"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619




சுற்றுச்சூழல் மாசுபடுவதே பூமி வெப்பமடைய முக்கிய காரணம். மனித செயல்பாடுகளால் வெளியிடப்படும் கார்பன் டைஆக்சைடு, மீதேன் போன்ற வாயுக்களே சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. பூமி வெப்பமடைவதால் மனிதகுலத்தின் வாழ்வுரிமை கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. இதைத் தடுத்து சுற்றுச்சூழலை காக்க நாம் வாழும் இடத்தில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

பூமியின் பாதுகாப்புக்கும் சுற்றுச்சூழலுக்கும் முக்கிய அச்சுறுத்தலாக இருப்பது பல்கிப் பெருகி வரும் குப்பைகளே. தெருவில் அனைவரது கண்களில் தென்படும் குப்பை பிளாஸ்டிக் கேரி பேக் மற்றும் பிளாஸ்டிக் கவர். எளிதாகவும், கையாளுவதற்கு வசதியாகவும் இருப்பதால் இன்றைய தலைமுறையினரது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே பிளாஸ்டிக் கேரி பேக் மாறிவிட்டது.

இப்படி பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை நாம் முறையாக அப்புறப்படுத்துகிறோமா? இல்லை. மாறாக, பூமிக்கு கேடுவிளைவிக்கும் வகையில் தெருவில் வீசுகிறோம்.

பாலிதீன் எனப்படும் வேதிப்பொருளால் உருவாக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் குப்பைகளுடன் சேர்த்து எரிக்கப்படும்போது, பைகளில் உள்ள சாயத்தால் காற்று மண்டலம் மாசுபடுகிறது. பல்வேறு சுவாச நோய்களை தோற்றுவிக்கிறது.

பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவுப் பொருட்களை வாங்கிச் செல்லும்போது, பிளாஸ்டிக் சூடாகி வேதியியல் மாற்றங்களால் ஹைட்ரோகார்பன் மற்றும் பியூரான் போன்ற நச்சு வாயுக்கள் உணவில் கலந்து விடுகின்றன. அந்த உணவை உண்பவர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படுகிறது.

குப்பை கழிவுகளுடன் மண்ணில் பிளாஸ்டிக் பைகளை புதைப்பதால், அவை நெடுங்காலத்துக்கு மண்ணில் மக்கிப்போகாமல் தாவரங்களின் வேர்கள் ஊடுருவ முடியாமலும், மழைநீர் மண்ணுக்குள் செல்வதைத் தடுக்கவும் செய்வதால் நிலத்தடி நீர்மட்டம் குறைய காரணமாக அமைகின்றன.

பிளாஸ்டிக் பைகளில் உள்ள உணவுப் பொருட்களை கால்நடைகள் உட்கொள்ளும்போது, கால்நடைகளின் உணவுக்குழல் அடைபட்டு அவை இறந்து போகின்றன. சில உயிரினங்கள் பேப்பர் என்று நினைத்துக் கொண்டு தவறுதலாக பிளாஸ்டிக் பைகளை உண்டுவிடுகின்றன. யானைகள், மாடுகள் இப்படி இறந்து போகும் நிகழ்வுகள் நிறைய பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனவே பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கப் பழகுவோம். மற்ற நண்பர்கள், உறவினர்களுக்கும் இச்செய்தியை எடுத்துச் சொல்வோம். அவசரத் தேவைக்கு ஒன்றிரண்டு முறை பிளாஸ்டிக் பையை பயன்படுத்தினால், அந்த பிளாஸ்டிக் பொருட்களை குப்பையோடு குப்பையாகப் போடாமல், சேமித்து மறுசுழற்சிக்கு அனுப்புவோம்.

துணிப்பைகள், சணல்பைகள், பழைய துணிகளால் தைக்கப்பட்ட பைகள், விழாக்களில் கொடுக்கப்படும் மஞ்சள் பைகளை பயன்படுத்துவோம்.

http://www.poovulagu.org/plastic.htm

மன அழுத்தம் (Stress) என்றால் என்ன?
மன அழுத்தம் என்பது வாழ்வில் மிகச் சாதாரணமானது. பெரும்பாலான மக்கள் சில சமயங்களில் மன அழுத்தத்தை உணர்வார்கள். பல்வேறு வழிகளில் மன அழுத்தம் வர வாய்ப்புள்ளது. பணி, பள்ளி, குடும்பம், உறவுகள், உடல்நலன் மற்றம் பல்வேறு வாழ்க்கை செயற்பாடுகளில் மன அழுத்தம் தோன்றுவதை நாம் உணரலாம்.

குடும்பச் சிக்கல்கள்
மனைவி, குடும்ப உறுப்பினர், வாழ்க்கை துணைவர் இவர்களின் உறவுச் சிக்கல்களால் சாதாரணமாக மனஅழுத்தம் ஏற்படும். மணமுடித்தல், புது மணைபுகுதல், நோய்வாய்ப்பட்ட குடும்ப உறுப்பினரைப் பேணுதல், குழந்தை பெறுதல் முதலானவை மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடும்.

பணிச் வேலைச் சிக்கல்
குறைவான நேரத்தில் பல்வேறு பணிகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் நேரிடலாம். இதனாலும் மன அழுத்தம் ஏற்படும். உங்கள் பணியையோ அல்லது உடன் பணி புரிபவர்களை விரும்ப முடியாமற் போவதும் மன அழுத்தம் ஏற்படுத்தும், புது பணியைத் தொடங்குவதும் செலவினங்களை குறைக்க வேண்டி வருவதும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

உடற்சிக்கல்கள்
அடிபடுதல், உடற்பிணி உங்களைக் கவலைக்குள் ஆழ்த்தி மன அழுத்தத்தை ஏற்படுத்தும், சரியாக உறங்க முடியாமை, உங்கள் மன ஒருமைப்பாட்டைப் பாதித்து சாதாரண சிக்கல்களைக் கூட சந்திக்க முடியாமற் செய்யும். இதுவும் மிகுந்த மன அழுத்தத்தைத் தரும்.

நல்ல மன அழுத்தம், தீய மன அழுத்தமும்

நல்ல மன அழுத்தம் உங்களை கடினமாக உழைக்கவும், செயல்களைச் செம்மையாகச் செய்யவும் வழிவகுக்கும் நம் ஒவ்வொருக்கும் சிறப்பாகப் பணிபுரிய சிறிதளவு மன அழுத்தம் தேவை என்றாலும் அது குறைந்த அளவில் நம் கட்டு பாட்டுக்குள் இருக்க வேண்டும். தீய மன அபத்தம் அல்லது அளவுக்கதிகமான மன அபத்தம் ஒரு மனிதனிடம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி உடலில் அல்லது உணர்ச்சியின் அறிகுறிகளாக வெளிபடும். இதனால் மனிதனை அளவுக்கதிகமாக மது பானங்களைக் குடிக்கவும், உலகை மறக்க வைக்கும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகவும் தூண்டும்!

தீவிர மன அழுத்ததால் உடலில் நோய் சமாளிப்பு ஆற்றல் அழிந்து போகும். தீவிர இதயநோய், உயர் இரத்த அழுத்தம் முதலான உடல் நலக் குறைகளும் சோர்வு, ஏக்கம், கவலை போன்ற மனச் சிக்கல்களும் அம்மனிதனை வந்தடையும். மன அழுத்தத்தைக் கட்டுப் படுத்திக் கொகள்ள பழுழவது உங்களை மகிழ்ச்சியாக வாழ வைக்கும்.

மன அழுத்தத்தின் அறிகுறிகளும் அடையாளங்களும்

1. உடல் அறிகுறிகள்:

அடிக்கடி தலைவலி வருதல்
மயக்கம், தலைச்சுற்றல்
காதில் தொடர்ந்து ரீங்கார ஒலி கேட்டல்
உடல் நடுக்கம்
மார்பில் எரிச்சல், உலைச்சல்
பேதியாதல் அல்லது மலச்சிக்கல்.

2. மனம் அல்லது உணர்ச்சி அறிகுறிகள்:

உறக்கம் வராமை
கவலை அல்லது அச்சம்
சோர்வு அல்லது தாழ்வு மனப்பான்மை
'ஓ' வென அழ வேண்டுமென்ற உணர்வு
முன்கோபம் எடுக்க முடியாமை
நிற்னையம் எடுக்க முடியாமை
சிக்கல்களுக்கிடையே சிந்திக்க முடியாமை
சிக்கல்களை தீர்க்க இயலாமை

மன அழுத்தம் சிக்கல்களைத் தூண்டும்

1. மனக் கவலைக் கோளாறுகள்:

உயர் இரத்த அழுத்தம்
இதயவலி
செரிப்பு கடற்புண் நோய்
தோல் வெடிப்பு, தோற் கட்டிகள்
மன உலைவு, தலைவலி, கடுமையான ஒற்றைத் தலைவலி
குடல் எரிச்சல்

2. சிறிய மனநிலை நோய்க் கோளாறுகள்:

கவலையில் மூழ்கல்
மனநிலை தடுமாற்றம்
தன் உடல்நலன் பற்றி அளவுக்கதிகமாக கவலையுறுதல்
உணர்ச்சியில், சமூக வாழ்வில் தடுமாறுதல்

மன அழுத்தத்தை அடக்கியாள சில வழி முறைகள்

வாழ்வில் மன அபத்தம் ஒரு பகுதியாதலால் அதை நம்மால் முற்றிலும் விலக்கிவிட முடியாது. எனினும் அதை நாம் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி, அடக்கியாண்டால் நாம் மனம் மற்றம் உடல் நலத்துடன் இருப்போம். அதற்கு இரண்டு வழிகள் உள்ளன.

1. உங்கள் விழிப்புணர்வின் அளவை அதிகரித்தல்

உங்கள் உடல் உணரும் மன அழுத்தத்தின் அளவையும், மன அபத்தத்தைக் கொணரும் நிகழ்வுகளின் தன்மையையும் விழிப்புடன் கவனியுங்கள். நாள் முழுதுமான உங்கள் மன அழுத்தத்தை ஆராய்ந்து பாருங்கள். அச்சமயங்களில் நீங்கள் உணரும் மன அபத்த அளவை நீங்களே பத்துப் புள்ளி அட்டவணையில் பதிவு செய்யுங்கள். இதைச் செய்ய உங்கள் உடலை கூர்ந்து கவனியுங்கள். உங்கள் தசைகள் இறுகுகின்றனவா? இதயம் சரிவர துடிக்கிறதா? உங்கள் கைகளில் வேர்த்து கொட்டுகிறதா? குளிர்ந்து போகிறதா? உங்களால் வழக்கம்போல மனதை ஒருமுகப் படுத்த இயலுகிறதா? என்று பாருங்கள்.

உங்கள் மன அழுத்தத்தின் அளவை சரிவர கணக்கிடுவதில் தேர்ச்சி பெற்ற பின்னர் உங்கள் மன அழுத்தத்தைத் தூண்டும் மக்கள், பொருட்கள், நிகழ்வுகள் பற்றி வர்ந்தாராயுங்கள். இவற்றையும் பத்துப்புள்ளி அட்டவணையில் நீங்களே பதிவு செய்யுங்கள். உதாரணமாக உங்களின் நெருங்கிய நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது உங்கள் பணி உங்கள் மன அழுத்தத்தின் அளவை தீடீரென உயர்துவன நீங்கள் உணரக்கூடும். அச்சூழ்நிலையில் அவ்வாறு உங்கள் மன அழுத்ததினை தூண்டுபவர்களை தவிர்ப்பதற்கும், அல்லது அவர்களோடு மிக இயல்பாக நடந்து கொகள்வதற்கும் பழகிக் கொள்ள வேண்டும்.

2. உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க ஆக்கப் பூர்வமான செயல்களில் ஈடுபடுதல்:

A). அமைதியுடன் இருக்க பழகுதல்:-
உடலும் மனமும் ஓய்வு கொள்ளவும், புத்துணர்வைப் பெறவும் இடையிடையே நாம் ஓய்வு கொள்ளல் மிகவும் இன்றியமையாதது. இசையைக் கேட்பது, விளையாடுவது, நடப்பது, அதிக நேரம் குளிப்பது முதலான உங்களுக்கு விருப்பமான, நன்கு அனுபவிக்கும் செயல்களில் ஈடுபட நேரத்தை ஒதுக்குங்கள். மன உளைவு, தளர்ச்சியடையும் நேரங்களில் வழக்கமான செயற்பாடுகளிலிருந்து நீங்கி புது செயல்களில் ஈடுபடுவது உங்களுக்கு உதவும். சிலரோ சிறு இடைவெளியை எடுப்பது பயனுள்ளது என்று கருத, வேறு சிலர் தொடர்ந்து நீண்ட விடுப்பை எடுத்துக் கொள்வது பயனுள்ளது என்று நினைக்கின்றனர். ஓய்வான பொழுதுபோக்கு, ஆழ்ந்த சுவாசப் பயிற்சி உங்களுக்கப் பயனளிக்கக் கூடும். படிப்படியாக உடற்தசைக்கு ஓய்வு தருதல், தியானம், யோகாசனம், உடற்பயிற்சிகள், உடலை வருடி விடுதல், காட்சி உருவகங்கள் முதலான பலவகை பொழுது போக்கு நுட்பங்கள் உள்ளன. அங்காடிகளில் இதுபோன்ற ஓய்வுப் பொழுது போக்குகளுக்கான ஒலி நாடாக்கள் கிடைக்கும். அவற்றை வாங்கிப் பயனடையுங்கள்.

B). உடற்பயிற்சிகள்:-
உடற்பயிற்சிகள் உங்கள் மன அழுத்ததினைக் குறைக்கவும், சுயமதிப்பை வளர்க்கவும் உதவும். அவை உங்கள் நோய் தடுப்பாற்றலை முறையாகச் சீராக்குவதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் முக்கிய பங்காற்றும். நல்ல உடல் நலன், அதிக ஆற்றல், உறக்கத்தை அதிகரித்தல், நல்ல மன ஒருமைப்பாடு, இதயத்தடை ஏற்படும் அபாயத்தை குறைத்தல், மனமகிழ்ச்சியுணர்வு அதிகரித்தல், தன் மதிப்பு உயர்தல் முதலியவற்றோடு உடற் பயிற்சிக்குத் தொடர்புள்ளது. உடற் பயிற்சி கடுமையாக இருக்கத் தேவையில்லை. கடுமையான மெது ஓட்டத்தைப் போலவே நாள் தோறும் 20-30 நிமிடங்கள் வேகமாக நடப்பது பயனுள்ளது. அது மன அழுத்தத்தைக் குறைக்கும் வாய்ப்புள்ளது.

இவ்வாறே நல்ல சீரான உணவு உண்பதும் உங்கள் உடல் நலனைப் பேணும். அளவுக்கதிகமாக உண்ணுவதும் அதிக அளவில் மதுபானங்களை அருந்துவதும், புகை பிடிப்பதும் உங்கள் உடல் அழுத்தத்தை அதிகரிக்கும்.

C). எல்லைகளை வகுத்துக் கொள்ளல்
நாம் செய்ய முடிந்ததைக் காட்டிலும் அளவுக்கதிகமாக செய்ய நேரிடும்போது மன அழுத்தம் ஏற்படுகிறது. வாழ்வில் அடைய வேண்டியவற்றை நாம் அளவுக்கதிகமாக எதிர் பார்க்கிறோம். துரதிருஷ்டவசமாக இதுவே நமது மனஅழுத்தத்தை அதிகரிக்கும் முதற் காரணமாகிறது. இது நமது வாழ்வில் எவை உண்மையில் இன்றியமையாதவை, நமது உண்மையான தேவைகள், விருப்பங்களை மதிப்பீடு செய்து பார்ப்பதில் பெரிதும் உதவும்.

எங்களுக்கு இயழுமோ அங்கெல்லாம், ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் நீங்கள் அடைய விரும்பும் வாழ்க்கை மாற்றங்களின் எண்ணிக்கையை குறைக்க முயல வேண்டும். உதாரணமாக நீங்கள் திருமணம் செய்து கொள்வது, ஒரு வீட்டை வாங்குவது, வீட்டைப் புதுப்பிப்பது, குழந்தையைப் பெறுவது, வேற பணியில் சேருவது இவையனைத்தையும் ஒரே ஆண்டில் செய்வத உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும்.

D). திறமையான கருத்துப் பரிமாற்றம் :-
நாம் உடன்படவும் உதவவும் விரும்புவதால் சில நேரங்களில் கண்டிப்புடன் இருப்பது கடினமே. நாம் பிறர் வேண்டுகோளை மறுக்க இயலாததையும் உணரலாம். இதனால் நாம் திணறலாம். நமது உடன்பாட்டு மனப்பான்மையால் சிக்கல்களில் சிக்கிக் கொள்வதையும் அறிகிறோம். இதன் விளைவாக நாம் கோபத்துக்கும் உதவி செய்ய இயலாமைக்கும் ஆளாவதை உணரலாம். நாம் நம் உடல் நலனை நம் நன்மையைப் பேண விரும்பினால் 'இல்லை' என்று கூறப் பழகுவது மிகவும் இன்றியமையாதது.

ஒரு வேண்டுகோளை மறப்பதற்கு கீழ்க்கண்டவை உதவும்.

வேண்டுகோள் விடுப்போனின் வேண்டுகோளை எற்பது
மறப்பதற்கான உங்கள் காரணங்களைக் கூறுவது
திடமாக 'இல்லை' என்று மறுப்பது.
உதாரணமாக " இன்றிரவு நீங்கள் சில பணிகளை நான் உங்களுக்குச் செய்ய வேண்டுமென விரும்புவரை அறிகிறேன், (அவரது வேண்டுகோலை அவருக்கே திருப்பிச் சொல்லலாம்) எனக்கு அவ்வாறு செய்ய விருப்பமே என்றாலும் இன்று இரவு என் குடும்பத்தில் வேறு சில திட்டங்கள் எற்கனவே வகுத்து விட்டோம் (காரணங்களைக் கூறல்) எனவே உங்களுக்கு உதவி செய்ய முடியாத நிலையில் உள்ளேன்."(முடியாது என்று கூறுதல்)"

இவ்வாறு நீங்கள் மறுத்துக்கூறுவதற்கு முன்னர், உங்களுடைய முடிவான பதிலை வீட்டில் கண்ணாடியின் முன் நின்று கூறிப்பழக வேண்டும். உங்கள் உடல்மொழி இதில் முக்கிய பங்காற்றும். நேராக அமர்ந்தோ, நின்றோ, நெஞ்சை நிமிர்த்தி, கண்களோடு கண்கள் இணைத்து மென்மையான. ஆனால் உறுதியான குரலில் பேச வேண்டும்.

E). காலத்தைச் சரியாக கையாளுதல்
நேரம் போதாமையால் அடிக்கடி நீங்கள் மன அழுத்தத்தை உணர்வீர்கள். விரிவாக காலத்தைக் கையாளும் திட்டங்களை விளக்க முடியாமற் போனாலும் சில பொதுவான முறைகள் கீழே தரப்பட்டுள்ளன. இலக்குகளை முடிவெடுத்து முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்துதல்.

'இதைச் செய்' என்ற பட்டியலை வைத்திருக்க வேண்டும்.
உங்கள் இலக்குகளையும், செய்கைகளையும் முன்னுரிமைப்படுத்தி முக்கியமானவற்றை முதலில் செய்ய வேண்டும்.
ஒரு மணி நேரம் திட்டமிடல் 3-4 மணி நேரப் பணி மீதப்படுத்துமாதலால் செய்முறை படுத்துவதற்கு முன்னர் நன்கு திட்டமிட வேண்டும்.
நீங்கள் ஆக்கபூர்வமான மனநிலையில் உள்ள நேரத்தில் உங்கள் பெரும்பாலான செயல்களைச் செய்யவேண்டும். உதாரணமாக, சிலர் மதிய நேரங்களைக் காட்டிலும் காலை நேரங்களில் அதிகமாகப் பணியாற்றுவார்கள். அத்தகு செயலாக்க நேரங்களில் விருந்தாளிகள், தொலைபேசி பேச்சு முதலியவற்றைக்குறைத்துக்கொள்ள வேண்டும்.
உங்களுடைய தொலைபேசி பேச்சுக்களை ஒரே நேரத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
உங்களுடைய செயல்களில் சிலவற்றைப் பிறருக்கு ஒப்படைககப் பழக வேண்டும்.
இடைநிறுத்தவும், ஓய்வு கொள்ளவும் குறிப்பிட்டு நேரத்தை ஒதுக்க வேண்டும்.

F). எதிர்மறை எண்ணங்களை ஆராய்ந்து தடுங்கள்
நமக்கு நாமே பேசிக்கொள்வது நமது எண்ணங்களையும் மனநிலையையும் பாதிக்கும். எதிர்மறை எண்ணங்களில் ஈடுபடுபவர்கள் வெகு எளிதில் கவலைக்கும் சோர்வுக்கும் ஆளாவார்கள்.

உதாரணமாக இரண்டு மனிதர்கள் தத்தமது அலுவலகங்களுக்குள் வருகிறார்கள். அவர்களது முதலாளிகள் அவர்களைக் கோபத்துடன் பார்க்கிறார்கள். ஒருவர் உடனே குற்ற உணர்வுடன் தனக்குத்தானே "நான் நேற்று ஏதோ தவறு செய்திருப்போம் போலுள்ளது" என்று கூறிக்கொள்கிறார். அவர் அதைப் பற்றியே கவலைப்படத்தொடங்கி பணியில் சரிவர ஈடுபட முடியாமற் போகிறார். மற்றவரோ அந்தச் சூழ்நிலையைப் புறக்கணித்துவிட்டு பணியில் ஈடுபடத்தொடங்குகிறார். அவர் தனக்குள்தானே, "இன்று காலையில் முதலாளி ஏதோ கெட்ட மனநிலையில் உள்ளார் போலுள்ளது. ஏதோ ஒன்னு அவர் மனதைப் பாதிததிருக்க வேண்டும். அவர் மகிழ்ச்சியுமாறு நான் என்னவாவது செய்ய முடியுமா? என்று கூறிக்கொள்கிறார். இருவர் இருந்தது ஒரே சூழ்நிலை ஆனால் அவர்களது எண்ணங்களும், செயல்களும் முற்றிலும் மாறானவை.

மன அழுத்தத்தை உண்டு பண்ணும் கீழ்க்கண்ட சிலவகை எண்ணங்களைத் தவிருங்கள்:
மன ஆய்வு (Mind Reading ) உதாரணமாக "எனது கணவர் என் சமையலை வெறுக்கிறார் என்று நினைக்கிறேன்."
சோதிடம் கூறுதல், உதாரணம் "இந்தத்திட்டம் உறுதியாகத் தோல்வியுறும் பாருங்கள்".
தீய விளைவுகள் வருமென அளவுக்கதிகமாக அச்சமுறுதல் உதாரணம்: "இந்தத் தவற்றுக்காக நான் நிச்சயமாக திட்டப்படுவேன்.
நிலை தடுமாற்றமுறுதல் உதாரணம் : " இதற்கு பிறகு நான் எப்போதும் யாரையும் எதிர்கொள்ள முடியாமற் போவேன்.
அதிகம் பொதுமைபடுத்தல் உதாரணம்: ஒவ்வொருவரும் இனி என்னை தாழ்வாக நோக்குவார்கள்
"shoulds, oughts and musts" உதாரணம்: நான் எதைச் செய்தாலும் அது திறமையானதாக இருந்து தீரவேண்டும்.
திறம்பட செய்வேன் எண்ணம் உதாரணம்:நான் ஒன்று இதைத் திறமையுடன் செய்து தீரவேண்டும் அல்லது செய்யவே முயற்சி எடுக்காதிருக்க வேண்டும்.

