்று உறுத்துகிற குற்றவுணர்ச்சியிலிருந்து விடுபடும் முயற்சியாகத்தான் ஹிட்லரின் சுயசரிதையான எனது போராட்டம் நூலை எரித்து வென்னீர் காய்ச்சுவதையும், ஹிட்லர் மீது நன்மதிப்பு கொண்டிருக்கிற சீகிஸ்முண்ட் என்பவரை பைத்தியக்காரன் என விளிப்பதையும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
ஹிட்லரும் கோயபல்சும் வெற்றி அல்லது வீரமரணம் என்று ராணுவத்தை உசுப்பேற்றிக்கொண்டிருக்கும்போது எங்களுக்கு இறந்த வீரர்கள் தேவையில்லை உயிரோடிருக்கும் ஆண்களைத்தான் தேடுகிறோம். என்று அனோனிமா எதிர்நிலை எடுப்பதற்கும் இந்த மனநிலையே காரணமாய் இருக்கும். வீரம்தியாகம் என்று தூண்டிவிடப்படும் உணர்ச்சிகளுக்கு பொருளேதுமிருக்கிறதா? எல்லோரையும் சாகக்கொடுத்து தியாகிகளாக்கிவிட்டு யாருக்கு எதை பெற்றுத்தரப் போகிறாய் என்று அவள் உள்ளுறையாய் வைக்கும் கேள்வி எல்லை கடந்து எங்கெங்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டியதாயிருக்கிறது. போர்முனைகளில் பின்வாங்கி தளர்நடையில் முகாம் திரும்புகிற ஜவான்கள் மீது அவளுக்கு பரிதாபமே மிஞ்சுகிறது. யாரோ ஒருவனது விருப்பம் / கனவுக்காக போரிட்டு மாள்வதற்கென்று தயாரிக்கப்பட்ட பொம்மைகள் / இயந்திரங்கள் என்று தம்மையுணராத ஜெர்மனி ராணுவத்தினரைப் பார்த்து ஆட்டம் முடிந்து விட்டது, இப்போது நீங்களும் தெரு நாய்கள்தான் என்று  பரிகசித்து ஒரு பெண் கூச்சலிடுவதை அனோனிமா தன் குறிப்பில் இடம்பெறச் செய்திருக்கிறாள்.
இந்தப் போரின் முடிவில் பல தோல்விகளோடு ஆண் என்ற பாலினத்தின் தோல்வியும் சேர்ந்தே இருக்கும் என்ற அனோனிமாவின் தீர்க்கவசனம் காலத்தை மீறி இன்றும் நிற்கிறது மடங்காமல். மற்றவர்களுக்காவது தமது பாரத்தை இறக்கிவைக்க கடவுள் என்ற கற்பிதம் இருந்தது. அதுவுற்றவள் அனோனிமா. அவள் ஒருபோதும் ஜெபித்தவள் இல்லை. மகிழ்ச்சியான தருணங்க ளில் ஜெபிக்காமல் இருந்துவிட்டு துன்பவேளையில் ஜெபிப்பது பிச்சைக் கேட்பது போலாகும் என்ற சுயமரியாதையின் உந்துதலில் அவள் இனியும்கூட கடவுளிடம் மன்றாடுவதில்லை என்ற தெளிவுடன் இருந்தாள். அன்னிய ராணுவத்திடம் அகப்பட்டுக் கொண்டோமே என்று அழுதுபுரண்டு ஆகப்போவது எதுவுமில்லை என்பதையும் அவளுக்கு சூழல் விளக்கி விட்டிருந்தது. இடையறாத குண்டுமழைக்கிடையில் வாழும் ஒவ்வொரு நாளும் மரணத்தை வெற்றி கொண்ட நாள் என்றே கருதுகிறாள். அடுத்தநாள் என்பது நிச்சயமற்றிருந்த நிலையில் நாளை நடக்கப்போவது பற்றி கவலைப்படுவதைவிட இன்று முடிந்தமட்டிலும் வாழ்ந்து பார்த்துவிடவேண்டும் என்ற முடிவுக்கு வந்தவிட்டிருந்ததால், வருவது எதுவோ அதற்கு காத்திருப்பதே உசிதம் என்ற எளிய எல்லையை தனக்கானதாய் வரித்துக் கொண்டிருந்தாள். அதற்காக அவள் தன் முன்னே நிகழ்ந்தவற்றை எல்லாம் உணர்வுத் துடிப்பற்ற கண்ணாடி போல் பளபளக்கும் கண்களால் வெறுமனே வேடிக்கை பார்த்துவிட்டு நகர்ந்தாள் என்று குறுக்கிப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை.
எதுவும் செய்யவியலாத கையறு நிலையிலுள்ள மக்கள் சூழலையும் அதற்கு காரணமானவர்களையும் பகடி செய்து கடக்க முயற்சிப்பது உலகளாவிய நியதிபோலும். அனோனிமா அதைத்தான் செய்கிறாள். தங்களில் இன்னும் (ரஷ்ய ராணுவத்தினரால்) கன்னி கழிக்கப்படாதவளாய் இருப்பது யார் என்று பெண்களுக்குள் நடக்கும் விவாதங்கள் அவளுக்கு சிரிப்பையே வரவழைக்கிறது. கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஒருத்தி 24முறை வல்லுறவுக்காளானாள் என்ற பத்திரிகைச் செய்தியைக் கேள்விப்பட்டதும், இதையெல்லாம் அருகிலிருந்து யார்தான் சிரமமாக எண்ணுகின்றார்களோ என்று கேலி செய்கிறாள்.
பேரக்குழந்தைகளைக் கொண்ட மூதாட்டியைக்கூட வேட்டையாடும் வக்கிரம் தலைவிரித்தாடிய நிலையில் மாதவிலக்கடைந்தவள் போல பஞ்சுத்தக்கையை எப்போதும் பிறப்புறுப்பில் அடைத்துக்கொண்டு திரிவது, சமையலறையின் மேற்கூரைக்கும் சீலிங்குக்கும் இடைப்பட்ட பொந்தில் இரவும் பகலும் ஒளிந்து கிடந்து கன்னியாகவே நீடிக்க முயற்சிப்பது போன்ற தற்காப்பு முயற்சிகளால் பயனேதும் கிட்டப்போவதில்லை என்பதே அனோனிமாவின் கணிப்பு. உண்மையும்கூட அது தான். இரண்டு பெண்கள் சந்தித்துக்கொண்டால் நீ எத்தனை முறை (வல்லுறவுக்காளானாய்) என்று பரஸ்பரம் விசாரித்து ஆறுதல்படுத்திக் கொள்ளுமளவுக்கு நிலை மட்டுமீறி போய்க்கொண்டிருந்தது. அனோனிமாவும் தப்பவில்லை.
பெர்லினுக்குள் நிலைகொள்ளும் ரஷ்யப்படைகள் மக்களின் வீடுகளை ராணுவக்குடியிருப்புகளாக ஆக்கிரமித்ததிலிருந்தே எல்லாப் பிரச்னைகளும் தொடங்கியதாக அனோனிமா பழி போட வரவில்லை. அல்லது, பாசிசத்தை வீழ்த்தி மனித குலத்தை காப்பாற்றிய செஞ்சேனையின் வரலாற்றுப் பாத்திரத்தை அவதூறுகளால் நிரப்பி சிறுமைப்படுத்தவும் அவள் முயற்சிக்கவில்லை.தொடக்கத்தில் கேள்விப்பட்டிருந்ததைவிடவும் நற்தன்மை கொண்டவர்களாக, சினேகப்பூர்வமாக உரையாடக் கூடியவர்களாகவே ரஷ்யப்படையினரைக் காண்கிறாள். அத்துமீறி நடக்கத் துணிகிறவர்களை எச்சரித்தும் மிரட்டியும் பெர்லின் பெண்களைப் பாதுகாத்து அனுப்பியவர்களும் ரஷ்ய ராணுவத்தில் இருப்பதை அவள் கவனமாக பதிவு செய்திருக்கிறாள். பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளக்கூடாது என்பதற்காக ஸ்டாலின் விதித்திருந்த ஆணை திரும்பத்திரும்ப நினைவூட்டப்படுகிறது. ஆனால் தம் வீட்டுப்பெண்களுக்கு ஜெர்மனி ராணுவம் இழைத்தக் கொடுமைகளுக்கு பழிதீர்த்தேயாக வேண்டும் என்ற வன்மத்தில் அந்த ஆணை தொடர்ந்து மீறப்பட்டுக் கொண்டேயிருந்தது. அனோனிமாவை மூவர் சூறையாடிக் கொண்டிருக்கும்போது அங்குவந்த ரஷ்ய ராணுவப் பெண்ணொருத்தி ஒரு கேளிக்கையை கண்டு களிப்பது போல் ரசித்துப்போகுமளவுக்கு பழியுணர்ச்சி தளும்பிக் கொண்டிருந்தது அவர்களிடம்.
ஒவ்வொரு வீட்டின் பின்புறக்கதவையும் இரவுபகல் பாராமல் இடித்துத் திறந்து உள்ளே நுழையும் முயற்சிகள் தொடர்கதையாகிப் போனது. அவமானம், வெட்கம், பாலியல் பலாத்காரம், அருவருப்பு என்பவையெல்லாம் பொருளற்ற வெறுஞ்சொற் களாக இழிந்துகிடந்தன. அவள் விரைத்துக் கிடந்தாள். மனரீதி யான இறுக்கம் உடல் இறுக்கத்தையும் கொண்டு வந்து சேர்த்ததாக ஓரிடத்தில் குமுறுகிறாள்.
திரும்பத்திரும்ப தன்மீது கூட்டங்கூட்டமாக வந்து மொய்க்கிறவர்களைப் பார்த்து பதறிப்போன அனோனிமா எல்லோரும் வேண்டாம், ஒரு ஆள் - நீ மட்டும் என்று இரந்து நிற்கும் நிலைக்குத் தாழ வேண்டியிருக்கிறது. அவளது வேண்டுதலுக்கு இரங்குவார் யாருமில்லை அங்கு. அடுத்தடுத்த நாட்களும் இதேநிலைதான். ராணுவ பூட்சின் அடியில் ஒட்டியிருக்கும் அழுக்கு போலாகிவிட்ட அவளிடம் கர்ப்பந்தரித்து விடுவாயோ என்று ஒருத்தி கேட்ட போது பலர் நடமாடும் பாதையில் புல் முளைக்காது.  என்று பதிலிறுத்து தன்னைத்தானே தேற்றிக் கொள்கிறாள். ஆனாலும் ராணுவத்தினரின் வல்லுறவால் தங்கிய கர்ப்பத்தை கலைப்பதற்கும் பால்வினை நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் தனியாக வைத்தியசாலைகளை நிறுவத்தான் வேண்டியிருந்தது அங்கு. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது வன்புணர்வுக்கு ஆளாகி கர்ப்பந்தரித்தவர்கள் எல்லைப்புறங்களிலும் இருநாட்டின் தலைநகரங்களிலும் மனநிலை சிதைந்து அனாதைகளாக உழன்று திரிந்ததை நினைவூட்டும் கொடூரங்கள் அனோனிமாவிலும் துருத்திக் கொண்டு பதற்றமடையவைக்கின்றன.
