"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619

காபாவைச் சுற்றி மக்கா மஸ்ஜித் விரிவாக்கம்!



ஜித்தா: மக்காவிலிருக்கும் இறையில்லமான மஸ்ஜித்-அல்-ஹராம் பள்ளி மேலதிகமாக ஐந்து இலட்சம் பேர் தொழ வசதியாக இருக்கும் படி விரிவாக்கப்படும் எனத் தெரிகிறது.

மக்காவிலுள்ள மஸ்ஜித்-அல்-ஹராம் பள்ளியின் புதிய விரிவாக்கத் திட்டத்திற்கு, இரு புனிதப் பள்ளிகளின் பணியாளரும் சவூதியின் அரசருமான மன்னர் அப்துல்லாஹ் ஆணையிட்டுள்ளார். இதன் மூலம் தற்போது மக்காவில் வழிபடுபவர்களைவிட மேலும் ஐந்து இலட்சம் முஸ்லிம்கள் தங்கி வழிபட வசதியானதாக இருக்கும் என்று மக்காவின் நகரத்தந்தை உஸாமா அல்-பர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

"இது மக்காவின் புனிதப் பள்ளியின் மிகப் பெரும் மேம்பாட்டுத் திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டத்தில் மக்கா பள்ளியின் முகப்புத் தோற்றத்தையும் மாற்றக் கூடிய திட்டமும் அடங்கும் என்று அல்-பர் கூறினார். இந்த விரிவாக்கம் மூலம் பள்ளியின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் மேலதிகமான முஸ்லிம்கள் தொழ அதிகமான இடவசதி கிடைக்கும் என்றும் கூறினார்.

மன்னர் அப்துல்லாஹ் சென்ற சனிக்கிழமை இந்த விரிவாக்கப் பணிக்காக ஆணை பிறப்பித்தார். நகராட்சி மற்றும் ஊரகத்துறை அமைச்சர் இளவரசர் மிதேப், இத்திட்டத்தில் நடைபாதை சுரங்கங்கள் மற்றும் சேவை நிலையங்களும் இருக்கும் என்று கூறினார்.

இந்த அரசாணை மக்கா பெரிய பள்ளியின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதியில் உள்ள 3 இலட்சம் சதுர மீட்டர் நிலங்களைக் கையகப்படுத்தும் உத்தரவையும் உள்ளடக்கியுள்ளது. இதற்கென்று அமைக்கப்பட்ட விசேஷ குழுக்கள் இந்த நிலங்களின் விலை மதிப்பீடு செய்யத் துவங்கியுள்ளன என்றும் மிதேப் கூறினார்.

மஸ்ஜிதைச் சுற்றியுள்ள சுமார் 1000 சொத்துக்கள் இந்த விரிவாக்கத் திட்டப்பணிக்காக இடிக்கப்பட்டு, கட்டுமானம் விரைவில் துவங்கும். இதற்காக 6 பில்லியன் சவூதி ரியால்கள் ஈட்டுத்தொகையாக அரசு ஒதுக்கியுள்ளது. இப்பணி புதிய திட்டத்தினை துவக்க இயலும் விதமாக 60 நாட்களுக்குள் முடிக்கப்படும்.

"புதிய சுரங்க நடைபாதைகள் மூலம் பள்ளிவளாகத்தின் வடக்குப் பகுதியை இணைக்கும் கட்டுமானப் பணிகளும் இத்திட்டத்தின் ஓர் அங்கமாக இருக்கும்" என்றும் அவர் மேலும் கூறினார்.

இப்புனிதப் பள்ளியின் முதல் பெரிய விரிவாக்கப்பணி 1925ல் சவூதி அரேபியாவை நிறுவிய மன்னர் அப்துல் அஜீஸின் உத்தரவின் படி நிறைவேற்றப்பட்டது. 1989ல் அப்போதைய சவூதி மன்னர் ஃபஹத், மஸ்ஜித்-அல்-ஹராமின் மாபெரும் விரிவாக்கத்தைச் செயல்படுத்தி 1,52,000 சதுர மீட்டர் பரப்பளவிலிருந்த தொழும் இடத்தை 3,56,000 சதுர மீட்டராக அதிகரிக்கச்செய்தார்.

பள்ளியின் சுற்றுப்புற வளாகம் 40 ஆயிரம் சதுர மீட்டர்களுக்கும் அதிகமாகும் என்றும் இதில் ஒரு இலட்சம் மக்கள் வழிபட வசதியிருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.

ஷூரா எனும் ஆலோசனைக் குழு மேலதிகமான நிதி ஒதுக்கீடு மூலம் இரு புனிதபள்ளிகளின் தலைமைக்கு உதவி, அதன் மூலம் மேலும் சிறப்பான சேவைகளை புனித உம்ரா மற்றும் ஹஜ் காலத்தில் இப்பள்ளிக்கு வரும் ஹாஜிகளுக்கும் பயணிகளுக்கும் வழங்கவும் மேலும் இவ்வகையில் பயனுள்ள அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளவும் பரிந்துரைத்துள்ளது.

மேலும் மஸ்ஜிதின் மாடி மற்றும் சுற்றுப்புற வளாகங்களில் நிழற்குடைகள் நிறுவவேண்டி ஆய்வுகளை மேற்கொள்ளவும், பள்ளியின் வடக்குப் பகுதியில் நகரும் மின்படிகளை மேற்கூரை வளாகம் வரை நிறுவி வழிபட வந்துள்ளவர்கள் கூட்ட நெரிசல் வேளையில் சிரமம் குறையும் முகமாக இவற்றைச் செயல்படுத்தவும் இக்குழு பரிந்துரைத்துள்ளது.

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=739&Itemid=192