G). சமூக துணை:
பெரும்பாலான மக்கள், தாம் மனமுடையயும்போது தமது வேதனைகளைப் பிறருக்கு எடுத்துரைப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறார்கள். முயற்சி செய்து நல்ல, தீர்ப்பு ஏதும் கூறூத கேட்பவரை அடையாளங்களை காணுங்கள். உதாரணமாக உங்களுக்கு நம்பிக்கைக்குரிய குடும்ப உறுப்பினர், அல்லது நெருங்கிய நண்பர், அல்லது நீங்கள் நம்பும், எளிமையாகப் பழகும் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். நன்கு கேட்போரிடம் மனத்திறந்து பேசுதல் ஒருவரது சிக்கலின் உண்மைநிலையை, இயல்புருவைக்காண உதவும் மனதிலேயே புதைத்து வைத்து குமுறும் விசயங்களை பிறருக்கு எடுத்துரைப்பதே மன அழுத்தத்தைப் பெருமளவில் குறைக்கும்.

நாம் எப்போது உதவியை நாடவேண்டும்?

உங்களுக்கு ஆழ்ந்த மன அழுத்தம் ஏற்படும்போதும் எதிர்வரும் மன அழுத்தத்தை எதிர்கொள்ள முடியாமற் போகும்போதும் தொழில்ரீதியான கருத்துரைப்போர்களைக் கலந்து சிந்திப்பது மிகவும் அறிவுபூர்வமானது. மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்திச் சீராக்கும் நுட்பங்களை நீங்கள் கற்றுக்கொள்ளலாம். சில சமயங்களில் சில அறிகுறிகளைத் தனிக்க மருந்துகளும் தேவைப்படலாம். மென்மையான சோர்வையகற்றும் மயக்கப்பொருட்கள் அம்மருந்துகளில் அடங்கியிருக்கலாம். உங்கள் மருத்துவர் அத்தகைய மருந்துகள் உங்களுக்குத் தேவைப்படும் என்றால் பரிந்துரைப்பார்

http://www.cgh.com.sg/library/tamil_mental_stress.asp


றுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம். எல்லா துறையிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது. இதுவே மன அழுத்தத்தைக் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது.

சக மனிதன் மீதான கரிசனையும், ஆத்மார்த்தமான அக்கறையும் விலகி சுயநலச் சிந்தனைகள் விஸ்வரூபமெடுக்கும் போது இத்தகைய இறுக்கமான சூழல்கள் உருவாகின்றன.

மேலதிகாரிகளின் கெடுபிடிகளால் தொல்லைகளுக்கு ஆளாகும் ஊழியர்கள், வாழ்க்கைத் துணையின் விட்டுக் கொடுத்தல் அல்லது புரிந்து கொள்ளல் இல்லாத சூழலில் உருவாகும் மன அழுத்தம், சாதீய, மத, இன ரீதியாக அழுத்தமான சூழலுக்கு உள்ளாகும் பொது மக்கள். என எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும், அல்லது எந்த ஒரு சூழலை எடுத்துக் கொண்டாலும் இன்று மக்கள் ஒருவித மன அழுத்தத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மன அழுத்தம் மிகவும் கொடுமையானது. இயல்பான வாழ்க்கையைப் பறித்து நிம்மதியற்ற பொழுதுகளையும், நோய்களையும் தந்து செல்லும் இந்த மன அழுத்தம் களையப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

மன அழுத்தத்தைக் குறித்து மருத்துவர்கள் குறிப்பிடுகையில் எதிர்பாராத சூழலுக்கு மனிதன் தள்ளப்படும் போதே அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகிறான் என்கின்றனர். எதிர்பார்ப்புகளைக் குறைக்கும் போது மன அழுத்தம் பெருமளவில் குறைந்து போவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லாதவர்கள், அவர்கள் எதையும் ஆனந்தத்துடன் பெற்றுக் கொள்ளும் தன்மையுடையவர்கள் எனவே அவர்களால் மன அழுத்தம் இல்லாமல் வாழ முடிகிறது, ஆனால் பெரியவர்கள் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துவதும், கிடைப்பதில் திருப்தி பெறாத நிலையையும் கொண்டிருப்பதால் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, அதிக சிரத்தை, குழப்பம் இவையெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில காரணிகள். சிலருக்கு அதிக வெளிச்சம், அதிக சத்தம் இவை கூட மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பிறப்பு, இறப்பு, போர்கள், திருமணங்கள், விவாக ரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, பெயர் இழத்தல், கடன், வறுமை, தேர்வு, போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல், என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் நம்மை இட்டுச் செல்ல முடியும்.

புகை பிடித்தல், சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, போதை மருத்து பழக்கம், குடிப்பழக்கம், சரியான தூக்கம் இல்லாமை இவையெல்லாம் மன அழுத்தத்தை நாம் விலை கொடுத்து வாங்கும் செயல்கள். புகை பிடிக்கும்போது உடலில் கலக்கும் நிக்கோட்டினுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.

முதுமை நிலையை அடைபவர்களிடமும், மாதவிடாய் காலத்தில் பெண்களிடமும் இந்த மன அழுத்தம் அதிகமாய் இருக்கும் என்றும் அத்தகையவர்களிடம் அன்புடன் உரையாடி மன இறுக்கத்தைத் தணிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மன அழுத்தம் நல்ல செயல்களில் கூட வரும் என்கிறது ஒரு ஆய்வு. திருமணம் போன்ற நிகழ்வுகள், பதவி உயர்வு, இவையெல்லாம் ஒருவகையில் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் அதை சரியான விதத்தில் கையாள்வதில் நம்முடைய கவனத்தைச் செலுத்தவேண்டும் என்கிறது அதே ஆய்வறிக்கை.

எல்லா பாதைகளையும் மெத்தைகளால் அலங்கரிப்பது இயலாது என்பதால் செருப்பு அணிகிறோம். அது போலவே மன அழுத்தத்தை உண்டாக்கும் காரணிகளை ஒழிப்பது என்பது இயலாத காரியம் ஆனால் நம்முடைய மனதை திறமையாகக் கையாள்வதன் மூலமாக மன அழுத்தத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க முடியும்.

மன அழுத்தத்தைக் கையாள்வதற்கு நம்முடைய மனதின் சிந்தனைகளை தூய்மைப்படுத்த வேண்டும். எதிர்மறைச் சிந்தனைகள் பெரும்பாலும் மன அழுத்தத்தையே அளிக்கின்றன. எனவே நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் மன அழுத்தத்தைக் கையாள முடியும்.

தியானம், யோகா போன்றவற்றில் மனதை ஈடுபடுத்துவதும், ஆழமாக மூச்சை இழுத்து விடும் மூச்சுப் பயிற்சியைச் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளில் சில என்கின்றனர் பயிற்சியாளர்கள். மனதை ஒருமுகப் படுத்தும் பயிற்சிகளும் நல்ல பலனைத் தருகின்றன.

அமைதியான குடும்பச் சூழல் பெரும்பாலான மன அழுத்தத்தைக் குறைக்கிறது. அலுவலகத்தின் குழப்பங்களையோ, எரிச்சல்களையோ குவிக்கும் இடமாக குடும்பம் இருக்கக் கூடாது, மாறாக அவற்றை அழிக்கும் இடமாகவே குடும்பம் இருக்க வேண்டும் என்பதனை குடும்பத்தினர் புரிந்து கொள்ளவேண்டும். குடும்பத்தில் நுழைந்தவுடன் மனம் மகிழ்ச்சியடையும் வகையில் குடும்பத்தினரோடு அன்பான வாழ்க்கை வாழ்தல் மிகவும் முக்கியம்.

ஆவேசம், கோபம் இவை மன அழுத்தத்தின் வெளிப்பாடுகள், தெளிவான அமைதியான மனம், ஞானம் இவற்றைக் கொண்டு அவற்றை அடக்க வேண்டும்.

மன அழுத்தம் பல நோய்களைக் கொண்டு வரும். குறிப்பாக மைகிரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி, ஸ்ட்ரோக், எஸீமா உட்பட பல நோய்களை மன அழுத்தம் கொண்டு வருகிறது.

தாய்மை நிலையிலிருக்கும் பெண்களுக்கு மன அழுத்தம் மிகப்பெரிய எதிரி. அது தாயையும், கருவில் இருக்கும் குழந்தையையும் நேரடியாகப் பாதிக்கிறது என்கிறார் அமெரிக்காவின் மாயோ கிளினிக்ஸ் எனும் மருத்துவர் , எனவே தான் தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் நல்ல புத்தகங்கள் படிப்பது, நல்ல இசை கேட்பது என மனதை இலகுவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.

சரியான திட்டமிடல் இல்லாமல் செயல்படுபவர்களை இந்த மன அழுத்தம் எளிதில் பிடித்துக் கொள்கிறது. எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துபவர்கள் மன அழுத்தம் உருவாகும் சூழலை பெரும்பாலும் விலக்கி விடுகிறார்கள்.

செய்ய முடியாத வேலைகளை ‘முடியாது’ என்று மறுத்து விடும் உள்ள உரம் மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க மிகவும் அவசியம். எல்லா வேலைகளையும் இழுத்துப் போடுபவர்கள் பிரச்சனையிலிருந்து தப்ப முடியாது.

உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அழுத்தம் மனிதனுக்கு பல இன்னல்களைத் தருகிறது. சிறு சிறு அழுத்தமான சூழல்களைத் தவிர்க்காத போதோ, அல்லது தீர்க்காத போதோ அழுத்தம் அதிகரித்து பெரிய இன்னலுக்கு ஆளாக்கி விடுகிறது.

அழுத்தம் இருவகையில் வரலாம். ஒன்று நம்மைச் சூழ்ந்த சமூகத்தின் செயல்பாடுகளால் நமக்குள் வருவது. இன்னொன்று நம்முடைய வாழ்க்கை முறை, சிந்தனைகளினால் வருவது.

நேர் சிந்தனை உள்ளவர்கள் எல்லாவற்றையும் நல்ல விதமாகப் பார்க்கிறார்கள். அதிக நேரப் பயணிக்க வேண்டியிருந்தால் அதிக நேரம் இசை கேட்க முடியுமே என்று நினைக்கக் கூடிய அளவுக்கு மனதை இலகுவாக வைத்திருக்க வேண்டும்.

‘இந்த வேலை எனக்குப் பிடிக்கவேயில்லை..’ அல்லது ‘என்னை யாருக்கும் பிடிக்கவில்லை’ இது போன்ற சிந்தனைகள் பரிதவிக்க வைத்து மன அழுத்தத்துக்குள் இட்டுச் செல்கிறது.

கவனக் குறைவு, முடிவுகள் எடுப்பதில் சிக்கல், ஞாபக மறதி, குழப்பம், எதிர் மறை சிந்தனைகள், தெளிவற்ற சிந்தனைகள், தவறான முடிவுகள், தப்பித்தல் முயற்சிகள் என மன அழுத்தம் மனதைப் பாதிக்கும் செயல்களைப் பட்டியலிடலாம்.

தலைவலி, அஜீரணக் குறைபாடுகள், தூக்கமின்மை, தசைப்பிடிப்பு, உடல் வலி, நெஞ்சு வலி, சீரற்ற இதயத் துடிப்பு, உயர் இரத்த அழுத்தம், உடல் எடை அதிகரித்தல், குறைதல், ஆஸ்த்மா, மூச்சுத் திணறல், தோல் நோய்கள், தாம்பத்தியக் குறைபாடுகள், புற்று நோய், அல்சர், சர்க்கரை நோய், என மன அழுத்தம் தரும் உடல் நோய்களும் ஏராளம்.

இந்த மனம் உடல் சார்ந்த பாதிப்புகளினால் தன்னம்பிக்கைக் குறைபாடு, கோபம், எரிச்சல், சீரற்ற உணவு உண்தல், சீரற்ற தூக்கம், தனிமை விரும்புதல், கடமைகளைத் தவிர்த்தல், பதட்டம் உட்பட ஏராளமான செயல்களுக்கும் நம்மை அறியாமலேயே தள்ளப்பட்டு விடுகிறோம்.

மன அழுத்தத்தை மருத்துவம் பல விதமாகப் பிரிக்கிறது. திடீரென நிகழும் ஒரு நிகழ்வினால் ஏற்படும் ஒரு மன அழுத்தத்தை அக்கியூட் ஸ்ட்ரெஸ் என்கிறார்கள். இதன் காரணம் நமக்கு தெரிந்ததாகவே இருக்கும். இது விரைவிலேயே காணாமல் போய் விடுகிறது.

தொடர் நிகழ்வுகளினால் ஏற்படும் மன அழுத்தத்தை எபிசாடிக் அக்யூட் ஸ்ட்ரெஸ் என்கிறார்கள். அதிகப்படியான வேலை. ஏராளமான பணிகள், தினமும் தாமதாய் வருவதால் வரும் பிரச்சனை, அவசரம் போன்ற தொடர் காரணிகளால் வருவது இது.

இயல்பிலேயே வறுமை, நீண்டகால வேலையின்மை, குடும்ப சூழல், அவஸ்தையில் மாட்டிக் கொண்டது போன்ற சூழல் இவையெல்லாம் தரும் மன அழுத்தத்தை குரோனிக் ஸ்ட்ரெஸ் என்று அழைக்கிறார்கள்.

ட்ராமிக் ஸ்டெரெஸ் என்பது இன்னொரு வகை. ஏதோ ஒரு அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு வராமல் இருக்கும் நிலையே இப்படி அழைக்கப்படுகிறது. கணினித் துறையில் இந்த மன அழுத்தம் அதிகமாக இருப்பதால் பெரும்பாலான அலுவலகங்கள் ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன.

இறுக்கமற்ற சூழலை குடும்பங்களில் குழந்தைகளிடம் உருவாக்க அமெரிக்க மருத்துவர்கள் ஆய்வறிக்கையில் கீழ்க்கண்டவை பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. தினமும் குழந்தைகளுடன் உரையாடுங்கள். அவர்களுடைய தினம் எப்படி செலவழிந்தது. என்னென்ன செயல்கள் நடந்தன என்றெல்லாம் உரையாடுங்கள். அழுத்தமான சூழல் இருப்பது போல உணர்ந்தால் அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்.

உங்கள் பிரச்சனைகளை குழந்தைகள் மேல் எக்காரணம் கொண்டும் திணிக்காதீர்கள். அவர்களுக்கு குடும்பத்தின் தேவை மற்றும் அமைதியான வாழ்க்கையின் அவசியத்தை வலியுறுத்துங்கள்.

குழந்தைகள் எதையாவது செய்யும் போது மனம் விட்டுப் பாராட்டுங்கள். அவர்களை அரவணைத்துச் செல்ல மறக்காதீர்கள். அவர்கள் இசை, பெயிண்டிங், நடனம் போன்றவற்றில் ஈடுபட தூண்டுங்கள்.

நகைச்சுவை உணர்வுள்ள குழந்தையாக உங்கள் குழந்தையை வளர்க்க முயலுங்கள். அது இறுக்கமான சூழல்களை குழந்தைகள் சமாளிக்க பிற்காலத்தில் பயன்படும்.

குழந்தைகள் எப்போதும் எதிலும் முதன்மையாக வரவேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். அது தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கி விடும். எல்லோரும் முதலாவதாக வருவது நடப்பதில்லையே. விடுமுறைகள், மாலை வேளைகளை சற்று இலகுவாகவே வைத்திருங்கள். அதிகப்படியான கல்வியும் மன அழுத்தத்தை நல்கும் என்பதை மறவாதீர்கள். தோல்வியும் வெற்றியும் சகஜம் என்னும் மனநிலையைக் கொண்டிருங்கள் அல்லது எதிர்காலத்தில் குழந்தை தோல்விகளைச் சந்திக்கும் போது உடைந்து போகும் வாய்ப்பு உண்டு.

உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஒரு நல்ல முன்மாதிரியாக இருங்கள். குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் தந்தை குழந்தை குடிக்கக் கூடாது என அறிவுரை சொல்வது பாதிப்பை ஏற்படுத்தாது. குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதும், அவர்கள் பதின் வயது எட்டுகையில் நல்ல நண்பர்கள், உறவினர்களுடன் ஆரோக்கியமான நட்பு வைத்துக்கொள்ள தூண்டுவதும், உடற்பயிற்சிகள் செய்யத் தூண்டுவதும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

மன அழுத்தம் சிலவேளைகளில் நாமாகவே கர்ப்பித்துக் கொள்ளும் தவறான சிந்தனைகளின் மூலமாகவும் வரும் என்பது கண்கூடு. தேர்வை நன்றாக எழுதிய மாணாக்கர் கூட மன அழுத்தத்துடன் திரிவது இதனால் தான்.

எத்தனை இறுக்கமான சூழலாக இருந்தாலும் சிரிக்கக் கற்றுக் கொண்டால் பிரச்சனைகள் பல காணாமல் போய்விடும். நல்ல நகைச்சுவை உரையாடல்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். தசைகளை இறுக்கமற்ற நிலைக்கு கொண்டு செல்லும். நுரையீரலுக்கு சுத்தமான காற்றை கொண்டு செல்லும் எனவே மன அழுத்தத்தைக் குறைக்க சிரியுங்கள் என்கிறார் மனோ தத்துவ நிபுணர் லீ பெர்க்.

குடும்பங்களில் பிரச்சனைகள் வருவது சகஜம். கணவன் மனைவியரிடையே பிரச்சனை வரும்போது ‘உன்னால் தான் வந்தது’ என்று பழியை மாறி மாறி சுமத்தாமல் ‘நமக்கு பிரச்சனை இருக்கிறது’ எப்படி தீர்வு காண்பது எனும் கண்ணோட்டத்தில் பேச வேண்டும் என்கிறான் பிரபல அமெரிக்க உளவியலாளர் வில்லார்ட் எஃப் ஹார்லே.

மன அழுத்தத்தை சூழ்நிலைகள் பத்து விழுக்காடும் நாம் எப்படி அதை எதிர்கொள்கிறோம் என்பது தொன்னூறு விழுக்காடும் நிர்ணயிக்கின்றன என்கிறார் சார்லஸ் ஸ்விண்டால். எதையும் எதிர்கொள்ளும் மனநிலை கொண்டவர்களுக்கு மன அழுத்தம் குறைவாக இருக்கும் காரணம் இது தான்.

பெண்களுக்கு வேலை, குடும்பம் என இரட்டை அழுத்தமான சூழல்கள் இருப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். அதை சரியான முறையில் கையாள குடும்ப சூழல் அமைதல் அவசியம்.

அலுவலகத்தில் இறுக்கத்தைத் தளர்த்த சரியான திட்டமிடுதல், காலத்தை சரியாக அட்டவணையிட்டு பயன்படுத்துதல், அவ்வப்போது மூச்சை இழுத்து விடுதல், இடையிடையே ஓய்வு எடுத்தல், மனதை தளர்வாக வைத்திருத்தல், நேர் சிந்தனை நண்பர்களுடன் நிறைய நேரம் செலவிடுதல், ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்தல், முக்கியமான பணிகளை முதலில் முடித்தல், பகிர்ந்து கொள்ள ஒரு நண்பனைக் கொண்டிருத்தல், அவ்வப்போது விடுப்பு எடுத்தல் இவை பயன்படும்.

மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்:

* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள்.

* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

* காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.

* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

* வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்ய முயலுங்கள் காலணி ஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக் கூடும்.

* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

* காஃபி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.

* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதைச் செய்வேன்… என்பது போன்றவை.

* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

* சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும் இன்றி.

* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் ‘மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது’ என்று சொல்லப் பழகுங்கள்.

* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

* எளிமையாக வாழுங்கள்.

* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்து தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.

* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.

* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

* என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.

* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

* மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்கு வசப்படும்.

- தமிழ் ஓசை களஞ்சியம்


ந்த நூற்றாண்டு மன அழுத்த நூற்றாண்டு. இதில் நம்மை நாம் நிலை நிறுத்தி கொள்ள தினம் தோறும் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். நம்மை சுற்றி நடக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப அதனை எதிர்கொள்ள நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். மனம் என்பது மூளையால் இயங்குவது ஆகும். இதில் செயலாற்றுவது சிந்தனை மற்றும் செயல் ஆகும். சிலர் சிகரெட் குடிப்பதால் மனஅழுத்தம் குறைகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. சிகரெட் குடிக்கும் போது 10 முதல் 20 சதவீதம் மன அழுத்தம் அதிகரிக்கவே செய்கிறது. இது பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது நான் தமிழகத்தில் பல துறைகளில் உள்ளவர்களை பார்த்த அளவில் காவல்துறையில் உள்ளவர்கள்தான் மன அழுத்தம் அதிகம் உள்ளவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக அத்துறையில் வேலை செய்யும் பெண் காவலர்கள். அவர்களுக்கு பணி வழங்கும் போது நீண்ட நேரம் ஓரே இடத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது அவர்கள் தங்களது இயற்கை உபாதையைகூட கழிக்க வழியில்லாமல் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாவதாக கூறுகிறார்கள். இன்றைய போராட்டம் மனப் போராட்டமாகவே இருக்கிறது. முன்பெல்லாம் உடல் போராட்டமாக இருந்தது. அதாவது முன்பு இருந்த கால கட்டத்தில் தனது உடல் வலிமையால் மற்றவர்களை சமாளிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அது இன்றைக்கு மன வலிமையால்தான் சமாளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்றைக்கு இருக்கும் நவீன வளர்ச்சிகளையும், தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி ஒரு பிரச்சனையை எப்படி லாவகமாக தீர்ப்பது என்று யோசிக்க ஆரம்பிக்கிறோம். முன்பு அதற்கான வாய்ப்புகளும் வசதியும் குறைவாகவே இருந்தன.

“காலில் செருப்பு கூட இல்லாத ஏழையாக என்னை படைத்த இறைவனை சபித்துக் கொண்டிருந்தேன். காலே இல்லாதவனை பார்க்கும் வரை” என்று சீன பழமொழி ஒன்று உண்டு. அது போல் இன்றைய கால கட்டத்தில் இருக்கும் வாய்ப்பை உடனே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்.