பாதுகாப்பற்ற இரையாக இனி நீடிக்கமுடியாது எனப் புரிந்து கொண்ட அனோனிமா பலம் பொருந்திய ஓநாயை அடக்கிப் பழக்கப்படுத்தி மற்றைய ஓநாய்களை விரட்டியடிக்கும் தற்காப்பு உத்தியைக் கையாள்கிறாள். இதற்காக தன்னிடம் வரும் ரஷ்ய ராணுவத்தினரில் உயர் அதிகாரத்தில் இருக்கும் லெப்டினன்ட், மேஜர் போன்றவர்களுக்கு மட்டுமே உரிமையுள்ளவளாக அவள் தன்னை மாற்றிக் கொள்கிறாள். அதிகாரமிக்கவர்களுக்கு அணுக்கமானவள் என்பதால் நிலவும் உணவுத் தட்டுப்பாட்டிலிருந்து அவளால் தப்பித்துக் கொள்ள முடிகிறது. ஒரு அதிகாரி வேறிடத்திற்கு பெயர்ந்து சென்று விடுகிறபோது வேறொரு புதிய மேஜரை தன்  பாதுகாப்புக்காகவும் உணவுத் தேவைக்காகவும் எதிர்பார்க்க வேண்டியவளாகிறாள்.
அனோனிமாவைப்போலவே ஒவ்வொரு பெண்ணும் சூழலுக்குப் பணிந்து பிழைத்திருக்க விதிக்கப்பட்டவர்களாயிருந்தனர். அமைதிக்காலத்தில் யாரோ ஒரு பொறுக்கி ஒரு பெண்ணை வன்புணர்வு செய்திருந்தால் ஆர்ப்பாட்டம் - காவல் நிலையத்தில் புகார் - கைது - விசாரணை - தண்டனை என்று என்னென்னவோ நடந்திருக்கும். ஆனால் போர்க்காலம் என்ற ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு. ம்... எல்லா அத்துமீறல்களும் அட்டூழியங்களும் போரின் ஒருபகுதியென கணக்குத் தீர்ப்பதைத்தான் உலகம் கண்டது. சண்டைக்கு சிங்காரமில்லை என்று நம்மூரில் சொல்வதைப்போல எல்லா கொலைகளும் வன்புணர்வுகளும் கருச்சிதைப்புகளும் பாலியல் வக்கிரங்களும் கொள்ளையடிப்புகளும் யுத்தமென்றால் இதெல்லாம் நடக்கும் தானே என்று உதட்டைப் பிதுக்கி கடந்துபோக உலகம் பழக்கியிருக்கிறது. ஆனால் அனோனிமா இந்த பொதுப்புத்திக்கு எதிர்த்திசையில் மறித்து நிற்கிறாள். ஏனெனில் அவள் யுத்தத்தின் பார்வையாளராகவோ பங்கெடுப்பாளராகவோ இருந்திருக்கவில்லை. யுத்தம் அவள்மீதேதான் நடந்து முடிந்திருக்கிறது. கைப்பற்றப்படும் நாடுகளின் பெண்களது யோனிக்குள்  நுழைந்த வெளியேறும் ஆணுறுப்புகளின் எண்ணிக்கையினால் அளவிடப்படுகிற யுத்தங்களின் வெற்றியை பரிகாசம் செய்தபடி மருகிக்கிடக்கும் கோடானகோடி பெண்களின் ஒற்றைப் படிமமாக அவள் வரலாற்றின் நெடுகிலும் காட்சியளிக்கிறாள்.
தூயஇனம், கலப்பில்லாத ரத்தம், இனமானம், ஆளப்பிறந்தவர் கள் என்று முன்பு அலட்டிக் கொண்டிருந்த ஜெர்மானிய ஆண்களுக்கு தம்வீட்டுப் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகளை யாருக்கோ நடப்பதுபோல அமைதியுடன் பார்த்துக் கொண்டிருப்பதன்றி வேறொரு வாய்ப்பும் அங்கு இருந்திருக்கவில்லை. பெண்கள் குழந்தை பெற்றுத்தள்ளும் வேலையை மட்டுமே செய்துகொண்டிருந்தால் போதும், தேவைப்பட்டால் அதற்காக தமது படையினரில் வலுவாக உள்ளவர்களை பொலிகாளையாக அனுப்பிவைக்கத் தயார் என்ற ஹிட்லரின் தளபதிகளது ஆணவத்தை எதிர்த்து ஒரு வார்த்தையும் பேசாதிருந்த அவர்கள் அப்போதே தம்வீட்டுப் பெண்களை ஏறிட்டுப் பார்ப்பதற்கான யோக்யதாம்சத்தை இழந்துவிட்டிருந்தார்கள்.
ஆனாலும் இவ்வளவுக்குப் பிறகும் தம்வீட்டுப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளானதை, தற்காத்துக் கொள்ளத் தெரியாததால் பெண்கள் தமக்குத்தாமே வருவித்துக்கொண்ட கேடாகத்தான் அவர்களால் பார்க்க முடிந்ததேயன்றி யுத்தத்தின் தண்டனையாக பார்க்க முடியவில்லை. அந்த தண்டனையை வலிந்து ரஷ்யாவுக்குப் போய் இழுத்துவந்த ஹிட்லரின் குற்றமாகப் பார்க்க முடியாதளவுக்கு ஜெர்மானிய ஆண்கள் அவரவர் பங்கிற்கு கொஞ்சங்கொஞ்சம் ஹிட்லராக இருந்தனர். அனோனிமாவின் காதலன் கெயர்ட்டும் இதற்கு விதி விலக்கானவல்ல. எப்பேர்ப்பட்ட நிலையிலும் தற்காத்து - புனிதம்(?) கெடாமல் தனக்காக காத்திருக்க வேண்டிய அனோனிமா இப்படி ரஷ்ய ராணுவத்தினரிடம் சிக்கி சீரழிந்திருப்பதை அறிந்து அவளைவிட்டு வெளியேறிப் போகிறான் அந்த மூடன். மானஸ்தி என்று அவன் வைத்திருக்கும் எல்லா மதிப்பீடுகளையும் புறந்தள்ளி அடுத்த நொடியின் வாழ்க்கையை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறாள் அனோனிமா.
அனோனிமா இப்படி தன்பாடுகளை மட்டுமே புலம்பியவிக்கிறவளாக இல்லை என்பதுதான் அவளை ஒரு முன்மாதிரிப் பெண்ணாக நம்மை உணரவைக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் எதுவும் பொதுவில்லை என்பதே அவள் பார்வையாய் இருக்கிறது. எதிரிப்படையினர் வந்தால் குடித்து மயங்கி பல வீனமாகிச் சாகட்டும் என்பதற்காக மதுவடிச்சாலைகளை அழிக்காமல் விட்டுச் செல்கிறது ஜெர்மனி ராணுவம். இது ஆண்களைப் பற்றிய ஆண்களின் பார்வை என்கிறாள் அனோனிமா. உண்மையில் அவ்வாறு விட்டுச் செல்லப்படும் மதுவைக் குடித்து மூர்க்கமேறி வன்முறை இயந்திரமாக பெண்களின் மீது பாய்வதற்கே வழிவகுக்கிறது என்பது இந்த ஆண்களுக்குப் புரிவதேயில்லை என்று குற்றம்சாட்டுகிறாள். பிரிதொரு இடத்தில் உணவுத் தட்டுப்பாடு பற்றி பேசுகிறாள். கணவன் சாப்பிட்ட பிறகு எஞ்சியதை சாப்பிடுகிற நம்மூர் பதிவிரதாத்தனம் அங்கும் வேறு வடிவிலிருக்கிறதோ என்னவோ அனோனிமா எரிச்சலடைந்து இப்படிச் சொல்கிறாள் - கர்ப்பத்திலிருக்கும் குழந்தை தமக்கான போஷாக்கை தாயிடமிருந்தே பெறுகிறது. தந்தையைப் பற்றி அது அறிந்திருப்பதில்லை. ஆனாலும் பாருங்கள் அந்த நாடு தந்தையர் நாடு என்றே ஆரவாரத்தோடு சொல்லப்பட்டு வந்தது.
எஸ்டேட் தொழிலாளர்களை இழிவாக விளித்து கட்டளை பிறப்பிக்கவும்அவர்கள் எதைக்கேட்டாலும் முரட்டடியாக மறுப்பதற்கும் தேவையான சொற்களைக் கொண்ட கூலித் தமிழ் கையேடு ஒன்றை வெள்ளைக்கார துரைமார்களுக்கு  புலவர் பெருமக்கள் தொகுத்தளித்தனர். தோற்கடிக்கப்பட்டவர்களை கட்டளைகள் வழியாகவே கையாளும் இந்த மனப் பாங்கு நுட்பமானது. ரஷ்ய ராணுவத்தினருக்கும் வழங்கப்படும் டச் மொழிக் கையேட்டில் உள்ள பதங்கள் அவ்வளவும் மக்களை நோக்கி பிறப்பிப்பதற்குரிய ராணுவக்கட்டளைகள். மக்களின் இரைஞ்சுதல்களையும் தேவைகளையும் விளங்கவைப்பதற்கான ஒரு சொல்லும் அதிலில்லை. ஆயுதத்தின் ஒருபகுதியாக அங்கு மொழியும் செயல்படுவதை மிகுந்த எள்ளலுடன் அம்பலப்படுத்துகிறாள் அனோனிமா.
இப்படியாக அனோனிமாவின் குறிப்புகள் பாவனையான நமது நிம்மதியைச் சிதறடிக்கிறது. முகம் காட்ட விரும்பாத அவளது முகத்தைத் தேடி கண்டடையும்போது அது நம்வீட்டுப் பெண்ணொருத்தியின் முகமாகவும் இருப்பதற்கான சாத்தியங்களை உணரச் செய்கிறது. கற்பு, ஒழுக்கம், புனிதம் பற்றிய கவரிமான் கப்ஸாவில் திளைத்திருக்கும் நம் வீட்டிலும் மனதிலும் அந்தப் பெண்ணுக்கு வழங்கப்படவுள்ள இடம் எது என்ற கேள்வியை எழுப்புகிறது. ஆண்மை, வீரம் போன்ற கற்பிதங்ககளின் உள்ளீடற்ற பொக்கைத்தனங்களை இரக்கமற்ற மொழியில் குத்திக் காட்டுகிறது. கண்ணுக்குள் பெண்ணை வைத்து காத்து வளர்க்கத் துடிக்கும் ஆணின் கட்டுப்பெட்டித்தனம் மீது காறி உமிழ்கிறது. தன்னளவில் சுயமாய் வாழ்வதற்கான பெண்ணின் விழைவுகளை முன்மொழிகிறது.  மான அவமான மயக்கங்களில் சிக்கி வாழ்வைத் தொலைக்கிற கோழைத்தனத்திலிருந்து விடுபட்டு ஒவ்வொரு நொடியையும் வாழ்ந்து பார்ர்ப்பதற்கான வேட்கையை மூட்டுகிறது.
- ஆதவன் தீட்சண்யா (புதுவிசை)


