"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619



கணவன் மனைவி எனும் பந்தம் உறுதியாக நல்லவிதமாக இருந்தால்தான் பிள்ளைகளை நல்ல படியாக வளர்க்க முடியும்.

சில வீடுகளில் ஆடு பகை குட்டி உறவு என்ற ரீதியில் இருப்பார்கள்.

கணவன் மனைவிக்கு இடையே பெரும் மோதல் இருக்கும். அதனால் பிள்ளை மட்டும் தங்கள் விருப்பப்படி இருக்க வேண்டும், அதாவது எனது பிள்ளைதான் என்று சொல்வதில் பெருமை.

சில தகப்பன்கள் பிள்ளையின் எதிரேயே மனைவியை திட்டுவது, அடிப்பது, சண்டையிடுவது ஆகியவற்றை செய்வார்கள். மிக கீழ்த்தரமான வார்த்தைகளையும் சிலர் ப்ரயோகிப்பார்கள். இது பிள்ளையின் மனதில் தாயின் மரியாதையை குறைத்து விடும்.

மேலும் ஒரு படி மேலே போய் சில தகப்பன்கள் பிள்ளைகளை ஒற்றனைப் போல் வைத்திருப்பார்கள். அதாவது,” நான் இல்லாத போது அம்மா என்ன செய்யறான்னு” எனக்கு சொல்லணும். சொன்னா நான் சாக்லேட் வாங்கித் தருவேன். என்று சொல்வார்கள். இது மிக மிகத் தவறு.

இப்படி பட்ட மனநிலையில் வரும் பிள்ளையின் எதிர் காலம் என்னவாகும்.

மனைவியும் சில தவறுகளைச் செய்கிறாள். பிள்ளையின் மீது இருக்கும் பாசத்தினால் சில சமயங்களில் பிள்ளையை காக்க தகப்பனிடம் சில விடயங்களை சொல்லாமல் இருந்து விடுவாள்.

”அம்மாவுக்குத் தெரியும். அம்மா திட்ட மாட்டாங்க. அப்பா கிட்ட சொன்னா தோல உரிச்சிடுவாருன்னு அம்மா அப்பா கிட்டயும் சொல்ல மாட்டாங்கன்னு” சொல்லும் பிள்ளை நல்லதாக வளர்க்கப்பட்ட பிள்ளையல்ல”.

சில பெண்கள் பிள்ளையிடன் கடைக்குச் செல்லும் போது, கணவன் திட்டுவார் என்று தெரிந்தும் ஒரு பொருள் தான் ஆசைப் பட்டதை வாங்கியிருப்பார். பிள்ளை போய் போட்டுகொடுத்துவிட்டால்!!

“இந்தா இந்த சாக்லேட் வெச்சுக்கோ. அப்பா கிட்ட இதெல்லாம் சொல்லக்கூடாது!” என்று சொன்னால் நாளை அந்தக் குழந்தை நீ செஞ்சதை நான் சொல்லவில்லை, நான் செய்வதை நீயும் சொல்லாதே” என்று பிளாக் மெயில் செய்ய ஏதுவாகும்.

மற்ற விடயத்தில் எப்படியோ? கணவன் மனைவி இருவரும் பிள்ளை வளர்ப்பு விடயத்தில் ஒத்த கருத்து உடையவர்களாக இருந்தால் தான் வளரும் தலைமுறை நல்ல குடிமகன்களாக, அன்னை தந்தையின் பால் மரியாதை, பாசம் கொண்ட தலைமுறையாக உருவாகும்.

உனக்கு அம்மாவை பிடிக்குமா? அப்பாவை பிடிக்குமா என்கின்ற கேள்வியே தவறு. அம்மா, அப்பா இல்லாமல் பிள்ளை இல்லை. ஆகவே இருவரும் ஒன்று எனும் எண்ணம் பிள்ளைக்கு வரவேண்டும்.

அம்மாவுக்கு தெரியாமல் அப்பாவிடம் பர்மிஷன் வாங்கிக்கொள்ளலாம் என்றோ அப்பாவுக்கு தெரியாமல் அம்மாவிடம் சொல்லிவிட்டு சென்றுவிடலாம் என்றோ குழந்தை நடந்துகொள்கிறது என்றால் இருவரும் சேர்ந்து சரியாக வளர்க்க வில்லை என்பது தான் பொருள்.

http://parentsclub08.blogspot.com/2008/08/blog-post_28.html