டென்ஷன்

ஒரு செயலை விரும்பி செய்தால் டென்ஷன் அங்கு இல்லை. அது திணிக்கப்பட்டது என்று நினைக்கும் போதுதான் டென்ஷன் உருவாகிறது. ஒருவர் பதட்டமாக இருக்கும் போது அவரது தசைகள் இறுக்கமாகிறது. அது ஒரு குறிப்பிட்ட நேரம் நீடித்தால் தசைகள் வலிக்க ஆரம்பிக்கின்றன. அதாவது கழுத்தின் பின்புறம் தசை இறுக்கம் ஏற்படுவதால் தலைவலி உண்டாகிறது. அறிவியல் முறைப்படி பார்க்கும் போது பதட்டமாக இருப்பவரின் உடலில் அட்ரினலின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இந்த சுரப்பி அவரை கவனமாக இருக்கவும், பிரச்சனைகளை எதிர்கொள்ள உதவியாகவும் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அப்படி செய்யும் போது உடல் ஒரு சீரான நிலையில் இருந்து மாறுபடுகிறது. அதாவது கவனத்தை அதிகரிப்பதற்கு மூளைக்கும், தெம்பை அதிகரிப்பதற்கு தசைகளுக்கும் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. அப்போது வயிற்றுக்கும் குடலுக்கும் இரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் வயிறு புரட்டுவது போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது. சில நேரங்களில் அடிக்கடி மலம், சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. (இதைத்தான் சினிமாக்களில் ஒருவர் பயப்படும் போது சிறு நீர் கழிப்பது போன்று காட்டுவதும் உண்டு). இதே போன்று பல்வேறு மாற்றங்கள் நடைபெறுகிறது. அதனால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விளைவு ஏற்படுகிறது.

கோபம்

ஒருவர் தன் மீது தனது கட்டுப்பாட்டை இழக்கும் போது ஏற்படுவதை கோபம் என்கிறோம். கோபம் கொல்லும். அதன் உச்ச கட்டம் உயிரிழப்பையும் ஏற்படுத்தும். எவர் ஒருவர் என்னுடைய கோபம் நியாயம் என கூறும் வரை கோபம் தீராது. பொதுவான கருத்து என்னவென்றால் அந்த கோபம் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை பயக்கும் என்றால் அது சரியானது என்பதே ஆகும். அவசரம் காட்டாமல் நன்கு சிந்தித்து செயலாற்றிட வேண்டும். அதற்கு நேரம் தவறாமை மிக முக்கியமானது ஆகும். அது தவிர நம் செயல்களை பகுத்து ஆராய்தல் நம் பணிகளை மேம்படுத்த, இலக்கை அடைய உதவும். இயற்கை வெற்றிடத்தை வெறுக்கிறது என்பார்கள்.

அது போல் எந்த குறிக்கோளும், செயல்பாடும் இல்லாமல் ஒருவர் இருந்தால் அவரது மனதில் (நெகட்டிவ் தாட்ஸ்) எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும். இன்றைய பொருளாதார மாற்றங்கள் எல்லோரையும் மன அழுத்தத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதனை எதிர்கொள்ள சரியான பயிற்சி இல்லை.

பலர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த 6 மாதங்களில் மன அழுத்தத்தை போக்கும் புத்தகங்களின் விற்பனை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனநல மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய பெரும்பாலானோர் இன்று சாமியார்களை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.

- மனநல மருத்துவ நிபுணர் டி.சீனிவாசன்


வீட்டுக்கு வெளியே
ஓர் ஓரமாய்த்
தயங்கித் தயங்கி
உட்கார்ந்திருக்கிறது
நம்பிக்கை
வெகு நேரமாய்!

கவலையும் பயமும்
என்னைக்
கட்டிப் பிடித்துக்கொண்டு
கட்டிலில்
என்னுடன்.

சாயங்காலத்துக்
காற்றுப் போல்
உரிமையோடு
உள்ளே நுழையும்
சலனம்.

விரக்தி-
ஒரு போர்வையாய்
என் தலை முதல்
கால்வரை
போர்த்தியிருக்கும்.

வீட்டுக்கு வெளியே
ஓர் ஓரமாய்த்
தயங்கித் தயங்கி
உட்கார்ந்திருக்கிறது
நம்பிக்கை
வெகு நேரமாய்!

நம்பிக்கையிடம்
சலனமும் பெரு மூச்சும்
சண்டை பிடிக்க
பயம் ஓடிச்சென்று
பரிகாசம் செய்கிறது:

“ஐயன்மீர் யாரோ?
ஓ…
பழைய நண்பரா?

பார்வையாளர் நேரம்
முடிந்துவிட்டது…
பயனெதுவும் இல்லை.

போவீர்… வருவீர்...
போய் வருவீர்!”

வேக வேகமாய்
வந்த
விரக்தி
விரட்டுகிறது:

“அவசியம்
பார்க்க வேண்டுமென்று
அடம் பிடிக்காதே.

அவரோ-
நூறு வகையான
நோய்களில்
நொந்து போய்ப்
படுத்த படுக்கையில்
படுபாடு படுகிறார்.

இன்றோ நாளையோ
அவர்
இறந்த பிறகு
தந்தி கொடுக்கிறோம்
தாராளமாய் வா.

இப்போது உடனே
இடத்தைக் காலிசெய்!”

நகரா திருக்கும்
நம்பிக்கை
மோதும் குரலில்
முழக்கமிடுகிறது.

“உள்ளே நுழைவதைத்
தடுக்கிறீர்கள்…

எனது
உரத்த குரலினை
என்ன செய்வீர்கள்?”

பயமும் கவலையும்
பஞ்சினைத் தேடின…
என்
காதுகளை அடைக்கக்
கனத்த முயற்சிகள்…

குறுக்கீடுகளைத்
தாண்டி
நம்பிக்கை
குரல் கொடுக்கிறது:

“தோழனே!
ஓ! என் தோழனே!
நான் தான் உனது
நம்பிக்கை நண்பன்.

சுதந்திரக் கொடியின்
சுடரொளியாக
உச்சிக் கம்பத்தில்
உயரப் பறந்த நீ
ஏன் இப்போது

அரைக் கம்பத்தில்
இறங்கி
அழத் தொடங்குகிறாய்?

அவிழ்க்க முடியாமல்
உன்னை
அவதிப் படுத்தும்
விரக்தியின் முடிச்சுகளை
வெட்டி எறி!

உன்னுடைய
புண்களின் மீது
புன்னகையைத் தடவு!

எதிர் காலத்தை
எழுதுவதற்கு
உன்
மனதில் பட்ட
காயங்களில்
மை தொட்டுக் கொள்!

போர்வைகளில்
ஏன் இப்படிப்
புதைந்து கிடக்கிறாய்?

விழித்து நீ
எழுந்தால்
விலங்குகளே நொறுங்கும்!

சின்ன நூல்கண்டா
உன்னைச்
சிறைப்படுத்தி வைப்பது?”

நம்பிக்கையின்
வார்த்தை மின்சாரம்
நரம்புகளில் பாய்ந்து

உறக்கத்தைக்
கலைத்து
உசுப்பிவிட

விரக்திப் போர்வையை
வீசி எறிந்தேன்-
கவலை பயங்களை
ஓரத்தில் விழும்படி
உதறி எழுந்தேன்
தடைகளை மீறித்
தாழ்ப்பாள் திறந்து

அருமை நண்பனை
உள்ளே
அழைத்தேன்!

நானும்
நம்பிக்கையும்
கை குலுக்கிக் கொண்டு
நாற்காலிகளில்
அருகருகே
அமர்ந்திருக்க

எடுபிடி வேலை
செய்யத் துவங்கின
இதுவரை என்னை
ஏவிக்கொண்டிருந்த
கவலையும் பயமும்.

தேநீர் கொண்டுவந்து
மேசையில் வைத்து
“சர்க்கரை போதுமா
சார்?” என்று கேட்டன.

சலனம்-
பெருமூச்சோடு
காலிக் கோப்பைகளை
எடுத்துச் சென்று
கழுவி வைத்தது.

விரக்தி மட்டும்
ஒரு கௌரவமான
வில்லன் போல்
விடைபெற்றுக் கொண்டு
வெளியேறியது!

– மு. மேத்தா "வெளிச்சம் வெளியே இல்லை"



முல்லா நசுருதீன் ஒரு முறை மங்கலான விளக்கின் வெளிச்சத்தின் கீழ் எதையோ தேடிக் கொண்டு இருந்தாராம். அந்தப் பக்கம் ஒரு வழிப்போக்கன் கேட்டானாம்... என்ன தேடுகிறீர்கள் என்று. முல்லா சொன்னாராம். எனக்கு அற்புதமான விளக்கு ஒன்று கிடைத்தது. அந்த விளக்கு இருந்தால் போதும், அதை ஏற்றியதும் இந்தப் பகுதி முழுவதும் இருட்டு என்பதே இருக்காது. ஆனால்; அதைத் தொலைத்து விட்டேன் அதை தேடுகிறேன் என்றாராம். அதற்கு அந்த வழிப் போக்கன் எங்கே தொலைத்தீர் எனக் கேக்க. முல்லா ஒரு இருட்டான பகுதியைக் காண்பித்து அங்கு என்று சொன்னாராம். அங்கே தொலைத்து விட்டு இங்கே எதற்கு தேடுகிறீர்கள் என்று கேட்டால் இங்கு தானே வெளிச்சமாக இருக்கிறது அதான் இங்கே தேடுகிறேன் என்றாராம்...!

முல்லா நசுருதீன் ஊர்மக்கள் மத்தியில் உட்கார்ந்திருந்தார். வெளியூரில் இருந்து வந்த பெரியவர் ஒருவர் அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அருகில் அமர்ந்தார்.

முல்லாவின் காதருகே சென்று ஏதோ சவால் விட்டார். முல்லா கலகல என்று சிரித்து விட்டு “ஆஹா… வெகு சுலபம்… கொஞ்ச நேரத்தில் சொல்லுகிறேனே… பொறுங்கள்” என்றார். பிறகு அருகிலிருந்த சிலரைப் பார்த்து…” உழைக்காமல் சிரமப்படாமல் பெரும் பணக்காரர் ஆவதற்கான யோசனைகள் சில எனக்குத் தோன்றி உள்ளன. அவற்றை இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து இங்கே வெளியிடப் போகிறேன். யார் யாருக்கெல்லாம் அவை வேண்டுமோ அவர்களை எல்லாம் உடனே இங்கே வரச் சொல்லிவிடுங்கள்” என்று உரக்கக் கூவினார்.

அவ்வளவுதான்… செய்தி விஷம் போல பரவியது. திபுதிபு என்று கூட்டம் சேர்ந்தது. முல்லா சொல்லப்போகும் யோசனைக்காகக் கூட்டம் அமைதியாகக் காத்திருந்தது. இரண்டு மணி நேரம் கழித்து “இன்னும் யாராவது வரவேண்டி இருக்கிறதா?” என்றார் முல்லா. இல்லை மற்றவர்கள் வரமாட்டார்கள்… வர மறுத்து விட்டார்கள். நாங்கள்தான் உங்கள் அரிய யோசனைகளைக் கேட்க ஆவலோடு காத்திருக்கிறோம் என்றது கூட்டம்.

வெளியூரில் இருந்து வந்து முல்லாவிடம் ஏதோ சவால்விட்ட நபரைப் பார்த்து “இவர்களை நன்றாக எண்ணிக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு முல்லா எழுந்து புறப்பட ஆரம்பித்தார். “முல்லா உழைக்காமலேயே பெரும் பணக்காரனாக ஆசைப்படும் எங்களுக்கு ஏதும் சொல்லவில்லையே…” என்று கூட்டம் அலறியது. முல்லாவோ வெகு அலட்சியமாக “இதோ வெளியூரில் இருந்து வந்திருக்கும் இவர் என்னிடம் சவால் விட்டார். எல்லாக் கேள்விக்கும் விடை சொல்கிறீர்களே… இந்த ஊரில் முட்டாள்கள் மொத்தம் எத்தனை பேர் என்று துல்லியமாகச் சொல்ல முடியுமா? என்றார். உழைக்காமல் பணக்காரன் ஆக விரும்பும் உங்களை விட முட்டாள்கள் இருக்க முடியுமா என்ன? அதுதான் உங்களை வரவழைத்து இவரை எண்ணிக் கொள்ளச் சொன்னேன்” என்று கூறிவிட்டு நடையைக் கட்டினார். உண்மை, உழைக்காமல் பணக்காரனாக விரும்பும் எவனுமே அறிவாளி அல்லன். முட்டாளே...!

ரு குழந்தைக்கு, தன்னைப் பற்றிய அபிப்ராயமும், தன் தகுதிகள் குறித்த அறிமுகமும் பெற்றோர்களின் பாராட்டிலிருந்தோ வசவில் இருந்தோ பிறக்கிறது. சின்னத்தவறொன்றுக்கு “அட மக்குப் பயலே!” என்று தலையில் குட்டு வாங்கும்போது குட்டு, தலையில் பதிகிறது. தான் ஒரு மக்கு என்கிற எண்ணம் மூளையில் பதிகிறது.

அக்கறையாலும் அன்பாலும், குழந்தை திருந்த வேண்டும் என்ற தவிப்பிலும்தான் எல்லாப் பெற்றோரும் கண்டிக்கிறோம். ஆனால் குழந்தைகள் மனதில் என்ன பதிவை விடுகிறோம் என்பதுதான் முக்கியம்.

உங்கள் குழந்தை சராசரியாகப் படிக்கிறதா? இன்னும் படுக்கையை நனைக்கிறதா? சொன்னதைக் கேட்க மறுக்கிறதா? சொல்வது காதில் விழுவதேயில்லையா? விருந்தினர் வந்தால் எழுந்து உள்ளே போய் விடுகிறதா? சகஜ பாவமில்லாமல் சங்கோஜமாய் வளர்கிறதா? இத்தனை இருந்தாலும்... நம்புங்கள்! உங்கள் குழந்தையும் சாதிக்கும்.

படிப்படியாய் சில முயற்சிகளை மிக இயல்பாகவும் நிதானமாகவும் வீட்டில் நாம் எடுத்தால்போதும். ஒரு தாவரம் துளிர்விட்டுத் தளிர்விட்டு வளர்வதைக் கண்கூடாகப் பார்ப்பது போல் குழந்தையின் வளர்ச்சியைக் காண முடியும்.

முதலாவதாக, தாங்கள் பிறந்து வளர்ந்த குடும்பம் - பாரம்பரியம் குறித்தெல்லாம் குழந்தைகள் தெரிந்து கொள்வது முக்கியம். பணத்தை மையப்படுத்தியே வாழ்வதாய் கருதப்படுகிற மேலைநாடுகளில்கூட தங்கள் வேர்களைத் தேடும் வேலையில் இளைய தலைமுறை இறங்கியிருக்கிறது.

தாத்தா பாட்டி-அவர்களுக்கும் முந்தைய தலைமுறை-அவர்கள் செய்துவந்த தொழில்-அவர்களுடைய ஆளுமை-அவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் போன்றவை குறித்தெல்லாம் குழந்தைகளுக்கு உற்சாகமாக சொல்லுங்கள். தன்னுடைய பரம்பரை குறித்த அறிவு மனதுக்குள் மிகுந்த நம்பிக்கைய வளர்க்கும். ஒரு வேளை முன்னோர்கள் சிரமப்பட்டு உயர்ந்திருந்தால்கூட அவர்கள் கதையே ஒரு முன்னுதாரணமாய் அந்த இளம் இதயங்களில் நிலைக்கும். கடந்த கால உறவுகள் பற்றிய தகவல்களும், நிகழ்கால உறவுகள் உடனான நேரடி அறிமுகமும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். “எங்கே சார்! உறவுகள் வந்தால் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள்!” என்று நீங்கள் கேட்கலாம்.

குழந்தைகள் அமைப்பின் உறுப்பினர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். இதே பிரச்சினையை அவர்கள் முன் வைத்தேன். 27 குழந்தைகளில் பெரும்பாலானவை சொன்ன பதில் சுவாரசியமாக இருந்தது.

“என்னுடன் இவ்வளவு கலகலப்பாகப் பேசுகிறீர்களே! உறவினர்கள் வந்தால் ஏன் ஓடி ஒளிகிறீர்கள்?” என்பது நான் கேட்ட கேள்வி. அதற்குக் குழந்தைகள் சொன்ன பதில், “நீங்கள் எங்ககிட்டே ஃபிரண்ட் மாதிரி பேசறீங்க அங்க்கிள்! அவங்க எங்களை அதிகாரமா, “நான் பெரியவன்! தெரிஞ்சுக்கோ”ங்கிற தொனியிலே பேசறாங்க. எங்க அப்பா அம்மாவும் எங்களை அறிமுகப்படுத்தக் கூப்பிடும் போதே நாய்க்குட்டியைக் கூப்பிடற மாதிரி கூப்பிடறாங்க”.

இதுதான் விஷயம். இதுவேதான் விஷயம். குழந்தைகள், தங்களை உரிய மன முதிர்ச்சியுடன் நடத்த வேண்டும் என்று ஓரளவு விவரம் வந்த பிறகு விரும்புவது இயற்கை. இது நியாயமும் கூட. நாம் பச்சைக் குழந்தைகளைக் கொஞ்சும்போது அவர்கள் மொழியில் பேச ஆசைப்பட்டு “அப்புக்கண்ணா! புஜ்ஜுக்குட்டி” என்று கொஞ்சுகிறோம். கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளிடம் நாம் பெரியவர்கள் என்ற வீராப்பைக் காண்பிக்கப் படாதபாடுபடுவோம்.

சின்னக் குழந்தைகளை மட்டுமின்றி பதின்ம பருவத்துக்கு முன்னும் பின்னும் இருக்கும் குழந்தைகளை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதில் தங்களை பெரியவர்கள் எப்படி எடைபோடுகிறார்கள் என்பது வெளிப்படுகிறது.

குழந்தைகளிடம் இயல்பாக, இனிமையாக நீங்கள் விருந்தினர்கள் முன்னிலையில் நடந்து கொண்டால் விருந்தினர்களும் அதுபோல் நடந்து கொள்வார்கள். வீட்டுக்கு வருபவர்கள் பலரும், ஏதோ விசாரணைக் கமிஷன் நீதிபதிகள் போல் குழந்தைகளிடம் பரீட்சை பற்றியும் மதிப்பெண் பற்றியும் மட்டுமே கேட்பார்கள். இவை தவிர குழந்தைகளின் உலகத்தில் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. எனவே குழந்தைகளை இயல்பாக நடத்துங்கள். விருந்தினர்களும் அப்படியே நடந்து கொள்வார்கள்.

அடுத்தது, குழந்தைகளை அவர்கள் செயல்களின் மூலம் அடையாளப் படுத்தாதீர்கள். குழந்தைகளிடம் நீங்கள் காட்டுகிற அடிப்படையான அன்பை, அவர்களின் தவறுகள் நிமித்தமாய் நிறுத்திக் கொள்ளாதீர்கள். “உன் மார்க் குறைந்துவிட்டது. அம்மா ஒரு வாரத்துக்கு உன்னிடம் பேச மாட்டேன்” என்பது அபத்தத்திலும் அபத்தமான தண்டனை.

தவறு செய்தாலும், தன் அடிப்படையான உறவை பெற்றோர்கள் தகர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்பது பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டிய நம்பிக்கை. அப்போதுதான் குழந்தைகளிடம் பாதுகாப்புணர்வு தோன்றும்.

பகலில், என்ன விஷயமாக நீங்கள் பிள்ளைகளைக் கண்டித்திருந்தாலும் சரி, இரவு உறங்கப் போகும் முன்னால், அந்தக் குற்றவுணர்வை மாற்றிவிடுங்கள். சிரித்துப் பேசியோ, சினிமா போன்ற விஷயங்கள் குறித்து ஜாலியான ஒரு விவாதத்தை நடத்தியோ பிள்ளைகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வாருங்கள்.

தவறு அவர்கள் மேல் இருந்து நீங்கள் திட்டியது நியாயம் என்றாலும் நம்பிக்கையை-சிதைக்கும் விதமாய் எதையும் எக்காரணம் கொண்டும் செய்யாதீர்கள்.

சுதந்திரம் குழந்தைகளுக்கு சரியாக வழங்கப்படும்போது அதுவே சுய கட்டுப்பாட்டையும் உருவாக்கிவிடும். விளையாட்டுக்கான நேரம் படிப்புக்கான நேரம் என்பதில் பல பெற்றோர்கள் தவறு செய்வார்கள். மாலை ஐந்து முதல் ஆறு, விளையாட்டுக்கான நேரம் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஐந்து மணிக்கு விளையாடப் போகும்போதே “ஆறு மணிக்குப் படிக்க வரணும்! தெரியுமில்லே” என்று பயமுறுத்தி அனுப்பினால், ஆறுமணிக்கு வருவதை ஆனவரை தள்ளிப் போடவே குழந்தைகள் விரும்பும். இரண்டுக்கும் சமமான முக்கியத்துவத்தை பெற்றோர்கள் தரவேண்டும். “உன் விருப்பத்துக்காக விளையாடு! என் விருப்பத்துக்காகப் படி!” என்பது நீங்கள் தருகிற தவறான சமிக்ஞை. பெற்றோர்கள் தங்களைப் பற்றிப் பெருமையாக நினைக்கிறார்கள்-பாராட்டுகிறார்கள்- தங்களை நம்புகிறார்கள் என்பதைக் குழந்தைகள் உணர்ந்தாலே அவர்களின் செயல் திறன் கூடுகிறது. பொறுப்பு வளர்கிறது.

படிப்பைப் போலவே மற்ற திறமைகளும் முக்கியம் என்பதைப் பெற்றோர்கள் உணர்ந்து கொள்வதும், உணர்த்துவதும் முக்கியம்.

சின்னச் சின்ன அக்கறையிலேயே குழந்தைகள் மகிழ்ந்துவிடுவார்கள். வெளியே சொல்ல மாட்டார்களாக இருக்கும். ஆனால் மனதுக்குள்ளே மகிழ்வார்கள். தங்களைத் தாங்களே திருத்திக் கொள்வார்கள். உங்கள் எதிர்பார்ப்பில் இருக்கிற நியாயத்தைப் புரிந்துகொண்டு தங்களை சீரமைத்துக் கொள்வார்கள்.

நம்புங்கள்….. உங்கள் குழந்தைகளும் சாதிப்பார்கள்!!

-ம.முத்தையா (நமது நம்பிக்கை)

குதிரைகள் பசுக்கள் போல
வாய் விட்டு கதறுவதில்லை
வலியில்லை என்பதல்ல
வலிமையே குதிரை ரூபம்.

தொட்டதும் சிலிர்க்கும் குதிரை
சவுக்குக்காப் பணிந்து போகும்

- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் முதலாம் பாடம்.

குளம்படி ஓசைக் கவிதை
குதிரையின் கனைப்புக் கீதம்
வீசிடும் வாலே கொடிகள்
பொங்கிடும் நுரையே கடல்கள்
பிடரியின் வரைவே வயல்கள்
உருண்டிடும் உடம்பே பூமி
சிலிர்த்திடும் துடிப்பே உயிர்ப்பு

- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் இரண்டாம் பாடம்.