கோடைக்காலத்தில் கடுமையான வெப்பத்தையும் குளிர்காலத்தில் மிகவும் குளிர்ச்சியாகவும் உணர்கிறோம். இவைதான் நாம் அனுபவிக்கும் தட்பவெப்ப நிலைகள். ஓர் இடத்தின் தட்ப வெப்பநிலை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நாம் அனுபவிக்கும் சராசரியான கால நிலையைக் குறிப்பது. மழை, சூரிய ஒளி, காற்று, ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை இவையே ஓர் இடத்தின் தட்பவெப்ப நிலையை நிர்ணயிக்கும் காரணிகள்.

சீதோஷ்ணநிலை மாற்றங்கள் திடீரென்றும், வெளிப்படையாகவும் ஏற்படும். ஆனால், தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு நீண்ட காலமாகும். அதனால் அந்தளவுக்கு உடனடியாக அவற்றை உணர முடிவதில்லை. பூமியில் பலவிதமான தட்பவெப்ப மாற்றங்கள் ஏற்படுகின்றன. அனைத்து வகையான உயிரினங்களும் அவற்றுக்கேற்ப இயல்பாகத் தம்மைத் தக்கவைத்து கொண்டிருக்கின்றன.

இருந்தாலும் கடந்த 150-200 ஆண்டுகளில் தட்பவெப்பநிலை மாற்றங்கள் மிகக் குறுகிய காலத்தில் ஏற்பட்டுவருகின்றன. சில குறிப்பிட்ட தாவர மற்றும் விலங்கினங்கள் இப்படிப்பட்ட மாற்றங்களுக்கேற்பத் தகவமைத்துக்கொள்ள முடிவதில்லை. மனிதனுடைய நடவடிக்கைகளே இப்படிப்பட்ட மாற்றங்கள் இவ்வளவு வேகமாக நடைபெறுவதற்கான காரணம் என்று கருதப்படுகிறது.

தட்பவெப்ப நிலை மாற்றங்களுக்கான காரணங்கள்

வெப்பநிலை மாற்றங்கள் ஏற்படுத்துகிற காரணங்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம். இயற்கையானது மற்றும் மனிதனால் ஏற்படுவது.