குதிரைகள் பயணம் செய்யா
கூட்டமாய்ப் பறவை போல
இலக்குகள் குதிரைக்கில்லை
முன்பின்னாய் அலைதல் தவிர
குதிரையை மடக்கிக் கேளு
போவது எங்கே என்று
புறம் திரும்பி அழகு காட்டும்
கேள்வியே அபத்தம் என்று
இலக்கில்லா மனிதர் பெரியோர்
உள்ளவர் அடைய மாட்டார்

- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் மூன்றாம் பாடம்.

நிலம் பரவி கால்கள் நீட்டி
கன்னத்துப் பக்கம் அழுந்த
குதிரைகள் தூங்குவதில்லை
மற்றைய உயிர்கள் போல

நிற்கையில் கண்கள் மூடி
களைப்பினைப் போக்கும் குதிரை
தொட்டதும் புரிந்து கொள்ளும்
தொடுதலைப் புரிந்து கொள்ளும்

தூங்குதல் பெரிய பாபம்
தூங்கவா பிறந்தீர் இங்கு
வாழ்வதோ சிறிது நாட்கள்
அதில் சாவினை நிகர்த்த தூக்கம்
புரிபவர் பெரியோர் அல்லர்
வாழ்பவர் தூங்க மாட்டார்
குதிரைகள் கண்கள் மூடி
குறி விறைத்து நிற்கும் காட்சி
யோகத்தின் உச்ச கட்டம்
நெற்றிக்குள் சந்திர பிம்பம்

- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் நான்காம் பாடம்.

நீர் குடிக்கக் குனியும் குதிரை
நிழல் தெரியப் பின்னால் போகும்
மிரளுது மிருகம் என்பார்
சீர் குணம் அறியமாட்டார்

வேறொன்று குடிக்கும் போது
தான் கலக்கல் கூடாதென்று
குழப்பத்தைத் தவிர்க்கும் குதிரை
மிருகத்தில் குழந்தை ஜாதி

கால் வைத்த இடங்கள் எல்லாம்
பூ முளைக்கும் இடமென்றெண்ணி
குளம்பது விளிம்பில் நிற்கும்
குதிரையா மிரளும் மிருகம்
குதிரையின் குளம்பைப் பாரும்
இடுக்கிலே ரோமம் சிரிக்கும்

- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் ஆறாம் பாடம்.

வல ஆடுகள் கூட இங்கே
கொம்புடன் ஜனித்ததாக
கீச்சுப் பூனைகள் கொண்டதிங்கே
கூரிய நகமும் பல்லும்

யாருக்கும் தீங்கு செய்யா
நத்தைக்கும் கல்லாய் ஓடு
பச்சோந்தி நிறத்தை மாற்றும்
பல்லிவால் விஷத்தைத் தேக்கும்

குதிரைகள் மட்டுமிங்கே
கொம்பின்றி பிறந்ததென்ன?
வெறுப்புடன் பிறந்த மாக்கள்
பயத்தினைத் துணையாய்க் கொள்ள
விருப்புடன் பிறந்த குதிரைக்கு
கொம்பில்லை; விஷமுமில்லை
தர்மத்தைச் சொல்ல வந்தோர்
தடியோடா காட்சி தருவர்?
குதிரைகள் காதைப்பாரும்
உள்ளங்கை சிவப்பு தோற்கும்

-இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் ஏழாம் பாடம்.

னிதரின் செருமல் போல
குதிரையின் கனைப்பு இல்லை
குதிரைகள் கனைப்பின் மூலம்
செய்திகள் சொல்வதில்லை.

அது அடிக்குரல் பேச்சு அல்ல
அந்தரங்க கேலியுமில்லை
குதிரைகள் தனக்குத் தானே
பேசலின் முயற்சி கனைப்பு
சிலசமயம் குதிரை கனைப்பில்
சின்னதோர் அலுப்பு உண்டு
அடுத்ததாய் செய்யப் போகும்
வேலையின் முனைப்பு உண்டு

குதிரையின் கனைப்பைக் கேட்டு
மறு குதிரைத் திரும்பிப் பாரா
ஒரு கனைப்புச் சத்தம் கேட்டு
மறு கனைப்பு பதிலாய் தாரா.
குதிரைகள் உலகம் எளிது
எதிர்பார்ப்பு ஏதும் இல்லை.
தன் நெஞ்சைத் தானே நோக்கி
குதிரைகள் பேச்சே கனைப்பு

மற்றவர் என்ன சொல்வார்
என்பதே மனிதர் உலகம்
உற்றவர் எனக்கு நானே
என்பதே குதிரை வாழ்வு
குதிரையின் கனைப்பு கேட்க
எனக்கு நான் வணக்கம் சொல்வேன்

வேறெவரும் வாழ்த்த வேண்டாம்
வேறெவரும் வணங்க வேண்டாம்
என் செய்கை எனக்குத் தெரியும்
பூமாலைத் தேவையில்லை
தொடர்ந்து போ மேலே மேலே
குதிரையின் கனைப்புச் சொல்லும்

- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் ஐந்தாம் பாடம்.

குதிரைகள் குளம்பினூடே
மண்கட்டி சிக்கிக் கொள்ளும்
மண்கட்டி உள்ளே அழுந்த
குதிரைகள் நொண்டத் துவங்கும்
நடையிலே கவிதை காட்டும்
குதிரைகள் நொண்டலாமா

கங்காரு குதித்தல் போல
குதிரைகள் ஓடலாமா
ஒருபக்கம் மழித்த முகமாய்
சிரிப்பதில் அழகு உண்டா
மொழி தெற்றிப் பேசுபவர்
கவிதையை யாரோ ரசிப்பர்

கூன்தென்னை குட்டை ஆலம்
நதி ஒதுங்கி சேறாய் நிற்றல்
வலைசிக்கி தவிக்கும் காக்கை
எத்தனை அவலம் இங்கே

குதிரையின் பின்னங்காலை
வெடுக்கென இழுத்துப் பற்றி
ஈரமண் அகற்றும் வித்தை
அறிந்தவர் எனக்குச் சொன்னார்
பிள்ளையை பிரித்துக் கொடுத்தால்
கர்ப்பிணித்தாய் வணங்கல் போல

கால் சுத்தம் செய்தால் குதிரை
கண்களால் நன்றி சொல்லும்
பேச்சிலே நன்றி சொன்னால்
பொய்யாக இருக்கக் கூடும்
கண்ணிலே நன்றி காட்ட
நெஞ்சிலே வந்து தைக்கும்

-இது
குதிரைகள் எனக்குச் சொன்ன
வேதத்தின் எட்டாம் பாடம்.

னிதர்கள் நிமிர்ந்த நேரம்
மிருகத்தை அடிமை செய்தார்.
குரங்கின வழியில் வந்த
கோலத்தை மறந்து போனார்.
தோழமை என்றார்; ஆனால்
தொல்லைகள் பலவும் தந்தார்.

தோழமை என்றால் என்ன
பரஸ்பரம் மதித்தல் தானே
தான்மட்டும் சிறந்தோர் என்ற
தன்மையை மறத்தல் தானே
மிருகங்கள் நட்பாய் வரினும்
தனித்தனி அளவு கோல்கள்

யானையோ மிரட்டும் உருவம்
சிங்கமோ கர்வம் அதிகம்
புலி சிறுத்தை போக்கிரித்தனம்
நுழைநரி வஞ்சகப் பிராணி
ஒட்டகம் முற்றும் கோணல்
குரங்கது அலையும் தன்மை

கரடியோ அழுக்கு மூட்டை
கழுதைப் புலி அருவறுப்பு
பூனைக்கோ கள்ளம் அதிகம்
நாயது அடிமை புத்தி
குதிரைகள் மட்டுமிங்கே
மனிதருள் நெருக்கமாச்சு.

குதிரைகள் ராஜ ஸ்நேகம்
எவரையும் வெறுக்கா மனது
காமத்தைக் காட்டும் உருவம்
காதலின் உண்மை வேகம்

ஓய்வில்லா தன்மை காட்டும்
உழைப்புக்கு உவமை யாகும்
ஒருமுறை ஸ்நேகம் கொண்டால்
மற்றவை விலகிப் போகும்.

மனிதர்கள் முழுதாய் வளர
குதிரையே பெரிதும் காரணம்

- இது குதிரைகள் எனக்குச் சொன்ன
வேதத்தின் இன்னொரு பாடம்.


ல்தோன்றி மண்தோன்றி கடவுள் தோன்றி
கைவழியே மொழி வளரும் காலம் தோன்றி
கால்நடையே செல்வமெனக் கொண்ட நாளில்
ஆண்டிருந்த ஓர் அரசன் பறையறிவித்தான்.
வீட்டிற்கு ஒரு குதிரை வளர்க்க வேண்டும்
வேண்டுகின்ற உதவிகள் அரசு செய்யும்
குதிரைகள் தேசத்தின் பொக்கிஷங்கள்;
போர் வந்தால் புரவிகளை அரசே வாங்கும்.

போர்காலம் காணாத அரசு இல்லை
போராட்டம் இல்லாத காலம் இல்லை
போர்க்காலம் முன்கருதி புரவி வளர்ப்பீர்
பின்வரும் சந்ததிக்கு உறுதி கொடுப்பீர் .
மீறுபவர் தேசத்தின் முதல் எதிரிகள்
மறுப்பவர்கள் வெளியேற்றப்படுவார் உறுதி
பறையடித்து ஊர்முழுவதும் சேதி சொல்ல
ஜனம் கூடி தெரு நடுவே புலம்பலாச்சு.

இவன் என்ன பேயரசன் குதிரை வெறியன்
திடுமென்று குதிரைக்கு எங்கே போக...
குதிரைதான் செல்வமெனில் செந்நெல் என்ன
கொள்ளுமட்டும் பயரிடவா வயலும் நீரும்
ஆடுகளோ உணவாகும் மாடுகளோ பயிர்வளர்க்கும்
மேய்ப்பதொன்றும் கடினமில்லை; கோல் அசையக் கூட வரும்.
குடும்பத்துப் பெண்மணிக்கு குதிரைகளா கட்டுப்படும்;
குரல்கொடுத்தால் நாய்போல புரவிகளா துணையாகும்?

இவன் என்ன பேயரசன் குதிரை வெறியன்
பார்ப்பனர்கள் சிலர் கூடி தமக்குள் பேசி
முடிவாக திடமாக சபைக்குள் சென்று
தமக்கு மட்டும் கட்டளையைத் தளர்த்துமாறு
பணிவாக அறிவித்தார்; காரணம் சொன்னார்.
வேதங்கள் சொல்லுகையில் குதிரை கனைக்கும்;
பாடத்தில் முழுமுனைப்பு சிதறிப் போகும்.
தோல்பொருளை பார்ப்பனர்கள் தொடக்கூடாது
வாரின்றி குதிரைகள் வசப்படாது.
போருக்கும் பார்ப்பனர்களுக்கும் பொருத்தமில்லை
போரில்லாத வாழ்க்கையிதே எங்கள் கொள்கை
பேரரசன் யோசித்தான்; தலையசைத்தான்.
பார்ப்பனர்கள் குதிரைக்கு விலக்கு என்றான்;
பார்ப்பனர்கள் சபை நீங்கி வணங்கி வந்தார்.

வைத்தியரும் கொல்லரோடு சேர்ந்து கொண்டார்
எங்களுக்கும் விலகளிப்பாய் தேரா மன்னா
வணிகத்தில் எருதுகளே உதவியாகும்;
பொதி சுமக்கும் கழுதைகளே போதும் எமக்கு
ஊர் சுற்றும் வேலையிலே நாங்கள் இருக்க
பெண்டுகளே பிற வேலை செய்தல் வேண்டும்.
புரவிகளைப் பெண்டுகளால் ஆளமுடியுமா?
பேரரசே தயைசெய்யும் இது தாங்க முடியுமா.
மன்னவனும் மனு ஏற்றான்; விலக்கு என்றான்
வந்தவர்கள் சபை மீள கூட்டமாக

தொழில் தெரிந்த சூத்திரர்கள் முன்னே சென்றார்
குதிரைகள் பேணுதற்கு வசதியில்லை
முன்பின்னே இது குறித்துப் பழக்கமில்லை
கைகாலே துணையாக உழைப்போர் நாங்கள்
போரென்றால் கால்படையின் அங்கம் நாங்கள்
குதிரைகள் சுமை எமக்கு உதவி தராது
உழவுக்கோ கவலைக்கோ துணையாகாது
மன்னவனும் தலையசைத்தான் சரியே என்றான்.

படைவீரர் பெருமறவர் கூட்டம் போட்டார்
முடிவாக அரசனிடம் வணக்கம் சொன்னார்.
போர்க்காலம் குதிரைகள் தேவையெனினும்
போர் எதிரி யானையுடன் வந்து நின்றால்
குதிரைகள் என் செய்யும் கலைந்து போகும்
படைவீரர் தெருவுக்கு ஒரு யானை வளர்ப்பார்
முறைபோட்டு அனுதினமும் பேணிக் காப்பார்
வீட்டுக்கொரு குதிரையென்ற விதியினின்று
பேரரசே விலக்களிப்பீர்; யானை தருவீர்.
பேரரசன் யோசித்தான்; கவலை சூழ
கையசைத்தான் மறவர்கள் கலைந்துபோக

மறுநாளே சபைகூட்டி எழுந்து நின்று
பெருமன்னன் குரல் செருமி பேசலானான்.
குதிரையெனச் சொன்னது விலங்கா மக்கள்
புரவியதன் மகிமையைத் தெரியா ஜனமே
வீட்டுக்கொரு வலிமையுள்ள மனிதர் என்று
நான் சொன்ன செய்தியது தவறோ சொல்வீர்?
குதிரையதை சபை நடுவே நிறுத்திப்பாரும்.
உடல் முழுவதும் கைதடவி உணர்ந்து பாரும்

எவ்வளவு தின்றாலும் குழிந்த வயிறு
எப்போதும் எப்போதும் துடித்த உணர்வு
கண்மூடி நின்றாலும் காது கேட்கும்
காதுகளே நாலுபக்கம் சுற்றிப் பார்க்கும் .
உடல்வலிமை இருந்தாலும் மூர்க்கம் காட்டா
குதிரை குணம் கொண்டவர்கள் உயர்ந்தோர் ஆவார்
போர் என்றால் குத்தீட்டி யுத்தம் அல்ல;
மனிதரோடு மனிதர் வெட்டி சாய்தல் அல்ல

பெருவாழ்க்கை தனை நோக்கி காலம் போகும்
தன்மையினைப் போரென்றேன்; வேறொன்றில்லை
புரியாத என்மக்காள் மந்தை ஆடே
உமக்கிங்கே அரசனாக வெட்கம் கொண்டேன்
வெறும் பதரைக் கோல்பிடித்து காப்போர் உண்டோ?
உணர்வில்லா ஜனத்துக்கு அரசன் கேடா .
ஒரு காலம் இவ்வுலகம் கொள்ளும் கண்டீர்
குதிரைகளே உலகத்தின் பெருமூச்சாகும்

குதிரைகளே இப்புவியில் செங்கோல் ஓச்சும்
விரல் நுனியில் விசையறிந்து வேகம் காட்டும்
உழவுக்கும் தொழிலுக்கும் உதவியாகி
ஊர்விட்டு ஊர்போகக் கருவியாகி
விண்முட்டிக் கீழிறங்கி அனைத்துச் செயலும்
குதிரையே முன் நின்று நடத்தும் கண்டீர் .
கலியென்ற காலமுண்டு இத்தரை மீதில்
கடவுளெனக் குதிரைவரும்; ஆட்சி செய்யும்.

பல்வேறு ரூபத்தில் மனிதர் முன்னே
குதிரையெனும் பெருணர்வே கைக்கொடுக்கும்
வளமான வாழ்வுண்டு; மனிதர் அன்று
தேவரென வலம் வருவார் சொல்வேன் கண்டீர்
கால்நடையில் ஆடுகளே செல்வம் என்ற
மக்களிடம் மன்னனென இருத்தல் வேண்டா.
பசுக்களெனும் பார்ப்பனர்கள் காலம் முடிந்து
குதிரையிது வீணையிலே வேதம் பேசும்
காலத்தை என்னுள்ளே இன்றே கண்டேன்
போய் வருவேன் என்மக்காள் விடை கொடுப்பீர்
உம்மோடு இருத்தல் இனி இயலாதென்றான்
பெருமன்னன் வாள்வீசி தன் தலை துணித்தான்.

கலியென்னும் குதிரையதன் ஆட்சியின்று
கண்திறக்கத் துவங்கி விட்ட நேரம் கண்டோம்.
தலைதுணித்த பெருமன்னன் வருவான் மீண்டும்
முகம் மட்டும் குதிரையாகக் கொண்டவாறு
குரங்குகளை மூத்தோராய் கொண்ட மனிதர்
குணம் மாறி குதிரைக்கு வணக்கம் சொல்வார்.
கலியென்ற குதிரை தன் ஆட்சி துவங்கும்
மனிதருக்குள் மறுபடியும் நேசம் துளிர்க்கும்;
யாகங்கள் பூஜைகள் பூர்த்திசெய்யா
ஸ்நேகத்தை குதிரைகள் வளர்த்துக் கொடுக்கும்

குழப்பங்கள் முற்பரப்பில் தோன்றினாலும்
குதிரைகள் விஞ்ஞானம் உலகம் வளைக்கும்
குதிரைகள் ஞானத்தை என்னுள் கண்டேன்
கலியென்னும் யுகத்துக்கு வரவு சொன்னேன்.

- எழுத்தாளர் பாலக்குமாரன் ( இரும்பு குதிரைகள் )

http://balakumaranpesukirar.blogspot.com/ 



பணம் முக்கியமா ?

முக்கியம். ஆனால் எதற்கு முக்கியம் என்கிற தெளிவு இருந்து விட்டால் சம்பாதிப்பதும், செலவு செய்வதும் அர்த்தமாகும். வெறுமே அடுக்கி வைத்து பார்க்க ஆசைப்பட்டால் பகைவர்களை உருவாக்கும். நிறைய பணம் உள்ளவர்களிடம் யாரும் உண்மையாய் இருப்பதில்லை. இல்லாதவர்களிடம் மரியாதை செலுத்துவதில்லை. சம்பாதித்து சரியாக செலவழிக்கிறவர்களை உலகம் கொண்டாடத் தவறுவதில்லை.

காதல் என்பது மனிதனுக்கு அவசியமா ?

மிக மிக அவசியம். வேறு செய்வதற்கு இங்கு என்ன இருக்கிறது. ஆண்-பெண் நேசிப்பில் தான் உலகம் இயங்குகிறது. நேசிப்பை கொஞ்சம் கவித்துவமாக்கினால் ஏற்படுவது காதல். உடல் இச்சையை நெறிப்படுத்தி உள்ளத்தை அறிய முற்படுவது தான் காதல். நேர்மையாக இருப்பின் காதல் மிகுந்த பலம் தரும்.

சகித்து கொள்வது நட்பாகாது என்கிறார்களே. இது சரியா?

நட்பு வேறன்ன தான் செய்யும்.சகித்து கொள்வதைக் கூட செய்யவில்லை என்றால் அது எப்படி நட்பாகும். மனிதர்கள் என்பவர்கள் குறையும், நிறையும் கொண்டவர்கள். குறையை மெல்ல சுட்டிக்காட்டி களைவதும். நிறையை மிருதுவாக பாராட்டுவதும் தான் நட்பு. குறையை எப்பொழுது சுட்டிக்காட்டி சொல்ல முடியும், திருத்த முடியும். குறையை சகித்துக்கொள்பவருக்குத் தான் திருத்தவும் புத்தி வரும். நிறைவில் தள்ளாடுகிறபோது, பாராட்டுகளில் மயங்குகிறபொழுது மெல்ல கீழிறக்கிவிடுவதும் நட்பு. இடுக்கண் களைவதாம் நட்பு என்று திருவள்ளுவர் கூறுகிறார். உண்மையில் இங்கு இடுக்கண், அதாவது துன்பம் எது தெரியுமா? தன்னை அறியாதவன் தன் நிலை பிறழ்வது, தன்னுடைய பேலன்ஸ் அழிந்து தள்ளாடுகிறபோது பிடித்து நிறுத்துவது தான் நட்பு. சகித்து கொண்டவனுக்குத் தான் தள்ளாடுகிறவரை பிடித்து கொள்ளத் தோன்றும். பரஸ்பரம் சகித்து கொள்ள முடியாது என்பவர் வாழவே முடியாதவர்.

வீட்டில் மனைவியை சகித்து கொள்ள முடியாதவர் வெளியே பொது மக்களை, போலீஸ்காரரை, பொறுக்கிகளை நிறைய பல் காட்டி சகித்து கொள்வார்கள். அது சகித்து கொள்வதாக அவருக்கு தெரியவே தெரியாது. எங்கு தன்னுடைய அதிகாரம் செல்லுமோ அங்கு சகித்து கொள்ளாமல் சீறி வருவதுதான் பண்பாக, பழக்கமாக இருக்கிறது. சகித்து கொள்ள என்ன வேண்டும் தெரியுமா? நண்பரே, தன் மீது பிரியம் வேண்டும். தான் என்ன செய்கிறோம் என்கிற தெளிவு வேண்டும். தன் மீது பிரியம் உள்ளவருக்குத் தான் செய்து கொண்டிருக்கிற விஷயம் தெளிவாக தெரியும். தன் எண்ணங்கள் எத்தகையவை என்று எடை போட்டு உடனே இறக்க முடியும். தன்னை ஒவ்வொரு செயலிலும் எடை போட்டு இறக்கி தான் யார் என்று தெளிவாக தெரிகிறவருக்கு மற்றவரை சகித்து கொள்வது விஷயமே அல்ல. சகித்து கொள்ள முடியாது போன பல உயிரினங்கள் மடிந்து போயிருக்கின்றன. சகித்து கொள்ளல் தான் வாழ்க்கையின் அடிப்படை. அந்த சகித்து கொள்ளலுக்கு அடிப்படை அன்பு. அன்பு பற்றி இடையறாது, இடையறாது இந்த உலகம் அலறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அறிந்தவர் வெகு சிலரே.

பாலியல் தொழிலை வரைமுறைப்படுத்தினால் என்ன?

ஆஹா! செய்யாலாமே. மற்ற எல்லா விஷயங்களையும் வரைமுறைப்படுத்தி விட்டோம். பாலியல் தொழில் ஒன்றுதானே பாக்கி. இதையும் வரைமுறைப்படுத்தி விடலாமே. ஆனால் இந்த விஷயங்கள் எல்லாம் நம் அனுமதிக்காகக் காத்திருப்பதில்லை. பாலியல் தொழிலை வரைமுறைப்படுத்துவது என்பது நடக்கத்தான் போகிறது. வெகு விரைவில் செய்யதான் போகிறார்கள். ஆனால் இது மனிதரின் திருட்டு புத்தி. இருட்டுப் பக்கம். விலங்கின உறவு. மற்றவரின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்காது வேகமாய் எழுகின்ற அலட்சியம். மற்றவரை அவமானப்படுத்துவதில் உண்டான ஆனந்தம். பிணத்தை தழுவுவது போல என்கிறார் வள்ளுவர். மனம் செத்துப் போனவர்கள் தான் பிணத்தை தழுவுவார்கள்.

குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியம் தானா?

ஒரு குழந்தைக்கு தவளையின் இருதயம் பற்றி தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்தானா. ஒரு குழந்தைக்கு கீரை தண்டு எப்படி வளர்கிறது என்று தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம் தானா. ஒரு குழந்தைக்கு செவ்வாய் கிரகமும், குருவும் எப்படி இருக்கின்றன என்று தெரிந்து கொள்வது அவசியம்தானா. ஆமெனில் SEX கல்வியும் அவசியம்.

பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?

ஆமாம்।

ஆண்களுக்கு பெண்கள் என்றால் ஒரு பலஹீனம் ஏற்படும். எந்தப் பெண்ணைக் கண்டால் பலஹீனம் ஏற்படும் என்பதுதான் முக்கியமான விஷயம். கட்டுமஸ்தானப் பெண்ணைக் கண்டால் ஆணுக்கு காமம் கிளறும். அந்தப் பெண் இரை என்று தோன்றும். மகள் என்று தோன்றினால் ஒரு கவலை வரும். அந்தப் பெண்ணை நல்லபடி மணமுடிக்க வேண்டுமே என்ற பொறுப்பு வரும். சகோதரி என்று நினைத்தால் அந்தப் பெண்ணோடு ஒரு போட்டி இருக்கும். அந்தப் பெண்ணோடு சொத்து சம்பந்தமான எண்ணங்கள் ஏற்படும். வேறு உறவினங்கள் ஆணை பெரிதாகத் தாக்கவில்லை. அழுகின்ற பெண் ஆணுக்கு அம்மாவின் சாயலை கொடுக்கிறாள்।

அம்மா என்பவள் தான் ஆணுக்கு உண்மையான பலஹீனம். அழுகின்ற பெண்ணைப் பார்க்கும்பொழுது அம்மா அழுவது போல் இருப்பின் அந்த இடத்தில் ஆண் அடங்கி விடுகிறான். அப்பால் போகிறான். அல்லது அவசரமாக தீர்வுக்கு நெருங்கி வருகிறான். பெண் என்றால் ஆணுக்கு பலஹீனம். அம்மா என்ற பெண் தான் ஆணின் மிகப் பெரிய பலஹீனம்.

நாம் காணும் கனவுகளுக்கு ஏதேனும் அர்த்தம் உண்டா? கனவுகள் பற்றி சற்று விளக்க முடியுமா!

மனதின் இன்னொரு மொழிதான் கனவு. அந்த மொழிக்கு லிபி இல்லை. ஏன் சப்தம் கூட இல்லை. மனதின் மெளன மொழி நாடகமாக கண் முன்னே விரியும். இயக்கங்களும், ஆசைகளும், பயங்களும், கோபங்களும் மனதின் மெளன மொழியில் வெளிப்படும். கனவு காணும் பொழுது விழிப்பாக இருந்தால் விழிக்கும்போது அந்தக் கனவைக் கைபற்றி விடலாம். கனவு காணும் பொழுதே “அட கனவு” என்று எவருக்கு தோன்றுகிறதோ அவர் கனவின் உத்தேசங்களை அறியக் கூடியவர். இதற்கு படுக்கும்பொழுதே என்ன கனவு வந்தாலும் நான் நிதானமாக புரிந்துக் கொள்வேன் என்று தீர்மானித்துக் கொள்வது நல்லது. உங்கள் உறுதியைப் பொறுத்து கனவில் உங்களுக்கு விழிப்பு ஏற்படும். கனவு முடிந்த பிறகு, விழிப்பு ஏற்பட்ட பிறகு கனவு காணாமல் போகும். அது தான் இயல்பு. உடனே கனவைத் துரத்தக்கூடாது. என்ன கனவு, என்ன கனவு என்று பதறக்கூடாது. பதறினால் கனவு இன்னும் அடி ஆழத்தில் போய் சொருகிக் கொள்ளும். வெளியே வராது.

கனவை மறந்து விடுங்கள். கனவை நோண்டி எடுப்பதை தவிர்த்து விடுங்கள். ஒரு அரைமணி நேரத்திற்குள் அந்தக் கனவு வந்து நிற்கும் அல்லது அதன் ஏதாவது ஒரு நுனி உங்கள் முன்பு வந்து நிற்கும். அந்த நுனியைப் பிடித்து இழுக்க மொத்தப் புடவையும் வெளியே வந்து விடும். அப்பொழுது கனவின் உத்தேசமும் உங்களுக்கு தெரிந்து விடும். கனவு என்பது சில சமயம் நீங்கள் என்ன செய்யக்கூடாது, என்ன செய்யலாம் என்றும் சொல்லக்கூடிய திறம் வாய்ந்தவை. கனவோடு போரிடாமல், கனவு மறுபடியும் நினைவுக்கு வரவேண்டும் என்று காத்திருக்கப் பழகிக் கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல, கனவு காணும் பொழுதே கனவைப் பற்றிய அறிவு வேண்டும் என்று படுக்கும் முன்பு தீர்மானம் செய்யுங்கள். பழக பழக இது எளிதாக கைகூடும்.

அழகு என்பது என்ன ?

கண்களிலிருந்து வரும் ஒளி தான் அழகு. அறிவும், அன்பும் கலந்தது தான் அழகு. உடையோ, உயரமோ, பருவமோ, பதவியோ அழகல்ல. மனதில் அமைதி இருப்பின் முகத்தில் அழகு சுடர் விடும்.

தங்கத்தை ஒரு சொத்தாக மனிதன் ஏன் நினைத்துக்கொண்டு வேதனைப்படுகிறான்?

ஏதேனும் ஒன்றை சொத்தாக அவன் நினைத்துக் கொள்ள வேண்டும். தங்கம் முக்கியமாக இல்லாத போது, ஆடு, மாடுகள் முக்கியமாக இருந்தன. ஆடு, மாடுகளுக்கு முன்பு நிலங்கள் சொந்தமாக இருந்தன. எது அபூர்வமோ அதை தன் சொந்தமாக நினைப்பது மனித இயல்பு. நாளையே கடலுக்கு அடியிலிருந்து நாற்பது டன் தங்கம் வெளிவந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். தங்கத்தை யாரும் வாங்கமாட்டார்கள். அது செலாவணி ஆகாது. தங்கம் கிடைப்பது குறைவாக இருப்பதால் இந்த அலையல் ஏற்படுகிறது. வைரம் அதிகம் கிடைக்கிறது. ஆனால், கிடைத்த வைரத்தை திரும்ப குப்பையிலேயே கொட்டி விடுகிறார்கள். வைரம் அதிகம் கிடைக்காமல் வியாபாரிகள் பார்த்துக் கொள்கிறார்கள். வைரம் அதிகம் கிடைத்தால் மரியாதை போய்விடும் என்பதற்காக அவர்களே இயற்கை கொடுத்ததை புறந்தள்ளி விடுகிறார்கள். எது எளிதில் கிடைக்காததோ அதற்கு பெரிய மரியாதை இருக்கும். கடவுள் என்பதற்கு மரியாதை ஏன் இருக்கிறது? கடவுள் என்பது மாயையான விஷயம். புரியாத விஷயம். புரிந்து போனால் அலட்சியப்படுத்தி விடுவார்கள். புரியாத வரை மிக முக்கியமானதாக, பெரிய வியாபாரமாக நடந்து கொண்டுதான் இருக்கும்.

- எழுத்தாளர் பாலகுமாரன்

http://balakumaranpesukirar.blogspot.com/


நாத்திகனுக்கு தருமசிந்தனை இருக்கலாம். ஆனால்; மதக்கோட்பாடு இருக்க இயலாது. மதத்தில் நம்பிக்கை வைத்தவனுக்கு தருமசிந்தை அவசியம் இருக்க வேண்டும்.

குருவாகப் பிறந்த ஆன்மாக்களைத் தவிர; மற்றவர்கள் குருவாவதற்கு விரும்பி அழிந்தும் போகின்றனர்.

நாம் செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும் இறந்துவிட்டபின் இவை நம்முடன் வருமா? நாம் அழியும் செல்வத்தைச் சேர்க்க நினைப்பதை விட அழியாத ஒன்றைப் பெறுவதுதான் ஆண்மைக்கு அழகு.

செல்வத்தைக் கொண்டு ஒரு மனிதனை மதிப்பவனை விட, அரசனையும், ஆண்டியையும் ஒன்றாக நினைத்து வாழும் துறவிகளின் வாழ்வே சிறந்தது.

மரணத்தை வென்று, அதற்க்கு மேல் உள்ள மெய்ப்பொருள் என்ன என்பதைனைத் தெரிந்து கொள்ளத்துடிக்கும் துறவற வாழ்க்கையே மேல்.

இந்த உலகில் மிருகங்களை மட்டுமின்றி மிருகத்தனம் கொண்ட எதையும் - பயத்தை உண்டு பண்ணுகிற எதையும் நிற்க வேண்டும். அவற்றுடன் போராடவேண்டும். பயந்து ஓடலாகாது.

மிருகத்தை மனிதானாக்குவதும், மனிதனைத் தெய்வம் ஆக்குவதும் மதம்.

மக்கள் எவராயினும் சகிப்புத் தன்மையோடு, பிறருடைய சமயங்களில் பரிவு காட்ட வேண்டும்.

மதங்கள் எல்லாமே உண்மையானவைதாம்! ஆனால் ஒரு மத்த்திலிருந்து வேறொரு மத்த்திறகு மக்களை மாறச் செய்வது பொருள்ளற்றது. கிறிஸ்தவர்கள் மேலும் சிறந்த கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்கள் சிறந்த முஸ்லீம் ஆகவும் வாழ வேண்டும். ஒவ்வொருவருக்கும் தம் தம் மதங்களில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும்.

தங்கள் மதமே சிறந்து விளங்கவேண்டும் மற்ற மதங்கள் அழிய வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்குள் பகைமையை உருவாக்கும்.

கடவுளை தாம் விரும்பும் உருவத்தில் ஒவ்வொரு மத பழக்கப்படி ஒவ்வொருவரும் வணங்கலாம்.

உடல் இன்பமே பெரிதன்று. வறுமையில் வாழ்ந்தாலும், திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்று கஷ்டத்தில் வாடுவதை விட, பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டு, தன் நலத்தைக் குறைத்து, பிறர் நலத்தை பேண வேண்டும்.

பணி செய் அதற்குப் பெயர் தவம். தன்னலமற்று மக்களுக்கு உழைக்க வேண்டும். மக்களுக்கு உழைப்பதை தாழ்வாக எண்ணாதே அவ்வாறு உழைக்கும் பணி தெய்வத்திற்குச் செய்யும் திருத்தொண்டைப் போன்றது.

இறைவனே இன்று உலகமாகப் பரந்து விரிந்து நிற்கின்றான். கடவுளை நினைத்து பக்தியோடு பணி செய். அதுவும் ஒழுக்கத்தோடு பணி செய். ஒழுக்கம் என்பது தன்னலமற்ற சேவை. அதுவே சிறப்பு! அந்த சிறப்பை அடைய மனிதன் முயல வேண்டும்.

நீ கடவுளைத் தேடி எங்கும் போக வேண்டாம். ஏழைகள், துன்பப்படுவோர் எல்லோருமே கடவுள் தான், அவர்களை ஏன் முதலில் பூஜை செய்ய்க்கூடாது?

உடல் வலிமையுடையவன், வலிமை குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும்.

செல்வம் படைத்தவன், செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்ததை விட வேண்டும்.

முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போது நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும், நம்பிக்கை இருந்தது. ஆனாலும் ஒருவனிடத்தில் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதிமோக்ஷமில்லை.

பாவம் என்பது ஒன்று உண்டு என்றால், அது நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது ஒன்றுதான்.

சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன். உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும்.

நம்பிக்கை, நம்பிக்கை நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை - இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும்.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்த வனாகவே ஆகிவிடுவாய்.
இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி.

அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்கும் கீழே இழுத்துச் சென்றுவிடும். ஆனால், அடக்கப்பட்டுச் சரியான வழியில் செல்கின்ற மனம் நம்மை என்றென்றைக்கும் காத்து இரட்சிக்கும்; நம்மை விடுதலைப் பெறச் செய்யும்.

எப்போதும் விரிந்த மலர்ந்து கொண்டே இருப்பதுதான் வாழ்க்கையாகும். சுருங்கி விடுவது மட்டும் கவனித்துக் கொண்டு, சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக்காரனுக்கு நரகத்தில் கூட இடம் கிடையாது.

எதிரிகளை அழிக்க ஒரே வழி அவர்களை நண்பர்களாக்குங்கள்.

யார் ஒருவன் தனக்குள் கௌரவமும் மரியாதையும் போய்விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ அத்தகையவன் அவமானத்தை தான் அடைகிறான்.

குருவுக்குப் பணிந்து நடந்தாலும் பிரம்மச்சரிய ஒழுக்கத்தை நன்கு கடைப்பிடித்தலம் வெற்றிக்கு வழிகளாகும்.

சிங்கங்களே சீறி எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். சுதந்திர ஆன்மாக்கள், அழியாத திருவருளைப் பெற்றவர்கள்.

போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதே, மிருகத்தைப் போல வாழாதே!
இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே! என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்ல வலிமை பெற்றவன், உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது, காலமும், இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும் சாதிக்ககூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ.
பயங்கரத்தை எதிர்த்து நில். ஓர் அடியும் பின்வாங்கக்கூடாது. கருத்து இதுதான் - எது வந்தாலும் போராடி முடி. தங்கள் நிலையிலிருந்து நட்சத்திரங்கள் பிறழட்டும். முழு உலகமும் நமக்கு எதிராக எழுந்து எதிர்த்து நிறகட்டும். குறிக்கோளும் கொள்கையும் மாறாமல் முன்னேறிச் செல்.
நம்பிக்கையை இழந்துவிடாதே. பாதை, கத்தி முனையில் நடப்பதைப் போல மிகவும் கடினமானது தான். எனினும் எழுந்திரு. விழித்துக் கொள். மனம் தளராதே. நீ அடையவேண்டிய உனத் இலட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி.
நீ வீணாக அழுவதேன்? மரணமோ, நோயோ உனக்கில்லை. நீ அழுவதேன்? துன்பமோ, துரதிர்ஷ்டமோ உனக்கு கிடையாது. நீ ஏன் அழ வேண்டும்? மாற்றமோ உனக்கு விதிக்கப்படவில்லை. நீ ஆனந்தமயமானவன். நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு. மக்கள் என்ன வேண்டுமானாலும் இரு. பிறகு, நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் காலடியில் பணிந்து கிடக்கும்.

பகுத்தறிவைக் கொண்டவன் பகவானை அடைய வழிகளை நுட்பமாகத் தேடுகிறான். தனது உடம்பால் உழைத்து இறைவனை அடைய நினைப்பவன் சேவாமார்க்கத்தை நாடுகிறான். சமூக சேவையில் இறைபணியைத் தேடுகிறான். மந்திரப் பூர்வமாக நாடுபவன் வீட்டிலும் ஆலயத்திலும் பூஜிக்கிறான்.

கர்மயோகம்: தனது கடமைகளைச் செய்வதாலும் அதற்குரிய செயல்களை ஆற்றுவதாலும் இறை உணர்வைப் பெறுவது.

பக்தியோகம்: தனது அந்தரங்கமான பக்தி உணர்வால், இறைவனை நினைந்து அவரைத் தனக்கே உரியவராக அடைய முற்படுவது.

ராஜயோகம்: மனத்தைக் கட்டுப்படுத்தி, உணர்ச்சிகளை ஒருமுகப்படுத்தி இறைவன்பால் தனது சிந்தனையை வழிப்படுத்தி, இறை உணர்வைப் பெறுவது.

ஞானயோகம்: தனது அறிவாற்றலால் பல்வேறு சாஸ்திர நூல்களைப் படித்தும் ஞானபோதனைகளைப் பெற்றும், இறைவனை உணர்ந்து அவரை அடைய முற்படுவது.

இந்தச் சீதையெனும் இலட்சியத்தைப் போன்று வேறில்லை. எது எது பரிசுத்த மனதோ, எது எது புனிதமானதோ பெண்ணினத்திலே பெண்மை என்ப்போற்றப்படுவது எதுவோ, அதற்குப் பெயர்தான் சீதை! குரு ஒருவர் ஒரு பெண்மணியை ஆசீர்வதிக்க வேண்டுமென்றாலும், ஒரு குழந்தையை வாழ்த்த வேண்டுமென்றாலும், சீதையைப் போல் இரு என்ற கூறி ஆசீர்வதிப்பார்.
மனிதனாக வாழ முயற்சி செய். தோல்விகளை ஒரு போதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒரு முறை கைக்கொள்ள முயற்சி செய்.
பசியால் நலிந்து வாழும் மக்களிடையே சென்று சமயப் பிரசாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். பட்டினி கிடக்கும் மனிதனை அணுகி, அவனுக்குத் த்த்துவ போதனைகள் செய்வது மேலும் அவனை அவமதிப்பதாகும்.

ஒரு கழுதை மீது நூலகத்தை ஏற்றிவிட்டால் அது பண்டிதன் ஆகிவிடாது. நூல்கள் நிறைய படிப்பதனால் எவனும் பயன்பெற முடியுமா?

நம் நாட்டுப் பொன்னை பித்தளையாகவும், அயல்நாட்டுப் பித்தளையைத் தங்கமாகவும் கருதக்கூடிய வகையில் நம் நாட்டு மக்கள் தங்கள் கல்வி அறிவைப் பெற்றிருக்கிறார்கள். நவீன காலமேற்றிசைக் கல்வி, நம் நாட்டு மக்களை இவ்வாறு செய்திருப்பது மந்திர மாயம் போல் இருக்கிறது.

ஒருவன் நன்மையிலிருந்து அறிவைப் பெறுவது போலவே, தீமையிலிருந்து அறிவைப் பெறுகிறான்.
உண்மையாக எதையும் துறக்கலாம். ஆனால், எதன் பொருட்டும், உண்மையைத் துறக்கலாகாது.
எந்த ஒரு காரியத்தை தொடங்கும் பொழுதும், தவிர்க்க முடியாத தவறுகள் சில ஏற்படவே செய்யும்.

பிறருடைய உத்தரவுக்குப் பயந்து பயந்து நடப்பவர்கள் நாளடைவில் சிந்திக்கும் சக்தியை இழந்து விடுகிறார்கள். உங்களுக்குள் இருப்பதை உங்கள் உழைப்பாலே வெளிக்கொணர முயலுங்கள். பிறரைப் பார்த்து நடிக்காதீர்கள். பிறரிடம் காணப்படும் நல்ல பண்புகளைப் கற்றுக் கொள்ளுங்கள்.

விட்டுக் கொடுத்து, எவன் பிறருடைய கருத்துகளை ஏற்க ஆயத்தமாய் இருக்கிறானோ இறுதியில் அவனுடைய கருத்துகள் வெற்றி அடைகின்றன.

பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன், இறந்தவனுக்கு ஒப்பாவான்.

கல்வி என்பது ஒருவனுடைய மூளையால் பல விஷயங்களைத் திணிப்பதுன்று, அப்படித் திணிக்கப்படும் அந்த விஷயங்கள் நன்றாக ஜீரணமாகிக் பயன்படவேண்டும்.

ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம்தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலைநிறுத்த முடியும்.

ஒருவனுடைய உண்மைத் தன்மையை ஆராய வேண்டின், அவனது பெருஞ்செய்ல்களைப் பார்க்க வேண்டாம். அவன் தன் சாதாரணக் காரியங்களை எங்ஙனம் செய்கிறான் என்பதை கவனிக்க வேண்டும்.

மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்.

நீ கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தாலும் சரி, அல்லது நாத்திகனாக இருந்தாலும் சரி, அல்லது யாராக இருந்தாலும் சரி. உன்னைடைய சுகதுக்கங்களை மறந்து நீ வேலை செய்க. இது ஒன்றே இப்பொழுது நீ கற்றுக் கொள்ளக்கூடிய முதல் பாடமாகும்.

எல்லாப் பேய்களும் நம்முடைய மனத்திலே தான் இருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கியிருந்தால் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் அது சொர்க்கமாக மாறிவிடும்.

இன்பங்களை அனுபவிக்கும் ஆசையை முற்றிலும் மனத்திலிருந்து நீக்காமல் ஆன்மிக வாழ்வில் எதையுமே அடையமுடியாது.

இன்பங்கள் என்ற உன்னுடைய எல்லா ஆசைகளையும் சமுதாயத்தின் நன்மையை முன்னிட்டு எப்போது உன்னால் தியாகம் செய்ய முடிகிறதோ அப்போது நீ ஒரு புத்தர் ஆகிவிடுகிறாய்.

மனிதன் இயற்கையை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கிறான். அதில் அவன் பல தவறுகளைச் செய்கிறான். அதனால் துன்பப்படுகிறான்.

வெற்றிப் பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியும், பெரும் மன உறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும்.

மனிதன் தானே பணத்தை உண்டு பண்ணுகிறான். பணம் மனிதனை உண்டு பண்ணியதாக எங்கேயாவது எப்போதாவது நீ கேள்விப்பட்டிருக்கிறாயா?

மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவனாகிறானோ அந்த அளவுக்குத் தக்கபடி அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து சென்றாக வேண்டும்.

நமது குழந்தை நிலையை எண்ணி இப்போது சிரிப்பது போல, இன்னும், ஐம்பது ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதைய நிலையை எண்ணிச் சிரிப்போம்.

பெண்ணுக்குரிய அச்சம், நாணம் போன்ற பண்புகளை இந்தியப் பெண்களிடம் மட்டுமே நாம் பார்க்கமுடியும். அத்தகைய அற்புதமான குணங்களை உடைய பெண்களை முன்னேற்ற உங்களால் முடியவில்லை.

நூல்களைக் கற்கலாம். சொற்பொழிவுகளைக் கேட்கலாம். பல மணி நேரம் தொடர்ந்து பேசலாம். ஆனாலும் அனுபவமே சரியான ஆசான். அதுவே உண்மையாம கல்வி.

நூல்நிலையம் ஒன்றில் இருக்கும் எல்லா நூல்களையும் ஒன்றுவிடாமல் படிக்கும் புத்திசாலியைவிட, ஐந்து நல்ல, உயர்ந்த கருத்துகளை அறிந்து கொண்டாலே போதும், நீயே மெத்தபடித்தவனாக இருப்பாய்.

பூரணத்துவம் பெற்ற மனிதன் என்ன ஆகிறான்? அவன் எல்லையற்ற பேரானந்தப் பெருக்கில் திளைத்து வாழ்கிறான். பேரின்பம் பெறுவதற்கு எந்தப் பொருளை அதைய வேண்டுமோ, அந்த ஆண்டவனை அடைந்து அவனுடன் பேரானந்தத்தில் திளைக்கிறான்.

எல்லா ஒழுக்கத்திற்கும், எல்லா ஆன்மீக உணர்விக்கும் பிரம்மச்சரியமே ஆதாரம்.