௧. இயற்கையான காரணங்கள்:

வெப்பநிலை மாற்றங்களுக்கு நிறைய இயற்கையான காரணங்கள் உள்ளன. கண்டங்களின் விலகல், எரிமலைகள், கடல் நீரோட்டங்கள் மற்றும் பூமிசரிவு இதற்கான சில முக்கிய காரணிகள்.

கண்டங்கள் விலகுதல்:

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கும் முன், நிலப்பரப்பு படிப்படியாக விலகியதால் ஏற்பட்டதே இன்று நாம் காணும் கண்டங்கள். இப்படிப்பட்ட இந்த விலகல் மற்றும் கடல் நீரோட்டங்களின் போக்குகளும், நீர்ப்பரப்புகளின் இடங்களை மாற்றின. இவை தட்பவெப்ப நிலையில் தாக்கங்கள் ஏற்படுத்தின. கண்டங்களின் விலகல்கள் இன்றும் தொடர்கின்றன.

எரிமலைகள்:

ஒரு எரிமலை வெடிக்கும்போது, அது மிகப் பெரிய அளவில் சல்ஃபர்-டை-ஆக்ஸைடு, (SO2) நீராவி, தூசி மற்றும் சாம்பல் இவற்றை வாயு மண்டலத்தில் வெளியேற்றுகிறது. இப்படிப்பட்ட இந்த எரிமலை வெடிக்கும் நிகழ்வு சில நாட்களுக்கே நீடிக்கிறது. இருப்பினும், மிகப்பெரும் அளவில் அவற்றிலிருந்து தூக்கி எறியப்படும் வாயு மற்றும் சாம்பல் தட்பவெப்பநிலை முறைகளில் பல வருடங்களுக்குத் தாக்கம் ஏற்படுத்துகிறது. அதிலிருந்து வெளியேறும் வாயுக்கள் மற்றும் தூசி, துகள்கள், சூரிய கதிர்களை ஓரளவுக்கு மறைக்கின்றன. இதனால் குளிர்ச்சி உண்டாகிறது.

பூமியின் சாய்மானம்:

பூமி தனது சுற்றுப்பாதையில் 23.5o கோணத்தில் செங்குத்தான நிலையில் சாய்ந்திருக்கிறது. இந்தப் பூமியின் சரிவில் ஏற்படும் மாற்றங்கள் பருவகாலங்களின் தீவிரத்தன்மையில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அதிக சரிவு, கோடைக்காலங்களில் அதிக வெப்பத்தையும், குளிர்ந்த காலங்களில் அதிக குளிரையும் ஏற்படுத்துகின்றன. குறைந்த அளவு சாய்மானம் கோடையில் வெப்பத்தையும், குளிர்காலத்தில் குளிரையும் குறைக்கின்றன.

கடல் நீரோட்டங்கள்:

சமுத்திரங்கள் தட்பவெப்ப நிலை அமைப்பில் மிகமுக்கியமான பங்கு வகிக்கின்றன. அவை பூமியின் 71% பகுதியை ஆக்கிரமித்துள்ளன. சூரியன் கதிர்வீச்சை வாயு மண்டலம் மற்றும் நிலப்பரப்பு கிரகித்துக்கொள்வதைவிட இரு மடங்கு அதிகமாக இவை கிரகித்துக் கொள்கின்றன.

௨. மனிதனால் ஏற்படுவது:

பசுமை இல்ல விளைவு

பூமி, சூரியனிடமிருந்து ஆற்றலைப் பெறுகிறது. இது பூமியின் நிலப்பரப்பை வெப்பமாக்குகிறது. இந்த ஆற்றல் வாயு மண்டலத்தினூடே கடந்து செல்கையில், இதன் ஒரு குறிப்பிட்ட அளவு (சுமார் 30%) சிதறுண்டுபோகிறது. பூமியிலிருந்தும், கடல் பரப்பிலிருந்தும் இந்த ஆற்றலின் ஒரு பகுதி, வாயு மண்டலத்திற்குள் பிரதிபலிக்கப்படுகிறது. வாயுமண்டலத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட வாயுக்கள் பூமியைச் சுற்றி ஒரு விதமான போர்வை போர்த்தியது போன்று பரவியுள்ளன. அவையாவன, கார்பன்-டை- ஆக்ஸைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு. இவைதான் ‘பசுமை இல்ல வாயுக்கள்’ (கிரீன்- ஹவுஸ் வாயுக்கள்) என்று அழைக்கப்படுகின்றன. பசுமை இல்ல (கிரீன்- ஹவுஸ்) வாயுக்கள், நீராவியுடன் சேர்ந்து வாயு மண்டலத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன. இவை வாயு மண்டலத்தில் பிரதிபலிக்கப்படுகிற ஆற்றலிருந்து சிறிதளவைக் கிரகித்துக்கொள்கிறது. எப்படிப் பசுமை இல்லத்தின் கண்ணாடி சூரியக் கதிரியக்கத்தின் அதிகப்படியான ஆற்றலைத் தடுக்கிறதோ, அப்படியே இந்த ‘வாயுப் போர்வை’ பூமியில் வெளிப்படுத்தப்படும் சக்தியை கிரகித்துக்கொண்டு வெப்பநிலை அளவுகளைத் தக்க வைத்துக்கொள்கிறது. இதனால் இது ‘பசுமை இல்ல விளைவு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஜீன் - பாப்டிஸ்ட் ஃபோரியர் என்ற பிரஞ்சு நாட்டு விஞ்ஞானி இந்த பசுமை இல்ல விளைவை (கிரீன்- ஹவுஸ் விளைவு) முதன் முதலாக அடையாளம் கண்டவர். அவர் வாயுமண்டலத்தின் நிகழ்வு மற்றும் கிரீன்ஹவுஸ் நிகழ்வின் ஒற்றுமையைச் சுட்டிக் காட்டினார்.

கிரீன் ஹவுஸ் வாயுக்களாளான போர்வை, உலகம் உருவானதிலிருந்தே உள்ளன. ஆனால் மனித குலத்தின் நடவடிக்கைகள் அதிகரிக்க அதிகரிக்க, இந்தக் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் அதிகமதிகமாக வாயு மண்டலத்திற்குள் விடப்படுகின்றன. இதன் விளைவாக, இந்தப் போர்வை தடிமனாகிக்கொண்டிருக்கிறது. இது ‘இயற்கையான கிரீன்ஹவுஸ் விளைவை’ பாதிக்கிறது.

நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற எரிபொருட்களை நாம் எரிக்கும்போது, கார்பன் - டை - ஆக்ஸைடு (கரிம வாயு) வெளியேற்றப்படுகிறது. மற்றும் நாம் காடுகளை அழிக்கும்போது, மரங்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கார்பன் வாயு மண்டலத்தில் கார்பன் - டை - ஆக்ஸைடாகக் கலக்கிறது. அதிகரித்துவரும் விவசாய நடவடிக்கைகள், நிலத்தைப் பயன்படுத்தும் முறையில் ஏற்படும் மாற்றங்கள், மற்றும் வேறுசில நடவடிக்கைகள் இவை அனைத்தும் மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுக்களின் அளவுகளை அதிகரிக்கச் செய்கின்றன. தொழிற்சாலைகளின் நடவடிக்கைகளும் செயற்கையான மற்றும் புதிய கிரீன்ஹவுஸ் வாயுக்கள் அதாவது CFCக்கள் (க்ளோரோஃபுளூரோ கார்பன்கள் (Chlorofluorocarbons) போன்றவற்றை வெளியேற்றுகின்றன. மோட்டார் வாகனங்கள் வெளியேற்றும் புகை ஓஸோனை அதிகரிக்கச் செய்கின்றன. அதிகரிக்கப்பட்ட வரும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் பூமியின் வெப்ப நிலையை அதிகரிக்கிறது. இந்த விளைவு பொதுவாக 'உலகம் வெப்பமயமாதல்' அல்லது 'வெப்பநிலை மாற்றம்' என்று குறிப்பிடப்படுகிறது.

கிரீன் ஹவுஸ் விளைவு மற்றும் வெப்பநிலை மாற்றம் பற்றிய சுருக்க விளக்கம் பார்க்க (ஆங்கிலத்தில்) இங்கே கிளிக் செய்யவும்.