காயம்படாதவன் தான் தழும்மைக் கண்டு நகைப்பான்.

உடலிலும் மனதிலும் வலிமை இல்லாமல் போனால் ஆன்மாவை அடைய முடியாது.
நீ உன்னைப் பலவீன்ன் என்று ஒரு போதும் சொல்லாதே. எழுந்து நில். தைரியமாக இரு. வலிமையாக இரு. பொறுப்பு முழுவதையும் உன் தோள் மீதே சுமந்து கொள்.
வாழ்க்கையை இன்பம் அனுபவிக்கும் பூஞ்சோலையாக நினைத்து உருகி நிற்கும் காதலின்ப மனநிலை நமக்குத் தேவையே இல்லை. மாறாக வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாமல் எதிர்த்து நிற்கும் வீரன் ஒருவனுடைய மனநிலையே நமக்கு இப்போது வேண்டும்.

கோழைகள் எப்போதும் வெற்றியடைய முடியாது.

சிவன், விஷ்ணு என்றெல்லாம் எத்தனையோ நூறு பெயர்களால் அழைக்கப்படுவது ஒரே கடவுள்தான். பெய்ர்கள் வேறு. ஆனால் இருப்பது ஒன்றுதான்.

அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம். அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்.

துருப்பிடித்து தேய்வதை விட, உழைத்துத் தேய்வது மேலானது.

உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது.

வழிபாடுகள் எந்தப் பெயரிலும் இருந்தாலும் சரி. எந்த வித்த்தில் இருந்தாலும் சரி. அவை அனைத்தும் ஒரே கடவுளுக்குச் செய்யப்படுகின்றன என்பதை நீங்கள் உணர வேண்டும்.

இந்தியாவின் பாமர மக்களாகிய இந்த ஏழை எளியவர்களை நாம் உயர்த்த வேண்டும். அவர்களின் முன்னேற்றத்திற்கு உரிய கருத்துக்களை நம்பிக்கையோடும், சிரத்தையோடும், அன்பான சொற்களால் அவர்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

நோயாளிகளுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய். பசியால் வாடுபவனுக்கு உணவு கொடு. அறியாமையில் உள்ளவனுக்கு உன்னால் முடிந்த அளவிற்கு கல்வியறிவைப் புகட்டு. இதுவே உனது கடமையாக்க் கொள்.
எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தல் பலவீன்னாகவே நீ ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுகிறாய்.
மனிதனுக்கு மன அமைதியைத் தருவதுதான் மத்த்தின் அடிப்படை இலட்சியமாகும்.

தனது குழந்தைகளில் யாரேனும் ஒருவருக்காவது உதவி செய்யும் வாய்ப்பை ஆண்டவன் உனக்குக் கொடுத்தால் அதன் மூலம் நீ பாக்கியம் பெற்றவன் ஆகிறாய்.

எவன் ஒருவனுக்குத் தன்னம்பிக்கை இல்லையோ அவன்தான் நாத்திகன்.


- விவேகானந்தர்

மது நோக்கம்

இயைபுடன் முன்னேறிய மனிதனைப் பார்க்கவே நாம் விரும்புகிறோம்.

அவன் விசாலமான இதயம், பரந்த மனம், உயர்ந்த செயல் இவற்றைப் படைத்திருக்க வேண்டும்.

உலகத்தின் துயரையும் துன்பத்தையும் தீவிரமாக உணரும் இதயம் படைத்தவனே நமக்குத் தேவை. அத்துடன் நிற்காமல், அந்த உணர்ச்சியையும் அறிவையும் செயலாக்குபவனே நமக்கு மிகவும் வேண்டப்படுபவன்.

மூளை, இதயம், செயல் இவை ஒருங்கிணைந்து செயல்படுவதே தேவை.

நம்மை மேம்படுத்துவதன் முக்கியத்துவம்

நம்மைச் சுற்றி நடப்பதை நீங்கள் காண்கிறீர்கள். அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக உள்ளது உலகம். நமது சக்தியில் ஒரு பாகம் நமது சொந்த உடலைப் பாதுகாப்பதற்குச் செலவாகிறது. இதைத் தவிர ஒவ்வொரு சிறு பகுதியும் அல்லும் பகலும் பிறர்மீது ஆதிக்கம் செலுத்தவே பயன்படுகின்றன.

நமது உடல்கள், நமது குணங்கள், நமது அறிவு, நமது ஆன்மீகம் எல்லாமே இடைவிடாமல் பிறர் மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. அதைப் போல் நாமும் அவற்றின் ஆதிக்கத்திற்கு உள்ளாகி வருகிறோம். இது நம்மைச் சுற்றி எஙகும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இப்போது உதாரணம் ஒன்றை எடுத்துக் கொள்வோம். ஒருவர் வருகிறார். அவர் நன்கு கற்றவர் என்பது உங்களுக்குத் தெரியும். அவரது மொழி நடை அழகாக உள்ளத. அவர் ஒரு மணி நேரம் உங்களுடன் பேசுகிறார். ஆனால் சொன்னதில் பெரிதாக எதுவும் உங்கள் மனதில் பதியவில்லை.

இன்னொருவர் வருகிறார். ஒரு சில வார்த்தைகளே பேசுகிறார். அவை நன்றாக ஒழுங்குப்படுத்தப்படவும் இல்லை. ஒரு வேளை இலக்கணப் பிழைகளும் அதில் காணப்படும். ஆனால் அவர் சொன்னது பேரளவிற்கு உங்கள் மனதை ஆக்கிரமிக்கிறது.

உங்களுக்குள் பலரும் இதை அனுபவித்திருப்பீர்கள். எனவே ஒரு போதும் வார்த்தைகள் மட்டுமே மனத்தின் பதிவை உண்டாக்கி விடுவதில்லை.

வார்த்தைகள், ஏன், எண்ணங்கள் கூட ஒரு பதிவை உண்டு பண்ணுவதற்கு மூன்றிலொரு பங்கு சக்தியை மட்டுமே அளிக்கின்றன, மனிதனே மற்ற இரண்டு பங்கை அளிக்கிறான். மனிதனின் கவரும் ஆற்றல் என்று நீங்கள் குறிப்பிடுகின்ற அந்தச் சக்தியே வெளியேறி உங்களிடம் பதிவை உண்டாக்குகிறது.

நமது குடும்பங்களில் தலைவர்கள் உள்ளனர். அவர்களுள் சிலர் வெற்றி பெறுகின்றனர். சிலர் பெறுவதில்லை. ஏன்? நாம் தோல்வியுறும்போது பிறரைக் குறை கூறுகிறோம். நாம் வெற்றி பெறாத அந்தக் கணமே, நமது தோல்விக்குக் காரணம் இவர்தான் என்று ஒருவரைக் காட்டிவிடுகிறோம்.

தோல்வியுறுகின்ற யாரும் தனது சொந்தக் குற்றங்களையும் பலவீனங்களையும் ஒப்புக் கொள்ள விரும்புவதில்லை. தன்னைக் குற்றம் அற்றவனாகக் கருதவும், குற்றத்தைப் பிறர் மீதோ, பிற பொருளின் மீதோ, ஏன் துரதிர்ஷ்டத்தின் மீதாவது சுமத்தவுமே ஒவ்வொருவனும் முயல்கிறான். குடும்பத் தலைவர்கள் தவறும்போது, சிலர் குடும்பத்தை நன்றாக நடத்துவதற்கும் பிறர் அவ்வாறு நடத்தாததற்கும் காரணம் என்ன என்பதைத் தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். வேறுபாட்டிற்குக் காரணம் மனிதனே, அவனது குணச்சிறப்பே, அவனது ஆளுமையே என்பதை அப்போது காண்பீர்கள்.

மனிதகுலத்தின் பெரிய தலைவர்களைக் கவனித்தால், அவர்களின் ஆளுமையே அவர்களைத் தலைவர்கள் ஆக்கியது என்பதையே எப்போதும் காண்போம். கடந்த காலத்தின் எல்லா நூலாசிரியர்களையும் சிந்தனையாளர்களையும் எண்ணிப் பார்ப்போம்.

உண்மையைச் சொல்வதானால், அப்படி எத்தனை எண்ணங்களைத்தான் அவர்கள் எண்ணிவிட்டார்கள்? கடந்த காலத்திலிருந்து மக்கள் குலத் தலைவர்கள் நமக்கு விட்டுச் சென்ற நூல்கள் அனைத்தையும் பாருங்கள்.

அவர்கள் எழுதிய புத்தகங்கள் ஒவ்வொன்றையும் மதிப்பிடுங்கள். இன்று வரை உலகில் நினைக்கப்பட்டுள்ள, புதிய, சொந்தமான உண்மைக் கருத்துக்கள் கையளவு மட்டுமே. அவர்கள் நமக்கு விட்டுச் சென்ற எண்ணங்களை அவர்களுடைய நூல்களில் படியுங்கள். அந்த நூலாசிரியர்கள் நமக்கு மாபெரும் மக்களெனத் தோன்றுவதில்லை. எனினும் அவர்கள் தங்கள் காலங்களில் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை நாம் அறிவோம்.

அவர்களை அவ்வாறு ஆக்கியது எது?

அவர்கள் சிந்தித்த எண்ணங்களோ, அவர்கள் எழுதிய நூல்களோ, அவர்கள் செய்த சொற்பொழிவுகளோ மட்டும் அல்ல, அப்போது இருந்து, இப்போது மறைந்துவீட்ட வேறு ஏதே ஒன்று, அதாவது, அவர்களது ஆளுமை. நான் முன்பு கூறியது போல், அவர்களின் ஆளுமை மூன்றில் இரண்டு பங்கு, அவர்களின் அறிவும் வார்த்தைகளும் ஒரு பங்கு. உண்மை மனிதன் அதாவது அவர்களின் ஆளுமையே நம்மை ஆக்கிரமிக்கிறது. நம் செயல்கள் விளைவுகள் மட்டுமே. மனிதன் உள்ளபோது செயல்கள் வந்தேயாக வேண்டும். விளைவு, காரணத்தைப் பின் தொடர்ந்தே தீரும்.

கல்வி, பயிற்சி இவை அனைத்தின் லட்சியமும் இந்த மனிதனை உருவாக்குவதாகவே இருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக நாம் வெறும் மேற்பூச்சு பூசி அழகுபடுத்த முயன்று வருகிறோம். அகத்தே ஒன்றும் இல்லாத போது புறத்தை அழகுபடுத்துவதால் என்ன பயன்? எல்லா பயிற்சிகளின் பயனும் நோக்கமும் மனிதனை வளரச் செய்வதே. தன் சகோதர மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன், அவர்கள் மீது மாய வலையை வீசியது போன்று அவர்களைக் கவர்பவன் ஆற்றலின் ஒரு சுரங்கமாகிறான். அத்தகையவன் தயாராகும்போது, விரும்புகின்ற எதையும் அவனால் செய்ய முடியும். அவனது ஆளுமையின் ஆதிக்கம், எதன் மீது செலுத்தப்பட்டாலும் அதனைச் செயல்பட வல்லது ஆக்கும்.

- சுவாமி விவேகானந்தர்


னிதனின் சக்தி நிலை பற்றிப் பேசும்போது ஏழு சக்கரங்கள் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவை மனிதனின் உடலில் உள்ளவை. இந்த சக்கரங்கள் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வது அவசியம்.

எல்லா இயந்திரங்களும் சக்கரங்கள் வழியாகவே நகர்கின்றன. சக்கரங்கள் இல்லாமல் ஒரு மாட்டு வண்டியோ காரோ நகர முடியாது. எனவே, சக்கரங்கள் இயக்கத்துக்கானவை. மனிதனை ஒரு பரிணாமத்திலிருந்து மற்றொரு பரிணாமத்திற்கு நகர்த்திச் செல்பவைதான் சக்கரங்கள்.

மனித உடலில நூற்றுக்கணக்கான சக்கரங்கள் உள்ளன. ஆனால் நாடிகள் சந்திக்கும் மையங்களாக ஏழு சக்கரங்களுக்கென்று தனித்தனி இடங்கள் குறிக்கப்பட்டிருந்தாலும் அவை ஒரே இடத்தில் இருக்குமென்று சொல்ல முடியாது.

சக்தி நிலையில் ஏற்படும் வளர்ச்சிகளுக்கேற்ப அவை நகரக்கூடும். இந்த ஏழும் சக்கரங்கள் என்று அழைக்கப்பட்டாலும் அவை வட்ட வடிவத்தில் இராது. முக்கோணங்களாகவே இருக்கும். மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் ஆகிய சக்கரங்களே அவை.

மூலாதாரம்: உடலின் அடிப்படையான சக்கரம், இந்த சக்கரம் தூண்டப்படிருந்தால் உணவு, உறக்கும் ஆகியவற்றிலேயே அதிக நாட்டம் இருக்கும்.

சுவாதிஷ்டானம்: உலகின் பொருள் தன்மை சார்ந்து நுகர்ச்சிகளில் இருகி ஈடுபடாட்டிற்குக் காரணமானது.

மணிப்பூரகம்:  உடலின் உறுதி மற்றும் நல மேம்பாட்டுக்கானது. இந்த சக்கரம் தூண்டப்பட்டவர்கள் கடும் உழைப்பாளிகளாக எறும்பைப் போல் சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள்.

அநாகதம்:  இந்த சக்கரத்துகென்று சில முக்கியத்துவங்கள் உண்டு. படைப்பாற்றல், அன்பு போன்றவற்றின் ஆதார சக்கரம் இது. முந்தைய மூன்று சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் ஆகியவை உலகியல் இன்பங்களுக்கும், வாழ்க்கைக்கும் உரியவை. அநாகத்த்தை அடுத்து வருகிற விசுக்தி, ஆக்ஞை, சகஸ்ரஹாரம் ஆகியவை அருள் நிலை, ஆன்மீக வளர்ச்சி போன்றவற்றிற்கு உரியவை.

இந்த இருவேறு நிலைகளுக்கும் மத்தியில் ஒரு சம நிலையான தன்மை அநாகதத்திற்கு உண்டு. இரண்டு இயல்புகளும் கலந்ததாக இது அமைந்துள்ளது. அதனால் தான், மேல் நோக்கிய ஒரு முக்கோணமும், கீழ் நோக்கிய ஒரு முக்கோணமும் பின்னிப் பிணைந்து ஒரு நட்சத்திரத்தை உருவாக்கும் தோற்றமே அநாகத வடிவம்.

மேல் நோக்கியமுக்கோணம் அருளியல் வாவுக்கும் கீழ்நோக்கிய முக்கோணம் உலகியல் வாழ்வுக்கும் அடையாளம். ஸ்ரீ சக்கரம் போன்ற எந்திரங்கள் முக்கோணங்கள் நிரம்பியதாய் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவை அநாகதத்தில் இருந்து உருவானவைதான்.

விசுக்தி:  என்பது தீயவற்றை வடிகட்டும் ஆற்றல் சிவபெருமானுக்கு ‘விசுவகண்டன்”; “நீலகண்டன்” என்று பெயர்கள் உண்டு.  இதன் பொருள், விஷத்தை வெளியே நிறுத்தியவர் என்பது. விசுக்தி சக்கரம் தூண்டப்பட்டிருந்தால் விஷத்தன்மை உடலுக்குள் நுழையாமல் தடுக்க முடியும். விஷம் என்றால் உணவு மட்டுமல்ல, தீய உணர்வுகள், எண்ணங்கள், சக்திகள் என்று விஷத்தன்மை கொண்டவற்றிலிருந்து விடுபட முடியும்.

ஆக்ஞை:  இது ஞானம், தெளிவு, போன்றவற்றுக்கான சக்கரம். விசுக்தியைப் பொறுத்தவரை, அந்தச் சக்கரம் தூண்டப்பட்டால் ஆற்றலோடு நிகழமுடியுமே தவிர சமூகத்தில் நிறைய எதிர்ப்புகள் இருக்கும். சமூக வாழ்க்கையோடு உடன்பட இயலாது. மக்களிடமிருந்து விலகி வாழ்கிற நிலையிலேயே இருப்பார்கள். ஆனால் ஆக்ஞா முழுவதுமாகத் தூண்டப்பட்டவர்கள் சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற ஞானவான்களாகத் திகழ்கிறார்கள்.

சஹஸ்ரஹாரம்:  இந்த சக்கரம்,பரவச நிலையைத் தரத்தக்கது. எப்போதும் ஒருவிதமான பரவச நிலையிலேயே இருக்கிற தன்மை, சஹஸ்ரஹாரா முழுமையாகத் தூண்டப்பட்டவர்களுக்கு உரியது. இவர்களுக்கு உணவு ஊட்டுதல், தூய்மை செய்தல், உடை உடுத்துதல் போன்றவற்றை மற்றவர்கள்தான் செய்ய வேண்டும். இதனால் இவர்கள் “அவதூதர்கள்” என்று அழைக்கப்படுகின்றனர்.

இந்த ஏழு சக்கரங்களும், வாழ்வின் ஏழு விதமான தீவிரத்தன்மைகள், பெரும்பான்மையான மக்கள் மூலாதாரத்திற்கும் மணிபூரகத்திற்கும் நடுஇல் சக்தி நிலைதூண்டப்பட்டு வாழ்ந்து முடிக்கிறார்கள். சிலருக்கு மட்டுமே அநாகதம் வரையில் அந்த ஆற்றல் துண்டப்படுகிறது.

வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமாய் சக்தி நிலை உயரும். ஆக்ஞாவிலிருந்து சஹஸ்ரஹாரா நோக்கி சக்தி நகர்வதற்கென்று மறு மையத்திற்கு குதிக்கிற சூழ்நிலைதான் அங்கே. அதற்குத்தான் ஒரு குருவின் பூரணமான அருளும் துணையும் தேவைப்படுகிறது. அதற்கு அளப்பரிய நம்பிக்கை வேண்டும். பல்வேறு பிறவிகளுக்குப் பிறகும் நம்பிக்கை வைக்காதாலேயே இந்த வாய்ப்பை பலரும் இழக்கின்றனர்.

ஆக்ஞாவைத் தொட்டவர்கள் அந்த எல்லையிலேயே நின்று விடுகின்றனர். அடுத்த சக்கரம் நோக்கித் தூண்டிச் செல்வதற்கு மிகுந்த நம்பிக்கையும் அர்ப்பணிப்புணர்வும் தேவை. இராமகிருஷ்ணரின் வாழ்வில் அது நிகழ்ந்தது. காளியிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த அவர், அவ்வப்போதுசில சமாதி நிலைகளை அடைவார். அப்போதெல்லாம் காளியிடம் பேசுவதாக, காளிக்கு உணவு தருவதாக உணர்வார்.

சமாதி நிலை கடந்து வெளிவந்ததும், காளியைத்தேடி சிறு குழந்தை போல் அழுவார். ஆக்ஞாவை எட்டியிருந்த அவர் அதைத்தாண்டிச் செல்ல விரும்பவில்லை. அப்போதுதான் தோத்தாபுரி என்கிற ஞானி இராமகிருஷ்ணரைக் கண்டார். முழுமையான வளர்ச்சிக்குரியவர் ஒரு எல்லையிலேயே தேங்கி நிற்பது கண்டு அவரிடம் நிறையப் பேசிப் பார்த்தார்.

இராமகிருஷ்ணர் ஒப்புக் கொள்ளவில்லை. தோத்தாபுரி, அருகிலிருந்த ஒரு கண்ணாடித் துண்டை எடுத்து, இராமகிருஷ்ணரின் ஆக்ஞாவில் அழுந்தக் கிழித்தார். உடனே முற்றிலும் புதிய எல்லையைத் தொட்ட இராமகிருஷ்ணர், பரமஹம்ஸர் ஆனார்.

சக்கரங்களைத் தூண்டுவதென்பது மிகவும் நுட்பமான ஒன்று. ஞானிகளாலேயே அது சாத்தியம். அடிப்படை சக்தி நிலையோடு விளையாடுவதால் அதனை எல்லோரும் செய்து விட இயலாது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் சக்கரங்களைத் தூண்டுவது தொடர்பான ஏமாற்று வேலை ஏராளமாக நடைபெறுகிறது. குண்டலினியை எழுப்புவது பற்றியும் நிறைய புத்தகங்கள் வந்துவிட்டன.

ஆத்ம சாதனைகளை, ஆன்மீகப் பயிற்சிகளை இடையறாமல் செய்து வந்தாலே சக்தி நிலை இயல்பாக மேலெழும்பும். ஆன்மீகப் பயிற்சிகள் உரிய முதிர்ச்சி அடையும்போது சக்தி நிலை மேலெழும்புமே தவிர சக்கரங்களைத் தனித் தனியாகத் தூண்டுதும் நல்லதல்ல.

ஏழு நிலையிலும் தீவிரத்தன்மை கொண்ட நமது சக்தி நிலை தூண்டப்படும் பொது மனிதன் தன் அளப்பரிய ஆற்றலை உணர்கிறான். அதற்கு பிராணாயாமம் போன்ற முறையான பயிற்சிகளே வழி.

மனித சக்தி என்பது, தனக்குள் இருக்கும் அருட்பேராற்றல், அதனை உணர்வதன் மூலம் ஒரு மனிதனால் தன்னையே உணர இயலும். தன்னை உணர வேண்டுமானால் உலகியல் வாழ்க்கையில் இருந்து விடுபட்டாக வேண்டுமா? இந்தக் கேள்வியைப் பலரும் கேட்கிறார்கள்.

உலகியல் வாழ்க்கை, லௌகீக வாழ்க்கை என்று எதைக் குறிப்பிடுகிறோம்?

நமது உணவை நாமே சமைக்கிறோம். நம் ஆடைகளை நாமே தூய்மை செய்கிறோம். இவையெல்லாம் உலகியலிலன் அங்கங்கள்தான். இவற்றையெல்லாம் செய்யாமல் இங்கே வாழ இயலாது.

ஒவ்வொரு மனிதரும், உலகியலில் தான் எந்த வித்ததில் ஈடுபட வேண்டுமென்பதை, சுய விருப்பத்தின் பேரில் தானாகவே தீர்மானிக்கிறார். சிலர் அரசியலில் இருக்கிறார்கள். சிலர் அலுவலகங்களில் பணிபுரிகிறார்கள். சிலர் தொழிலகங்களை நடத்துகிறார்கள். சிலர் தரை பெருக்குகிறார்கள். இவர்கள் எல்லோருமே உலகியலில் இருப்பவர்கள்தான். எனவே உலகியலில் இருந்து விடுபடுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல.

உலகியலில் என்ன செய்ய விரும்புகிறோம். எந்த அளவுக்கு அதனை செய்வது என்பதெல்லாம் ஒவ்வொரு தனி மனிதரும் தன் விருப்பு வெறுப்புக்கேற்ப தேர்வு செய்து கொள்ள வேண்டியதுதான். அது ஒவ்வொரு தனி மனிதருக்கும் உள்ள உரிமையும் கூட.