கிரீன்ஹவுஸ் வாயுக்களின் அதிகரிப்பிற்கு நாம் எப்படி காரணமாக இருக்கிறோம்?

நிலக்கரி, பெட்ரோல் போன்ற எரிபொருள்களைப் பயன்படுத்துவது.

அதிக நிலத்திற்காக மரங்களை அதிகமாக வெட்டிப்போடுவது.

மக்கிப் போகாத கழிவுப் பொருள்களின் (ப்ளாஸ்டிக்) பெருக்கம்.

விவசாயத்திற்காக உரங்கள், பூச்சிக்கொல்லிகளைக் கண்மூடித்தனமாகப் பயன்படுத்துதல்.

தட்பவெப்பநிலை மாற்றம் நம்மை எப்படிப் பாதித்தது?

வெப்பநிலை மாற்றம் மனித குலத்துக்கே அபாயமானது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து பூமியின் சராசரி வெப்ப நிலை, 0.3 - 0.60C வரை உயர்ந்துள்ளது. இந்த வெப்ப நிலை உயர்வு நமக்கு மிகவும் குறைந்த அளவாகத் தோன்றலாம். ஆனால், கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் பேரழிவுக்கு இவை வழி வகுக்கும்.

விவசாயம்

அதிகரித்துவரும் மக்கள் தொகை உணவுக்கான தேவையை அதிகரிக்கிறது. இதனால் இயற்கை வளங்களை அதிகமாகப் பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. வெப்பநிலையில் ஏற்படும் வேறுபாடுகள், தட்பவெட்ப நிலை மற்றும் மழை ஆகியவற்றில் மாறுபாடுகளை ஏற்படுத்துவதன் மூலம், விவசாயத்தை நேரடியாக பாதிக்கிறது. மண்வளம், பூச்சிகள் மற்றும் நோய்களின் மாற்றங்கள் மூலமாக மறைமுகமாக விவசாயத்தை பாதிக்கிறது. தானிய வகைகளில் விளைச்சல் இந்தியாவில் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. மிகக் கடுமையான வெப்பம், மிக அதிகமான மழை, வெள்ளம், வறட்சி முதலிய அதீதமான சீதோஷ்ண நிலைகளும் விளைபொருள்களின் உற்பத்தியைப் பாதிக்கின்றன.

வானிலை

உயர்ந்து வரும் வெப்பநிலை, மழை பெய்யும் நிலவரங்களை மற்றக்கூடியது. வறட்சி மற்றும் வெள்ளம் ஏற்படுதலை அதிகரிக்கச் செய்கிறது. பனிப்பாறைகள் மற்றும் துருவப் பனிப்படிவங்கள் உருகுவது அதிகரிப்பதால், கடல் மட்டம் அதிகரிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் புயல், சூறாவளி போன்றவற்றுக்கும் வெப்பநிலை மாற்றங்களின் விளைவுகளே காரணம் என்று கருதப்படுகிறது.

கடல் மட்டம் அதிகரித்தல்

வெப்பநிலை மாற்றத்தின் விளைவுகளில் ஒன்று கடல் மட்ட உயர்வு. கடல்நீர் வெப்பமடைதல், பனிப்பாறைகள் மற்றும் போலார் பனி படிவுகள் உருகுதளால், அடுத்த நூற்றாண்டுக்குள் சுமார் அரை மீட்டர் அளவுக்கு கடல் மட்டம் உயரப்போகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வதால், மணல் அரிப்பு ஏற்பட்டு நிலப்பகுதிகள் கடலில் மூழ்குதல், வெள்ளப் பெருக்கு ஏற்படுவது அதிகரிப்பது, நீர்நிலைகள் உவர்ப்பாக மாறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இவை, கடல் பகுதி விவசாயம், குடிநீர் ஆதார வளங்கள், மீன்பிடி தொழில், மக்கள் குடியிருப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

உடல் நலம்

பூமி வெப்பமயமாதல் மனிதகுல ஆரோக்கியத்தை நேரடியாக பாதித்து, வெப்பம் சம்பந்தப்பட்ட நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணமாகும். உடலில் நீரிழப்பு, தொற்று நோய் பரவல், ஊட்டச் சத்துக் குறைபாடு, பொது மருத்துவம் சார்ந்த உள்கட்டமைப்பைப் பாதித்தல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

காடுகள் மற்றும் வன விலங்குகள்

இயற்கையான சூழலில் இருக்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களால் வெகு விரைவில் பாதிக்கப்படுகின்றன. வெப்பமாற்றத்தின் விகிதம் தொடர்ந்து அதிகரித்தால், பல்வேறு தாவர இனங்களும், விலங்கினங்களும் அழியக்கூடிய நிலை ஏற்படலாம்.

தடுப்பு நடவடிக்கைகள்

புதுப்பிக்க முடியாத எரிசக்தி ஆதாரங்களின் உபயோகங்களைக் குறைத்துக்கொள்தல் (உ.ம். நிலக்கரி போன்ற எரிபொருட்கள்).

புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஆதாரங்களின் உபயோகத்தை அதிகரித்தல்- சூரிய மற்றும் காற்று ஆதாரங்கள் முதலியவை.

மரங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேலும் மரங்களை வளர்த்தல்.

மக்கிப் போகாத ப்ளாஸ்டிக் போன்ற பொருட்களின் கண்மூடித்தனமான உபயோகத்தை தவிர்த்தல்.

INDIA DEVELOPMENT GATEWAY





போட்டிகள் மிகுந்து வரும் அவசரமான உலகில் போராடி முன்னேறும் வழிகளை தங்கள் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பெற்றோர் விரும்புகின்றனர். அதன் வெளிப்பாடே சிறு குழந்தைகள் கூட மூட்டையை தூக்கிச் செல்வதை போல புத்தக சுமையை தூக்குகின்ற நிலை. முன்பு ஐந்தாம் வயதில் தான் பள்ளிக்கல்வி தொடங்கியது. அதுவரை பெற்றோரின் தனிப்பட்ட கவனிப்பில் இருந்துகொண்டு அம்மா, அப்பா என சொற்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன. தாய் தான் ஒரு குழந்தையின் முதல் ஆசிரியராக இருந்தார். இன்று பிறந்த சில மாதங்களிலே கல்வி நிலையங்களில் முன்பதிவு. மூன்றாம் வயதில் பாலர் பள்ளி வகுப்பு. நான்காம் வயதில் எல்கேஜி எனப்படும் மழலையர் கீழ்வகுப்பு. ஐந்தாம் வயதில் யுகேஜி எனப்படும் மழலையர் மேல்வகுப்பு. இவற்றிலிருந்து பயிற்சி பெறாவிட்டால், ஒன்றாம் வகுப்பில் இடமில்லை என்று சொல்லுமளவுக்கு இன்றைய காலம் மாறிவிட்டது. தொட்டிலில் தாலாட்டப்பட்டு தாய் வழிக்கல்வி ஊட்டப்பட வேண்டிய வயதில், நான்கு சுவருக்குள் அடைக்கப்பட்டு, தனிப்பட்ட கவனம் செலுத்தப்படாமல், பத்தோடு பதினொன்றாய் வெளிநாட்டு மொழி கற்பிக்கப்படும் நிலை தொடர்கிறது.