இதில் சிலர் தானாக எதையும் செய்வதில்லை. பிறர் செய்வதையெல்லாம் பார்த்து அது போல் செய்ய முற்படுகிறார்கள். தான் என்ன செய்ய வேண்டும் என்கிற தெளிவோ, விழிப்புணர்வோ அவர்களிடம் இல்லை.

இத்தகைய ஒரு சிலர்தான், ஆன்மீக வழியில் செல்பவர்களைப் பார்த்து ‘இவர்கள் பொறுப்புகளை உதறிவிட்டுப் போகிறார்கள். உலகிற்காக வாழாமல் தனக்காக வாழ்கிறார்கள்’ என்று புகார் சொல்கிறார்கள்.

வீட்டிலும் அலுவலகத்திலும் மட்டுமே இயங்குபவரகள் தனக்காக வாழ்பவர்கள். அவர்களுக்குத்தான் உலக நலனில் அக்கறையில்லை. தனது சொந்த நலனுக்காக என்று வந்துவிட்டு அந்த வலையிலிருந்து விடுபட இயலாமல தவிப்பவரகள் ஆன்மீகப் பாதையில் செல்பவர்களைப் பார்த்து “வாழத் தெரியாதவர்கள், உலகத்தை விட்டு ஒதுங்கிவிட்டவர்கள்” என்று சொல்லத் தொடங்குகிறார்கள்.

ஒரு குடிகாரன் இருந்தான். முழுபோதையில் தள்ளாடியபடியே ஒருபேருந்துக்குள் ஏறியவன், எல்லார் கால்களையும் மிதித்து பெட்டிகளைக் கலைத்து, தட்டுத்தடுமாறி, ஒரு கிழவியின் மீது விழுந்தான். கோபம் கொண்ட அந்தக் கிழவி, ‘ நீ நரகத்திற்குப் போவாய்’ என்று சபித்தாள். உடனே அந்தக் குடிகாரன், ‘அப்படியானால் நான் தவறான பேருந்தில் ஏறிவிட்டேன்’ என்று சொல்லிவிட்டுக் கீழே இறங்க ஆரம்பித்தான்.

எந்தப் பேருந்து சரியானது, எது தவறானது என்பதெல்லாம் குடிகார்ர்களுக்குத தெரியாது. தங்கள் வாழ்வை விதம் விதமான சிக்கல்களுக்கு ஆட்படுத்திக் கொண்டு, சூழ்நிலைக் கைதிகளாய் வாழ்ப்பவர்கள், தங்கள் வாழ்வை திறம்பட நிர்வகித்து விரும்பும் திசையில் திட்டமிட்டு பயணம் செய்பவர்களைப் பார்த்து ‘இவர்கள் தவறானவர்கள்’ என்று பேசுகிறார்கள்.

இன்றைய உலகில் 0.1% பேர்தான் ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுத்து அதில் இருப்பவர்கள். 50% பேர் இயந்திரங்கள் போல் இடையறாமல் செயல்பட்டு, தங்கள் செயல்களாலேயே உலகுக்குக் கேடு விளைவிக்கிறார்கள்.

மனித சுயநலத்தின் காரணமாய், பூமி, வேண்டாத பாரங்களை சுமந்து கொண்டிருக்கிறது. 50% பேரையாவது ஆன்மீக நெறியில் ஈடுபடுத்தினால் இந்த உலகம் காற்றப்படும்.

அளவுக்கதிமான செயல்களிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்கள் தங்களுக்கோ, சமூகத்திற்கோ, உலகிறகோ சுற்றுச சூழலுக்கோ கேடு விளைவிப்பதில்லை.

சிறிது கூட விழிப்புணர்வின்றி, தாங்கள் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், மற்றவர்கள் செய்வதையெல்லாம் தாங்களும் செய்ய முற்பட்டவர்கள் பூமி உருண்டைக்கு போதுமான அளவு சேதம் விளைவிக்கிறார்கள். இத்தகைய செயல்களிலிருந்து விடுபடுவதொன்றும் தவறானதல்ல. அதுவே மனித குலத்திற்கு செய்கிற பெரும் உதவி.

இந்த உலகம் எப்போதுமே அற்புதமானதாக இருந்து வந்திருக்கிறது. தன்னலம் மிக்க சிலரின் அடாவடி செயல்கள், உலகுக்கு நன்மை செய்வதாய் நினைத்துக் கொண்டு அவர்கள் செய்யும் தீமைகள், இவைதான் உலகிற்கு எதிரான ஒன்றை ஏற்படுத்தி வருகிறது.

மனிதகுலம் நாகரீகமடைந்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆன பிறகும் மனிதகுலம் வாழ்வதற்காக எத்தனையோ விலங்குகளை வேட்டையாடி, சில சமயம் மனிதர்களையே வேட்டையாடிய பிறகும் மனித குலம் நன்மையடையவில்லை.

மனிதன், வெளிச்சூழலை சரி செய்ய விஞ்ஞானம், தொழில் நுட்பம் ஆகியவற்றின் உதவிகொண்டு என்னென்னவோ செய்துவிட்டான். ஆனால் அவன் உள் தன்மையில் நாகரீகமடையவில்லை.

உள்நிலையில் கவனம் செலுத்தி உரிய மாற்றங்களை ஏற்படுத்தினால் மட்டுமே மனிதன் உயர்நிலை அடைய இயலும். அத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக வழியே யோகம் தியானம் ஆகியவை.

சக்தி என்கிற சொல் மனித ஆற்றலைக் குறிக்கிறது. பொருள் தன்மை சார்ந்து பார்க்கிறபோது அதுசெயலாக வெளிப்படுகிறது. அது மட்டுமே சக்தி அல்ல.

உள்நிலையில் மனிதனுக்கென்று ஒரு சக்தி நிலை உள்ளது. அந்த சக்தி நிலையை மேம்படுத்துவதற்கென்று தான், யோக, தியானம் என்ற ஆன்ம பயிற்சிகள் உள்ளன. ஆனால், யோகா மற்றும் தியானத்தின் மூல நோக்கமே இந்த சக்தியை மேம்படுத்துவதல்ல. அது ஒரு பக்க விளைவு.

தன் மூலத்தை மனிதன் உணர்வதற்காகத்தான் யோகா, தியானம் போன்றவை. இதில் இரண்டு கேள்விகளை பலர் எழுப்புகிறார்கள். ஒன்று, ஆன்மீக நிலையிபல பயிற்சிகள் மேற்கொண்டு சக்தி நிலையை உயர்த்த முற்படுவது செயல்கள் மூலம் வெளிப்பட வேண்டுமா?

இன்னொன்று, இன்றைய அறிவியல் உலகில், அதிகார வேட்டை போன்றவை நிறைந்திருக்கிற உலகில், வாழ்க்கையிலிருந்து மனிதனை விலகிப் போகிற மனநிலையை ஆன்மீகம் ஏற்படுத்துமா?

முதலில், சக்திநிலை மேம்பாடு செயலாக வெளிப்படுமா என்கிற கேள்வியைப்பார்க்கலாம். ஆன்மீகப் பயிற்சிகளை அடிப்படையில் உள்நிலை அறிவியலாக நீங்கள் அணுக வேண்டும். இன்று புற நிலை அறிவியலுக்குத் தரப்படுகிற முக்கியத்துவம் அதிகமாக இருக்கிறது. ஆனால் புறநிலை அறிவியலுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிற சமூகத்தில் பொருளாதாரம் மேம்படுகிறதே தவிர வாழ்க்கை அவ்வளவு சுலபமாயில்லை.

மனிதர்களின் சுவாசக் காற்றில் கூட விஷத்தைக் கலக்கும் அளவிற்கு, வெளிநிலை அறிவியல் வளர்ச்சி எல்லைத் தாண்டி போய் விட்டது. எனவே, மனிதன் உள்நிலையில் கொண்டு வருகிற வளர்ச்சி இந்த சமூகத்திற்கு செயல்களாக வெளிப்பட வேண்டும் என்று கருதுகிறார்கள்.

தனக்கு எது கிடைத்தாலும் அதனை வெளிப்படுத்துவது என்கிற மனநிலை, தன்னை மையப்படுத்திக் கொள்கிற ஒரு அகங்காரத்தின் வெளிப்பாடே தவிர அது ஆன்மீகம் அல்ல. குறிப்பாக, ஆன்மீகப் பாதையில் உண்மையாகவே நடையிடுகிற ஆர்வமுள்ளவர்கள் தங்கள் சக்தி நிலை உயர உயர சில சக்திகள் கைவரப்பெறுவார்கள். ஒன்று, ஆன்மீகப் பயணத்தின் பாதையிலேயே இது வரலாம். அல்லது சில நல்ல இடங்களில் ஆன்மகப் பயிற்சியை மேற்கொண்டு பாதியில் கைவிடப்பட்டவருக்கும் இது அரைகுறையக் கிடைக்கலாம்.

உடனே, தங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த அரைகுறை நிலைகளை வைத்துக்கொண்டு, அவற்றைப் பெரிதாக விளம்பரம் செய்ய முற்படுகிறார்கள்.

ஒரு மனிதன் சக்தி நிலையை மேம்படுத்துவது என்பது தன்னைத்தானே மேம்படுத்துவதற்குத் தானே தவிர, இன்னொரு மனிதரின் எதிர்காலத்தை கணித்துச் செல்வதற்கோ, அவர்களுக்கு ஆலோசனைகள் சொல்வதற்கோ அல்ல.

எல்லைகள் கடந்த ஒரு விடுதலை நோக்கித் தான் ஆத்ம சாதனைகள் தொடங்குகின்றன. சிறிது உள்ளுணர்வு மேம்பட்டவுடனேயே மற்றவர்களிடம் சென்று, திருமணத்திற்கு நாள் குறிப்பது, “இங்கே தண்ணீர் இருக்கிறது தோண்டுங்கள்” என்று சொல்வது என்றெல்லாம் சிலபேர் செய்தார்கள்.

ஆன்மீகப் பயிற்சி பெறுபவர்கள் இத்தகைய சித்திகளைப்பெற நேர்ந்தால் அவற்றை உள்நிலை நோக்கி திருப்பி விட வேண்டும். தங்கள் சக்தி நிலையை ஒரு கண்காட்சிபொருளாக மக்கள் மாற்றுவதில் பயனில்லை. மற்றவர்களால் செய்ய முடியாததை செய்து காட்டுவதற்கு ஆன்மீகம் தேவை இல்லை.

இது பல வகைகளிலும் மனிதர்களை சிறைப்படுத்திவிடும். இந்தியாவில் கூட கோயிலுக்குப் போகிற வழியெங்கும் கடைகள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அந்த கடைகளில் ஈர்கப்பட்டால் கடைசியில் கோயிலுக்குள் போக நேரமிருக்காது. இதுவும் இப்படித்தான்.

உள்நிலையிலிருக்கிற இறைத்தன்மையை உணர்வதற்காகச் செல்கிற வழியில் சிலர் வணிக மனப்பான்மையோடு தங்கள் சக்தி நிலைகளை வீணடிக்கத் தொடங்கினால் அவர்களால் தங்களை உணர முடியாது. எனவே, ஏராளமான செயல்கள் மூலமோ, சித்து வேலைகள் மூலமோ தங்களை வெளிக் காட்டிக் கொள்கிற, பணியை ஆன்மீகப் பாதையில் நடையிடுபவர்கள் பெரும்பாலும் செய்வதில்லை.

வாழ்க்கையை வெறும் பொருள் தன்மை சார்ந்து உணர்ந்து வைத்திருப்பவர்கள் தான் ஒரு மனிதனை உடல் நோயிலிருந்தோ, பொருளாதரத் தொல்லையிலிருந்து விடுவிப்பது தான் மிகப் பெரிய சாதனை என்று கருதுவார்கள். பொருள் தன்மை சார்ந்த கண்ணோட்டத்திலிருந்து விடுபட்டு உள்நோக்கி வளர்வதற்கு பெயர்தான் விடுதலை என்பது.

அதேபோல, இன்று அதிகாரபலம் அதிகம் இருக்கிற சூழ்நிலையில், யோகம், தியானம் போன்றவை எந்த அளவிற்கு உதவும் என்ற கேள்வியும் எழுந்திருக்கறது. வெளிச் சூலி பொருளாதர பலமும், அதிகார பலமும் வளர்ந்திருக்கிறது என்பது உண்மையானால் எப்போதும் இருந்ததை விட இப்போதுதான் ஆன்மீகத்திற்கான அவசியம் ஏற்பட்டிருக்கிறது. பணம், பதவி, அதிகாரம், போக வாழ்க்கை போன்றவற்றை எல்லாம் மனிதன் ஏன் தேடிப் போகிறான், என்றால் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்று அடிப்படையில் அவனுக்குள் ஒரு வேட்கையிருக்கிறது. அதற்கென்று பலவிதமான முயற்சிகளை மனிதன் மேற்கொள்கிறான்.

உலக இன்பங்களையே ஆனந்தம் என்று ஒரு எல்லைவரைக் கருதிக்கொண்டிருக்கிறான். சிலருக்கு பணம் சேர்ப்பது இன்பம். சிலருக்கு பெரிய அதிகாரத்தை அனுபவிப்பது இன்பம். சிலருக்கு களியாட்டங்களில் ஈடுபடுவது இன்பம். ஒரு எல்லைவரை இதை ஆனந்தம் என்று மனிதன் தவறாகப் புரிந்துகொள்வான். ஆனால் அது ஆனந்தம் இல்லை என்பது காலம் கடந்து புரிகிறப்போது வருத்தத்தில் ஆழ்ந்துவிடுவான்.

எப்போது நிறைய அதிகாரமும்,பொருளாதாரமும் மனிதனிடம் இருகிறதோ அப்போது அவற்றை உரிய முறையில் கையாளுகிற முதிர்ச்சியை அவனுக்குத்தரவேண்டம். அத்தகைய முதிர்ச்சியை தருபவைதான் யோகா, தியானம் போன்றவை. அதனால்தான் சொன்னேன் உள்ளபடியே அதிகாரமான சூல் இருக்குமானால், அந்த சமூகத்தில்தான் ஆன்மீகத் தேடலுக்கான அவசியம் அதிகரிக்கிறது என்று.

அதிகாரங்களை மன முதிர்ச்சியோடு கையாளத் தெரியாத மனிதர்கள் தாங்களும் துன்பமடைந்து மற்றவர்களையும், துன்பத்திற்கு ஆளாக்குவார்கள்.

சமூகம் சார்ந்த பொறுப்புணர்வை தியானம் ஏற்படுத்துகிறது. செயல்களைக் கடந்து கண்மூடி அமைதியாக இருப்பதென்பது சோம்பேறித் தனத்தினால் அல்ல. அது அளவுகடந்த பொறுப்புணர்ச்சியின் அடையாளம்.

மற்றவர்கள் மேல், ஆதிக்கம் செலுத்துகிற சூழ்நிலையில் இருப்பவர்கள் மிக நிச்சயமாக தங்கள் உள் நிலையை சம்ச்சீராக வைத்துக் கொள்வது அவசியம். அதிகார போதையின் உச்சத்தில் இருந்த ஒரு மனிதரை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

முசோலினி பெரிய சர்வாதிகாரி. அவரது ஆட்சியில் ஒரு காரியம் செய்தார் அதனை சாதனை என்று அவர் கருதினார். இத்தாலியில் அப்போது ரயில்களெல்லாம் தாமதமாக வந்து கொண்டிருந்தன. இது முசோலினிக்குப் பிடிக்கவில்லை. எனவே, சில என்ஜின் ஓட்டுநர்களைப் பிடித்து சுட்டுக் கொன்று “தாமதமாக ரயில்கள் வந்தால் உங்களுக்கு இதுதான் கதி” என்று எச்சரிக்கை விடுத்தார். முசோலினி. அன்று தொடங்கி இத்தாலியில் ரயில்கள் சரியான நேரத்திற்கு ஓடத் தொடங்கின.

இது மாதிரியான சம்பவம் அதுவரை வரலாற்றில் நிகழ்ந்ததேயில்லை. ஆனால், அன்று அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டது. இதை ஒரு பெரிய சாதனை என்று நம்பி, முசோலினி ஏகத்திற்கு மகிழ்ச்சியடைந்தார். அந்த சாதனையைக் கொண்டாடும் விதமாக, தன் உருவத்தை ஒரு அஞ்சல் தலையாக வெளியிட முடிவு செய்தார். இத்தாலியில் ரயில்கள் சரியான நேரத்திற்கு ஓடுவதையொட்டி முசோலியின் உருவத்தோடு ஒரு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

இந்த அஞ்சல் தலையை வெளியிட்டு கொஞ்சகாலம் கழிந்தது. இதில் ஒரு சிக்கல் இருப்பதை எல்லோரும் உணரத் தொடங்கினார்கள். எப்போதெல்லாம் இந்த அஞ்சல் தலை ஒட்டப்படுகிறதோ, அப்போதெல்லாம் சீக்கிரம் அந்த அஞ்சல் தலைகள் உறையிலிருந்து விழுந்து விடுவதை, கவனிக்கத் தொடங்கினார்கள்.

அஞ்சல் துறையின் கவனத்திற்கு சென்ற இந்த சிக்கல், முசோலியின் கவனத்திற்கும் கொண்டு போகப்பட்டது. இதற்கு மத்தியில் ஏன் இவ்வாறு நிகழ்கிறது என்று, தகவல் துறையினர் ஒரு ஆய்வு செய்தனர். அதற்குள் கோபமடைந்த முசோலினி அஞ்சலக அலுவலர்களை அழைத்தான். “ஏன் சரியான பசைகளை நீங்கள் பயன்படுத்துவதில்லை. அஞ்சல் தலைகள் உதிர்ந்து தபால்காரரின் பைக்குள் நிறைய அஞ்சல் தலைகள் விழுந்து விடுகிறதாமே ஏன் இப்படி?” என்று கடிந்து கொண்டான்.

அந்தத் தலைமை தபால், அதிகாரி மிகுந்த அச்சத்தோடும், தயக்கத்தோடும் முசோலினியிடம், “ஐயா, இருப்பதிலேயே தலைசிறந்த தரத்தில் தான் பசைகளை நாம் அஞ்சல் நிலையங்களில் பயன்படுத்துகிறோம். ஆனால் அஞ்சல் நிலையங்களில் வந்து இந்த அஞ்சல் தலையை வாங்கி ஒட்டுகிற பெரும்பாலானவ்கள், பசையைப் பயன்படுத்துவதில்லை. அதன் பின் புறத்தில் எச்சில் தடவித்தான் ஒட்ட விரும்புகிறார்கள். அதனால்தான் இந்த அஞ்சல் தலைகள் மட்டும் தபாலில் தங்குவதில்லை. உதிர்ந்து விடுகின்றன” என்று சொன்னாராம்.

தன்னைத் தானே வியந்து பாராட்டி அஞ்சல் தலை வெளியிடுமளவுக்கு முசோலியின் அதிகார போதை அவனை ஆட்டுவித்தது. ஆனால் அந்த சமுதாயமோ அவனை ஆட்டுவித்தது. ஆனால் அந்த சமுதாயமோ அந்த அஞ்சல் தலையில் எச்சில் துப்பி அவனை அவமானப்படுத்தத்தான் ஆசைகொண்டது. அதிகார வசதி கையிலிருக்கும் போது உள் நிலை சமச்சீராக இல்லாத மனிதர்கள், தீவிரவாதிகளாக மாறுகிறார்கள். எனவே, உள்நிலை அறிவியலாகக்கண்ட, தியானம், யோகா இன்றுதான் அதிகம் தேவைப்படுகிறது.

மனிதன், தன்னை உணர்ந்து கொள்வதற்கான வழிகளாக கர்ம யோகம், பக்தியோகம், ஞானயோகம் ஆகிய மூன்றும் உள்ளன.

ஆழ்நிலையில் இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றாலும், இவற்றிற்கென்று தனி இயல்புகள் உண்டு. செயல்களின் வழியாக, மனிதன் தன்னை உணரும் நிலைக்கு கர்மயோகம் என்று பெயர்.

இயல்பிலேயே மனிதன் செயல்பட்டுக் கொண்டேயிருப்பான். செய்வதற்கென்று நிறையப் பணிகள் இருக்குமேயானால், தான் நன்றாக இருப்பதாக அவன் நினைத்துக்கொள்கிறான். செயல்களை போதிய விழிப்புணர்வோடு செய்யும் போது அது, பயன் கருதி நிகழ்வதில்லை. அப்போதுதான் கர்மயோகம் என்ற சொல்லக் கூடிய நிலையை உங்கள் செயல் எட்டும்.

அன்பு நிலையில் இருப்பதன் பெயரே பக்தி அந்தச் சொல்லுக்குப் பொருள், காண்பவை, காணாதவை அனைத்தின் மீதும் அன்பு கொண்டிருப்பதுதான்.

வழிபாட்டின் போதோ அல்லது, ஒரு சில நேரங்களில் மட்டுமோ, அன்பு நிலையை உணர்ந்தால் அதன் பெயர் பக்தி அல்ல. அது இடையறாமல் நிகழ்வது.

விருப்பு, வெறுப்பற்ற தன்மையில்தான் இந்த மனநிலை ஏற்படும். ஒன்றின் மீது விருப்பம், என்றாலே இயல்பாக இன்னொன்று வெறுக்கப்படும்.

உலகம் முழுவதும் அழகானதாக தென்படும்போது, அன்பு நிலையில் இருப்பதாக அர்த்தம். சில தனிமனிதர்கள் மீது மட்டும், ஏற்படுகிற பற்றுதல் அன்பு ஆகிவிடாது.

எல்லாவிதமான, உணர்வுகளிலேயும் அடுத்தவர்கள் மேல் காட்டுகிற பரிவுதான் தலைசிறந்த உணர்வு.

அன்பு என்பது மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமல்ல. அது, ஆழமான ஆனால் அழகான வலி. மிக இயல்பாக கண்களிலிருந்து கண்ணீரை அன்பு வரவைக்கும்.

மேற்கத்திய நாடுகளில் கண்ணீர் வடிப்பதை பெரிய அளவில் அங்கீகரிப்பதில்லை. ஆனால், இந்தியாவில் தொன்மையான வாழ்க்கை முறை கண்ணீரை ஒரு மனிதரின் நுட்பமான உள் தன்மையின் அடையாளமாகவே உணர்த்துகிறது.

பொதுவாகவே, ஒரு மனிதன் எது குறித்து அதிகம் சிந்திக்கிறானோ அதைச்சார்ந்தே அவன் அதிகம் பெறுகிறான். எனவே ஆத்ம சாதனைகளால் அன்பு நிலை சார்ந்து ஒரு மனிதனுடைய உணர்வுகள் தீவிரமடையும் போது, தன்னுடைய ஆற்றலை உணரமுடிகிறது.

அன்பு செய்தல் என்று எதுவுமேயில்லை. அன்பு நிகழ. அனுமதிக்க முடியுமே தவிர அன்பு செய்வது இயலாது. ஏனெனில் அன்பு என்பது ஒரு தன்மை. தியானம் எப்படியொரு தன்மையோ, ஆன்மீகம் எப்படியொரு தன்மையோ அதுபோல தான் அன்பும்.