பாலர் பள்ளி வகுப்புக்கு செல்லும்போதே தனது குழந்தை படிப்பில் முதல் இடம் பெற வேண்டும் என்ற ஆசையும் ஏக்கமும் அடையும் பெற்றோர், தங்கள் குழந்தைகள் பேசி பழகுவதற்கு முன்னரே வண்ணப்படங்கள், அறிவை வளர்க்கும் விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றின் மூலம் பல பயிற்சிகள் அளிக்கின்றனர். இதுபோல தங்கள் குழந்தைகளின் அறிவை வளர்க்க பெற்றோர் கையாளும் முறைகளில் ஒன்று தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க பழக்கப்படுத்துவது. அந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் குழந்தைகள் பேச பழகுவதோடு, அறிவுக்கூர்மையும் பெறுவர் என்று பலர் எண்ணுகின்றனர். புற்றீசல்போல் புதிதாக முளைத்துவரும் தொலைக்காட்சிகள் குழந்தைகளுக்கு தொல்லைக்காட்சிகளாக மாறிவருவது ஒருபுறம். அதிலும் குறிப்பாக கல்வி தொலைக்காட்சியையோ, கல்வித் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையோ குழந்தைகள் பார்ப்பதால் அறிவுக்கூர்மை அடைவர் என்ற அசையாத நம்பிக்கை பெற்றோர் பலரிடம் உள்ளது. இதற்காக குழந்தைகள் பிறந்த சில மாதங்களிலே இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு வசதி செய்துகொடுக்கின்றனர். ஆனால் கல்வி தொலைக்காட்சியை குழந்தைகள் குறிப்பாக பிறந்த முதல் இரண்டு ஆண்டுககால மழலைப் பருவத்தில் பார்ப்பதால் நன்மை கிடைக்குமா என்பது பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. தொலைக்காட்சி பார்ப்பதால் அறிவு வளரும் என்ற பெற்றோரின் நம்பிக்கைக்கு மாறான முடிவுகளை இந்த ஆய்வு வெளியிட்டுள்ளது. இரண்டு வயதிற்குட்ப்பட்ட மழலையரின் மூளை வளர்ச்சிக்கு கல்வி தொலைக்காட்சிகளோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோ உதவவில்லை என்று இவ்வாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலுள்ள குழந்தைகள் மருத்துவமனையின், ஊடகம் மற்றும் குழந்தைகள் நல மையத்தின் துணை ஆய்வாளர் Marie Evans Schmidt அம்மையார் இந்த ஆய்வை மேற்கொண்டார். அப்போது 800 இளைஞர்களை பற்றி அவர் ஆராய்ந்தார். முதல் மூன்று ஆண்டுகால மழலைப்பருவத்தில் அவர்களின் நேரம் செலவிடப்பட்ட விபரங்களை பெற்றோரிடம் கேட்டு தெரிந்து கொண்டார். குறிப்பாக தொலைக்காட்சியை பார்ப்பதில் அல்லது குறுந்தகடு மூலம் படங்கள் பார்ப்பதில் அவர்கள் செலவிட்ட நேர அளவையும், அவர்களின் மொழி மற்றும் உடலளவில் இயங்கி செயல்படும் திறன்களை பற்றியும் பதிவு செய்தார். குழந்தைகள் ஓடியாடுவது, மண்ணில் விளையாடி வடிவங்கள் செய்து மகிழ்வது போன்றவற்றை தான் உடலளவில் இயங்கி செய்யும் திறன்கள் என்கிறோம்.

Marie Evans அம்மையார் மேற்கொண்ட ஆய்வுபடி, பொதுவாக அந்த இளைஞர்கள் இரண்டு வயது வரையான, மழலைப்பருவத்தில் நாளுக்கு 1.2 மணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பதில் செலவிட்டிருந்தனர். இந்த தகவல்களை ஆராய்ந்தபோது, தொலைக்காட்சி பார்ப்பதில் அதிக நேரம் செலவிட்டவர்கள் மூன்று வயதாகியபோது, மொழி மற்றும் உடலளவில் இயங்கி செயல்படும் இதர திறன்களில் மோசமாக இருந்ததை Marie Evans அறியவந்தார். இந்த கட்டத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகம் பார்த்ததால் எதிர்மறை பாதிப்பு அடைந்த குழந்தைகள் மொழி மற்றும் இதர திறன்களில் மோசமாக இருந்தனர் என்று எண்ணினர்.

பின்னர், குழந்தைகளை பாதிக்கும் பிற காரணிகளை பற்றி Marie Evansசும் அவரது குழுவினரும் ஆய்வு செய்தனர். பெற்றோரின் கல்வி நிலை மற்றும் வீட்டு வருமானம் ஆகிய பல காரணிகளை ஆராயந்தனர். அப்போது தான் தொலைக்காட்சி பார்ப்பதற்கும் அறிவு வளர்ச்சிக்கும் இடையில் தொடர்பில்லை என்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குழந்தைகளின் அறிவு வளர்ச்சியில் செல்வாக்கு ஏற்படுத்தவில்லை. ஆனால் பெற்றோரின் கல்வி நிலை மற்றும் பொருளாதாரா நிலைகள் தான் ஆழமான செல்வாக்கை ஏற்படுத்தி இருந்தது தெரியவந்தது. ஆய்வின் தொடக்கத்தில் தொலைக்காட்சி பார்ப்பது குழந்தைகளின் அறிவு வளர்ச்சியோடு தொடர்புடையதாக தோன்றியது. ஆனால் வீட்டிலுள்ள பிற சுற்றுச்சூழல்களால் ஏற்பட்ட விளைவே அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்க செய்துள்ளது என்பதை பிந்தைய ஆய்வின் போது தெரிந்து கொண்டனர்.

இரண்டு வயதிற்குட்ப்பட்ட மழலையரை தொலைக்காட்சி பார்க்க செய்வதால் அவர்களின் அறிவு வளர்வதில்லை என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அப்படியானால் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை தூண்டவிரும்பும் பெற்றோர் என்ன தான் செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களா? குழந்தைகளோடு குழந்தையாக விளையாடி மகிழ வேண்டும். அவர்களோடு பேசி உரையாடி, கற்றுக்கொடுக்க வேண்டும். சைகைகளால் பரிமாறி அவர்களை பண்படுத்த வேண்டும். நல்லவை செய்யும்போது பாராட்டி, தீயவை செய்யும்போது அறியாமல் செய்வதால் கனிவோடு திருத்தி சொல்லிக்கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட சாதராண நடைமுறைகள் தான் குழந்தைகளை பண்படுத்தி அவர்களின் மொழி, சொல் வளம், இதர சிறப்பு திறன்களை உயர்த்த உதவுகின்றன.

இன்று தந்தையும் தாயும் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தால், தொலைக்காட்சி பெட்டிக்கு முன்னால் முடங்கிபோகின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட தனக்கு தரவில்லையே என்று ஏங்கும் குழந்தைகள் வீட்டிலுள்ள தொலைக்காட்சி பெட்டியாக இருக்க விரும்புகிறேன் என்று கூறுமளவுக்கு இன்றைய சூழ்நிலை உருவாகியுள்ளது. தொலைக்காட்சி பெட்டியின் முன் செலவிடும் நேரத்தை குழந்தைகளோடு செலவிட்டால், குழந்தைகளின் வளர்ச்சி நமக்கே புலப்படும்.

சீன வானொலி


னித வாழ்வில் பலவகையான பருவ நிலைகளை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். குழந்தை பருவம், வளர் இளம் பருவம், வாலிப் பருவம், இடைநிலை பருவம், முதியோர் பருவம் என ஒருவாறு பெயரிடலாம். எல்லாப் பருவ நிலைகளிலும் பொதுவாக இதையே ஆண்கள், பெண்கள் என இரு பாலர்களுக்கும் ஒவ்வொரு பருவகால கட்டங்களிலும் அந்தந்த பருவ நிலைக் கேற்ப உடல் மற்றும் மன நிலைகளில் மாறுதல்கள் தோன்றக்கூடும், நலமான வாழ்க்கை என்பது பொதுவாகவே நலமான உடல், நலமான மனம் என்ற இரண்டையும் உள்ளடக்கியதுதான். ஒன்றுக்கொன்று தொடர்புடையதும் கூட, நலவாழ்விற்கு உடல், மனம் என்ற தனிமனித பக்கமும் சமூகம் என்ற மூன்றாம் பக்கமும் உண்டு. இந்த மூன்று பக்கங்கள் அல்லது முப்பரிமானங்கள் ஒன்றொடு ஒன்று தொடர்புடைய காரணத்தினால் ஒன்றின் குறை ஒன்றை பாதிக்கவே செய்யும். உடல் குறை மனதைப் பாதிக்கும், பாதிக்கப்பட்ட மனநிலை உடல் நலனைப் பாதிக்கும். சமூகச் சூழல் உடல், மனம் இவ்விரண்டையுமே பாதிக்கும் தன்மை உடையது.

இது தாண்டிய ஆன்மீக உணர்வு என்பது உடலையும், மனதையும் பாதிக்க வல்லது. தெளிவாக சொல்லப்போனால் மாற்றவல்லது என்றாலும் கூட இக்கட்டுரையில் ஆன்மீக தொடர்பு பற்றி நாம் பேசப் போவது இல்லை. அதிலும் குறிப்பாக வளர் இளம் பருவத்தில் பெண்களுக்கு ஏற்படக் கூடிய பாலியல் சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே இங்கு தொட்டுச் செல்லப் போகிறோம். மேலை நாட்டு மருத்துவமான ஆங்கில மருத்துவத்தில் நாம் முன்னர் பேசி ஒருங்கிணைந்த விஷயங்களான உடல் நலம், மனநலம், மூன்றாவதான சமூகநலம் என்ற மூன்றின் ஒருங்கிணைந்த நலப்போக்கு [INTEGRATED HEALTH PERPECTIVE] அவ்வளவாகக் காணப்படுவதில்லை. ஆங்கில மருத்துவத்தில் நல வாழ்க்கை எது என்று கேள்வி கேட்கப்படும் பொழுது அது சிக்கலான கேள்வியாக இருக்கிறது.

மனிதர்களின் நல வாழ்வுக்கு பொறுப்புடைய அரசுகள் பெரும்பாலும் மேலைநாட்டு மருத்துவத்தின் அடிப்படையிலேயே பார்க்கின்றன. அரசு மருத்துவமனைகள் மேலைநாட்டு தத்துவத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்ற காரணத்தினால் பெரும் செலவில் மருத்துவ நிலையங்கள் (மருத்துவ கல்வி + மருத்துவமனைகள்) நடத்தப்படுகின்றன. பல பரிசோதனை ஆய்வுகள், கருவிகள் சார்ந்ததாகவே இருக்கிறது. அதனால் குணப்படுத்துதல் என்பது பணத்தின் அடிப்படையில் அமைந்து விடுகிறது. எல்லா மக்களுக்கும் சென்றடையக் கூடிய மருத்துவம் மாற்று மருத்துவம்தான், ஏனெனில் இது ஒரு ஒருங்கிணைந்த நலவாழ்வு கொள்கை அடிப்படையில் அமைந்துள்ளது.

வளர் இளம் பருவத்தில் பாலியல் மாற்றம் மற்றும் பாலியல் உறுப்புகள் வளர்ச்சி காரணமாக ஒரு சுதந்திரப் போக்கினை மனதில் இனம் கண்டு கொள்ள முடியும். இது பெரும்பாலும் உடல் இயல் சார்ந்ததாகவே இருக்கின்றது. இதுவரை பெற்றோர்கள் கூறும் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த இந்த வளர் இளம் பருவத்தினர் தம் வயது ஒத்தவர்களின் ஆலோசனைகளுக்கே முக்கியத்துவம் தருவார்கள். இது சுதந்திரமான மனக்போக்கின் முதல் அறிகுறி ஆகும். இந்த கால கட்டங்களில் பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களை அறிவுரையாக கூறுவதை விடுத்து ஆலோசனைகளாகக் கூறும் போக்கினை கைக் கொள்ள வேண்டும். குழந்தைத்தனமாக வாழ்க்கையில் நோக்குகின்ற போக்கிலிருந்து இந்த பருவத்தினர்கள் முற்றிலும் விடுபட்டு விட்டார்கள் என்று சொல்ல முடியாது எனவே இவர்களை வயது முதிர்ந்தவர்களாக தங்களை தாங்களே கருதிக் கொள்வார்கள். தங்கள் பாலியல் சார்ந்த பிரச்சனைகளை தங்கள் வயது ஒத்தவர்களிடமே பகிர்ந்து கொள்ளும் காரணத்தினால் அவர்களுடைய தோழமை யார், யாரிடம் இருக்கின்றன என்பதிலும் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். நல்ல பழக்க வழக்கங்களை உடையவர்களோடு பழகுவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.

ரகசியங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் இந்த பருவத்தினரிடம் அதிகம் காணப்படும். எதிர் பாலினரிடம் அதிக கவர்ச்சி தோன்றக் கூடிய பருவம் இது. இதில் மிக அதிகமான கண்டிப்பு காட்டுவதன் மூலம் பெற்றோர்கள் தங்களிடமிருந்து வளர் இளம் பருவத்தினரை நெருக்கமான மன உறவு நிலையிலிருந்து தள்ளி வைத்துவிடும் அல்லது கண்டு கொள்ளாத மனநிலை தோன்ற வாய்ப்பு ஏற்பட்டு விடும். [DISTANTING OR INDIFFERENT ATTITUDE] எதிர் பால் இனக்கவர்ச்சி காரணமாக தங்களை மிகவும் அழகு படுத்திக் கொள்கின்ற ஆர்வம் மிகுதியும் காணப்படும். கண்ணாடியின் முன்பு அதிக நேரம் நின்று தங்களை முன்னும், பின்னும் பார்த்து தங்களாகவே தங்கள் உடலை ரசிக்கும் போக்கும் காணப்படும். இதை மிகப்பெரிய தவறாக எண்ணிவிடக் கூடாது. அழகு சாதனங்கள் மூலம் தங்கள் அழகை மிகைப் படுத்திக்கொள்ள எண்ணுகின்ற இவர்களின் போக்கை வியாபார நோக்கோடு பயன்படுத்துகின்ற விளம்பரங்கள் இன்றைய கால கட்டத்தில் மிக, மிக அதிகம், தொலைக்காட்சி விளம்பரங்கள் இந்த மனப்போக்கை முதலீடாக வைத்துத்தான் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர் என்று சொன்னால் மிகையாகாது.

அன்பு என்பது ஒரு அற்புதமான உணர்வு அது தீவிரமானதாக ஆகும்பொழுது அதனை காதல் என்றும் சொல்லலாம். இந்த அன்பு அல்லது பாசம் பரிமாற்றத்தின் மூலம் தான் புரிந்து கொள்ளப்படுகிறது. அன்னை குழந்தையிடம் கொள்ளும் அன்பு, ஆசிரியர்கள் மாணவர்களிடம் கொள்ளும் அன்பு, மனிதர்கள் மிருகங்களிடம் கொள்ளும் அன்பு, குடும்பத்தார்க்கு இடையில் ஒருவருக்கொருவரிடம் ஏற்படுகின்ற அன்பு, மனிதர்கள் கடவுளிடம் கொள்ளும் அன்பு என்பதான இறை அன்பு என பல பரிமாணங்கள் உண்டு. என்றாலும் கூட காதல் என்றவுடன் ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படுகின்ற அன்பு என்பதாக மட்டுமே பல சமயங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதுண்டு. வளர் இளம் பருவத்தினிரான ஆண் பெண் இடையே தோன்றும் இனக்கவர்ச்சி கூட பல சமயங்களில் தீவிரமான அன்பாக புரிந்து கொள்ளப்படுவதுண்டு. இவர்களுக்கிடையே ஏற்படக்கூடிய அன்பு பரிமாற்றம் உடலியல், பாலியல் ரீதியாக மாறி உடலுறவு கொள்ளுதல் என்னும் நிலையாக உருப்பெருமேயானால் அந்த அன்புறவு திருமணம் எனும் உறவாக முழுமை பெறாமல் முறிந்து விடும்போது அது பெருமளவில் பெண்களைத்தான் பாதிக்கும் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது.

அதிலும் ஆணாதிக்க சமூக அடிப்படையில் அமைந்துள்ள நம் இந்திய கலாச்சாரத்தில் இது போன்ற பாதிப்புக்குள்ளான ஆண்களை விட பெண்களுக்கு திருமண வாய்ப்பு என்பது மிகவும் அரிதாகி விடுவதாகவோ அல்லது திருமண வாழ்வுக்குப் பின் நிம்மதியற்ற வாழ்க்கையாக அமைந்துவிடவோ கூடும்.

எனவே வளர் இளம் பெண்கள் பூப்பு எய்தும் முன்னரே இது பற்றிய புரிதலை பக்குவமாக கற்றுத்தர வேண்டியது பெரியவர்களான எல்லாருடைய கடமையும், குறிப்பாக பெற்றோரின் கடமையும் ஆகும். இது படிக்கின்ற குழந்தைகள் மற்றும் பணி செய்யும் குழந்தைகள் எல்லோர்க்கும் பொருந்தக் கூடியது ஒன்றுதான், என்றாலும் பணி செய்யும் குழந்தைகளை விட பள்ளிக் குழந்தைகளிடம் இந்த காதல் வயப்படும் மனநிலை தோன்றும் போது படிப்பில் கவனம் சிதறுதல் காரணமாக தொடர்கல்வி கடுமையாக பாதிக்கப்படும்.