ஒவ்வொரு மனிதரும் தன்வாழ்வில் ஏதாவது ஒரு விநாடியில் அன்பின் தன்மையை உணர்ந்திருப்பார். அது எல்லோருக்கும் ஒரு விநாடியாவது ஏற்பட்டிருக்கும். அந்த ஒரு விநாடியில் அவர் உணர்ந்த அன்பின் தன்மையை தக்கவைத்துக் கொள்ள அவருக்குத் தெரியவில்லை.

ஒரு மனிதர் அன்பாகவும், ஆனந்தமாகவும் இருப்பதென்பது வாழ்வில் எப்போதோ ஏற்படும் அனுபவமல்ல. அதற்கான வாய்ப்பு விநாடிக்கு விநாடி இருக்கிறது. அதனை விழிப்புணர்வோடு அறிந்து கொள்கிற வாய்ப்பை தியானம் ஏற்படுத்துகிறது.

இத்தகைய தன்மையை மனிதருக்குள் ஏற்படுத்துவது கர்மயோகம், பக்தியோகம், ஞான யோகம் மூன்றிலுமே சாத்தியம்.

உள்நிலை பற்றிய விழிப்புணர்வின் மூலம், தன்னிடம் அன்பு, எப்போதோ ஏற்படும் உணர்வாகயிருக்கிறதா? அல்லது நிலையான தன்மையாய் இருக்கிறதா? என்பதை உணர முடியும்.

பற்றுதல்களையும், பலவீனங்களையும் அன்பு என்று தவறாகப் புரிந்துகொண்டு அவற்றன்பாதிப்பில் இருக்கும்வரை மனிதன் தன்னுடைய ஆற்றலை எவ்விதத்திலும் உணர முடியாது.

ஒவ்வொரு உயிரும் அன்பைத்தான் தேடுகிறது. சிலருக்கு அது பாதுகாப்பு ஏற்படாகவோ, பரஸ்பரம் நன்மை தரும் திட்டங்கள் போலவோ, ஆகிவிடாமல் உயிரின் இயல்பான தன்மை அன்பு என்பதை உணர்கிற போது மனிதன் எண்ணிப்பாராத அளவு பயன்பெறுகிறான்.

விழிப்புணர்வு இல்லாத மனிதர்களைப் பொறுத்தவரை தன்னை மறந்த நிலைகளிலெல்லாம், அகங்காரம் இன்றிதான் காணப்டுகிறார்கள் விளையாடும்போது தன்னை மறந்து விளையாடுகிறார்கள். கீழே விழுந்தால் உடனே அகங்காரம் எழுந்து விடுகிறது.

குளியறையில் தன்னை மறந்து குளியலில் ஈடுபடும்போது அகங்காரம் இருப்பதில்லை. யாராவது, கதவைத் தட்டினால் உடனே அகங்காரம் எழுகிறது. எனவே, மனிதர்களுக்கு “அகங்காரம்” ஒரு முகமூடி போல் இருக்கிறது.

அதனைக் கையில் வைத்திருக்கிற மனிதன் தன்னையும் அறியாமல் சில நேரங்களில் கீழே வைத்து விடுகிறான். யாராவது வந்தால் உடனே அதனை மீண்டும் அணிந்து கொள்கிறான்.

“தன்னை உணர்ந்த ஞானிகளுக்கு அகங்காரம் இருக்குமா?” என்று பலர் என்னைக் கேட்டிருக்கிறார்கள்.

அகங்காரத்துக்குள்ளேயே சிக்கி உழுன்று கொண்டிருக்கும் ஒரு மனிதன் அந்த அகங்காரத்தையே தன் அடையாளம் என்று கருதிக் கொண்டேயிருக்கிறான். அது தன் அடையாளம் அல்ல என்கிற தெளிவு ஏற்படும் போது, அதற்கு “விழிப்புணர்வு” என்று பெயர்.

அடிப்படையில், அகங்காரம் என்பது ஒரு பாதுக்காப்பு ஏற்பாடு. அது பாதுகாப்பு உணர்வின் வெளிப்பாடு.

ஒரு மனிதன், தன் எல்லையற்ற தன்மையை, ஒரு எல்லைக்குட்பட்ட உடலோடோ, வேறு சில எல்லைகளோடோ அடையாளப்படுத்தத் தொடங்கும்போது அது “அகங்காரம்” ஆகிறது.

தன்னுடைய அகங்காரம் இன்னொரு மனிதனின் அகங்காரத்தால் ஆக்கிரமிக்கப்படும்போது சிக்கல் ஏற்படுகிறது.

மாறாக, அன்பு நிலையில் அவரிடம் இன்னொருவர் கரைந்து போகிபோது அங்கே ஆக்கிரமிப்பு, ஆதிக்கம், போன்றவற்றிற்கு இடமில்லை.

ஒரு கைக்குழந்தைக்குக் கூட தேவையான நேரத்தில் தேவையான உணவு தரப்படாவிட்டால் கோபம் வருகிறது.

கோபத்தை வெளிப்படுத்த குழந்தை வீறிட்டு அழுகிறது இத்தனைக்கும் அந்தக் குழந்தைக்கு தன் பெயர் என்னவென்று கூட தெரியாது. ஆனால், தன்னைப் பற்றிய எண்ணம் அதற்குள் ஏற்பட்டு விடுகிறது.

“அகங்காரம்” எனபது நிழலைப் போன்றது. உடல் என்ற ஒன்று ஏற்பட்டுவிட்டால் எப்படி நிழல் விழுவதைத் தடுக்க முடியாதோ அதைப்போல அகங்காரம் எழுவதையும் தடுக்க முடியாது.

சிலர், என்னிடம் வந்து “ஊரில் மழை பெய்யவில்லை ஏதாவது செய்து மழை வர ஏற்பாடு செய்யுங்கள்” என்றுசில சமயங்களில் கேட்பதுண்டு. இதுவே, அகங்காரத்தின் வெளிப்பாடுதான்.

இயற்கைக்கு எதிரான செயல்களைச் செய்வது, தங்கள் சுயநலத்திற்கு இயற்கைய மாசுபடுத்தும் தொழில்களை செய்வது, பிறகு யாரைக் கொண்டாவது மழையை வரழைத்து விடாலம் என்று கருதுவது, அகங்காரம் இல்லாமல் வேறென்ன?

மகாத்மா காந்தி ஒரு முறை சொன்னார். “இந்த உலகில் எல்லா மனிதர்களின் தேவைக்கும் உரிய செல்வம் இருக்கிறது. ஆனால் ஒரு தனிமனிதனின் பேராசைக்குத்தான் அது போதாது” என்றார்.

இத்தைகய அகங்காரம் அழிவுகளை ஏற்படுத்தும், அகங்காரத்தை முழுமையாக அகற்றுவதைவிட அதனை நேர்மறையாகப் பயன்படுத்துவதே நல்லது.

அகங்காரத்தை உற்றுக் கவனித்து, அதுவே “தான்” என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் தன்மையிலிருந்து விடுபட்டு, அகங்காரத்தால் தனிமைப்பட்டுப் போகும் உயிரை மற்ற உயிர்களோடு அன்பில் கரைத்துக் கொள்வதே மனிதகுலத்திற்கு மேன்மைகள் தரும்.

வாழ்க்கையை பலரும் வாக்குவாதங்களிலேயே கழிக்கிறார்கள். தாங்கள் விரும்புவதை செய்வதுதான் “சுதந்திரம்” என்று பலரும் எண்ணுகின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் எதைச் சுதந்திரமென்று மனிதன் கருதுகிறானோ, அதுவே அவனைப் பிணைத்து வைக்கிற விலங்காக மாறுகிறது.

புகைப்பிடிப்பதை ஒரு மனிதர் விரும்புகிறார். அதையே தன் சுதந்திரம் என்றும் கருதுகிறார். ஆனால், சுற்றிலும் பெட்ரோல் சிந்தியிருக்கும்போது, “ சிகரெட் பிடிப்பது என் விருப்பம்” என்கிற அகங்காரம் வெளிப்பட்டால், அது அழிவைத் தரும்.

சின்ன சின்ன விஷயங்களுக்கும், நிபந்தனை விதிக்கிற மனப்பான்மை மனிதனுக்கு இருக்கிறது. வாழ்க்கை எந்த நிபந்தனைகளும் இல்லாமல் மனிதனுக்கு, எல்லா வாய்ப்புகளையும் வழங்குகிறது. ஆனால், தனகுத்தானே விதித்துக் கொள்கிற நிபந்தனைகளால் மனிதன், தன் எல்லைகளைக் குறுக்கிக்கொண்டு சிரமப்படுகிறான்.

‘விழிப்புணர்வு’ இந்த நிலையை மாற்றி மனினை அன்புமயமாக ஆக்கும்.

மனிதனின் உணர்வு நிலையிலேயே உச்சகட்டமானது அன்புதான். அன்பு என்பது ஆழமான அழகான வலி. அன்பு சக உயிர்கள் மீதான, பரிவாக வெளிப்படும். அந்த வலியின் விளைவாகக் கண்ணீர் வெளிப்படும்.அது அற்புதமான அனுபவம் மற்றவர்களுக்காக பொறுப்பேற்றுக் கொள்வதுதான் அன்பின் அடையாளம்.

மேற்கத்திய நாடுகளில்தான் கண்ணீர் என்பது பலவீனத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்தியப் பாரம்பரியத்தில் கண்ணீர் என்பது மனம் அன்புமயமாகவும், மென்மையாகவும் இருப்பதைக் குறிக்கிறது. உள்முகமாக, மனிதனைத திருப்பி விடுகிற நிகழச்சிகள் பல. அதை மனிதன், எந்த விதத்தில் உணர்ந்து கொள்கிறானோ, அதற்கேற்ப அவன் இயல்பு மாறுகிறது.

உதாரணமாக, பெங்களூரில் காய்கறி விற்பனையாளர் ஒருவர் இருந்தார் கடும் நோய்வாய்ப்பட்டு ஆறு மாதம் படுக்கையில் இருந்தார். மரணத்திற்கும், வாழ்க்கைக்குமான போராட்டமாக அது இருந்தது.

ஆறு மாதங்களுக்குப் பிறகு குணமடைந்தார். அத்தனை காலம், மருத்துவமனையில் இருந்ததால், எல்லாவற்றையுமே இழந்திருந்தார். எனினும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புபோது முன்பைவிடவும் அமைதியாக, ஆனந்தமாக, மகிழ்ச்சியாக வாழத் தொடங்கியிருந்தார்.

கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலை அவருக்கு எத்தனையோ இழப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும், அந்த மரணப் போராட்டம் காரணமாக வாழ்க்கை குறித்த தெளிவு அவருக்கு ஏற்பட்டிருந்தது.

உள் நிலையில், தெளிவு தோன்றவும், தன்னைக் குறித்த அகங்காரமும், அடையாளங்களும் மாறவும், ஒரு மனிதனுக்கு தியானம் மிகவும் அவசியம். தியானம் என்பது ஒருவர் மேற்கொள்கிற பயற்சியல்ல, தன் இயல்பு நிலையோடு இருப்பது தனக்குள் இருக்கிற உண்மையை உணர்வது.

வெளிச்சூழ்நிலையை மனிதன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், தன்னுடைய உள்நிலை குறித்த தெளிவு அவசியமாகிறது. அந்தத் தெளிவு வரும்வரை சிறிய நிபந்தனைக்களுக்குள், எல்லைகளுக்குள் மனிதன் சிறைபட்டிருப்பதோடு அதுவே, வாழ்வின் பலம் என்றும், தவறாகப் புரிந்து கொள்கிறான்.

தானே, வகுத்திருக்கும் தடைகளிலிருந்து, மனிதனை விடுவிக்க வல்லதுதான் “தியானம்”

தியானம் என்று சொன்ன மாத்திரத்திலேயே அது குறித்து ஏராளமான, சந்தேகங்கள் தான் எல்லருக்கும் ஏற்படுகின்றன.

தியானமும், பிரார்த்தினையும் ஒன்றா? வாழ்வில், நாம் விரும்பும் நன்மைகளை தியானம் தருமா? என்றெல்லாம், பலர் கேட்கின்றனர். முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையோடு யாரக்கும், எந்தப் பிரச்னைஐயும் இல்லை. இவர்கள் விருப்பத்திற்கேற்ப, வாழ்க்கை இல்லை என்பதில் தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

உடல், மனம், ஆகிய இரண்டு எல்லைகளுக்குள் மனிதன் இருக்கிற வரை அவன் விருப்பத்திற்கேற்ப வாழக்கை அமையாது. ஏனெனில், அந்த நிலைகளைப் பொறுத்தவரை புறச்சூழ்நிலைதான் வாழ்வைத் தீர்மானிக்கிறது. இந்த எல்லைகளைக்கடந்து உயிரின் மூலத்தை உணர்தற்கான கருவிதான் தியானம்.

பிரார்த்தனை என்பது, இப்போதெல்லாம் பக்தியின் வெளிப்பாடாக இருப்பதில்லை. கடவுளிடம் வைக்கின்ற கோரிக்கைகளையே நாம், பிரார்த்தனை என்று புரிந்து கொள்கிறோம்.

உங்கள் கவலைகள், தேவைகள், ஆசைகள், அச்சங்கள் என்று நீண்ட புலம்பல்களின் பட்டியலை, பிரார்த்தனை என்று கருதுகிறீர்கள். அதுவம், உங்களுக்கு போதிக்கப்பட ஒரு சடங்காகவே ஆகிவிட்டது. அது வெறும் கோரிக்கைகளை இருக்கும் வரை பிரார்த்தனையால் புனிதத்தன்மை இருக்காது. ஆனால்; பிரார்த்தனையின் அடிப்படை கடவுளிடம் பேசுகிற முயற்சி, பிரார்த்தனை வழியாக கடவுளிடம் பேசுகிறீர்கள்.

இதி என்ன சிக்கல் என்றால், இத்தனை ஆண்டுகளில் நீங்களே தொடர்ந்து, பேசிக்கொண்டேயிருக்கிறீர்களே தவிர அவரை ஒருவார்த்தைக்கூடப் பேச அனுமதிக்கவில்லை. நீங்கள் ஒரு நண்பரைப் பார்க்க போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர் வீட்டில் போய் அவரை ஒரு வார்த்தைகூட பேச அனுமதிக்காமல் நீங்களே தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அரை மணி நேரம், ஒரு மணி நேரம் பேசினால் என்னாகும். அடுத்தமுறை நீங்கள் அவர் வீட்டுக்குப் போகும் போது அவர் உங்களைப் பார்க்கவே பயப்படுவார். வீட்டுக்குள் இருந்து கொண்டே இல்லை என்று சொல்லி அனுப்பிவிடுவார்.

இப்போது கடவுளிடமும் அதுதான் நிகழ்ந்திருக்கிறது. நீங்கள் சொல்வதைப் பார்த்து அவர் இருந்து கொண்டே இல்லாது போல் பாசாங்கு செய்கிறார். எனவே, நீங்கள் பேசுவதை நிறுத்திக்கொண்டு, கடவுளைப் பேச அனுமதிப்பதற்குத்தான், தியானம் என்று பெயர்.

தியானம் என்பது, இந்தப் படைப்பின் மூலத்தை உணர்வதற்கான வழி. வெறுமனே கண்மூடி அமர்வது, தியானமல்ல. பலர், வசியக் கலைக்கும், தியானத்துக்கும் உள்ள வேறுபாடு பற்றி என்னிடம் கேட்டிருக்கிறீர்கள். இரண்டும் ஒன்றுக்கொண்டு எதிரான நிலைகள். வசயத்தின் போது, யாரோ ஒருவர், அல்லது ஏதோ ஒன்றின் ஆளுமைக்குள் நீங்கள் அல்லது ஏதோ ஒன்றன் ஆளுமைக்குள் நங்கள் அகப்படுகிறீர்கள். அப்போது விழிப்புநிலை இருக்காது. ஆனால், தியானம் என்பது முழு விழிப்புணர்வில் நிகழ்வது. தியானத்தில் எல்லாற்றிடமிருந்தும் விலகி, சுதந்திரமாக இருக்கிறீர்கள். சுதந்திரம் பொதுவாகவே அச்சமூட்டுவதாய் இருக்கிறது. அதனால் தான் மேலை நாடுகளில், தியானம் என்றாலே அஞ்சுகிற நிலை இருந்தது. எல்லோரும், சுதந்திரத்தை விரும்புவதாகச் சொல்லிக்கொண்டால் கூட அடிப்படையில் ஏதாவதொன்றில் சிறைப்பட்டிருக்கவே விரும்புகிறார்கள்.

மனைவிமார்கள் மீது, கணவன்கள் ஒரு புகார் சொல்வதுண்டு. எப்பதும் தங்களைத் தொந்தரவு செய்து கொண்டேயிருக்கிறாரகள். அது வேண்டும், அது வேண்டும். அங்கே அழைத்துச் செல்லுங்கள் என்று தொல்லைப்படுத்திக்க கொண்டேயிருக்கிறார்கள், என்று கணவன்மார்கள் அலுத்துக்கொள்வதுண்டு. அந்தப் பெண்கள் தியானம் செய்யத் தொடங்கியபின் தமது கணவர்களிடம் எதையுமே கேட்பதில்லை. உடனே இந்தக் கணவன்மார்கள் கவலைப்படத் தொடங்குகிறார்கள். பெண்கள் யாரையும் சாராமல் தனித்திருப்பதும் தங்களையும் தொல்லை செய்யாமல் இருப்பதும், அவர்களை தடுமாறச் செய்கிறது.

தியானத்தின் வழியாக சார்பு நிலையிலிருந்து விடுதலைபெற முடியும், என்கிற அனுபவ உண்மைக்கு மனம், முதலில் தயாரடைய வேண்டும். தியானம் என்பது விழிப்புநிலை, தியானம் என்பது சுதந்திரம்.

தியானம் என்பது சுதந்திரம் என்பதைவிட தியானம் என்பதே சுதந்திரம் என்று சொல்ல வேண்டும்.

தன்னை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மனிதனை யாரும், எதுவும், அடிமைப்படுத்திவிட முடியாது.

மனிதனின் புறவாழ்வுக்காக சில திறமைகள், தகுதிகள் தேவைப்படுகின்றன. அந்தத் திறமைகளோடும், தகுதிகளோடும் மனிதன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுவிட்டால், அதைத் தாண்டி வளர இயலாது. புறச்சூழலின் வெற்றிக்காக பெற்றிருக்கும் தகுதிகளே தடைகளாக மாறி மனிதனை அடிமைப்படுத்த வாய்ப்புண்டு.

மாறாக, விழிப்புணர்வு நிலையில், எதனோடும், தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாத தன்மையில் இருக்கும்போது மனிதன் விரைவாக வளரமுடியும். அந்த விழிப்புணர்வை தியானம் தருகிறது.

மனிதன் தேடிப் பெறுகிற தகவல் அறிவு அவனது உலக வாழ்க்கைக்குத் துணை புரிகிறது. ஆனால், தகவல் திரட்டு மட்டுமே இருந்தால் அந்தத் தகவல் திரட்ட உரிய முறையில் அறிவாக வெளிப்படுத்த முடியும்.

தன் இயல்பான தன்மையை உணர்த்த ஒருவன், வாழ்வில் அன்பாக, அமைதியாக, ஆனந்தமாக இருக்க முடியும். தன்னுடைய சக்தியைத் தெரிந்து கொள்ளாத போதுதான் பதட்டம் வளரும், பயம் வளரும், சுயநலம் கூடும்.

மனிதனின் உடல் - மனம் - அறிவு - ஆன்மீகத் தேடல் அனைத்தையும் ஒரே புள்ளியில் சந்திக்க வைத்து, உள்நிலை வளர்ச்சிக்கு உறுதுணை புரிய ஈஷா யோகா மையம் ஏற்படுத்தியிருக்கும் வழியே “சஹஜ ஸ்திதி யோகா”

சஹஜ ஸ்திதி யோகா என்றால், “இயல்பாக வாழும் கலை” என்று பொருள்.

தன் இயல்பு வாழ்க்கையில் இருந்தபடியே தன்னை மேம்படுத்திக் கொள்ள அனைவருக்கும் வழங்கப்படும் அரிய வாய்ப்பு இது.

சஹஜ ஸ்திதி யோகா, எந்தவொரு பழக்கத்தயும் விடச்சொல்லி வற்புறுத்துவதில்லை. எந்தவொரு மனநிலையையும் மாற்ற சொல்லி வற்புறுத்தவதில்லை. அனுபவ ரீதியாக எதையும் உணர்ந்து, வேண்டாதவறை விலக்கிக் கொள்வதற்கான, விழிப்புணர்வைத் தருகிறது.

இதுவரை உணராத பரிமாணத்தில் வாழ்கையை மனிதன் உணரத் தொடங்குகிறான். அன்பு, அமைதி, ஆனந்தம் ஆகியவை வெளியிலிருந்து பெருவதர்க்கல்ல. மனிதனிடம் ஏற்கனவே இருக்கும் இயல்புதான் என்பதை அனுபவ அடிப்படையில் உணரும்போது முற்றிலும் புதிய பார்வை கிடைக்கிறது.

செயல்திறன் அதிகரித்தல், உடல் நலம், மன அமைதி இவையெல்லாம் சஹஜ ஸ்திதி யோகாவில் முக்கிய அம்சங்களல்ல. அவை பக்க விளைவுகள்தான்.

மனிதன் தன்னை உணர்ந்து, தனக்குள் இருக்கும் பேராற்றலை உணர்ந்து, உயிர்களிடையே பேதமில்லை என்கிற அனுபத்தைப் பெறுவதே சஹஜ ஸ்திதி யோகாவின் முக்கிய நோக்கம்.

நோய் வாய்ப்பட்டிருக்கும் மனிதன் சஹஜ ஸ்திதி யோகாவிற்குப் பிறகு, நோயின் தன்மையை உணர்கிறான். ஆனால், அதனால் துன்பமடைவதில்லை.

சில அடிப்படை அணுகுமுறைகள் மாறும்போதே சில நோய்கள் அவனைவிட்டு விலகுவதை இங்கே காணமுடியும்.

கோபம், பதட்டம், போன்றவை தங்கள் பிறவிக் குணங்கள் என்று கருதியவர்கள், வகுப்புகள் தொடங்கி சில நாட்களிலேயே அந்த குணங்கள் தங்களை விட்டு விலகுவதைக் காண்கிறார்கள்.

சஹஜ ஸ்திதி யோகா, நீண்ட கால அனுபவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள, ஆழ்ந்த யோக அறிவியலின் வெளிப்பாடு.

எல்லா வயதினருக்கும் பொதுவான தன்மையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பயிற்சி, மனிதன் தனது அடிப்படை சக்தியை நன்கு உணரவும் அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

உலகின் பல பகுதிகளிலும் பரவியுள்ள சஹஜ ஸ்திதி யோகாவை “தன்னை உணர்வதற்கான அமைதிப்புரட்சி” என்று அழைக்கிறோம். இந்த அமைதிப் புரட்சிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அன்பும் வாழ்த்துகளும்...

தியானம் எப்படி செய்வது?