நம்மவர்களிடையே மனநல ஆலோசனைக்காக நிபுணர்களை கலந்து ஆலோசிக்கும் பழக்கம் மிகவும் குறைவு. அடிப்படை நிலையிலேயே இனம் கண்டு கொண்டால் மனச்சிதைவு ஏற்படும் நிலைக்கு தள்ளப்படாமல் தப்பிக்கலாம். ஆங்கில மருத்துவத்தைவிட ஹோமியோ மற்றும் மலர் மருத்துவங்களில் நல்ல குணம் பெற வாய்ப்புகள் உண்டு என்பதோடு மிகக்குறைந்த செலவிலேயே பூரண மிக்க நலம் பெறலாம்.

- மாற்று மருத்துவ இதழ்


நேரத்தை அறிவதற்கான கருவியே கடிகாரம் என்பதை அனைவரும் அறிவோம். கை மணிக்கட்டில் கட்டப்படுவது கைகடிகாரம் என்பதும் தெரிந்ததே. ஆங்கிலச் சொல்லான "WRIST" என்பது தமிழில் "மணிக்கட்டு" என வழங்குவது மிகவும் பொருத்தமன்றோ? இன்று கடிகாரம் மனித வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஓர் உறுப்பாக விளங்குகிறது என்றால் அது மிகையன்று. கடிகாரம் இன்றி, நேரம் பற்றிய உணர்வு இன்றி யாராவது இன்று வாழ இயலுமா? தவறான நேரத்தைக் காட்டும் பழுதுபட்ட கடிகாரத்தை நம்பினால், குறித்த காலத்தில் பணிக்குச் செல்ல இயலாது. பயணம் செய்ய வேண்டிய பேருந்து, ரயில், விமானம் ஆகியவற்றைத் தவற விடுவோம். எனவே கடிகாரம் காட்டும் நேரத்தை நம்பியே மனித வாழ்க்கை முறையாகச் செல்கிறது என்பதில் மிகையேதுமில்லை.

நாகரிக முதிர்ச்சியின் ஒரு கட்டமாக நேரத்தை அளவிடும் முறை மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது. மிகப் பழங்காலத்தில் சூரியனின் இயக்கத்தையும், அதன் விளைவாக நிகழும் நிழல்களின் நகர்வையும் அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டது. வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே சுமேரியர்கள் நேரத்தை அளவிட முயன்றதாகவும், இதில் முன்னோடிகளாக விளங்கியவர்கள் அவர்களே என்றும் கருதப்படுகிறது. சுமேரிய நாகரிகமே ஒரு ஆண்டை மாதங்களாகவும், மாதத்தை நாட்களாகவும், ஒரு நாளைப் பல கூறுகளாகவும் பிரித்தது என்றும் கூறப்படுகிறது.

காலப்போக்கில் அரேபியர்கள் தமது சொந்த முறைகளைக் கையாண்டு நேரத்தை அளப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். மற்றும் சூரியன் நகர்வதைப் பின்பற்றி 24 பெரிய கம்பங்களை வட்டப்பாதையில் நிறுவி, ஒளியும் நிழலும் அவற்றின் மீது விழுவதன் அடிப்படையில் எகிப்தியர்கள் நேரத்தை அளவிட்டனர். தொடர்ந்து நேரத்தை அளவிடும் முயற்சி பல்வேறு நாகரகங்கள் வாயிலாகப் பல நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டது.

அதே வேளையில் கிரேக்க நாட்டில் தண்ணீரைப் பயன்படுத்தி நேரத்தை அளவிடும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சாதனத்தில், தண்ணீர் ஒவ்வொரு துளியாக ஒரு கல் பாத்திரத்தில் விழுமாறு அமைக்கப்பட்டது. திரட்டபட்ட தண்ணிரின் அளவை அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டது. இத்தகைய முறை கி.மு 320-ல் வழக்கத்தில் இருந்து வந்தது. கிரேக்கர்களும் ரோமானியர்களும் கி.மு 300-400 காலப் பகுதியில் இத்தண்ணீர்க் கடிகாரத்தில் மாற்றங்களைப் புகுத்தி அதனை மேம்படுத்தினர்.

கி.பி 1510-ஆம் ஆண்டுப் பகுதியில் ஜெர்மன் நாட்டைச்சார்ந்த பூட்டு செய்யும் தொழிலாளியான பீட்டர் ஹென்கின் என்பவர், நேரத்தைக் காட்டும் நின்ற நிலையிலான கடிகாரம் ஒன்றை உருவாக்கினார். பின்னர் 1656-ஆம் ஆண்டு வாக்கில் டச்சு நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர் ஹியூஜன்ஸ் என்பவர் ஊசல் (PENDULUM) அசைவில் இயங்கும் கடிகாரம் ஒன்றை உருவாக்கி நேரத்தை அளவிடும் முயற்சியில் வெற்றி பெற்றார். இவர் ஒரு நாளை 24 மணிகளாகவும், ஒரு மணியை 60 நிமிடங்களாகவும், ஒரு நிமிடத்தை 60 நொடிகளாகவும் பாகுபாடு செய்தார். புதிய முறைகளைப் பயன்படுத்திக் கடிகாரத்தையும் மேம்படுத்தினார். இப்போதுள்ள கடிகாரங்களெல்லாம் இதன் முன்னேறிய வடிவங்களேயாகும். துவக்கத்தில் இந்தக் கடிகாரத்தின் பகுதிகளெல்லாம் மரத்தில் செய்யப்பட்டவைகளாகவே இருந்தன. பின்னாளில் இப்பகுதிகள் உலோகத்தாலும், கண்ணாடியாலும் செய்யப்பட்டன. கி.பி 1927-ல் கனடா நாட்டுத் தொலைத்தொடர்புத் துறையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் வாரன் மோரிசன் என்பவரால் கண்ணாடியால் ஆன கடிகாரம் ஒன்று உருவாக்கப்பட்டது. இது மிகக் குறைந்த காலத்திலேயே பெரிய வரவேற்பைப்பெற்றது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கம்வரை, ஊசல்களைப் பயன்படுத்தி இயங்கும் கடிகாரங்களே பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. சமச்சீராக அசையும் ஊசல், கடிகாரத்தின் இரு முட்களை இயக்கிச் சரியான நேரத்தைக் காட்டுவதற்குப் பயன்பட்டது. இவ்வகைக் கடிகாரங்களை இன்றும் ஆங்காங்கே காணலாம். ஆனால் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், ஊசல் கடிகாரங்கள் மாற்றமடைந்தன. அலெக்சாண்டர் பெயின் என்பவர் 1840-ஆம் ஆண்டில் பாட்டரி (BATTERY) என்னும் மின்கலத்தைப் பயன்படுத்தி இயங்கும் கடிகாரத்தைக் கண்டுபிடித்தார். பின்னர் பல அறிவியல் அறிஞர்கள் இவ்வகைக் கடிகாரத்தை மேம்படுத்தினர். பெரிய மின்கலங்களுக்குப் பதிலாகச் சின்னஞ்சிறு மின்கலங்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் எனப்படும் எச்.எம்.டி. தொழிலகம் இந்தியாவின் பழைய கடிகாரத் தொழிற்சாலைகளுள் ஒன்றாகும். இத்தொழிலகம் கடிகாரங்களைத் தயாரிப்பதற்கு முன்பு பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட கடிகாரங்களே நம் நாட்டில் பயன்படுத்தப் பட்டன. தற்போது இந்தியாவில் டைட்டான், டைமெக்ஸ், சிட்டிசன் போன்ற பல கம்பெனிகள் கடிகாரத் தயாரிப்பில் ஈடுபட்டு உலகத் தரத்திற்குக் கடிகாரங்களைத் தயாரித்து வருகின்றன.

- டாக்டர்.விஜயராகவன்

நிலச்சாரல்